இதழ்: 2
ஆதிரை, ரிஷி, மித்ரன் ஜெனிஃபர் நால்வரும் நண்பர்கள். அதிலும் ஜெனிபர் இங்கே படிக்க வந்த இடத்தில் இவர்களுக்கு தோழியாக அறிமுகமானவள். மித்ரன் ஆதிரையின் பள்ளிக்கால தோழன். கூடவே மித்ரனின் தந்தை யோகேந்திரன் ஆதிரையின் அப்பா சண்முகவேல் ராஜனும் மல்டி ஸ்பெஷாலிட்டி பங்குதாரர்கள்.
ரிஷி இவர்களுக்கு சீனியர்... இவர்கள் மூவரும் தங்கள் இளங்கலை மருத்துவ படிப்பின் இறுதியாண்டில் இருக்க... ரிஷி மேனெஜ்மெண்ட் முதுகலை படிப்பின் இறுதி ஆண்டில் இருக்கிறான்.
ரிஷி, வீட்டினரால் ஆதிரைக்கு பார்த்து வைக்கப்பட்டிருக்கும் மாப்பிள்ளை. அரசியல்வாதி கனகரத்தினத்தின் தவப்புதல்வன்!! அவர் லஞ்சம் வாங்கி, ஊழல் செய்து சேர்த்து வைத்த திரண்ட சொத்தினை ஆளப்பிறந்தவன், உள்ளூரில் இவனது பருப்பு வேகாததால் பெரும்பணம் கொடுத்து இளங்கலை படிப்பு பட்டத்தை வாங்கியவர், பேருக்காக ஊருக்காக முதுகலை மேனேஜ்மென்ட் படிக்க கனடா அனுப்பி வைத்தார்.
அவர் என்னவோ கனடாவுக்கு அவனை படிக்க வைக்க தான் அனுப்பினார். அவனோ ஆதிரைக்கு காவலாக தான் இங்கு வந்தான். பின்னே அழகும், அறிவும், சொத்தும் நிறைந்த பெண்ணை வேறு யாரும் கொத்திக் கொண்டு போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம்... அவனுக்கு எப்பொழுதும் உண்டு.
கிளிக்கு வேடனாக அருகில் இருந்து இவன் காவல் காக்க நினைக்க... ஆனால் ராஜாளி ஒன்று கிளியை கொத்திச் செல்ல பறந்து வந்தது.
ஆதிரை, தனியே வீடு ஒன்று எடுத்து அதில் தான் ஜெனிபரோடு தங்கி இருக்கிறாள். அவளுக்கு கல்லூரி கேம்பஸில் இருக்கும் ஹாஸ்டல் அந்தளவு பிடிக்கவில்லை, உணவு பிடிக்கவில்லை, உபச்சாரம் பிடிக்கவில்லை என்று அவ்வளவு கம்ப்ளைன்ட் செய்திருந்தாள் தந்தையிடம். ஆனால் உண்மையான காரணம் என்னவோ..! அவளுக்கு இசையின் மீது இருந்த நாட்டம். அது அவளது உயிர் மூச்சு!
சண்முகவேல் ராஜன் தங்கள் ராஜன் குரூப்பில் இருக்கும் மருத்துவமனையில் ஒன்றின் பொறுப்பை மகளுக்கு கொடுப்பதற்கு அவளை தூரத்தில் இருக்கும் வெளிநாட்டிற்கு பணத்தை கொட்டி படிக்க வைக்க ஏற்பாடு செய்ய... அவளோ கிடைத்தது சாக்கு என்று இங்கே ஒரு இசைக்குழுவோடு சேர்ந்து தனது இசை பயணத்தை யாரும் அறியாமல் தொடர்கிறாள்.
அவள் சேர்ந்திருக்கும் அந்த இசை குழுவின் பெயர் "த பீட்டில்ஸ்"
காலங்காலமாக இருக்கும் அவ்வூரின் பாப் பாடல்களையும் ரெட்ரோ பாடல்களையும் ஃப்யூஷன் முறையில் தற்காலத்துக்கு தகுந்த மாதிரி பாடும் குழு அது. அதில் ஆதிரையின் க்ளாசிக் டச் தான் சிறப்பே! எப்படிப்பட்ட பாடல்களையும் அதன் சுவை குறையாமல், லயம் தவறாமல், பாடுவதில் வல்லலள் ஆதி!! வெறும் க்ளாசிக் மட்டுமல்ல திடீரென்று ராக்கும் கலந்து அடிப்பாள்... அக்குழுவும் ஆதியும் அத்தனை ஃபேமஸ் அங்கே!!
இதற்கு மித்ரனும், ரிஷியும் துணை. மித்ரனுக்கு தோழி எது செய்தாலும் சரிதான்! ஆனால் ரிஷிக்கோ எங்கே தான் மறுப்பு சொன்னால் தன்னை திருமணம் செய்துக் கொள்ள மறுத்து விடுவாளோ என்ற பயத்தில் தான் விட்டுப் பிடிப்போம் என்று காத்திருக்கிறான்.
காத்திருப்பு கானல் நீர் தான் என்று தெரியவில்லை அவனுக்கு.
ஒரு பக்கம் தனது மருத்துவ படிப்பு, மறுபக்கம் தனது இசை குழுவோடு சேர்த்து அவளது இசை பயணம் என்று வெரி வெரி பிஸி ஆதிரை! பெரும்பாலும் வார இறுதி நாட்கள் அவர்களது பேண்ட் என்பதால் இவளுக்கு படிப்பில் பெரிய பிரச்சனை வரவில்லை.
கூடவே பிள்ளைகள் பார்ட்டி, பப் என்று சுற்றுவது இப்போதைய ஹைபை சொசைட்டியின் வாழ்வியல் அங்கமாக போய்விட, அதை பெரிதாக யாரும் அவர்கள் குடும்பத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் அவர்களுக்கு பாதுகாப்புக்கு என அந்த சமயத்தில் மட்டும் பௌன்சர்ஸ் அனுப்பி வைத்து விடுவார் சண்முகவேல்ராஜன்.
ஆதிரை தங்கி இருக்கும் அதே அப்பார்ட்மெண்டில் மற்றொரு வீட்டில் தான் மித்ரனும், ரிஷியும் இருக்கிறார்கள். ரிஷிக்கும் மித்ரனுக்கும் எப்பவுமே எதிலுமே ஒத்தே போகாது. ஆனால் ஒத்துப் போகும் ஒரு இடம் ஆதிரை! வேறு வழி இன்றி ரிஷியின் தொல்லையை தாங்கிக் கொண்டிருக்கிறான் மித்ரன்.
மித்ரனின் கனவு ஸ்பைனல் சர்ஜன் ஆவதுதான். அதற்காக அவன் தன் மேற்படிப்புக்கு தேவையானவற்றையும் கிடைக்கும் இடைவெளியில் செய்வான். ஆனால் அவனைப் பேசியே கடுப்பாக்குவான் ரிஷி. "எங்களை விட்டு வெளியே போய் தொலை!" என்ற வார்த்தைக்காய்.
மித்ரனும் கத்தாத குறை தான். சில சமயம் விரட்டியும் விட்டு விடுவான். நன்றாக ஊர் சுற்றிவிட்டு நடு ஜாமத்துக்கு வருவான். சில சமயம் வரவே மாட்டான். கையில் கட்டுப்பாட்டற்ற பணம்... பின் இன்பங்களுக்கா பஞ்சம் அங்கே? அவனது சொர்க்கம் பெரும்பாலும் மதுவிலும்... சிலசமயம் மாதுவிலும். ஆனால் அதை யாரும் தெரியாதபடி மறைத்து வாழ்வது ரிஷியின் சாமர்த்தியம்.
ஜெனிஃபரின் கதையோ வேறு... காதலித்து மணந்த பெற்றோர் இருவரும், இப்பொழுது பிரிந்து வேறொரு குடும்பத்தோடு இணைந்து விட... தனித்திருக்கும் அவளுக்கு காதல் நோய் பீடித்திருக்கிறது. அன்பு, நேசம், பாசம் என்று விட்டால் உருகும் பெண் அவள்.
இதுவரை மூன்று முறை பிரேக் அப் செய்துவிட்டாள், இவளின் எதிர்பார்ப்பை அவர்கள் பொய்யாக்குவதினால்... அன்னை தந்தை பிரிவினால் பலத்த அடிபட்டவளுக்கு, தன்னுடைய இணை காலம் முழுவதும் வர வேண்டும் என்று ஆசை, அவா, விருப்பம்! ஆனால் விதியோ அவளை சுற்றி விளையாட்டு காட்ட... இதோ இப்போது மூன்றாவது பிரேக்கப்பை முடித்துவிட்டு அந்த சோகத்தில் ஜின்னை டின் டின்னாக உள்ளே தள்ளிவிட்டு, போதை உச்சியில் ஏறி நிலைத்தடுமாறி அவர்கள் வீட்டு கதவை தட்டிக் கொண்டிருந்தாள் ஜெனி.
கதவை திறந்த ஆதி தொப்பென்று தன் மேலே விழுந்த ஜெனியை பார்த்ததுமே புரிந்து போனது.
"அடுத்த பிரேக்கப்பா? உன்னை எல்லாம்!!" என்றவாறு தோழியை அவளது அறையில் படுக்க வைத்து விட்டு ஆறுதலாக சிறிது நேரம் அவள் போதையில் உளறியதை எல்லாம் கையைப் பிடித்த படி கேட்டுக் கொண்டிருந்தாள். இம்மாதிரி பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு தேவை அன்பும் அரவணைப்பும் தான். அதை தேடி தேடித்தான் கானலில் எல்லாம் காதலைத் தேடி களைத்துப் போய் கட்டிலில் போதையில் உளறிக் கொண்டு இருக்கிறாள் ஜெனி.
தோழியின் கதறல் புலம்பல் எல்லாத்தையும் அமைதியாக கேட்டு, அவளுக்கு ஆறுதல் அளித்து, அவள் தூங்கிய பிறகு பெருமூச்சு ஒன்றை விட்டபடி தனது அறைக்கு வந்தாள் ஆதிரை.
இப்பொழுது அவர்களுக்கு எக்ஸாம் போய்க் கொண்டிருக்கிறது. முழுதாக இன்னும் இரண்டு மாதத்தில் அனைத்து தேர்வுகளையும் முடித்துவிட்டு இந்தியா செல்ல வேண்டும். அதுவே அவளுக்கு திகில் அடித்தது.
வீட்டுக்குள் போனால்... பிரம்மாண்டத்தில் அது மாளிகை தான் வீடு என்றெல்லாம் சொல்ல முடியாது. மாளிகை பெருசு தான், அதில் தங்க கூண்டுக்குள் கிளியாக மாறி போவாளே என்று அச்சம். ஆனால் நண்பன் இருக்க கவலை ஏன்? அவன் எப்படியும் மேல் படிப்புக்காக வெளிநாடு தான் வருவான். அவனோடு தொத்திக் கொண்டு வந்து விடலாம் என்று பெரும் கனவு அவளுக்கென்று இருந்தது.
கனவெல்லாம் நனவானால் கடவுள் ஒன்று எதற்கோ? இல்லை அவன் கட்டமைத்து வைத்த கோள்களும் கோட்பாடுகளும் விதிகளும் தான் எதற்கோ?
அனைத்தும் விதிப்படி தான்!!
விதிப்படிதான் பயணம் என்றால் மதி என்பது எதற்கோ? விதியை மதியால் வென்றாலும் சதி செய்யும் கூட்டம் இருக்கையில்... மதி விதியை வெல்லுமா அல்லது சதி இரண்டையும் வெல்லுமா?
அந்த விதி செவ்வனே தன் ஆட்டத்தை ஆரம்பித்தது. அடுத்த வாரத்தில் அவளுடைய பேண்டோடு அவள் வாசித்த பப்பில் அவனும் இருந்தான் அந்த ஜடாமுடி காரன்!!
இன்று ஏதோ நல்ல மூடில் இருந்திருப்பான் போல அனைத்து முடியையும் தூக்கி, உச்சியில் ஒரு கொண்டையிட்டு, கீழே விரித்து விட்டிருந்தான். தொழதொழவென்று
பூ போட்ட கையில்லா பனியன் அணிந்து, அரை பேண்டா முக்கால் பேண்டா என்று கணிக்க முடியாத அளவில் ஒரு பேண்ட். கையில் குட்டி குட்டியான குப்பியில் வீரியமிக்க மது இருக்க... கணக்குவழக்கு இல்லாமல் உள்ளே தள்ளிக் கொண்டே அவளது பாடல்களை ரசித்தான் இல்லை இல்லை அப்பாடல்களைப் பாடும் அச்செவ்விதழ்களைத் தான் ரசித்தான்.
இன்று ஆதியோடு ஜெனி மட்டுமே வந்திருந்தாள். முக்கியமான கான்ஃபரன்ஸ் கால் தவிர்க்க முடியாது என்று மித்ரன் பாவமாய் ஆதியை பார்க்க, சிரிப்போடு அட்டென்ட் பண்ணு என்று அவனை துரத்தி விட்டாள். எங்கே மித்ரன் இல்லாமல் ரிஷி மட்டும் கூட வந்தால் ஜொல்லுவிட்டு பப்பை மிதக்க வைப்பானோ என்று பயந்து அவனிடம் கூறாமல் ஜெனியோடு எஸ்கேப்பாகி விட்டாள்.
ஜெனியும் ஆதி கூட வந்திருந்ததால் கொஞ்சமாக உள்ளே இறங்கியது ஓட்கா. பாடலை முடித்து ஆதி இறங்கி வர... ஜெனி அருகில் இருந்தவன், இன்றும் அதே போல, "நைஸ் ப்ளே... யுவர் லிப்ஸ்" என்றான்.
எதே என்று அதிர்ந்து அவள் திரும்ப, அவன் பார்வை அவளிடம்... அவளிடம் மட்டுமே!
அவளின் மூளை அடுக்குகளில் அந்த ஆகுதியான உடம்பும், அமேசான் காடு போன்ற முடியும், டாட்டூ குத்திய புஜங்களும்... புத்தாண்டு அன்று பார்த்தவன் என்பதை அறுதியிட்டு கூற... 'இவன் என்ன விவகாரமாகவே நம்ம கிட்ட பேசுவான் போல?!' என்றபடி அவனை தவிர்த்து ஜெனியிடம் திரும்பியவள், "லெட்ஸ் மூவ் ஜெனி" என்றாள்.
"ஐ வான்னா ப்ளே வித்..." என்று அவள் காதருகே கேட்ட விஸ்கி சாப்பிட்ட ஹஸ்கி வாய்ஸில்
அவள் இதயம் நின்று விட்டது போல் ஓர் உணர்வு.
"என்ன சொல்ல விளைகிறான்? இவன் எதுவும் தப்பர்த்தமா சொல்லி விடுவானோ?" என்று கண்கள் நெருப்பு கோழி முட்டை போல விரிய, அவள் இதழ்கள் மீனை போல பிளக்க அவனை பார்த்தாள்.
"ஹே மிஸ்டர் மைண்ட் யுவர் டங்" என்று இவள் கூறி ஜெனியை எழுப்ப முயல...
"ஹாங்... தட் டூ வான்னா ப்ளே..." என்று கூறி முடிக்கும் முன்
அவளின் இளம் விரல்கள் அவன் கன்னத்தை நோக்கி பாய, அதை அசால்டாக பிடித்தவன், "ஐ ஜஸ்ட் அப்ரீஷியேட் யுவர் சிங்கிங் ஸ்கில்! நாட் யூ பேப்...பட்... இஃப் யூ வான்னா... ஐ அம் ரெடி!" என்று அவள் கையை பின்னால் இறுக்கி பிடித்தப்படி கேட்டவனை கண்டு பேச்சு மூச்சு அற்று போனாள்.
“இன்ட்ரஸ்டெட்??" என்று விஷம புன்னகையுடன் அவன் கேட்க...
அவள் தலை மட்டும் இல்லை என்று அங்கும் இங்கும் அசைய… அவள் வாயில் வார்த்தைகள் இல்லை.
“பட் ஐ அம் இன்ட்ரஸ்ட்!" என்றவன் பிடித்திருந்த அவளது கையை ஒரு சுழட்டு சுழட்டி விட அவள் தட்டு தடுமாறி நிற்கும் முன் அந்த ஜடாமுடி காரனை காணவில்லை. அரை போதையில் இருந்த ஜெனியை எழுப்பி ஒரு வழியாக அவளை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தாள். பௌன்சர்ஸை அழைக்காமல் அவர்களுக்கு தெரியாமல் சென்ற தன் மடத்தனத்தை எண்ணி தனக்குத்தானே நொந்துக் கொண்டாள்.
அவன் பின்னால் இருந்து அணைத்த வாக்கில் நின்றிருந்த போது உடலுக்குள் அதிர்வை உணர்ந்தாள். அவள் வாழ்நாளில் ஒரு நாள் கூட… இந்த மாதிரி நிகழ்ந்தது இல்லை...
அதிர்ந்தது இல்லை... பயந்ததில்லை
எப்பொழுதும் அரணாக மித்ரனோ, ரிஷியோ இருக்க, போதாத குறைக்கு பௌன்சர்ஸூம் இருக்க, யாரும் இவளை நெருங்கவே பயப்படுவார்கள் விஷம எண்ணத்தோடு...
தன் அறைக்குள் வந்தவள் அவன் பின்னின்று அணைத்த அந்த உடை ஏதோ செய்ய அவசரமாக களைந்து விட்டு குளியல் அறைக்குள் நுழைந்தாள். பதினைந்து நிமிடம் சுவற்றில் சாய்ந்து நின்றாள் உதட்டை கடித்தப்படி... ஜில்லென்ற தண்ணீர் தலையில் சீறி பாய்ந்து... அவள் உடல் முழுதும் நனைத்துக் கொண்டிருக்க… வெளியே கதவு தட்டப்படும் சத்தம்.
“வரேன்…” என்றவள், வேக வேகமாக… அரைகுறையாக துவட்டிய படி உடையை மாட்டிக் கொண்டு கதவைத் திறக்க… வெளியே இருந்த டீபாயில் சுட சுட ஆவி பறக்க டீ! சுற்றும் முற்றும் பார்த்தாள், மித்ரனை காண வில்லை. கொண்டை இட்ட தலையை அவிழ்த்து விட்டப்படி… டீயை இதழில் பதித்தாள்.
அவன் கூறிய "வான்னா ப்ளே வித் திஸ்..." என்ற வார்த்தைகள் ரீங்காராமாய் மீண்டும் கேட்க, தொண்டையில் மீண்டும் பய பந்து அடைத்தது.
'அவனது கூரிய பார்வையும், பேச்சும் கொஞ்சமும் சரியில்லை. இனி கொஞ்ச நாள் பேண்டுக்கு லீவ் போட வேண்டியது தான்' என்று முடிவு எடுத்தவள் தேர்வுக்கான ஆயத்தங்களை மேற்கொண்டாள்.
அவனும் அவளை நெருங்க ஆயத்தங்களை மேற்கொண்டான்!!
இதழின் இசை பயணம் தொடரும்..