வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

என்னுள் அவள்(ன்) (சு)வாசம் - கதை திரி

Status
Not open for further replies.
வாசம் - 01

காலை வேளையின் இளந்தென்றல் ஜன்னல் வழியே நுழைந்து மெல்லென அவளை அணைத்துக் கொண்டது. ம்..... தென்றலுக்கும் தான் எத்தனை ஆசை அவளை அணைத்துப் பார்க்க தென்றலின் வருடலில் மெல்லக் கண்களை திறந்தவள் நேரத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டாள்.

'அட, என்ன பொல்லாத தூக்கம். அலாரம் வச்சனே அடிக்கல்லையோ. காலையில் இவ்வளவு நேரமா தூங்கிருக்கேன் பாரு. வேலைக்குச் செல்ல இன்னும் ஒரு மணி நேரந்தான் இருக்கு. ஐயையோ மறந்துட்டேனே இன்றைக்கு முக்கியமான மீட்டிங் வேற இருக்கே. அவசர அவசரமாக் கிளம்பினாத் தவிர நேரத்துக்குப் போக முடியாது' எண்ணியவளாய் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள் ப்ரியவர்ஷினி. தயாராகி வந்தவள் நேராக சமயலறையில் நுழைய அங்கு பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தார் அவளின் தாய் நீலவேணி. அவளைக் கண்டவர்,

"வாம்மா ப்ரியா?" என்றதும்

"என்னம்மா என்னை எழுப்பி விட்டிருக்கலாமே? தனியா எல்லா வேலைகளையும் பார்த்துட்டிருக்கீங்க."

"அதனால என்னம்மா, ஒவ்வொரு நாளும் தானே வேலைக்கு போக முன்ன எனக்கு எல்லாம் செஞ்சுட்டுப் போற ஒரு நாள் தவறினா என்ன வந்துடப்போறது சொல்லு?"

"அதில்லம்மா நீங்களும் உடம்பு சரியில்லாதவங்க தனியா எத்தனைய பார்ப்பீங்க? அதுக்குத்தான் என்னால முடிஞ்சளவு செஞ்சுட்டுப் போகனுமென்று நினைப்பேன். அதுசரி ஏன் இவ்வளவு நேரமா என்னை எழுப்பாம விட்டீங்க?"

"இல்லடாம்மா நீ வழக்கமான நேரத்துக்கு எழுந்து வராம இருந்ததால நானும் உன்னை எழுப்ப வந்தேன். ஆனால் நீ நல்லா அசந்து தூங்கிட்டிருந்த அதனால எழுப்ப மனம் வரல்ல அதான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டுமென்று விட்டுட்டேன்"

"அதுக்காக இப்படியா விடுவீங்க? நல்லா நேரம் போயிட்டு பார்த்தீங்களா?"

"அதுக்குப் பிறகு நான் இரண்டு தடவை வந்து எழுப்பினேன், நீ அசையவே இல்லை. அலாரம் வேற விடாம அடிச்சிட்டே இருந்துச்சு. நீயா எழுந்து வந்துடுவ என்றுதான் நானும் மத்த வேலைகளப் பார்க்க போயிட்டேன். இப்போ நீ வரல்ல என்றால் நானே உன்னை வந்து எழுப்பி இருப்பேன். அதுசரி என்னம்மா இவ்வளவு நேரம் தூங்கிட்ட என்னாச்சு உடம்பு சரி இல்லையா?" தேநீர் கோப்பையை நீட்டியவாறே அக்கறையாகக் கேட்டாள் தாய்.

"இல்லம்மா, நைட் கொஞ்சம் தூங்க லேட்டாயிடுச்சு அதான் வேறொன்றுமில்ல."

"அப்படியா? சரிம்மா நேரம் ஒன்னும் அந்த அளவுக்குப் போகல்ல. சரி முதல்ல நீ டீயக் குடிம்மா நான் காலச் சாப்பாட்ட எடுத்து வைக்குறேன். சாப்பிட்டுட்டு கிளம்ப, டைம் சரியா இருக்கும்."

"ஐயோ அம்மா, சாப்பிடெல்லாம் நேரமில்ல இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. வழமைக்கு ஏர்லியாவே வரச் சொன்னாங்க. ஆனால் இன்றைக்குப் பார்த்து இப்படி கும்பகரணி மாதிரி தூங்கிருக்கேன் பாருங்க. சரிம்மா நேரமாகுது இப்போ கிளம்பினாத்தான் சரியா இருக்கும். லன்ச் கட்டிட்டா தாங்க." என்றவள் தேநீரைப் பருகிக் கொண்டே மதிய உணவுப் பொதிக்காக கை நீட்ட அவள் கையில் உணவுத்தட்டை வைத்தவர் உண்ணுமாறு கட்டளையிட்டார். முதலில் மறுத்தவள் தாய் வற்புறுத்தவே அதன் பிறகு அவளும் தாயுடன் மல்லுக்கு நிக்காமல் அவசரமாக அள்ளி வாயில் திணித்துக் கொண்டவள் தாயிடம் விடை பெற்று ஓட்டமும் நடையுமாக பேரூந்து நிறுத்தத்தை அடைய பேரூந்தும் வர ஏறிக் கொண்டாள். வேலை செய்யும் வளாகத்தை அடைந்த பின்தான் அவளால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. நேரத்துக்கே வந்து விட்டோமென எண்ணியவள் அந்த உயர்ந்து நின்ற ஐந்து மாடி கட்டிடத்தைப் பார்த்தாள். 'வர்ஷிகாஷ் ஷாப்பிங் மால்' என பொறிக்கப்படிருந்தது.
'வர்ஷி... யூ ஆர் மை லைஃப், இந்தப் பெயரும் சரி நீயும் சரி என்றைக்குமே எனக்கு மட்டும்தான் சொந்தம். அதை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.' பெயர் பலகையைப் பார்த்ததும் எப்போதும் போல அவள் காதுகளில் அந்த ஆழ்ந்த குரல் ஒலித்தோய்ந்தது. கண்களில் நீர் திரையிட மெல்ல தலையை உலுக்கிக் கொண்டாள். மனதில் லேசான வருத்தத்துடன் அதேநேரம் மெல்லிய புன்னகை உதட்டில் பரவ தன் பெயர் கொண்டதாலோ என்னவோ ஒருவித பெருமிதத்துடனே உள் நுழைந்தாள் ப்ரியவர்ஷினி.

அது ஒரு பெரிய பல்பொருள் அங்காடி ஐந்து தளங்களை கொண்டியங்கியது. தரைத் தளம் வீட்டுத் தளபாடங்கள், அலங்காரப் பொருட்கள் மற்றும் சமயலறை உபகரணங்களையும் பில்லிங் கவுண்டர்களையும் வாடிக்கையாளர்களுக்கான சிறந்த உணவகத்தினையும் கொண்டிருக்க, இரண்டாவது தளம் பெண்களுக்கான ஆடை அணிகலங்களுடன் பெண்களுக்கான அனைத்துப் பொருட்களையும் கொண்டிருந்தது. மூன்றாந்தளத்தில் ஒரு பகுதி குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களுடன் அவர்களுக்கான சகலவிதமான பொருட்களையும் அத்தோடு குழந்தைகள் விளையாடுவதற்கான ஒரு சிறு பகுதியையும் கொண்டிருந்தது. நான்காம் தளம் ஆடவர்களுக்கானது. அதன் பிரிதொரு பகுதியில் பல்தரப்பட்ட துணிவகைகளையும் சிறிய கார்மன்ஸையும் உள்ளடக்கியிருக்க ஐந்தாம் தளத்தில் அலுவலகமும் ஊழியர்களுக்கான சிறு உணவகமுமிருந்தது. அடித்தளம் முழுக்க ஸ்டோராகவும், வாகனத்தரிப்பிடமாகவும் பயன்படுத்தப்பட்டது. ஆண்களும் பெண்களுமாக சுமார் நூறு பேரளவில் பணியாளர்கள் அங்கு பணிபுரிந்தார்கள். மொத்த நிறுவனத்திற்கும் பொறுப்பாக ஒரு பொது மேலாளரிருக்க, ஒவ்வொரு தளத்திற்கும் பிரத்யேக மேலாளர்களும் அவர்களுக்கு கீழே உதவி மேலாளர்களும் பல விற்பனையாளர்களும், கடை நிலை ஊழியர்களும் பாதுகாவலர்களும் வேலை செய்தனர். பிரத்யேக அலுவலக ஊழியர்களுடன் கார்மன்ஸ் மற்றும் உணவகத்திற்கான ஊழியர்களும் இருந்தனர். அங்குதான் ப்ரியா இரண்டாம் தளத்தின் உதவி மேலாளராக கடமை புரிகிறாள். ஒன்பது மணி நேர வேலை, நல்ல சம்பளம்தான் ஆனாலும் அவள் குடும்ப நிலைக்கு அது போதவில்லை. உள் நுழைந்தவள் ஐந்தாம் தளத்திலுள்ள அலுவலக வரவேற்பிற்கு சென்று வருகை பதிவுப் புத்தகத்தில் கையொப்பம் இட்டுவிட்டு திரும்ப

"ஹாய் ப்ரியா." என்றவாறே அவள் தோள்களில் கை வைத்தாள் அவளின் உயிர் தோழியும் மூன்றாம் தள உதவி மேலாளருமான ராதா.

"ஹாய்டி" என்றாள் ப்ரியா.

"என்னடி வழமையா ஏர்லியா வர்ரவ இன்னைக்கு கொஞ்சம் லேட்டாகிட்ட போல?"

"ஆமாப்பா இன்றைக்குப் பார்த்து இந்த பொல்லாத தூக்கம் போயிட்டுடி எழும்ப லேட் அதான். நீ வந்து ரொம்ப நேரமோ?"

"ஒரு பதினஞ்சு நிமிஷம் இருக்கும்."

"ஓ... அதுசரி மீட்டிங் ஸ்டார்ட் ஆகிடுச்சா?"

"இல்லடி இனி ஸ்டார்ட் ஆகிடும். எனக்கும் கொஞ்சம் வேலையிருந்துச்சு முடிச்சுட்டு வாரேன். சரி வா மீட்டிங் ஹாலுக்குப் போகலாம்." என்றவாறே தோழிகளிருவரும் கூட்டம் நடக்கும் கூடத்தினுள் நுழைந்தனர். மேலாளர்களுக்கும், அலுவலக ஊழியர்களுக்கும் மட்டுமே இந்த கூட்டம் ஏற்பாடாயிருந்தது. சற்று நேரத்தில் பொது முகாமையாளர் சிவராமனுடன் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகவனும் உள் நுழைந்தார். அவரைக் கண்டு எழுந்தவர்களுக்கு வணக்கம் கூறி அனைவரையும் அமரச் சொன்னவர் பேச ஆரம்பித்தார்.

"உங்க எல்லோருக்கும் முதல்ல என் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன். இவ்வளவு காலமும் எனக்கு பக்கபலமா இருந்து இந்த நிறுவனத்தை இந்த உயரத்துக்கு கொண்டு வந்ததுக்காக. இதே ஒத்துழைப்பை உங்க புது எம்.டிக்கும் நிச்சயமா நீங்க வழங்கணும்." அவர் கூற கூட்டத்தில் சிறு சலசலப்பு. அனைவரையும் அமைதிப்படுத்தியவர்,

"உங்களுக்குள்ள ஆயிரம் கேள்விகள் முளைச்சிருக்கும். சரி உங்க எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லவும் புது நிர்வாகம் பற்றி சொல்லவும் தான் இந்த மீட்டிங்கே. இவ்வளவு நாளும் பெயரளவு எம்.டி பொறுப்புல இருந்துதான் நான் இந்த நிறுவனத்தைப் பார்த்துகிட்டேனே தவிர இந்த நிறுவனத்தோட உண்மையான முதலாளி என் மருமகன் அருண் ஆகாஷ்தான்." ராகவன் கூற அந்தப் பேரைக் கேட்டதும் ப்ரியாவினுள் என்னவென்று சொல்ல முடியாத பல்வேறுபட்ட உணர்ச்சிகள் அவளை ஆட்கொண்டன. தன்னை ஒருவாறு சமநிலைப் படுத்தியவள் மீண்டும் ராகவனின் பேச்சுக்கு செவி சாய்த்தாள்.

"அவர் இத்தனை நாள் லண்டன்ல இருந்தார். இப்போதான் பொறுப்பேத்துக்க மொத்தமா இங்கே வரார். அருணின் மொத்த உழைப்பும் கனவும்தான் இந்த நிறுவனம். அதை என்னை நம்பி கொடுத்திருந்தார். என்னைப் பொறுத்தளவுல உங்க ஒத்துழைப்போட அந்த பொறுப்பை நல்ல படியா நிறைவேத்திட்டேன் என்று நினைக்கிறேன். வயசாயிடுச்சில்ல, இனி எனக்கும் ஓய்வு தேவை. அதனாலதான் அருண்கிட்டேயே அவரோடதை ஒப்படைக்க முடிவெடுத்தேன். இன்னும் ஒரு வாரத்துல அருண் இந்த கம்பனிய பொறுப்பேத்துப்பார். அதாவது வர்ற திங்கள் விட்டு அடுத்த திங்கள். ஸோ, கண்டிப்பா அன்றைக்கு ஒரு சின்ன விழாவ நாம ஏற்பாடு பண்ணணும். சிறு அறிமுகப்படுத்தலோட வரவேற்புரை, நன்றியுரை அத்தோட கம்பனி பத்தின ஒரு முன்னோட்டத்தையும் சொல்லிடலாம். இறுதியா சிறு விருந்துபசாரமும் வச்சுக்கலாம். அன்றைக்கு எல்லோருக்கும் கம்பனியிலதான் விருந்து. எல்லோரும் எட்டு மணிக்கே வேலைக்கு வந்திடுங்க. மற்ற ஊழியர்களுக்கும் சொல்லிடுங்க. முக்கியமான விசயம் என் மகளும் மகனும் கூட வாராங்க, இந்த ஃபங்சன் முடிய என்னோட சொந்தக் கம்பனிப் பொறுப்ப என் பிள்ளைகள்கிட்ட ஒப்படைக்கணும், நாங்க அங்கேயும் போகணும். ஸோ, எல்லாமே டைமுக்கு நடந்தாத்தான் சரியா இருக்கும். அருணுக்கு டைமிங் ரொம்ப முக்கியம் அது மிஸ்ஸானா கடுப்பாயிடுவார். அத்தோட வேலையிலயும் சுத்தமாக இருக்கனும். அலட்சியம், பொறுப்பின்மை எல்லாம் கண்டாலே அவருக்கு சுத்தமா பிடிக்காது, வாக்கு கொடுத்தா எப்பாடு பட்டாவது அதை நிறைவேத்தணும் பின்வாங்கக் கூடாதென்னு நினைப்பார். கோபம் அதிகமா வரும். ஸோ, பீ கியார்ஃபுள். என்ட் ஸ்டொக் டிடைல்ஸ், உங்க பென்டிக் வொர்க்ஸையும் கிளியர் பண்ணிடுங்க." என்று கூறிக் கொண்டு சென்றவர் ஊழியர்களின் முகத்தைப் பார்த்துவிட்டு சத்தமாக சிரித்தார்.

"என்ன பயந்துட்டீங்களா? நான் சொன்ன மாதிரி வேலையில தப்பு செய்தால்தான் பிரச்சனையே மற்றப்படி அருண் மாதிரி ஒரு முதலாளி கிடைக்க உண்மையிலே நீங்க கொடுத்து வச்சிருக்கணும். ஒவ்வொருவரையும் தன்னுல ஒருத்தராகத்தான் பார்ப்பார். அவரவருக்கான தேவைகளை நீங்க கேட்கும் முன்னமே செஞ்சுடுவார். நானே சில சமயங்கள்ல என் மருமகனின் பொறுமையையும் பொறுப்பையும் பார்த்து பெருமை பட்டிருக்கேன். உண்மைய சொல்லணும் என்றால் ஹீ இஸ் எ ஃபென்டாஸ்ட்டிக் காய். பார்க்கதானே போறீங்க." என்றவர் மேலும் தன் திட்டங்களை தெளிவாக கூறிவிட்டு விழாக்கான நிகழ்ச்சிகளை ஒழுங்கமைக்க ஒரு குழுவை நியமித்தவர் கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேற மற்றவர்கள் அன்றைய வேலைகளைக் கவனிக்கச் சென்றனர்.

"என்னடி ப்ரியா, சார் இப்படிப் பயங்காட்டிட்டுப் போறார். அந்த புது எம்.டி டேன்ஜரான ஆள் போல இருக்கே! இப்ப என்னடி பண்ணுறது? எனக்கு பயமா இருக்கு." ராதா கூற

"ஆமாமா எனக்கும் அந்த டென்ஸன்தான்." தரைத் தளத்துக்கான உதவியாளர் வான்மதி ஒத்துப் பாட

"நல்ல வேளை இன்னும் ஒரு வாரமிருக்கு அதுக்குள்ள இருக்குற பென்டிக் வொர்க்ஸ முடிச்சிடணும்." அலுவலக ஊழியை ராகினி நிம்மதியுற்றாள்.

"எப்பவும் போல ராகவன் சாரே இருந்திருக்கலாம்." ஆண்கள் பகுதிக்குப் பொறுப்பான வினோத் சொன்னதும் மற்றையவர்களும் அதையே வழி மொழிந்தனர்.

"சேம் சேம் பப்பி சேம்." நான்காம் தள உதவி மேலளார் கபிலனின் வார்த்தையில் மற்றையவர்கள் சிரிக்க

"என்ன கபில் நீங்க ஆம்பிளப் பிள்ளை இப்படி பயப்படலாமா?" குழந்தைகள் பகுதிக்குப் பொறுப்பான மேலாளர் மாதவி கிண்டலடிக்க

"ஏன் மாதவி, அப்போ உங்களுக்கு பயமா இல்லையா?" அலுவலக ஊழியர் ரஞ்சன் கேட்க

"ஏன் இல்லாம அதெல்லாம் வண்டி வண்டியா இருக்கு."

"அப்போ எதுக்காக இந்த நக்கல்?" கபிலன் அவளை நோக்க

"அது நீங்க ஆம்பிள எப்படி பயப்படுறதுன்னு கேட்டேன் அவ்வளவுதான்."

"இதுல என்ன ஆம்பள, பொம்பள? பயம் எல்லாருக்கும் ஒன்னு தானே."

"அது சரி கபிலன் நீங்க சொல்லுறது ஹன்ட்ரட் பேஸன்ட் கரெக்ட், பயம் பயம்தான். அதுல என்ன ஆம்பள, பொம்பள?" என்று கபிலனுக்கு சார்பாக பேசிய ராதா எதுவும் கூறாது அமைதியாக வந்த ப்ரியாவின் புறம் திரும்பி

"ஏய் ப்ரியா, நீ என்ன எதுவும் பேசாம இவ்வளவு அமைதியா வர்றாய், உனக்கு பயமாயில்லையா? எங்களுக்கு எல்லாம் டென்ஸன் தலைக்கேறுது நீ என்னடான்னா ரொம்ப கூலா வர்றாய்?"

"அதானே" மற்றையவர்களும் கேட்க ஏதோ பேச வந்த ப்ரியாவை முந்திக் கொண்ட கணக்காளர் அகிலன்

"ப்ரியா எப்பவுமே இப்படித்தானே எதுலயுமே உங்களை மாதிரி டென்ஸனாகாம கூலாத்தான் இருப்பாங்க. அதுமட்டுமில்ல அவங்க வேர்க்ஸ்லயும் பெர்ஃபெக்ட்டா இருப்பாங்க. ஸோ, அவங்க கூலா இருக்காங்க அதனாலயே எனக்கு அவங்கள ரொம்ப பிடிக்கும். நான் சொல்லுறது கரெக்ட் தானே ப்ரியா." என்றவனை உள்ளூர கடுகடுப்புடன் யாருமறியாது ராகினி முறைத்தாள்.

"என்ன அகிலன் சார் ப்ரியாக்கிட்ட கேள்வி கேட்டா நீங்க பதில் சொல்லுறீங்க இது சரியில்லையே..." மாதவி இழுக்க அதில் அசடு வழிந்த அகிலனோ

"ஏன் நான் சொன்னா என்ன தப்பு, உண்மையத்தானே சொல்லுறேன். ஏன் ப்ரியா நான் சொல்லலாம் தானே?" ஏதோ ஒருவித எதிர்பார்ப்புடன் ப்ரியாவிடம் வினவிய அகிலனின் கேள்விக்கு பதில் கூறாது மற்றையவர்களைப் பார்த்து

"நான் மட்டுமா லலிதா மேடமும் ரொம்ப கூலா அமைதியாத்தானே வர்றாங்க அப்போ அவங்களுக்கு டென்ஸன் இல்லையா?"

"என்ன ப்ரியா என்னை இழுக்குறீங்க?" சிறு சிரிப்புடன் லலிதா கேட்க

"அதானே லல்லி, ப்ரியா சொல்லுற மாதிரி நீங்களும் ரொம்ப கூலாத்தான் இருக்கீங்க ஸோ...." வான்மதி கேட்டதும்

"அதுவா இங்கப்பாருங்க நான் உங்கள மாதிரி சாக்குப் போக்கு சொல்ல முடியாது. ஏன்னா, என் வேல அப்படி. முதலாளியோட நேரடிப் பார்வையில இருக்குறவ எம்.டி சாரோட செகரட்டரியா அவரோட பாதி வேலைய நான்தான் முடிக்கணும். அதனால நான் என்றைக்கும் வேர்க் பென்டிங் வச்சதில்ல."

"லலிதா மேம் மட்டுமில்ல நானும் அப்படித்தான். ஆனாலும் உள்ளுக்குள்ள கொஞ்சம் உதறலாத்தான் இருக்கு." என்றாள் சிவராமனின் செயலாளர் வீணா.

"வீணா சொல்லுறது உண்மைதான். எனக்கும் உள்ளுக்குள்ள ஒரு பயம் ஓடிட்டே இருக்கு. அதனாலதான் நான் எதுவும் பேசாம நீங்க பேசுறதை கேட்டுட்டு வர்றேன். நான் கூலா எல்லாம் இல்லப்பா எனக்கும் டென்ஸன் தலைக்கு ஏறுதுதான். அப்படி பார்த்தா எங்களை விட ப்ரியாதான் ரொம்ப கூலா வர்றா, என்ன ப்ரியா நான் சொல்லுறது கரெக்ட் தானே?" லலிதா வினவ

"ப்ரியா, நீங்க பெரிய ஆளுதான் போங்க, ஆம்பள எனக்கே லைட்டா உதறுது. ஆனால், பாருங்க மேடம் எப்படி இருக்கான்னு." கபிலன் கூற்றிற்கு

"ஏய் சும்மா பயப்படாதீங்கப்பா, அந்த எம்டிக்கு என்ன கொம்பா முளச்சிருக்கு. சார் தான் சொன்னாரே தப்பு பண்ணினால்தான் கோபப்படுவார் என்று நாம நம்ம வேலையில கரெக்ட்டா இருந்தா அவர் ஏன் கோபப்படப் போறார். சோ டூ யூர் வேர்க் வெல் என்ட் கிவ் யூவர் பெஸ்ட். டோன்ட் வொரி பீ ஹெப்பி." அனைவரிடமும் அமைதியாக பதிலளித்தவள் அறியவில்லை அந்த எம்டியிடம் கோபத்தை முதலில் எதிர்கொள்ளப் போவது அவள்தான் என்று. அவளின் இந்த பதிலில் அவளை பெருமையாய் நோக்கியவாறு

"நான்தான் சொன்னேனில்ல இதுதான் நம்ம ப்ரியா." மார்தட்டிக் கொண்ட அகிலனைப் பார்த்த ராதாவோ

'சரியில்லையே இந்த பாராட்டு சரியே இல்லையே, அதோட இந்த பார்வையும் சரியே இல்லையே. ஹா.... இதுக்கு நம்ம அம்மணியோட ரியாக்‌ஷன் என்ன?' மனதினுள் நினைத்தவாறு தோழியின் புறம் திரும்ப அவளோ அதற்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் இவளையே பார்த்து நின்றவள்

"ஏய் ராது, என்னடி மந்திரிச்சு விட்டமாதிரி இருக்குற இங்கப்பாரு இன்னும் ஒரு வாரம் இருக்கு, நியூ எம்டி வாரதுக்கு. இப்பவே டென்ஸனாகாத நம்ம கரெக்ட்டா இருந்தா எல்லாம் ஓகே தான்டி. ஸோ, டோன்ட் வொரிடி டேகிட் ஈஸி."

"உனக்கு எல்லாம் ஈஸிதான் ஆனால் எனக்கு ம்ஹ்ம்..... உனக்குத்தான் தெரியுமே எனக்கு டைம் மெயின்டைன் கொஞ்சம்..... கொஞ்சமென்ன ரொம்பவே கஷ்டம் என்று. அதான் கொஞ்சம் பயமாயிருக்கு." ராதா புலம்ப

"இங்கப்பாரு சும்மா பயப்பட்டுக்கு இருக்காம உன்னோட வேலைய சரியா செய், டைம் பங்சுவல் கொஞ்சம் மெயின்டைன் பண்ணு அதுக்குப்பிறகு அந்த புது எம்டி என்ன, யாரும் உன்னை குற்றம் சொல்ல முடியுமா?" ராதாவுக்கு எடுத்துக் கூறிய போதும் ப்ரியாவையும் சிறு பயம் தொற்றிக் கொண்டது.

"ரொம்ப ஈஸியா சொல்லிட்ட, உனக்கென்னம்மா நீ ஏர்லியா வர்றவ."

"ஆனாலும்டி எனக்கும் எப்பவும் போல நம்ம ராகவன் சாரே எம்டியா இருந்தால் நல்லா இருக்கும் போலத்தான் இருக்கு." அவளும் தன் பயத்தை எடுத்துரைக்க

"என்ன அகிலன் சார்? மேடம் அப்படி இப்படி என்று ரொம்பப் புகழ்ந்தீங்க, இப்போ என்ன சொல்லுறீங்க?" அவனுடன் கோபமாயிருந்த ராகினி சமயம் பார்த்து அவனை நக்கல் செய்ய

"அதானே அகிலன் சார்...." அவனை வம்பிழுக்கும் நோக்குடன் ராதா கேட்க

"ஐயோ! என்ன ப்ரியா இப்படி காலவாரிட்டீங்களே!" அவன் முகத்தை தொங்கவிட

"என்ன சார் இப்படி சொல்லுறீங்க? என்னோட மனநிலையத்தானே நான் சொன்னேன். உங்க எல்லார் மாதிரியும் எனக்கும் பயமாத்தான் இருக்கு"

"அதைத்தானே இம்பட்டு நேரமா நாங்களும் சொல்லிட்டிருக்கோம்." ரஞ்சன் கூற்றிற்கு

"ராகவன் சார் நம்ம டைமிங்க கண்டுக்க மாட்டார். ஆனால், இந்த புது ஆளு வேற மாதிரி போல அதுக்காகத்தான் இந்த பயம்." ராதா கூற

"ஆனாலும் என்ன செய்ய, இது அவரோட கம்பனி இல்லையாமே இதுக்கு சொந்தக்காரர் அந்த புது ஆளுதானாமே. எப்படியோ நல்லவரா இருந்தா சரி. நாம நம்ம வேலையில சரியா இருந்தால் அவர் எதுக்காக கோபப்படப் போறாரு சொல்லு, எல்லாம் நம்ம கையில தான் இருக்கு ம்.... பார்க்கலாம்." ப்ரியா மற்றையவர்களுக்கு எடுத்துரைத்தவள் தன்னையும் திடப்படுத்திக் கொண்டாள்.

"அது சரி தான். அதைவிடுங்க ராகவன் சாரோட மருமகன் என்றால் மகளோட வீட்டுக்காரவராக்கும்." வான்மதி கேட்க

"இருக்கும் இருக்கும் சாரோட மகளும் கல்யாணமாகி லண்டன்லதான் இருக்காங்க. அதனால அப்படித்தான் இருக்கும். என்னடி ப்ரியா?" ராதா தன் சந்தேகத்தைக் கேட்க

"இருக்கலாம்டி. அதனால்தான் சாரும் ரொம்ப பொறுப்பா இதைப் பார்த்திருக்கார் போல." என அவள் கேள்விக்கு பதிலளித்தாள் ப்ரியா.

"என்ன இருந்தாலும் மகளோடது இல்லையா? கண்டிப்பா நல்லா பார்க்கத்தானே வேணும்." மாதவி கூற, அனைவரும் பேசியவாறே தங்கள் தங்கள் தளங்களை நோக்கிச் செல்ல ராதாவும் ப்ரியாவும் தங்கள் தளங்களுக்குச் செல்ல படிக்கட்டில் இறங்கினர்.

"ஏய் ப்ரியா, அந்த அகிலனுக்கு உன் மேல ஒரு கண்ணுன்னு நினைக்குறேன்டி"

"சும்மா கண்டத உளராம வா."

"நான் எங்க உளர்றேன், உண்மையத்தான் சொல்லுறேன்."

"எது உண்மை?"

"அவருக்கு உன் மேல கண்ணு, அந்த ராகினிக்கு அகிலன் மேல கண்ணு. இதுதான் உண்மை." ராகமாய் இழுக்க

"லூசு மாதிரி உளறாத, ராகினி விசயமெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், என் விசயம் அப்படி ஒன்னுமிருக்காது. எல்லாம் உன்னோட கற்பனை."

"கற்பனையல்ல, முழு நிஜம்."

"என்ன இப்போ, என்னை பாராட்டுற மாதிரி பேசினாரே அதுக்கு சொல்லுறாயா?"

"அதுமட்டுமில்ல அவர் உன்கிட்ட பேசுற முறை, உன்னைப் பார்க்குற பார்வை, எல்லாத்தையும் வச்சுத்தான் சொல்லுறேன். நான் மட்டுமில்லடி நம்ம மத்த ஸ்டாஃப்ஸையும் கேட்டுப் பாரு இதேதான் சொல்லுவாங்க."

"இங்கப்பார் ராது, அப்படி எதுவும் எனக்குத் தெரியல்ல."

"அதுக்கு நம்மள சுத்தி என்ன நடக்குதுன்னும் அப்பப்ப பார்க்கணும். இப்படி ஒரே வேல, வேல என்று மட்டும் இருக்கக் கூடாது, புரிஞ்சதா?"

"அதுக்குத்தானே வந்திருக்கோம். இல்ல மத்தவங்க என்ன பண்ணுறாங்க, ஏது பண்ணுறாங்க என்று பார்க்கவா நமக்கு சம்பளம் தாராங்க?"

"உன்கிட்ட மனுஷன் பேசுவானா? அம்மா தாயே தெரியாம சொல்லிட்டேன் விடு மிஸ் பெர்ஃபெக்ட். ஆனால், ஒன்னுடி அகிலன் ஒன்னும் மோசமானவருமில்ல நல்ல தொழில், நல்ல வருமானம், ஆளும் பார்க்க ஹீரோ போல சும்மா அட்டகாசமாத் தான் இருக்கார். ஸோ, சீக்கிரமே உன்கிட்ட வந்து ப்ரப்போஸ் பண்ணுவாரென்னு நினைக்கிறேன். அப்படி மட்டும் நடந்துச்சுன்னா எதையும் யோசிக்காதே, உடனே ஓகே சொல்லிடு என்ன?"

"அடி வாங்கப் போற வாய மூடிக்கிட்டு வா."

"என்னடி இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன். இப்படிக் கோபப்படுற? எப்படியும் இனி கல்யாணம் பண்ணத்தானே வேணும் அதனாலதான் சொன்னேன்."

"எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படிக் பேசலாமா ராது? இப்போ என் நினைப்பு முழுக்க தம்பியோட படிப்பும் ப்ரீத்தியோட கல்யாண செலவிற்கு சேர்க்கிறதுலயும் தான்டி இருக்கு."

"அவங்களையே பார்த்துட்டிருந்தா நீ எப்போடி உன் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கப் போற? உனக்கும் வயசாகுதில்ல." தன் கேள்வியில் விரக்தியாய் சிரித்த தோழியைப் பார்த்த ராதாவிற்கு கோபம் வர

"என்னடி ஒரு மார்க்கமா சிரிக்குற? இந்த சிரிப்பே சரியில்லையே! உன் மனசுல என்னம்மோ இருக்கு, என்ன என்றுதான் சொல்லித் தொலடி."

"நான் என்றைக்குமே கல்யாணம் பண்ணிக்கப் போறதில்ல." அவளின் தீர்க்கமான குரலிலே ப்ரியாவின் எண்ண ஓட்டத்தை அறிந்தவள்

"என்ன ப்ரியா இது, ஏன் இப்படி ஒரு முடிவு? அப்போ நீ இன்னும் பழசு எதையும் மறக்கல்ல அப்படித்தானே."
ராதாவின் கேள்விக்கு அவள் மௌனமாயிருக்க

"அப்போ, நீ இன்னும் அவனத்தான் மனசுல நினச்சிட்டிருக்கல்ல." சிறு அதிர்ச்சியுடன் ராதா வினவ, அப்போதும் ப்ரியாவின் மொழி மௌனமாகவே இருக்க, தோழியின் மனதினை முற்று முழுதாக உணர்ந்து கொண்ட ராதா

"ப்ரியா! நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத, இன்னொருத்தங்களுக்கு சொந்தமான பொருள, நம்ம நினக்கிறது சரியில்லடி. கிடைக்காதுன்னு தெரிஞ்சும் அந்த நினப்ப மனசுல சுமந்துட்டிருக்கிறது உனக்குத்தான் ரொம்ப வலியக் கொடுக்கும். ப்ரியா, உன் நல்லதுக்குத்தான் சொல்லுறேன். பழைய நினைவுகளை மொத்தமாத் தூக்கி தூரப் போடு, அகிலன் என்று இல்ல, உனக்கானவர் உன்னைத் தேடி வர்றப்போ மறுக்காம கல்யாணம் பண்ணிக்கத் தயாராகுடி."

"ஏய் லூசு ராதா, அப்படி எதுவுமில்ல, உன் கற்பனைக்கு என்னை பலியாக்காதடி." என சிரிக்க

"நல்லா சமாளிக்குற, நான் சொல்லுறது உண்மைதானே, எனக்கு பதில் சொல்லு."

"அப்படி எதுவுமில்ல, சரி சரி இந்த கதைய விடு, உன் இடம் வந்துடுச்சு. நான் என் ஃப்ளோருக்குப் போறேன்."

"என்ன எஸ்கேப் ஆகிட்டம் என்று சந்தோசப்படுறயா? இதுக்கு பதில் சொல்லாம விடமாட்டேன்டி"

"ஏய் நேரமாச்சுடி, அப்புறம் பார்க்கலாம் பைடி" என்றவாறே படிகளில் இறங்கி மறைந்தாள் பெண்.

ராகவன் அருணைப் பற்றி நல்ல விதமாகக் கூறியபோதும் புதுமுதலாளி கொஞ்சம் கோபக்காரன் என்பதையும் கூறியிருக்க, அனைவரும் மனதில் சிறு கவலையுடன் சேர்ந்த பயத்துடனே அன்றைய வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். உண்மையிலே ராகவன் ஒரு சிறந்த முதலாளி, அனைவரையும் தட்டிக் கொடுத்தே வேலை வாங்குவார். மேல்நிலை ஊழியரிலிருந்து கடைநிலை ஊழியர்கள் வரை அறிந்தே வைத்திருந்தார். அவரவரின் வேலைத் திறத்திற்கேற்ப அவ்வப்போது பதவி உயர்வுகளையும் கொடுப்பார். அதுபோல் தான் இரண்டு வருடங்களுக்கு முதல் விற்பனைப் பிரிவில் முதன்முதல் வேலைக்குச் சேர்ந்த ப்ரியாவிற்கு அவளின் வேலைத் திறனைப் பார்த்தே படிப்படியாக வேலை உயர்வை வழங்கினார். இன்று உதவி மேலாளராகப் பணியாற்றுகிறாள்.
வேலை முடிந்து வாடிய முகத்துடன் வீட்டுக்கு வந்த மகளைப் பார்த்த நீலவேணி, அவளின் வாட்டத்துக்கான காரணம் கேட்க, அன்று அலுவலகத்தில் நடந்ததைக் கூறினாள் ப்ரியா.

"இதுல பயப்பட என்னம்மா இருக்கு. தப்பு செஞ்சாத்தானே அந்தத் தம்பி கோபப்படும் என்று உங்க முதலாளி சொல்லிருக்காரு. நிச்சயமா நீ் வேலையில தப்பு பண்ண மாட்டே. அப்போ ஏம்மா கவலைப்படுறே. உன் வேலைத்திறனைப் பார்த்து அந்தத்தம்பியே உன்னைப் பாராட்டும் பாரு. நல்லத மட்டும் யோசி எல்லாம் நல்லதாவே நடக்கும். சரி கை கால் கழுவிட்டு வாம்மா. டீ குடிக்கலாம்." என நீலவேணியும் அவளுக்கு ஆறுதல் கூறி சமலறைக்குள் நுழைந்து கொள்ள, ப்ரியாவும் தன் அறையை நோக்கி நடந்தாள்.

ஆனால் அந்தத் தாயின் வாக்கு பொய்க்கப் போவதை பாவம் அவர்கள் இருவருமே அறியவில்லை.

வீசும்.....
 
வாசம் - 02

காலையிலிருந்து அடிக்கடி மகளின் அறையைப் பார்த்தவாறே வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் நீலவேணி. அவர் முகத்தில் பல உணர்ச்சிப் போராட்டம். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சற்றுத் தாமதமாகத்தான் ப்ரியா எழுவாள். அவள் எழுவதற்காகவே காத்திருந்த நீலவேணி மகள் வந்ததும் தேநீர்க் கோப்பையை நீட்டியவாறே அவளை அடிக்கொரு முறை பார்ப்பதும் ஏதோ பேச நினைப்பதும் வேண்டாமென திரும்பிப் போவதுமாக இருந்தார். இதனை புருவங்கள் சுருங்க பார்த்துக் கொண்டே தேநீரை ருசித்து அருந்தியவள் தாயின் புறம் திரும்பினாள்.

"அம்மா, என்ன விஷயம்? என்கிட்ட என்னமோ சொல்ல நினைக்குறீங்க, ஆனால் ஏதோ ஒன்னு தடுக்குது. முதல்ல இப்படி வந்து உட்கார்ந்து என்ன விஷயம் என்று சொல்லுங்க." என்றவள் தாயின் கைப்பற்றி அருகே அமர்த்திக் கொண்டாள்.
அமர்ந்தவர் சற்று நேரம் எதுவுமே பேசவில்லை பின்னர் தன்னை சுதாகரித்துக் கொண்டு தயங்கியவாறே

"ப்ரியாம்மா அது வந்து..... இரண்டு நாளா உன்கிட்டப் பேசலாமென்று இருந்தேன். ஆனால் நீ வேலையில ரொம்ப பிஸியா இருந்த."

"அம்மா, உங்களுக்குத்தான் தெரியுமே. புது நிர்வாகம் மாறுவதால இந்த ஒரு வாரமும் சரியான வேலை. அதுமட்டுமில்ல நாளைக்கு ஒரு சின்ன ஃபங்சனும் இருக்கு. நாளை ஒரு நாள் கடந்துட்டா எல்லாம் பழைய மாதிரி ஆயிடும்."

"தெரியும் தங்கம் அதனாலதான் உன்கிட்ட பேசல்ல. ஆனால், இதுக்கு மேலயும் பேசாம இருக்க முடியாது....."

"அப்படியா, ஏதாவது பிரச்சனையாம்மா, சரி இப்போ சொல்லுங்க என்ன விசயம்?"

"ப்ரியா, உங்க அக்கா மூனு நாளைக்கு முன்ன வந்திருந்தா." தாய் கூற 'இப்போ என்னவாம்' என்பது போல் தாயை ஏறிட்டாள் பெண். அந்தப் பார்வையில் மீண்டும் தயங்கியவாறே

"அது வந்து... மாப்பிள்ளையோட தொழில் கொஞ்சம் நஷ்டமாயிடுச்சாம். அதனால அவரு புதுசா வேற ஏதோ தொழில் தொடங்கப் போறாராம். கொஞ்சம் இருப்பு குறைவா இருக்காம்...."

"அதனால?" மகளின் கோபத்தை அடக்கிய குரலில் சற்று கலவரமுற்ற தாய் தன்னை சரிப்படுத்திக் கொண்டு

"அது வந்து அம்மாடி அந்த குறையிர பணத்தை நம்மள தரச் சொல்லுறாங்க"

"என்னம்மா இது? அவர் தொழில் தொடங்க நாம ஏன் பணம் கொடுக்கனும், நம்ம என்ன பணத்தைக் கட்டியா வச்சிருக்கோம் கேட்குற நேரமெல்லாம் எடுத்துக் கொடுக்க? முடியாதும்மா." உறுதியாய் மறுக்க

"ஐயோ! என்ன ப்ரியா, இப்படிச் சொல்லுற? பிறகு அக்கா கூட தானேம்மா சண்டை போடுவார். என் மகளோட வாழ்க்கை என்னாகும்? அவ அங்க கஷ்டப்படுறதைப் பார்த்து நான் எப்படி இங்க நிம்மதியா இருப்பேன்?" அவர் புலம்ப

"அம்மா கொஞ்சம் இப்படிக் பேசுற முதல்ல நிறுத்துங்க." தாயை அடக்கியவள்

"அதுசரி உங்க மாப்பிள்ளைக்கு தட்டுப்படுற பணம் எவ்வளவு?"

"அதுவாம்மா நாலு லட்சம் கேட்குறாங்கம்மா, பாவம் என் புள்ள ரொம்ப நொந்து போயிருக்கா." தாய் கூற அதிர்ந்தாள் பெண்.

"என்ன நாலு லட்சமா? இவ்வளவு பணத்துக்கு நான் எங்க போவேன். கொடுத்து வச்சமாதிரி கேட்டுட்டே இருக்காங்க. எப்போ பாரு ஏதாவது ஒரு காரணம். என்னம்மா இது?"

"நேத்தைக்கு உங்க அக்கா திரும்ப போன் பண்ணியிருந்தா உன்கிட்ட பேசியாச்சான்னு கேட்டா, அவங்க வீட்டுல ரொம்ப தொல்ல பண்ணுறாங்க போல பிரணீ குரலும் கொஞ்சம் அழுத மாதிரி இருந்துச்சு அதனாலதான் இன்றைக்கு எப்படியாவது உன்னோட பேசிடணும் என்று நினச்சேன். ஆனாலும் இத உன்கிட்ட எப்படி சொல்லுறதுன்னு தெரியல்ல அதான் தயங்கிட்டே இருந்தேன். ஏற்கனவே தம்பிக்கு பணம் கட்டணும். என்ன செய்யுறதுன்னு எனக்கும் ஒன்னும் புரியல்ல. அக்காவ நினைச்சாலும் கஷ்டமாத்தான் இருக்கு."

"எப்பம்மா நமக்கு விடிவு காலம் பொறக்கும். ஒரு பிரச்சனை மாறி ஒரு பிரச்சனை. தம்பிட காலேஜ் பீஸ்க்காக மூனு மாசம் முன்னாடி ஆபிஸ்ல லோன் கேட்டிருந்தேன். ஒருமாதிரி அப்ரூவ் ஆகுற டைம்லதான் இப்போ புது நிர்வாகம் மாறுது. அதனால லோன் தர முடியாதுன்னு சொன்னாங்க நான் கொஞ்சம்.... ம்ஹூம்... ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் அதை அப்ரூப் பண்ண வச்சிருக்கேன். அநேகமா நாளைக்கு கிடச்சிருமென்று நினைக்குறன். ஆனால் இப்போ இது வேற. அப்பா இருக்குற வரை நல்லவங்க மாதிரி வாலைச் சுருட்டிட்டு இருந்துட்டு அப்பா இல்லாம போனப் பிறகு நம்மள நிம்மதியா இருக்க விட மாட்டேங்குறாங்க. இதுக்குத்தான் நான் ஆரம்பத்துலே சொன்னேன். அவங்களும் கேட்பாங்க நாமளும் கொடுத்துட்டே இருப்போம் தண்டவாளம் மாதிரி முடிவில்லாம நீண்டுக்கிட்டே போகும். அதுக்கு இடம் வைக்காதீங்க என்று சொன்னா, யாரு கேட்டா? அவங்களுக்கு நம்ம நிலமை நல்லாவே தெரியும். தெரிஞ்சும் கேட்குறாங்கன்னா வேணுமென்று பண்ணுறாங்கன்னு தானேம்மா அர்த்தம். இது ஏன் இந்த அக்காக்கு புரியுதே இல்லை இவளும் ஆ...ஊ... என்றாலே கண்ணக் கசக்கிட்டு வந்துடுவா." அவள் கோபத்துடன் படபடக்க தாயின் கண்களில் நீர் நிறைந்தது.

"சரி சரி, நீங்க வேற கண்ணக் கசக்காதீங்க. இதுதான் இந்த கண்ணீருக்காகத்தான் எல்லாமே. என்னால முடியாட்டியும் முட்டி மோதியாவது செய்யுறேன். இந்த அக்கா அப்படி வரும் போது உங்களாலயும் தாங்க முடியுதில்ல. நீங்க கவலப்படுறதப் பார்த்தா என்னாலயும் முடியல்ல. ஆனாலும் எல்லாத்துக்கும் ஒரு அளவிருக்கும்மா, அத நீங்களும் புரிஞ்சிக்கணும்." தங்கள் நிலமையை எடுத்துக் கூற, அப்போதும் மூத்த மகளின் வாழ்வை எண்ணி கண்களில் கலக்கத்துடன் நின்ற தாயைப் பார்த்ததும் மனது பாரமாக

"அம்மா, கவலைப்படாதீங்க ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பார்க்குறேன். ஆனால், உடனே கிடைக்காது கொஞ்ச நாள் போகும். கிடைக்குமா என்பது கூட சந்தேகம்தான். ஆனால், கிடச்சாலும் ஒரு லட்சம்தான் தர முடியும் என்று கண்டிப்பா சொல்லிடுங்க. அதுக்கு மேலே முடியவே முடியாது என்றும்." மகள் கூற

"அப்போ மிச்சப் பணத்துக்கு என்னம்மா செய்யுறது?" முகம் வாட கேட்ட தாயிடம்

"அம்மா, இந்த ஒரு லட்சம் கிடைக்குறதே சந்தேகம், இதுல மிச்சத்த யோசிக்குறீங்க. இங்கப்பாருங்க நாம இந்த பணத்தைக் கூட கொடுக்குற நிலமையில இல்ல ஆனாலும் ஏதாவது ஏற்பாடு பண்ணினால் இவ்வளவுதான் முடியும். அதனால மிச்சத்தை எப்படி ஏற்பாடு பண்ணுறதுன்னு அவங்க யோசிக்கட்டும் நீங்க ஏன் தேவையில்லாம இப்படிப் பண்ணுறீங்க?"

"அதுக்கில்லம்மா அவங்களால முடியாமத்தானே நம்மகிட்ட கேட்டிருக்காங்க. அதுமட்டுமில்ல அவர் கேட்டது மொத்தமா கிடைக்கல்லன்னா நம்ம பிரணீயத்தான் கஷ்டப்படுத்துவார், சண்டை போடுவார் பத்தாததுக்கு அவங்க வீட்டாளுங்களும் ஏத்திவிடுவாங்களே அதுக்காகத்தான் நான் யோசிக்குறேன்." என்று மூக்கை உறுஞ்ச

"அம்மா, நீங்க அழாதீங்க. என்னால முடிஞ்சா கட்டாயம் அந்த நாலு லட்சத்தையும் ஏற்பாடு பண்ணுறேன்." மகளின் வார்த்தையில் முகம் மலர்ந்தவர் கண்களைத் துடைத்துக் கொண்டு

"சரிம்மா அப்போ நான் பிரணீகிட்ட கதைக்குறேன். எல்லாத்தையும் சொல்லி எப்படியாவது மருமகனை கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளச் சொல்லுறேன்." என்றாள் நீலவேணி. தாயின் கூற்றைக் கேட்ட ப்ரியாவிற்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.

'இவங்க இப்படி அப்பாவித் தனமாய் இருக்குறது தான் அக்கா வீட்டாளுங்களுக்கு வசதியா போயிற்று. முதல்ல இந்த அம்மாவுக்கு புரியுற மாதிரி சற்று அழுத்திச் சொன்னாத்தான் இதுக்கு ஒரு முடிவு வரும்.' என்று எண்ணியவளாய் தாயிடம் திரும்பி சற்று கோபத்துடனே

"அம்மா, இன்னொரு விஷயம் இதுதான் கடைசியா இருக்கட்டும். அக்காவ மட்டும் பார்த்துட்டு இருக்க முடியாது. ப்ரீத்தியும் கல்யாண வயசுக்கு வந்துட்டா, எக்ஸாம் முடிஞ்சதும் அவ கல்யாணத்துக்காக சேர்க்கணும். புதுசா அவளுக்குன்னு நகை வேற வாங்கணும், அவளுக்கும் இனி எல்லாம் பண்ணணுமில்ல. தம்பி படிச்சிட்டு இருக்கான் அவனுக்கும் லட்சக்கணக்குல செலவிருக்கில்ல. அதான் நமக்குன்னு இருந்த ஒரே சொந்த வீடு, அப்பாவோட மொத்த சேமிப்பு, நகை நட்டுன்னு அக்காட மட்டுமில்லாம எங்க இரண்டு பேரோட பங்கையும் சேர்த்து எல்லாத்தையும் அக்காக்கே கொடுத்துட்டீங்களே. இதுக்கு மேலேயும் என்ன இருக்கு. அத்தோட இது அவ வீட்டுப் பிரச்சனை அதை இனிமே அவதான் பார்த்துக்கம். இப்படி எதுக்கெடுத்தாலும் கண்ணை கசக்கிட்டிருந்தா அவங்களும் காலம் முழுக்க மிரிச்சுக்கிட்டே இருப்பாங்க. பத்தாததுக்கு நீங்களும் அக்கா போல கண்ணத்தான் கசக்குறீங்க. நாமளும் கேட்க கேட்க இவங்களும் கொடுத்துட்டே இருக்காங்க அதனால நாம இவங்ககிட்ட என்ன வேணும்னாலும் கேக்கலாம், எப்ப வேணும்னாலும் கேக்கலாம் என்ற எண்ணம் அக்கா வீட்டாளுங்களுக்கு வந்துடுச்சு. முதல்ல பிரணீக்காவ முதுகெழும்புள்ள ஒரு மனுஷியா மாறச் சொல்லுங்க. அதுக்குப்பிறகு அவ வீட்டுக்காரவர் என்ன கேட்கிறார் என்று பார்த்துக்கலாம். நான் இப்போ சொன்ன அத்தனையையும் அக்கா மண்டையில உறைக்குற மாதிரி கொஞ்சம் அழுத்தி சொல்லுங்க. அதோட நீங்களும் கொஞ்சம் புரிஞ்சுக்கங்க. என்னம்மா நான் சொல்றது புரியுதுதானே?" மகளின் கட்டளையில் மூத்த மகளிடம் என்ன சொல்லவதென தெரியாது நீலவேணியோ திகைத்து நின்றார். கட்டளையிட்டவளோ தேநீர் கோப்பையுடன் சமயலறைக்குச் செல்லத் திரும்ப

"அக்கா" என்றவாறே வந்தாள் ப்ரீத்திஸ்ரீ.

"அட செல்லம் எழுந்தாச்சா?"

"எனக்கொரு டீ போட்டு எடுத்துட்டு வாங்க, அத்தோட உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசணும்." கூறியவள் கால் மேல் கால் போட்டு நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க

"சரிடாம்மா இரு, முதல்ல டீ போட்டு கொண்டு வாரேன் அதுக்குப் பிறகு பேசலாம் என்ன?" என்று சமயலறைக்குள் புகுந்து கொண்டாள்.

தன் தாயும் தமக்கையும் பேசிய அனைத்தையும் கேட்டிருந்தவனுக்கு தன் தமக்கையின் பொறுப்பில் தன்னால் பங்கெடுக்க முடியாத நிலையை எண்ணி வருந்திக் கொண்டிருந்த போது தங்கை தமக்கையிடம் பேசிய முறையைப் பார்த்து கோபம் தலைக்கேற

"ஏய் நீ என்ன பெரிய மகாராணியா? அக்காவுக்கே ஆடர் போடுற, உனக்கு டீ வேணும்னா நீயே போட்டுக் குடிக்க வேண்டியது தானே. நீ ஒன்னும் சின்னப்புள்ள இல்லையே எதுக்காக அக்காவ கஷ்டப்படுத்துற அவங்களும் ஞாயிறு ஒரு நாள்தான் லீவா இருக்காங்க அப்பயும் அவங்ககிட்டயே வேல வாங்குற உனக்கு அறிவில்ல." ப்ரீத்தியைக் கண்டித்துக் கொண்டிருந்தான் அந்த வீட்டின் ஒற்றைப் புதல்வன் பார்த்தீபன்.

"அக்கா மட்டுமில்ல நானும் இன்று ஒரு நாள்தானே லீவா இருக்கேன் அது உங்க கண்ணுக்கு படாதே, உங்களுக்கு என் மேல கொஞ்சமும் பாசமில்ல ப்ரியாக்கா மேல மட்டும்தான் பாசம்." என்று கண்ணை கசக்க

"போதும் போதும், உன் நடிப்ப அக்காவோட மட்டும் நிறுத்திக்க, என்கிட்ட வேணாம் என்ன?" என்று அவளை வறுத்துக் கொண்டிருக்க

"டேய் தம்பி, ஏன்டா அவளை திட்டுற, பாவம் அவளுக்கும் இன்றைக்கு ஒரு நாள் தானே லீவு. படிச்சுப் படிச்சு களச்சிருப்பா ஒருநாளாவது ஃப்ரீயா இருக்கட்டும் விடுடா, அவளும் சின்னப்பிள்ளை தானே." என்றவாறு தன் உடன் பிறப்புகளுக்கு தேநீர் கோப்பையை ப்ரியா நீட்ட

"அப்படி சொல்லுக்கா." என்றவாறு தேநீரை ருசிக்கத் தொடங்கினாள் அந்த வீட்டின் கடைக் குட்டி.

"என்ன நொப்படிச் சொல்லுக்கா. ப்ரியாக்கா இவ ஒன்றும் சின்னப் பிள்ளை இல்ல. ட்வல்த் எக்ஸாம் எழுதப் போறா கழுத வயசாகுது. இப்பதான் கண்ணக் கசக்கினா நீங்க அவளுக்கு சப்போர்ட்டுக்கு வந்ததும் பாருங்க எப்படி டீய உறுஞ்சிட்டிருக்கான்னு கண்ணுல வந்த தண்ணி எங்கன்னே தெரியல்ல என்ன நடிப்புடா சாமி இவளா சின்னப்புள்ள. அக்கா, நீங்க தான் இவளை கெடுத்து வச்சிருக்கீங்க." தன் கோபத்தை தமக்கையிடம் காட்டிப் படபடக்க

"எனக்கு கழுத வயசாகட்டும் ஆனால் இவ்வளவு பேச்சுப் பேசினீங்க, உங்களுக்கும் அக்கா தானே டீ போட்டு கொண்டு வந்திருக்கா. யான வயசாகுது உங்களுக்குத் தேவையென்றால் நீங்க போட வேண்டியதுதானே எதுக்காக உங்க செல்ல அக்காவ கஷ்டப்படுத்துறீங்க அடுத்தவங்கள திருத்து முன்ன நம்ம சரியா இருக்கணும்." அவள் வார்த்தையில் பார்த்தீபன் பற்களை கடிக்க

"ஏய் ஸ்ரீ, என்ன பேச்சிது, மரியாதை இல்லாம? இங்கப்பாரு ப்ரீத்தி, பார்த்தீபன் உன்னோட அண்ணன். அவங்கிட்ட மரியாதையா பேசணும். அவனும் உன் நல்லதுக்குத்தான் எப்பவும் எதுவும் சொல்லுவான். உன் மேல பாசம் இல்லாம இல்லடா, அவனுக்கு நீ ஒரே தங்கச்சி, அதுவும் இந்த வீட்டுக் கடைக்குட்டி, உன்மேல எங்க எல்லோருக்கும் பாசம் அதிகம்டா. இனிமே இப்படி பேசாத என்ன?" என்று மழலைக்கு கூறுவது போல் மென்மையாக ப்ரியா எடுத்துரைக்க அதில் ப்ரீத்தியும் சமாதானமானாள். ஆனால் தன் மகள் இட்ட கட்டளையில் அதிர்ந்து நின்ற தாய் நடப்பவை யாவையையும் ஒரு பார்வையாளராக மட்டுமே பார்த்திருந்தார். அவரின் கவனம் கூட இதில் பதியவில்லை.

"சரி என்கிட்ட ஏதோ முக்கியாமான விஷயம் பேசணும்னு சொன்னாயே, இப்ப சொல்லு என்ன விஷயம்?" என்றவாறு அவள் அருகில் அமர

"ஒன்னுமில்லக்கா நான் சூப்பரான சுடி ஒன்னு பார்த்தேன், அதை உடனே வாங்கணும்."

"இப்போ எதுக்கு ஸ்ரீ சுடி அவசியமில்லாம?"

"அதில்லைக்கா என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் அந்த சூப்பர் சுடியை வாங்கியிருக்காங்க. நான் மட்டும்தான் இன்னும் வாங்கல்ல, இப்போ கடையில இரண்டு பீஸ்தான் இருக்கு அந்த கடைக்கார அண்ணாவோட சொல்லிட்டு வந்திருக்கேன் எனக்காக அதை எடுத்து வைக்க சொல்லி, அதனால இன்றைக்கே போய் வாங்கி வந்துடலாம். இல்லன்னா அதை நான் மிஸ் பண்ணிடுவேன். பிறகு என் ஃப்ரண்ட்ஸ் முன்னாடி எனக்கு பயங்கர அசிங்கமாயிடும். என்னக்கா அதை எனக்கு வாங்கித் தருவீங்கதானே? அவ்வளவு விலையுமில்ல ஏழாயிரந்தான்." அவள் கேள்விக்கு பதிலேதும் கூறாது அமைதியாக இருந்தாள் ப்ரியா. அதற்குள் முந்திக் கொண்ட பார்த்தீபன்

"என்னது ஏழாயிரமா? இங்கப்பாரு பொங்கலோ, தீபாவளியோ எந்தப் பண்டிகையுமில்லை அப்போ உனக்கெதுக்கு இவ்வளவு விலையில ட்ரெஸ். ஆனால், அப்படியிருந்தாக் கூட இந்த விலை, அதிகம்தான். அதனால இதெல்லாம் ஒன்னும் வேணாம்."

"அதை நீங்க சொல்ல வேணாம், அக்கா சொல்லட்டும்."

"ஏன், ஏன் நான் சொல்லக் கூடாது?"

"ஏன்னா பணம் தர வேண்டியது அவங்கதான் நீங்க இல்லை."

"பணம் நான் தர வேண்டியது இல்லைதான். ஆனால், சொல்லுற உரிமை எனக்கிருக்கு. தேவையில்லாம எதுக்கு ஒரு செலவு. இருக்குறதப் போடு புதுசா எதுவும் வேணாம் என்ன புரிஞ்சதா?"

"நான் உங்ககிட்ட கேட்டேனா? இல்லதானே, அக்கா பதில் சொல்லட்டும்."

"பார்த்திபா, நீ கொஞ்சம் அமைதியா இருடா." தம்பியிடம் கூறிய ப்ரியா தங்கையிடம் திரும்பி

"இங்கப்பாரு செல்லம், நம்மள பொறுத்தவரை ஏழாயிரம் என்றது ஒன்னும் கொஞ்சப் பணம் இல்லையேடா. வீட்டு செலவு எத்தனையோ இருக்கு. அப்படியிருக்கும் போது அவசியமில்லாம ஏன் செல்லம் வாங்கணும்?"

"என்னம்மோ என் மேலதான் எல்லோருக்கும் பாசம் அதிது என்றீங்க, இங்க ஒரு சுடி வாங்கிக் கேட்டா ஆயிரம் விளக்கம் சொல்லுறீங்க, இதுல செல்லம் என்று கொஞ்சல் வேற."

"அது அப்படியில்ல ஸ்ரீம்மா பண்டிகை நல்ல நாள் என்றால் நானே உனக்கு எடுத்துத் தராம விட்டுடுவேனா சொல்லு. இப்போ அவசியமில்லாம ஏன் எடுக்கணும், அதுக்குத்தான் சொன்னேன்."

"ச்சே ஒரு ட்ரெஸுக்கு இவ்வளவு கஷ்டம் என்றால் வேற ஏதாவது கேட்டால், ஐயோ! அது சரி ஒன்னுத்துக்கும் வழியில்லாத வீட்டுல பொறந்துட்டு ஆசைப்பட்டது என் தப்பு. வக்கத்த நாய்க்கெல்லாம் ஆசை ஒரு கேடு ச்சே... "

"ஏய் என்ன ஓவரா பேசுற? விட்டனென்றால் முப்பத்திரண்டும் கையில வந்துடும்." பார்த்தீபன் கையை ஓங்கிக் கொண்டு வர, ப்ரீத்தி பேசியது பிடிக்காவிடினும் அவனைத் தடுத்து நிறுத்தினாள் ப்ரியா. ஆனால் இது எதையும் அலட்டிக் கொள்ளாது

"அக்கா..... வாங்கித் தர முடியுமா? முடியாதா?" கோபமாக கத்தினாள் ப்ரீத்தி.

"முடியாது என்ன பண்ணுவ?" பார்த்தீபன் பதில் கொடுக்க அதில் பொறுமை இழந்தவள்

"திரும்ப திரும்ப சொல்லுறேன் உங்ககிட்ட நான் எதுவும் கேட்கல்லண்ணா."

"ஸ்ரீ, இப்போ கொஞ்சம் கஷ்டம்மா, அடுத்த மாசம் கண்டிப்பா வாங்கித் தாரேன்."

"அடுத்த மாசமா, என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் போட்டு பழசான பிறகு நான் புதுசா போடணுமா? அதவிடுங்க அதுவரைக்கும் அந்த ட்ரெஸ் கடையில இருக்குமா? என் ஃப்ரண்ட்ஸ் முன்னாடி நான் அசிங்கப்படப் போறேன், அதுதானே உங்க எல்லோருக்கும் வேணும்." சிறு பிள்ளையாய் அவள் அடம்பிடிக்க செய்வதறியாது கைகளை பிசைந்து கொண்டு நின்ற தமக்கையைப் பார்த்ததும் கோபத்தின் உச்சிக்கே சென்றான் பார்தீபன்.

"நீயும் உன் ஃப்ரண்ட்ஸூம், நீங்க என்னங்கடி ஸ்கூலுக்கு படிக்கப் போறீங்களா இல்ல ஃபெஷன்ஸோவுக்குப் போறீங்களா? ஸ்கூலுக்குப் போறேன், டியூஸனுக்குப் போறேன் என்று உன் ஃப்ரண்ஸூங்க கூட சேர்ந்துகிட்டு கடகடையா சுத்திருக்க இல்ல. இப்படிப்பட்ட ஃப்ரண்ட்ஸ் உனக்கு வேண்டாம், முதல்ல அவங்கள கட் பண்ணு."

"அவங்க கூட இருக்குறதால தான் இன்றைய ஃபேஷன் எல்லாம் எனக்குத் தெரியுது. அதுமட்டுமா வாய்க்கு ருசியா நல்ல நல்ல சாப்பாடும் சாப்பிட முடியுது. இந்த வீட்டுல பொறந்த எனக்கு என் ஃப்ரண்ட்ஸ் தான் அதிஷ்டம், அதை நான் ஏன் கட் பண்ணனும். உங்களுக்கெல்லாம் என்னைப் பார்த்து பொறாமை, நான் சந்தோசமா இருந்தா உங்க யாருக்குமே பிடிக்காதே." அவள் அழத் தொடங்க, தங்கையை சமாதானப்படுத்திய ப்ரியா

"கொஞ்சம் புரிஞ்சுக்க செல்லம் இந்த மாசம் கொஞ்சம் இறுக்கமா இருக்கு. அடுத்த மாசம் நிச்சயமா வாங்கித் தரேன்டா." அவளுக்குப் புரிய வைத்துவிடும் நோக்குடன்
பதமாக எடுத்துக் கூற

"முடியாது எனக்கு இப்பவே வேணும், அதுவும் இன்றைக்கே. அதான் அண்ணாவுக்கு லோன் வாங்குறீங்க, பிரணீக்காவுக்கும் லோன் வாங்க போறீங்க, அப்போ எனக்கும் லோன் வாங்கியாவது அந்த ட்ரெஸ்ஸ எடுத்துக் கொடுங்க." அவள் தன் பிடியிலே நிற்க, ப்ரீத்தியின் சின்ன ஆசைகளைக் கூட நிறைவேற்ற முடியாத தங்களின் குடும்ப நிலையை எண்ணி கவலை கொண்டாள் ப்ரியா.

"ஏய் நீ என்ன லூசா? எதை எதோட முடிச்சுப் போடுற, அறிவில்ல உனக்கு. ஏம்மா, அவ இம்பட்டு பேசுறா நீங்களும் வாய மூடிக்கிட்டு வேடிக்கை பார்க்குறீங்க." கோபமாய் தங்கையிடம் சத்தமிட்ட பார்த்தீபன் தன்னிலே மூழ்கியிருந்த தாயிடமும் குரலை உயர்த்த, நீலவேணியோ மூத்த மகளுக்கு என்ன பதில் சொல்வெதனத் தீவிர சிந்தனையில் இருந்தவருக்கு பிள்ளைகளின் சண்டையில் கவனம் செல்லவில்லை. எதுவும் கூறாது நின்ற இடத்திலே சிலையாய் நின்ற தாயைப் பார்த்த ப்ரியாவிற்கு அவரின் நிலையை பார்த்து உள்ளம் கணத்தது. இருந்தாலும் தன்னால் என்ன செய்ய முடியும் என்று கலங்கியவள் தங்கையின் ஆசையையாவது நிறைவேற்றுவோம் என்று எண்ணியவளாய் தங்கையின் புறம் திரும்பி

"இப்போ என்ன உனக்கு அந்த சுடி வேணும் அவ்வளவு தானே, போய் குளிச்சி ரெடியாகு. போகலாம்.''

"இல்லக்கா, நான் என் ஃப்ர்ண்ட்ஸோட போயிக்குறேன். நீங்க பணத்த மட்டும் கொடுங்க போதும்."

"உனக்கு சுடி வேணுமா, வேணாமா?" இப்போது ப்ரியாவின் வார்த்தையில் உறுதி தொனித்தது.

"வேணும்." என்றாள் ப்ரீத்தி பவ்யமாய்.

"அப்போ போய் ரெடியாகு நான்தான் கூட்டிட்டு போவேன் என்ன?" தமக்கையின் பிடிவாதத்தில் முகம் சுணங்கியவள் மறுகணமே புது ஆடை வாங்கும் மகிழ்ச்சியில் தயாராவதற்காக சிறு பிள்ளையாய் துள்ளிக் கொண்டு ஓடினாள். அவளின் உற்சாகத்தை முகம் மலர பார்த்துக் கொண்டிருந்த தமக்கையிடம்

"அக்கா அவதான் பொறுப்பில்லாம பேசுறான்னா, நீங்களும் வாங்கித் தரேன்னு சொல்லுறீங்க?"

"விடு தம்பி, அவ சின்னப் புள்ள அதுவும் இந்த வீட்டு செல்லப் புள்ள இப்போ எது சொன்னாலும் புரிஞ்சுக்குற வயசில்லதானே. அவளாவது சந்தோசமா இருக்கட்டும், விடுப்பா." சோர்ந்த குரலில் கூறினாள் ப்ரியா. அப்போது தான் சிலையாய் நின்ற நீலவேணிக்கு உணர்வு வந்தது ப்ரியாவின் வார்த்தைகளில் மனம் கணத்தது.

'இந்த குடும்ப சுமையைத் தாங்கும் போதும் என் மகளுக்கும் சின்ன வயசுதானே. என் தங்கத்துக்கும் எத்தனையோ ஆசைகள் இருந்திருக்குமில்ல.' எண்ணமிட்டவரிடம் வந்த ப்ரியா

"அம்மா, ப்ரேக்ஃபாஸ்டுக்கு ப்ரட்டிருக்கு. ப்ரட் ஆம்லட் பண்ணிடுறேன். ஸ்ரீ வந்ததும் நானும் குளிச்சுட்டு வந்தால் சாப்பிட்டு கிளம்ப சரியாயிருக்கும். நாங்க வந்த பிறகு மதியம் சாப்பாட்ட சமச்சுக்கலாம். நீங்க தனியா கஷ்டப்பட வேணாம், என்ன?" என்றவாறு சமயலறையினுள் நுழைந்து விட்டாள். செல்லும் மகளையே பார்த்திருந்த நீலவேணியின் கண்களிலிருந்து நீர் வடிந்தது.

"அம்மா, அக்கா பாவமில்ல இந்த குடும்பத்துக்காக எவ்வளவு கஷ்டப்படுறாங்க. ஆனால் ப்ரீத்திய பாருங்க பொறுப்பில்லாம இருக்கா. இன்னும் ஒரு வருஷத்துல என் படிப்பு முடிஞ்சுடும் எனக்கு தொழில் கிடச்சு நான் காலூன்றினதும் அக்காவோட மொத்த பாரத்தையும் நான் சுமக்கணும். அவங்களுக்குப் பொருத்தமான ஒரு ராஜகுமாரனப் பார்த்து நானே அவங்களுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கணும். இனியாவது அவங்க நிம்மதியா இருக்கணும்." என்று மனம் நிறைந்து சொன்ன மகனின் வார்த்தைகளில் தானும் தன் மகளுக்கு எத்தனை பழுவை மேலே மேலே ஏற்றி இருக்கின்றோம் என்று புத்தி தெளிய, நீலவேணி அங்கே பூஜையறையில் தொங்கியிருந்த கடவுள்களின் படத்தை பார்த்து கைகூப்பியவர்

'கடவுளே என் பொண்ணுக்கு ஏன் இவ்வளவு சுமையை மொத்தமா அவ முதுகுல சுமத்துனீங்க. பாவம் அவளும் சின்னக் பொண்ணுதானே எத்தனையைத்தான் தாங்குவா. ப்ரீத்தீக்கு மட்டுமா கல்யாண வயசாயிடுச்சு, இவளுக்கும் தானே. ஆனால், அதப்பத்தி கொஞ்சமும் யோசிக்காம இப்படி அடுத்தவங்களை மட்டும் சிந்திக்கிறாளே. கடவுளே என் பொண்ணுக்கும் அவ மனசுக்கேத்த வாழ்க்கையை அமைச்சு கொடுப்பா.' மனமுருகி வேண்டியவர்

'அவ சொல்லுறதும் சரிதான். பிரணீதாகிட்ட கறாராப் பேசித்தானாகணும். முதல்ல இந்த லோன் எடுக்கலாமா, இல்லையா? என்று ப்ரியா சொல்லட்டும் அப்புறம் எல்லாத்தையும் மொத்தமா பேசிடலாம்.' என்று முடிவெடுத்துக் கொண்டார். தயாராகி வந்த மகள்கள் இருவரும் காலை உணவை உண்டுவிட்டு தாயிடம் விடை பெற்றுக் கொண்டனர்.

வீசும்.....
 
வாசம் - 03

காலையில் எழுந்ததிலிருந்தே பரபரப்பாக இருந்தாள் ப்ரியா. ஏழு மணிக்கே தயாராகி வந்தவளை பார்த்த நீலவேணி

"என்னம்மா இவ்வளவு நேரத்தோட கிளம்பிட்டே!" எனக் கேட்க

"என்னம்மா மறந்துட்டீங்களா? இன்றைக்கு புது எம்டி வராங்கன்னு சொன்னேனில்ல. எட்டு மணிக்கே அங்க இருக்கணும். இப்போ சாப்பிட்டு கிளம்பினாத்தான் டைம் சரியா இருக்கும்மா." என்றவாறே அவசரமாக உண்டவள் கைப்பையை எடுத்துக் கொண்டு தாயிடம் விடை பெற

"ப்ரியா, உன்கிட்ட திரும்பத் திரும்ப சொல்லக் கூடாதுதான் இருந்தாலும் வேற வழியில்லையே...." தயங்கிய தாயை கேள்வியாய் நோக்கி நின்றாள் அவள். மேலும் தயங்கியவராய்

"அம்மாடி, அக்காவுக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்கு ஏற்பாடு பண்ண முடிஞ்சா பண்ணிடும்மா. மறந்துடாதே, இது பிரணீயோட வாழ்க்கைம்மா, இந்த ஒருவாட்டி மட்டும் கொடுக்கலாம்." நீலவேணி வருத்தத்துடன் கூற

"ஞாபகம் இருக்கு, போனதும் முதல்ல பர்சனல் லோன்க்கு அப்ளை பண்ணிப் பாக்குறேன். ஆனால் கிடைக்குமான்னு தான் தெரியல்ல. ஏற்கனவே தம்பிக்காக எஜிகேஷன் லோன் போட்டது இன்றைக்கு தர்ரதா சொன்னாங்கல்ல, அதையும் பார்க்கணும். சரிம்மா என்னால முடிஞ்ச அளவு ட்ரை பண்ணுறேன், இல்லன்னா கடவுள் விட்ட வழி, வரேன்மா." விடை பெற்றுப் புறப்பட்டாள் ப்ரியவர்ஷினி.

அன்று "வர்ஷிகாஷ் ஷாப்பிங் மால்" வணிக வளாகம் ஒரு விழாக் கோலத்துடன் களை கட்டியிருந்தது புது முதலாளியின் வருகைக்காக. ப்ரியா உள்ளே நுழைந்ததும் முதல் வேலையாய் தனிப்பட்ட கடனுக்காக விண்ணப்பித்தவள் பொது முகாமையாளரைத் தேடி அலுவலகப் பகுதியுள் நுழைய, அவரோ பரபரப்பாக அன்றைய நிகழ்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். அவரிடம் அனுமதி கேட்டு உள் நுழைந்தவள்

"குட் மார்னிங் சார்." என்றதும்

"குட் மார்னிங், என்ன விசயம்மா?"

"சார், இன்னைக்கு என்னோட லோன் கிடைக்கும், சைன் பண்ணி எடுக்க வரச் சொல்லிருந்தீங்க." வந்த காரணத்தைக் கூற

"ஓ... உண்மையில மறந்துட்டேன் ஆ... இன்னைக்கு புது எம்டி வர்றதால எனக்கு நிக்க முடியாதளவு வேலை இருக்கும்மா. ம்...." என சில கணங்கள் சிந்தித்தவர்

"சரிம்மா, வேலை நேரம் முடியும் போது வந்து சைன் பண்ணிட்டு வாங்கிக்கங்க." அவர் வாய்தான் அவளிடம் பேசிக் கொண்டிருந்ததே தவிர அவர் கைகள் ஒரு ஃபைலைப் பற்றியிருக்க கண்கள் அதில் மேய்ந்து கொண்டிருந்தன.

"சரிங்க சார், ரொம்ப நன்றி. அதோட இன்னொரு விசயம் சார், இது...." மேலே சொல்ல முடியாமல் அவள் இழுக்க அவளை நிமிர்ந்து நோக்கியவர்

"என்ன பேப்பர்ஸ் அது?"

"அது பர்ஷனல் லோன் அப்ளிக்கேஷன் சார்." தயங்கியவாறே கூறினாள் ப்ரியா.

"என்ன இன்னொரு லோனா? லோன் எடுத்த பணம் கை மாறதுக்குள்ள அடுத்ததா? சரி சரி இங்கப்பாரும்மா உங்ககிட்ட பேசிட்டிருக்க இப்போ எனக்கு நேரமில்ல, அதை வச்சுட்டுப் போங்க என்ன ஏதுன்னு இந்த ஃபங்சன் முடிஞ்சதும் பேசலாம். சரி இப்போ நீங்க போகலாம்." என்றதும்

'அப்பாடா எப்படியோ ஒரு வழியா அப்ளை பண்ணியாச்சு. கடவுளே! எப்படியாவது சார் மறுக்காம ஓகே பண்ண வச்சுடுங்க.' என்று மனதுக்குள் வேண்டியவள் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள். ஆனால் அவள் வேண்டுகோளை இறைவன் நிறைவேற்றியும் அதனை அவளே மறுக்கும் நிலை வரும் என்பதை பாவையவள் அறியவில்லை.

ஒருமணி நேரம் கடந்த நிலையில் அலுவலகத்தினுள் ஒரு பீஎம்டபல்யூ வழுக்கிக் கொண்டு வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினான் அவன். ஆறடி உயரம் அழகிய கம்பீரமான உருவம் லண்டனின் குளிரில் ஆப்பிள் போல இருந்தான். அவனுடன் சேர்ந்து ஒரு பெண்ணும் ஆணும் இறங்கினர். ராகவனின் கண் ஜாடையில் சிவராமன் அவனுக்கு மாலை அணிவிக்க, ஒரு பெண் ஊழியர் மூவருக்கும் கைகளில் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்று மீட்டிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றனர். பக்கத்திலிருந்த ராதாவுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் ப்ரியா. அப்போது உள் நுழைந்தவர்களைப் பார்த்த ராதாவோ

"ஹேய் ப்ரியா, அங்கப்பாரு நம்ம புது எம்டி வந்துட்டாங்க போல. இரண்டு ஜென்ஸ் வராங்க. இதுல யாருடி அருண். கூடவே ஒரு லேடியும் வராங்க எம்டியோட மிஸிஸ் போலருக்கு." ராதா கூற
புன்னகை முகமாக திரும்பிய ப்ரியா அப்போதுதான் உள் நுழைந்தவர்களில் அவனைக் கண்டவள், புன்னகையோ மொத்தமாய் அவளிலிருந்து விடைபெற்றுக் கொண்டது. வைத்த கண் வாங்காமல் தன்னையும் மறந்து அவனையே பார்த்திருக்க, அவனும் அவளைத்தான் பார்த்தவாறு மைல்ல நடந்து வந்து கொண்டிருந்தான். ஆனால், அவன் பார்வையில் எதுவித சலனமுமில்லை. ஒரு அந்நியத் தோற்றம் மட்டுமே. அவளுக்கோ மொத்த உலகமும் தட்டாமலை சுற்றியது. காலடியில் பூமி நழுவியது. அவள் இதயத் துடிப்பின் தடதடத்த சத்தம் அவளுக்கே கேட்டது.

'ஐயோ! எவன் பார்வையில் இனி பட்டு விடக் கூடாது என்று வாழ்ந்த ஊரை விட்டு ஓடினாளோ அவன்,
எவனை இனி பார்க்கவே கூடாது என்று எண்ணி வாழ்ந்தாளோ அவன்,
இனி ஒரு போதும் பார்க்கவே முடியாதென்று எண்ணி எண்ணி ஏங்கித் தவித்தாளோ அவன், அவனுக்காகத்தான் தன் மொத்த வாழ்க்கையும் என எண்ணி வாழ்ந்தவள் அது இனி ஒருபோதும் தனக்கில்லை என்று நினைத்து நினைத்து யாருக்காக கண்ணீருடன் தூக்கம் தொலைத்தாளோ அவன். அந்த ஆகாஷ், அவளுடையதாயிருந்த அவள் ஆகாஷ், இந்த நிமிடம் வரை அவளின் நினைவிலும் கனவிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் அவள் ஆகாஷ்.
தான் கேட்ட கேள்விக்கு ப்ரியாவிடமிருந்து எதுவித பதிலும் வராததால் அவளை லேசாக தோள் தட்டிய ராதா என்னவென கண்களால் கேட்க ஒன்றுமில்லை என்று கண்களாலே பதில் சொன்னாள் ப்ரியா. மீண்டும் ராகவனை கண்களால் காட்டினாள் ராதா. ராகவன் பேசிக் கொண்டிருந்தார்.

"இதுதான் என் மருமகன் அருண் ஆகாஷ், உங்க புது எம்டி. இது என் மகள் ரேஷ்மா, மகன் ராஜேஷ்." என வந்தவர்களை அறிமுகப்படுத்தியவர், நிறுவன ஊழியர்களையும் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார்.
ப்ரியாவினுள் ஆயிரம் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்க, ஒரு சிறு துளியேனும் பாதிப்பின்றி எவ்வளவு சாதாரணமாக அனைவரின் அறிமுகத்தையும் புன்னகையுடன் ஏற்கொள்கிறானே! அத்துடன் நிறுத்தாது அவ்வப்போது அவளை நோக்கியும் பார்வைக் கணைகளை வீசுகிறானே! அசைந்தாலே விழுந்து விடுபவள் போல உச்சி முதல் உள்ளங்கால் வரை அவளுக்கு உதறிக் கொண்டிருக்கும் போது, அவன் எந்தவொரு தயக்கமுமின்றி இவ்வளவு கம்பீரமாக எப்படி நடந்து வருகிறான் என்று அவள் வேதனையாக எண்ணிக் கொண்டிருக்க, ப்ரியாவிடம் வந்த ராகவன்

"இது இரண்டாம் தள உதவி பொறுப்பாளர் ப்ரியவர்ஷினி." என்று அவளை அருணிற்கு அறிமுகப்படுத்த அவன் உதடுகளோ 'வர்ஷினி! என் வர்ஷி!' தனக்குள்ளே மெல்ல முணுமுணுத்தவன் 'ஹாய்' என புன்னகைத்து அவளை நோக்கி கைகளை நீட்டினான். அவனின் கரங்களை பற்றும் துணிவற்றவள் அப்படியே நிற்க,

"ஏய் ப்ரியா, சார் கை நீட்டுறார். நீயும் ஹாய் சொல்லி ஹேன்ட் ஷேக் பண்ணுடி." என ராதா அவள் காதில் இரகசியம் பேசி அவள் தோளை மெதுவாக இடித்துக் கூறியும் அவள் நிலையில் மாற்றமில்லை. அவளையே சில கணங்கள் பார்த்திருந்தவன்

"என்ன மிஸ் ப்ரியவர்ஷினி, கை நீட்டவே இவ்வளவு யோசிக்கிறீங்க? ஏன் என்மேல அவ்வளவு பயமா?" என குரலில் லேசான கேலி இழையோட புன்னகையுடனே கேட்டான் அருண் ஆகாஷ். பல வருடம் கழித்துக் கேட்ட தன்னவனின் குரலை இரசிக்கக் கூட மறந்தவளாய் இமைக்காது அவனையே பார்த்திருக்க

"ப்ரியா ரொம்ப அமைதியான பொண்ணுப்பா. அவளுக்கு கூச்ச சுபாவம் கொஞ்சம் அதிகம்." என ராகவனே அவளுக்காய் எடுத்துரைக்க

"இருந்தாலும் அவளோட முதலாளி நான், என்னைப் பார்த்து இப்படி நடந்துக்கிறது என்னை இன்சல்ட் பண்ணுற மாதிரி தோணுது மாமா." என்றவாறு முகத்தில் கடுகடுப்புடன் அவளை நோக்கி மீண்டும் கையை நீட்ட, பதிலுக்கு அவனிடம் தானும் கையை நீட்டினால் எங்கே தன் கரங்களின் நடுக்கம் அவனுக்கு தெரிந்து விடுமோ என எண்ணியவள் இரு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தாள். அதில் மேலும் கடுப்பானவன் அவளை வெறுப்புடன் ஒரு பார்வை பார்த்து அவ்விடம் விட்டு சற்று கோபத்துடனே நகர்ந்தான். அவனின் வெறுத்த பார்வையில் கண்களில் கண்ணீர் துளிர்க்க நின்றவளிடம் வந்த ராகவன்

"சாரி ப்ரியா! அருண் பேசியதை நினச்சு அவனை தப்பா நினைக்காதம்மா, சில வருஷங்களா வெளிநாட்டுல வாழ்ந்தவன். அந்த நாட்டின் வாசம் அவனுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணமாத்தான் தோணும். சாரிம்மா." என அவன் சார்பாய் அவளிடம் மன்னிப்பை வேண்ட

"ஐயோ! சார், நீங்க என்கிட்ட மன்னிப்புக் கேக்கலாமா? தப்பு என்மேலதான் சார், அப்ரோட்ல மட்டுமில்ல ஷேக் ஹேன்ட் பண்ணுறது இந்தியாவிலும் சர்வ சாதாரணம் தானே. நான் அவரைத் தப்பா நினைக்கல்ல சார்." என அவள் சமாதானமாய் பேசியதும் ராகவனும் அங்கிருந்து நகர்ந்தார். அவள் பார்வையும் அவ்விடமிருந்து நகர்ந்து அவள் சம்மதமில்லாமலே அருண் ஆகாஷை சுற்றி வட்டமடிக்கத் தொடங்கியது.
ஒருவாறு அறிமுகப்படலம் முடிந்ததும் நிகழ்ச்சி நிரலின் படி விழா நிகழ்வுகள் தொடங்கின. அப்போது பேச எழுந்தான் அருண் ஆகாஷ். பரபரப்பானாள் ப்ரிய வர்ஷினி, எத்தனை வருடங்களாயிற்று அவன் கம்பீரமான குரலைக் காது குளிரக் கேட்டு, தன் காதுகளை தீட்டிக் கொண்டு அவனையே பார்த்திருந்தாள் பாவை. அவனும் அவள் புறம் திரும்பி ஆழ்ந்த பார்வை பார்த்தவன் மறு கணம் தன் பார்வையை திருப்பிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

"எல்லோருக்கும் வணக்கம், இத்தனை நாள் இந்த நிறுவனத்தை மாமாவுடன் சேர்ந்து இந்த நிலைக்கு கொண்டுவதற்கு உங்க அனைவருக்கும் என் முதற்கண் நன்றிகள். அதே ஒத்துழைப்பை நீங்க இனியும் எனக்குத் தரணும் என்று தாழ்மையுடன் கேட்டுக்குறேன். இந்த நிறுவனம் என்னோடது மட்டுமில்ல நம்ம எல்லோருடையதும் தான். இங்க நான் ஒரு முதலாளி இல்லை, உங்கள மாதிரி நானும் ஒரு ஊழியனாகத்தான் வேலை செய்யப் போறேன். இந்த ஒரு நாளைக்குள்ள நிச்சயமா என்னால உங்க எல்லோரையும் ஞாபகம் வச்சுக்க முடியாது. உங்க கூடவே வேலை செய்யும் போது உங்க எல்லோரையும் நல்லாத் தெரிஞ்சுக்கிறேன். இப்போ வேலை விசயத்தை பார்க்கலாம். ஒவ்வொரு தளத்தோட டீடெய்ல்ஸூம் எனக்கு வேணும். ஒரு ரிப்போட் ரெடி பண்ணுங்க. இந்த ஃபங்ஷன் முடிஞ்சதும் நாங்க மாமாவோட கம்பனிக்கு போறோம், அங்க இரண்டு நாள் வேலையிருக்கு. ஸோ, நான் இரண்டு நாள் கழிச்சுத்தான் இங்க வருவேன். அன்னைக்கு நான் கேட்ட எல்லா டீடெய்ல்ஸூம் ரெடியா இருக்கணும். நான் வந்ததும் என்கிட்ட கொண்டு வாங்க. அதப் பத்தின விளக்கமும் எனக்கு தேவை. மீண்டும் உங்க ஒத்துழைப்பை எனக்கு நீங்க தரணும் என்று கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன் நன்றி." அவன் பேசி முடித்ததும் அவன் இடத்திற்குச் சென்று அமர, பல வருடங்கள் கழித்து தன்னவனின் குரலைக் கேட்டதோடு தனக்குள்ளும் முழுமையாய் நிரப்பிக் கொண்ட ப்ரியாவின் கண்கள் கலங்கி கன்னத்தில் கண்ணீர் ஒற்றைக் கோடாய் இறங்க, யாருமறியாது கண்களைத் துடைத்துக் கொண்டாள் அவள். ஆனால் அது, அவளிலே பார்வையைப் பதித்திருந்த அவன் கண்களுக்குத் தப்பவில்லை. அவன் கண்களும் லேசாக கலங்க மெலிதாக புன்னகைத்துக் கொண்டான்.

மதிய உணவும் நிறுவனத்தின் ஏற்பாடே என்பதால் எல்லோரும் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். அருண் ஆகாஷ், ரேஷ்மா, ராஜேஷ், ராகவன், சிவராமன் உட்பட அனைவரும் அங்கேயே அமர்ந்திருந்தனர். ஆகாஷ் பார்க்காதவாறு அடிக்கொரு முறை அவனை தன் கண்களில் நிரப்பிக் கொண்டிருந்தாள் ப்ரியா. அப்போது அவள் காதுகளில் கிசுகிசுத்தாள் ராதா.

"ஏய், ப்ரியா அருண் சார் பார்க்க படு சூப்பரா இருக்காருல்ல. இனிமே நமக்கெல்லாம் வேலை ரொம்ப ஜாலியா இருக்கப் போகுது. செம்மையா சைட் அடிக்கலாம். போரிங்காவே இருக்காது என்னடி சொல்லுற?" கூறிக் கொண்டிருந்த ராதாவை முறைத்துப் பார்த்த ப்ரியா,

"உன்னோட இந்த வேலைக்கெல்லாம் நான் வரல்ல. நீயே பார்த்துக்கோ, என்னை ஆளை விடு." என்ற போதும் ராதா கூறியது அவன் அவளவனாய் இல்லாத போதும் ஏனோ அவளுக்குப் பிடிக்கவே இல்லை.

"நீ சரியான சாமியார்டி. நீ பாக்காட்டி எனக்கென்ன நான் செம்மையா ஜாலி பண்ணப் போறேன்." என்றாள் ராதா

"பார்த்துடி பக்கத்துல அவர் மனைவி இருக்காங்க. இது தெரிஞ்சா சைட் அடிக்குற உன் கண்ணை நோண்டிடப் போறாங்க." என்றவள் உள்ளம் அவள் வாயிலிருந்து உதிர்த்த வார்த்தைகளில் கதறித் துடித்தது. நிமிர்ந்து பார்க்க ரேஷ்மாவின் தட்டில் எதையோ வைத்துக் கொண்டிருந்தான் அவள் ஆகாஷ். அவன் வைத்ததை சுவைத்த ரேஷ்மாவிற்கு அதன் சுவை பிடிக்காததாலோ என்னவோ முகத்தை சுளித்தவள் தான் சுவைத்த மிகுதியை அருணுக்கு ஊட்டி விட, அவனும் ஏதோ கூறிச் சிரித்தவாறே அவள் எச்சிலை சுவைத்துக் கொண்டான். இவை அனைத்தையும் பார்த்திருந்தவள் இதயம் சுக்குநூறாகி விட, அவர்களையே வெறித்தவாறு அமர்ந்திருந்தாள் ப்ரியா.
இவள் பார்ப்பதை அறிந்தோ என்னவோ அவனும் சட்டென நிமிர்ந்து இவளைப் பார்க்க, அவனிலிருந்து தன் பார்வையை விலக்கிக் கொண்டாள் பாவை. ஆனாலும் மூச்சு முட்டுவது போல் இருந்தது அவளுக்கு, அதற்கு மேல் ஒரு கணமும் அவ்விடத்தில் நிற்க முடியாமல் ராதாவிடம் வாய்க்கு வந்த எதையோ உளறிக் கொட்டியவள் அந்த அறையை விட்டு வெளியேறி தன் தளம் நோக்கி விரைந்தாள். செல்லும் அவளை மனம் கணக்க பார்த்திருந்தான் அருண் ஆகாஷ்.

அன்று முழுக்க ஒருவித மந்த கதியிலே தன் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள் ப்ரியா. அருண் கொடுத்த வேலையை அவள் தள மேலாளர் குணசேகரன் அவளிடம் ஒப்படைத்திருந்தார். ஆகாஷைப் பார்த்ததிலிருந்து அவள் மனது ஒரு நிலையில் இல்லை. அவளால் வேலையில் ஈடுபடவே முடியவில்லை. ஒருவாறு அவள் மனது ஒரு நிலைக்கு வந்த போது அவளால் பாதி வேலையைக் கூட முடிக்க முடியவில்லை. நேரத்தைப் பார்க்க அவளின் வேலை நேரம் முடிவடைந்து மேலும் ஒரு மணி நேரம் கடந்திருந்தது. இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றதே நாளை பார்த்துக் கொள்ளலாம் என எண்ணியவளாய் கைப் பையை எடுத்துக் கொண்டு புறப்பட நினைக்கையில்தான் காலையில் தனிப்பட்ட கடனுக்கு விண்ணப்பித்திருந்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. ஆனால் ஏற்கனவே விண்ணப்பித்துக் கிடைத்திருந்த கடன் பணத்தை பெறுவதற்காய் சிவராமன் அழைத்தது அவள் நினைவில் கூட இல்லை. அடித்துப் பிடித்து அலுவலகப் பகுதியை நோக்கி விரைந்தாள் ப்ரியா. பொது முகாமையாளரின் அறைக்குச் சென்றவள் அவர் அனுமதி கேட்டு நிற்க உள்ளிருந்து எதுவித பதிலுமில்லாமல் போகவும் அறையுள் நுழைந்தவள் அங்கு அவர் இருக்கை காலியாக இருப்பதைக் கண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் கைகளைப் பிசைந்து கொண்டு் நின்றவளைக் கண்ட வீணா

"வாங்க ப்ரியா, உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன். ஜிஎம் சார் சொன்னாங்க உங்க லோன் விசயத்தைப் பார்த்து முடிக்க சொல்லி, நீங்க வந்து கையெழுத்துப் போட்டா நான் பணத்தைக் கொடுத்துட்டு கிளம்பிடுவேன்." என்று கூறிய போதுதான் காலையில் சிவராமன் சொன்னதே நினைவுக்கு வந்தது ப்ரியாவிற்கு.

"ஜிஎம் சார் எங்கே?" என வீணாவிடம் வினவ

"சார் இன்னைக்கு ஏர்லியாவே போயிட்டார் ப்ரியா. அதனாலதான் உங்க லோன் விசயத்தை என்னைப் பார்க்கச் சொல்லியிருந்தார்." எனக் கூறினாள் வீணா.

"வீணா மேம், நான் மார்னிங் சிவராமன் சார்கிட்ட ஒரு அப்ளிகேஷன் கொடுத்திருந்தேன், கொஞ்சம் அதை எனக்கு திருப்பி எடுத்துக் கொடுக்க முடியுமா?" தயங்கியவாறு கேட்க

"சாரி ப்ரியா, நீங்க சொல்லுற அப்ளிகேஷன் விசயம் எதுவும் எனக்குத் தெரியல்ல, சார் அது விசயமா என்கிட்ட எதுவும் சொல்லல்ல."

"வீணா மேம், அதோ அங்க டேபிள் மேலயிருக்க ஃபைல்லதான் அந்த அப்ளிகேஷனை சார் வச்சாங்க. ப்ளீஸ், அதை எடுத்துக் கொடுங்க மேடம்."

"சாரி ப்ரியா, சார்தான் பார்த்து செய்யணும். அவர் சொல்லாம நான் எதுவும் பண்ண முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க. நாளைக்கு வந்ததும் முதல் வேலையா சார்கிட்ட வந்து பேசுங்க ப்ரியா." என வீணா கூறியதைக் கேட்டு எப்படி அந்த கடன் விண்ணப்பத்தை மீளப் பெற்றுக் கொள்வதெனத் தெரியாமல் சில கணங்கள் தடுமாறியவள் அதனை நாளை வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தவளாக வீணாவுடன் சென்று கையொப்பமிட்டு பணத்தைப் பெற்றுக் கொண்டவள் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தாள்.

******

இரவு ஏழு மணி, வீட்டு முற்றத்தில் அமர்ந்து கொண்டு இருட்டையே வெறித்திருந்தாள் ப்ரியா. அவள் விழியோரங்களில் நீர் ததும்பியிருந்தது.
அவள் நினைவுகளோ அன்று காலையிலிருந்து நடந்தவைகளையே அசைபோட்டவாறு இருந்தன. இறுதியாக அவள் நினைவுகள் அவள் ஆகாஷையே சுற்றி வட்டமடிக்கத் தொடங்கின.

'இவன் எங்க இங்க வந்தான். அதுவும் முதலாளியாக. இனி இவனைப் பார்த்துக் கொண்டு வேலை செய்ய வேண்டுமே! ஏன் கடவுளே! என் வாழ்க்கையில மீண்டும் எதற்காக இவனை இணைக்குறீங்க, எனக்குப் புரியல்ல. இப்போதான் எல்லாத்தையும் மறந்து கொஞ்சம் நிம்மதியா இருக்கேன். அது உங்களுக்குப் பொறுக்கல்லையா? கஷ்டப்பட்டு மறந்த அவன் நினைவுகளை திரும்ப கிளறிவிடுவானா? இல்லை அவனை நம்ப வைத்து ஏய்த்ததற்கான தண்டனையை கொடுப்பானா?' என பெண்ணவளுள் ஏதேதோ எண்ணங்கள் தோன்றி அவளை இம்சித்தன.
ஆனாலும் அவளுள் ஒரு சிறு நிம்மதி, காணவே முடியாதென ஏங்கி தவித்த அந்த நெடிய ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து இனி வாரத்துக்கு ஆறு நாட்கள் அவன் உருவத்தை தன் கண்களிலும் அவன் ஆழ்ந்த கம்பீரமான குரலை காதுகளிலும் நிரப்பிக் கொள்ளலாம். என எண்ணமிட்டவளுக்கு வாழ்க்கையில் இன்பமென்றால் என்ன? வேதனை என்பது இதுதான் எனக் காட்டிய பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர அவள் உதடுகள் புன்னகைக்க, கண்களோ குளமாயின.

"ப்ரியா.... ப்ரியாம்மா" என்ற தாயின் அழைப்பில் சுயநினைவுக்கு வந்தவளாய் தலையை உலுக்கிக் கொண்டு கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள் பாவை.

"எவ்வளவு நேரமா அழைச்சிட்டு இருக்கேன். பதிலே இல்லாம உட்காந்திருக்க." அப்போதும் மகளிடம் பதிலில்லாதது கண்டு

"என்னம்மா, என்னாச்சு உடம்பு கிடம்பு சரியில்லையா? நான் கேட்க கேட்க எதுவும் பேசாம இருக்க. ஏதாவது பிரச்சனையா, என்னென்று சொல்லும்மா" என்று பரிதவித்த தாயைக் கண்டு மனம் இளகியவள்

"உடம்புக்கு ஒன்னுமில்லம்மா, மனசுதான் கொஞ்சம் சரியில்ல. அதனாலதான் கொஞ்ச நேரம் காற்றாட வெளியில உட்கார்ந்திருக்கேன் நீங்க எப்ப வந்தீங்க?"

"இப்பதான். அதவிடு என்னாச்சு தங்கம்?" என்று கேட்ட தாயை எதைக் கூறி சமாதானம் செய்வதென்று எண்ணிக் கொண்டிருக்க

"திரும்பவும் லோன் கேட்டதுல உங்க புது முதலாளி உன்னைத் திட்டிட்டாங்களாம்மா அதுதான் மனசு சரியில்லையா. அப்போ லோன் கிடைக்காதா? தம்பியோடது இன்னைக்கு கிடைக்குமென்று சொன்னாயே அதுவும் கிடைக்கல்லையா? என்னென்று இந்த அம்மாகிட்ட சொல்லும்மா மனசுல பூட்டி வச்சுக்காதே, பணந்தான் பிரச்சனை என்றால் வேற ஏதாவது வழி பார்த்துக்கலாம். இல்லன்னா கடவுள் விட்ட வழி." என அவரே ஒரு காரணத்தை எடுத்துக் கொடுக்க அதைப் பற்றியவளாய்

"அம்மா நான் லோனுக்கு அப்ளை பண்ணிட்டேன் ஆனால் ஜிஎம் சார் கொஞ்சம் கோபமா பேசிட்டார். அநேகமா லோன் கிடைக்குறது கஷ்டந்தான். நாம வேற ஏதாவது வழிதான் பார்த்துக்கணும். ஆனால் தம்பிக்காக போட்ட லோன் கிடச்சிடுச்சும்மா. நான் வந்தப்ப நீங்களும் ஸ்ரீயும் ஹாஸ்பிட்டலுக்கு போயிருக்குறதா தம்பி சொன்னான். அதனாலதான் உங்ககிட்ட சொல்ல முடியல்ல பணத்தை அவன்கிட்டயே கொடுத்துட்டேன் நாளைக்கு அதைக் கட்டிடுவான்."

"அப்படியா சரிம்மா, அக்காக்கு ஏதாவது பண்ணிக்கலாம்."

"அதுசரி அக்காகிட்ட நீங்க இது விசயமா பேசினீங்களாம்மா?"

"இல்ல ப்ரியா, நீ சொன்ன பிறகு பேசிக்கலாம் என்றிருந்தேன். ம்.... நாளைக்கு அவகிட்ட சொல்லிடுறேன்."

"அம்மா நம்பிக்கை கொடுத்து ஏமாத்த முடியாதில்ல, அதனால உள்ள நிலமைய எடுத்து சொல்லுங்க. முடிஞ்சா கண்டிப்பா பணம் தர்ரதா சொல்லுங்க. ஆனால், ஒரு லட்சம் தான் என்றதை கொஞ்சம் அழுத்தி சொல்லுங்க அதோட நான் நேற்றுச் சொன்ன மத்த விசயங்களையும் மறந்திடாம கண்டிப்பா பேசிடுங்க, என்ன?"

"சரிம்மா, எல்லாமே சொல்லிடுறேன். ப்ரியா, வெளியில பனி கொட்டுது சளி பிடிச்சுக்கும். உள்ள வாம்மா சாப்பிடலாம்."

"இல்லம்மா எனக்குப் பசியில்ல, நீங்க சாப்பிடுங்க." என்றாள் ப்ரியா.

"பசியில்லையா? வயசுப்புள்ள ராத்திரியில சாப்பிடாம தூங்கக் கூடாது. ஸ்ரீயும் பார்த்தியும் சாப்பிடாம உனக்காகத்தான் காத்துட்டு இருக்காங்க. வாம்மா." அப்போதும் அவள் மறுக்க

"நீ சாப்பிடல்லை என்றால் நானும் சாப்பிட மாட்டேன்." என்று சிறு பிள்ளையாக அடம் பிடித்த தாயின் திருப்திக்காக உள்ளே எழுந்து சென்றாள்.

"அம்மா, டாக்டர் என்ன சொன்னாங்க? ஒன்னும் பிரச்சனை இல்லையேம்மா"

"அவர் என்ன புதிசா சொல்லிடப் போறார், எல்லாம் பழைய மாதிரித்தான். நல்லா சத்தா சாப்பிட சொன்னாங்க. ரெஸ்ட் எடுக்கச் சொன்னாங்க, மனசுல எந்த கவலையும் வச்சுக்க வேணாம் என்று சொன்னாங்க. ஆனால் நம்ம வீட்டு நிலமையில சந்தோசம் எங்கயிருந்து கிடைக்கும் ஒன்று மாறி ஒன்றா வந்திட்டிருக்கே!" என்றவர் பெருமூச்சு விட

"அதுசரி அது நம்ம தலவிதி, அதை யோசிச்சு கவலைப்பட்டா நம்ம உடம்புதான் கெட்டுப் போகும். அதைவிடுங்க ஆனால் நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க என்று நாங்க சொன்னாத்தான் கேட்க மாட்டீங்க இப்போ டாக்டர் சொல்லுறதையாவது கேளுங்க என்ன?" என்றவாறே தாயின் திருப்திக்காக இரண்டு வாய் உண்டவள் தன் அறையுள் நுழைந்து கட்டிலில் சாய்ந்தாள்.
உறக்கம் அவளைத் தழுவ மறுத்தது. புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தாள். தூக்கமா ம்ஹூம்..... அவள் மனம் முழுக்க முழுக்க அவள் ஆகாஷே நிரம்பி இருந்தான். நினைவுகள் மீண்டும் மீண்டும் பின்னே சென்று கொண்டிருந்தன.

'இந்த ஐஞ்சு வருஷத்துல எல்லாத்தையும் மறந்து நிம்மதியா இருக்கேன் என்று நான் தப்பா நினைச்சுட்டேன். இன்னமும் என் ஆகாஷோட இல்லை அந்த அருண் ஆகாஷோட நினைவுகள் எனக்குள்ளே அப்படியே இருந்துதான் இருக்கு. ஐயையோ! இவனைப் பார்க்கும் போதெல்லாம் இவன் நினைவுகள் என்னைப்பாடாய் படுத்தப் போகுது. நினச்சாப் போல வேலைய விடவும் முடியாதே, என்னோட வருமானத்துல தான் இந்தக் குடும்பமே ஓடுது. என்னோட வருமானம் இல்லென்னா பிறகு என்ன ஆகும்? வேறு வேலை தேடுறதும் இப்போதைக்கு கஷ்டம். இது நல்ல வேலை, நல்ல சம்பளம் வேற. இதையும் இழந்தா, பிறகு மொத்தக் குடும்பமும் நடு ரோட்டில நிக்க வேண்டியது தான். முதல்ல வேற வேலை தேடணும். ஆனால், இதே சம்பளத்தோட எனக்கு வேலை கிடைக்குமா? சந்தேகம் தான். ஒருவேளை வேலை கிடைக்கவே இல்லன்னா என்ன செய்ய?" என தனக்குள் பலவாறு சிந்தித்தவள்

'பல்லை கடிச்சுட்டாவது இந்த வேலையைத்தான் பார்த்தாகணும்.' என்று முடிவெடுத்துக் கொண்டாள். அவள் உள் மனதோ அவனைக் கண்ணால் பார்க்கவும் அவன் குரலை காது குளிரக் கேட்கவும் தான் நீ இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கின்றாய் என அவளை இடித்துரைத்தது. தன் நெஞ்சறிய பொய்யுரைக்க முடியுமா? மெலிதாகச் சிரித்தவள் ஒருவாறு தூங்க நேரம் நடுசாமத்தைக் கடந்திருந்தது.

வீசும்.....
 
வாசம் - 04

எங்கிருந்தோ இசைத்துக் கொண்டிருந்த குயிலின் கீதம் அவள் செவி வழி புகுந்து துயில் கலையச் செய்ய அந்த குருநாதரில்லாத இசைப்பாட்டை ரசித்தவாறே எழுந்தவள் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வர அவளை வரவேற்றது நறுமணமிக்க தேநீரின் வாசணை.

"எந்திரிச்சிட்டாயா ப்ரியா, இந்தாம்மா டீ." என்று தேநீர் கோப்பையை நீட்டிய கைகளைக் கண்டதும் அவ்வளவு நேரமும் இருந்த இதமான மனநிலை மறைய, மெல்லிய கோபம் அவளுள் எழ, குரலை உயர்த்தாமல் ஆனால் அழுத்தமாக

"அம்மா." என்றாள். அந்த குரலை வைத்தே மகளின் கோப நிலையைப் புரிந்து கொண்ட நீலவேணி அவளைப் பாராமலே

"முதல்ல டீ குடிச்சுட்டு, குளிச்சி ரெடியாகி வாம்மா, காலைச் சாப்பாட்டை எடுத்து வைக்குறேன்." என்றவர் புன்னகை ஒன்றை முகத்தில் படரவிட்டவாறு அவளிடம் மீண்டும் தேநீர்க் கோப்பையை நீட்ட, அதனை வாங்காது தாயை நோக்கியவாறே அவள் நிற்க

"என்ன ப்ரியா, அப்படியே பார்த்துட்டு நிக்குற? முதல்ல இதப் புடிம்மா. சீக்கிரம் குடி உனக்கு ஏற்ற சூட்டிலதான் இருக்கு." அவள் கைகளில் தேநீர் கோப்பையைத் திணிக்க

"அம்மா, அதுக்குள்ள ப்ரேக்ஃபாஸ்ட் செஞ்சுட்டீங்களா?" என்றாள் சற்று கோபத்துடன், நீலவேணி ஆமெனத் தலையசைக்க

"அப்போ, மதிய உணவையும் சேர்த்தே தயார் பண்ணிருப்பீங்களே!" இப்போது நக்கலாகக் கேட்டாள் பெண்.

"ஆமாம்மா, வெண்டக்காய் சாம்பார் வச்சுட்டேன், சாதமும் ரெடி, கொஞ்சம் பீன்ஸிருக்கு பொரியல் பண்ணிட்டு ஆம்லட் போடுறதுதான் மிச்சம். நீ குளிச்சுட்டு வர்ரதுக்குள்ள அதையும் முடிச்சிடுவேன்." என்றார் மகளின் நக்கல் புரியாமல்

"ஏன் இன்னும் ஏதாவது மிச்சமிருந்தா அதையும் செஞ்சு வச்சிடலாமே!" அப்போதுதான் மகளின் நக்கல் புரிந்தவர், அவளைப் பார்த்து முழுப் பற்களையும் காட்டிச் சிரிக்க

"உங்களைத் திருத்தவே முடியாது, நான் வர்றதுக்குள்ள என்னம்மா அவசரம். சரி சரி இருக்கிறதையாவது நான் பண்ணிக்கிறேன் முதல்ல நீங்க கிச்சனை விட்டு வெளிய வாங்க." என்றாள் கறாராக

"நான் எல்லாம் செஞ்சுட்டேன் ப்ரியா, இனி சமைக்குற வேல மட்டுந்தான் மிச்சம். உனக்கு வேலைக்கு நேரமாகுதில்ல, போடாம்மா நீ போய் குளிச்சிட்டு வாம்மா, சின்னவ எந்திருச்சிட்டாளா?"

"இல்லம்மா, அவ நல்லாத் தூங்கிட்டிருக்கா, நான் குளிச்சிட்டு வந்து எழுப்பி விடலாம்னு நெனச்சேன்."

"சரிம்மா நீ போய் குளி, நான் சின்னவள எழுப்பி விட்டுட்டு வர்றேன்." என்றவாறு அறையுள் நுழைந்தவர் அங்கே ஆழ்ந்த துயிலிலிருந்த இளைய மகள் ப்ரீத்தி ஸ்ரீயைத் தட்டி எழுப்பினார். அவளோ சிணுங்கிக் கொண்டு மீண்டும் போர்வைக்குள் தன்னைப் புகுத்திக் கொள்ள, அவர் மீண்டும் அவளை எழுப்ப, தலையணைக்குள் காதுகளைப் புதைத்துக் கொண்டாள் ஸ்ரீ. அவளுடன் மல்லுக்கு நிற்காமல் ப்ரியாவை அழைத்தவர்

"ப்ரியா, நீ ஒன்னும் செய்ய வேணாம். இந்தக் கும்பகர்ணனோட தங்கச்சிய மட்டும் எழுப்பி விட்டுட்டு, நீ குளிச்சிட்டு வந்துடு."

"அம்மா....." போர்வைக்குள் இருந்து ப்ரீத்தி சிணுங்க

"அம்மா, நான் ஒன்றும் கும்பகரணன் இல்லை, நான் எல்லாம் எப்பவோ எந்திருச்சிட்டேன். இவளை திட்டுறதுக்கு ஏம்மா என்னை கும்பகரணன் என்றீங்க? இந்த தூங்கு மூஞ்சிய கும்பகரணி என்று சொல்லுங்க, அதுதான் இவளுக்கு மிகப் பொருத்தமா இருக்கும்." அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு வந்த பார்த்தீபன் கூற அவன் பேச்சில்

"நான் ஒன்னும் கும்பகரணி இல்லை." என்றவாறே போர்வையை உதறிவிட்டு படக்கென்று எழுந்தமர்ந்த ப்ரீத்தியின் செய்கையில் மற்றையவர்கள் சிரிக்க, அவர்களை முறைத்தவள், ப்ரியாவை முந்திக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். அதனைப் பார்த்ததும்

"ஏய் ப்ரீத்தி, அக்கா குளிச்சிட்டு வரட்டும் அப்புறமா நீ போம்மா."

"அம்மா! முதல்ல நான் குளிச்சிட்டு வர்றேன். அக்கா அப்புறம் போகட்டும்." குளியலறையில் இருந்தவாறே தாய்க்கு பதிலளிக்க,

"திமிரப் பார்த்தீங்களாம்மா?" பார்த்திபன் கூற

"இதுல திமிர் எங்க இருந்து வந்துச்சு? எனக்கு ஏதாச்சும் சொல்லல்லன்னா உங்களுக்கு தூக்கமே வராதாண்ணா." உள்ளிருந்து கத்தினாள் ப்ரீத்தி.

"டேய் தம்பி, சும்மாரு எப்பப்பாரு அவளை வம்பிழுத்துட்டு, உனக்கு இதே வேலையாப் போச்சு." தம்பியை அடக்கிவிட்டு தாயிடம் திரும்பியவள்

"அம்மா! முதல்ல அவ குளிச்சிட்டு வரட்டும். அப்புறமே நான் குளிச்சிக்கிறேன்."

"சரிதான் ப்ரியா, அவ வந்ததும் நீயும் குளிச்சு ரெடியாகி வாம்மா. பார்த்திபா! நீ வா உனக்கு டீ தர்றேன்." கூறியவாறு மகனையும் அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினார் நீலவேணி. ப்ரீத்தி குளித்து விட்டு வந்ததும் தானும் குளித்து தயாராகி தாயைத் தேடிச் சென்றாள் ப்ரியா, அங்கே அவரோ சமயலறையில் அரக்கப்பரக்க வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பிள்ளைகள் மூவரும் வந்ததைக் கண்டவர் அவர்களை அமர வைத்துப் பரிமாறத் தொடங்க அதனைத் தடுத்த ப்ரியா

"அம்மா நீங்களும்
உட்காருங்க, நான் எல்லோருக்கும் எடுத்து வைக்கிறேன்."

"ஐயோ! நான் வீட்டுல இருக்குறவ தானே எனக்கென்ன அவசரம், நான் அப்புறமா சாப்பிட்டுக்கிறேன். நீங்க எல்லோரும் வெளிய போறவங்க நேரமாயிடும். அதனால முதல்ல உட்கார்ந்து சாப்பிடு ப்ரியா."

"பரிமாறுவதற்கு அவ்வளவு நேரம் எடுக்காது எல்லோருக்கும் வச்சுட்டு நானும் சாப்பிடத்தான் போறேன்." என்றவாறு தாயை அமர வைக்க முயற்சிக்க நீலவேணியோ அவளை அமர வைக்க

"டாக்டர் அவ்வளவு சொல்லியும் திரும்பத் திரும்ப அதையே செய்றீங்க. எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்டீங்களா?" ப்ரியா அலுத்துக் கொள்ள

"இதுல என்ன இருக்கு, இதெல்லாம் ஒரு வேலையா?" என்றார் நீலவேணி.

"இதுவும் வேலதாம்மா." ப்ரியா கூறி முடிப்பதற்குள்

"யப்பா, உங்க பாசப் போராட்டம் தாங்க முடியல்ல, சகிக்கவும் முடியல்ல. அதை அப்புறம் வச்சுக்கங்க, இப்போ யாராவது ஒருத்தர் பரிமாறுங்க, எனக்கு ஸ்கூலுக்கு டைமாச்சு." என்று கத்தினாள் ப்ரீத்தி ஸ்ரீ. அவளின் பேச்சைக் கேட்டு ப்ரியாவும் நீலவேணியும் அதிர்ச்சியும் வருத்தமுமாய் அவளைப் பார்க்க, பார்த்தீபனுக்கோ பற்றிக் கொண்டு வந்தது. ப்ரீத்தியின் தலையில் ஒரு குட்டு வைத்தவன்

"நீயெல்லாம் மனுஷ ஜென்மம் தானா, என்ன பேச்சுப் பேசுற? அக்கா, அம்மா மேல இருக்கிற அக்கறையில சொல்லுறாங்க. நேத்தைக்கு நீதானே அம்மா கூட டாக்டர்கிட்டப் போன. டாக்டர் சொன்ன அத்தனையும் கேட்டு மண்டைய மண்டைய ஆட்டிட்டு வந்து இப்போ என்ன பேச்சுப் பேசுற? நியாயமா நீதான் முதல்ல அம்மாவ உட்கார வச்சு சாப்பிட வச்சிருக்கணும். ஆனால் உனக்கு உன் வயிறு மட்டும் நிரம்பினாப் போதுமில்ல. அதுவும் மத்தவங்க பரிமாறினாத்தான் மகாராணி சாப்பிடுவீங்களோ! ஏன் உனக்கு கையில்லையா? இல்ல நீ என்ன சின்னக் குழந்தையா?" அவன் சரமாரியாய் அவளைத் திட்டித் தீர்க்க, அவன் குட்டியதில் வலித்த தலையைத் தடவிக் கொண்ட ப்ரீத்தி, நுனி மூக்கு சிவக்க,

"அண்ணா! ரொம்ப பேசுறீங்க, வேண்டாம். எனக்கு டைமாச்சு அதனாலதான் சொன்னேன். இவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டது ட்ராமாட்டிக்கா, ஓவர் சென்டிமென்ட்டா இருந்துச்சு. சகிக்கல்ல, அதான் அப்படி சொன்னேன். நான் சொன்னதுல என்ன தப்பு?" என பார்த்தீபனை எதிர்த்து கேள்வி எழுப்பியவள், இவள் பேசியதைக் கேட்டு அதிருப்தியில் நின்ற தாயிடம் திரும்பி

"ம்மா, எனக்கு டைமாச்சுன்னு சொல்லுறேனில்ல புரியல்லையா? கல்லாட்டம் நிக்குறீங்க, சீக்கிரம் சாப்பாட்டை எடுத்து வைங்க."

"இவ்வளவு சொல்லுறேன் திரும்பவும் அம்மாகிட்ட பரிமாற சொல்லிட்டிருக்க?" அவன் அதட்ட, ப்ரீத்தி அழத் தொடங்க

"தம்பி வேணாம், அவ ஸ்கூல் போற அவசரத்துல அப்படிப் பேசிட்டா விடு பார்த்தி." ப்ரீத்தியின் வார்த்தைகள் ப்ரியாவிற்கும் பிடிக்காத போதும் அவள் பார்த்தீபனை சமாதானப்படுத்தினாள். ஆனால் பார்த்தீபனால் அவ்வளவு எளிதில் சமாதானமாக முடியவில்லை.

"அக்கா! இவ ரொம்ப சுயநலக்காரி. அவளுக்கு மட்டும் எல்லாம் சரியா நடந்தாப் போதும் மத்தவங்க எப்படிப் போனாலும் பரவாயில்லன்னு யோசிக்கிறா. இந்த பழக்கம் தப்பில்லையாக்கா? சின்னச் சின்னதா இவ செய்ற அத்தனைக்கும் நம்ம தண்டிக்காம விட்டோம்னா பின்னாடி பெரிசா எதையாவது செஞ்சுட்டு வந்து அப்பவும் சாதாரணமாத்தான் நிப்பா. எல்லாம் கை மீறிப் போயிட்டா. நமக்குத்தான் கஷ்டமாயிடும். அவ செய்ற தப்பை அப்பப்ப நம்ம சொல்லி திருத்த வைக்கணும். அத விட்டுட்டு அவ இஷ்டத்துக்கு விட்டா விளைவு ரொம்ப பெரிசாயிருக்கும்."

"அப்படி எங்க என்னை என் இஷ்டத்துக்கு விட்டுட்டீங்க?" ப்ரீத்தி மீண்டும் எகிறிக் கொண்டு வர, பார்த்தீபனும் மல்லுக்கு நிற்க, ப்ரியா இருவரையும் சமாதானம் செய்ய, பிள்ளைகள் தங்களுக்கே சண்டையிடுவதை தடுக்க நினைத்த நீலவேணி

"கொஞ்சம் நிறுத்துறீங்களா?" தாயின் சத்ததில் மூவரும் அமைதியாக

"ப்ரியா, இப்போ என்ன நானும் உங்க கூடவே உட்கார்ந்து சாப்பிடணும் அவ்வளவுதானே." என்றதும் அவள் தலையாட்ட,

"அதுக்கு எவ்வளவு ஆர்ப்பாட்டம், பேசாம மூணு பேரும் உட்காருங்க, நான்தான் பரிமாறுவேன்." என அதட்டலாய் சொல்ல மூவரும் அமர்ந்து கொள்ள அனைவருக்கும் பரிமாறிவிட்டு தானும் அமர்ந்து உண்ணத் தொடங்கினார் நீலவேணி. அவரை ஏறிட்ட பார்த்தீபன் அவர் முகத்திலிருந்த சோர்வை கண்டதும்

"ம்மா! இப்படி தனியா எல்லா வேலையையும் செய்யணுமா?"

"அதத்தான் தம்பி நானும் சொன்னேன். நான் வந்த பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து செஞ்சிருக்கலாமேன்னு எங்க கேக்குறாங்க?" ப்ரியாவும் அலுத்துக் கொள்ள

"வெளி வேலையத்தான் உன் தலையில ஏற்றியாச்சு, வீட்டு வேலையையும் சேர்த்து ஏத்த சொல்லுறாயா?" நீலவேணி கூறியதைக் கேட்டு, இவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாது தன் உணவிலே கவனமாய் இருந்த ப்ரீத்தியை பார்த்த பார்த்தீபன்

"அம்மா, அதுக்குத்தான் இந்த தண்டம் இருக்குல்ல, அவகிட்ட வீட்டு வேலையக் கொடுங்க." தமையன் கூற்றில் கோபமாக அவனை முறைத்த ப்ரீத்தி

"அண்ணா, என்னை ஏன் இழுக்குறீங்க? அக்காக்குத்தான் வேலையா, நானும் ஒன்னும் சும்மா இல்லை எக்ஸாமிருக்கு படிச்சிட்டிருக்கேன். இந்த வேலையெல்லாம் என்னால செய்ய முடியாது. நானும் நல்லாப் படிச்சு முடிச்சா எனக்கும் ஒரு நல்ல வேலை கிடைக்கும் அதுக்குப் பிறகு என் செலவ நானே பார்த்துப்பேன். அக்காவுக்கு என்னோட பாரம் மொத்தமாக் குறஞ்சிடும். சும்மா எல்லாத்துக்கும் என்னைய இப்படிக் குத்தம் சொல்லுறதை விட்டுடுங்க. அக்கா மட்டும்தான் உங்களுக்கு உசத்தியா தெரியுது. அதுசரி பணம் அவதான் தர்றாயில்ல அதனாலதான் இந்த கொண்டாட்டம் எல்லாம். எனக்குத் தெரியும் நானும் சம்பாதிச்சு இந்த குடும்பத்தைக் காப்பாத்தினா என்னையும் இப்படித்தான் எல்லாரும் தாங்குவீங்கன்னு அப்ப உங்க பேச்சு எப்படி இருக்குன்னு பார்க்கத்தான் இருக்கேன்." படபடத்தவளை நீலவேணி திட்ட

"இன்னும் படிச்சே முடிக்கல்ல, அதுக்குள்ள எவ்வளவு கற்பனை, அதவிட சொல்லும் போது இருக்கிற திமிரப் பாரு. ப்ரீத்தி, நீ எவ்வளவு சம்பாதிச்சாலும் அது உனக்கு அக்காதான் கொடுத்தாங்கன்னு ஒருநாளும் மறந்துடாதே. உன் நல்லதுக்கு ஒன்னு சொல்லுறேன் கேட்டுக்கோ, உன்னோட இந்த கேவலமான குணத்தை மாத்திக்க இல்ல வாழ்க்கையில நிறைய கஷ்டப்பட்டிடுவ." தன் பங்குக்கு பார்த்தீபனும் வார்த்தைகளை துப்ப

"போதும் நிறுத்துங்க, சாப்பிட வந்தா என்றைக்காவது நிம்மதியா சாப்பிட விட்டிருக்கீங்களா? எப்ப பாரு ப்ரியா, ப்ரியா ஆனால் நான் மட்டும் தண்டம், சுயநலக்காரி இப்போ திமிரு பிடிச்சவளா?" என தாயிடமும் தனயனிடமும் கத்தியவள் ப்ரியாவின் புறம் திரும்பி

"இங்கப்பாருங்க அக்கா, நீங்க ஓவர் சீன் காட்டுறதால தான் இவங்க என்னை திட்டிட்டிருக்காங்க. முதல்ல உங்களோட ஓவர் சீனை நிறுத்துங்க என்ன?" அவள் வார்த்தையில் ப்ரியா உடைய

"என்னடி வாய் ரொம்பத்தான் நீளுது. நாங்க திட்டினதுக்கு அக்காட்ட பாயுற? முதல்ல அக்காட்ட மன்னிப்புக் கேளுடி." நீலவேணி மேலும் திட்ட

"நான் ஒன்னும் இல்லாததை சொல்லல்லையே, அதனால மன்னிப்புக் கேட்க முடியாது. ம்மா! எனக்கு இன்னைக்கு ஹாப் டே தான் ஸ்கூல் நடக்கும். சோ, ஸ்கூல் முடிஞ்சதும் நான் லைப்ரரில சில புக்ஸ் எடுக்க வேண்டிருக்கு, அப்படியே சங்கவி வீடு வர போயிட்டுத் தான் வீட்டுக்கு வருவேன்." தமக்கையின் மனதை உடைத்துவிட்டதை சிறிதும் உணராது தாயிடம் விடை பெற்றுக் கிளம்ப,

"ம்மா, இவகிட்டெல்லாம் வாயால சொல்லக் கூடாது. கையால சொன்னாத்தான் புரிஞ்சுப்பா. திமிரு புடிச்சவ." அவளை அடிக்கப் பாய்ந்தான் பார்த்தீபன். அவனை தடுத்த ப்ரியா

"வேண்டாம் தம்பி, இது தப்பு. தோளுக்கு மேல வளர்ந்த பிள்ள, அதுவும் பொம்பளப் புள்ளைய அடிக்குறது நல்ல பழக்கமில்ல." அவர்களைக் கண்டு கொள்ளாது அவள் வெளிக் கிளம்ப

"அவ என்ன பேச்சு பேசிட்டுப் போறா, அவளை அடிக்காம கொஞ்ச சொல்லுறீங்களா? திமிரைப் பாருங்க, நாம பேசுறதைக் காது கொடுத்துக் கூட கேக்காம எப்படிப் போயிட்டிருக்கா. எல்லாம் நீங்க கொடுக்கிற இடம். ஆனாலும் பாருங்க அவளுக்கு நீங்க ரொம்பத்தான் செல்லம் கொடுக்குறீங்க."

"நீயும் எப்ப பாரு அவளை தேவைக்கில்லாம என்னோட கம்பயார் பண்ணி பேசிட்டிருக்க, அதனாலதான் அவ என்னோட கோபப்படுறா. விட்டுடு அவ சின்னப்புள்ளதான் அவளுக்குரிய நேரம் வரும் போது எல்லாம் தானா சரியாயிடும்."

"இங்கப்பாரும்மா ப்ரியா, எனக்கு இந்தப் ப்ரீத்தியோட நடவடிக்கை சுத்தமா பிடிக்கல்ல, நீ என்னென்டா அவ சின்னப் பொண்ணு, செல்லப் பொண்ணுன்னு அவளுக்கு ரொம்பத்தான் இடம் கொடுக்கிற, அதனால தான் அவ இஷ்டத்துக்கு ஆடிட்டிருக்கா. இங்கப்பாரு ப்ரியா, இவளோட இந்த நடத்தை நாளைக்கு உன் தலையிலதான் பாரமா வந்து விடியும். ஞாபகம் வச்சுக்கோ, என்ன புரியுதா?" நீலவேணியும் எடுத்துக் கூற

"அக்கா! அம்மா சொல்லுறது உண்மைதான். அவ இன்னைக்கு பேசின பேச்சுக்கு நாலு அறை விட்டிருந்தா சரியாயிருக்கும். நீங்க தடுத்துட்டீங்க, இல்லன்னா அவ இன்னைக்கு...." பற்களை கடித்த தம்பியிடம்

"நீ காலேஜுக்கு கிளம்பல்ல, நேரமாயிடுச்சு நானும் வேலைக்கு கிளம்பணும். போய் உன்னோட புக்ஸ எடுத்துட்டு வா போகலாம்." தம்பியை சமாதானப்படுத்தி அனுப்பியவள் தாயிடம் திரும்பி

"அம்மா, ப்ரீத்திய இனி நான் பார்த்துக்குறேன். அதவிடுங்க, அக்காகிட்ட பண விஷயம் பேசுறப்போ மறக்காம நம்ம வீட்டு நிலமைய எடுத்து சொல்லி அவதான் இனி அவளைப் பார்த்துக்கணும் என்றதையும் மறக்காம அவளுக்கு புரிய வைங்க."

"சரி ப்ரியா, அதப்பத்தி நீ யோசிக்காதம்மா, நான் பார்த்துக்கிறேன். இந்தா லன்ச் பாக்ஸ்." என்றவர் பார்த்தீபனுக்கும் அவனுடைய மதிய உணவுப் பொதியைக் கொடுக்க

"வரேம்மா." அவன் விடை பெற

"அம்மா நானும் கிளம்புறேம்மா, போயிட்டு வர்றோம்." என தாயிடம் விடைபெற்று, அவர் கொடுத்த மதிய உணவையும் எடுத்துக் கொண்டு தம்பியுடன் வேலைக்கு புறப்பட்டாள் ப்ரியவர்ஷினி.

பிள்ளைகள் மூவரும் வெளியேறியதும் மூத்த மகளிடம் பேச எண்ணியவராய் கைப்பேசியில் இலக்கங்களை அழுத்தினார் நீலவேணி. மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டு

"ஹலோ..." என்றாள் பிரணீதா மிகவும் களைத்த குரலில்

"பிரணீ, நான் அம்மா பேசுறேன்."

"சொல்லுங்கம்மா. ப்ரியாகிட்ட பேசிட்டீங்களா?" பரபரப்பாக கேட்ட மூத்த மகளிடம்

"உன் கூட கொஞ்சம் தனியாப் பேசணும் பிரணீ. உன்னால எப்போ வர முடியும்?" மகளின் கேள்விக்கு பதிலளிக்காது, அவளிடம் மீண்டும் கேள்வி எழுப்பினார் நீலவேணி.

"ஐயோ! அம்மா, இன்றைக்கு கஷ்டம், எங்க வீட்டுக்கு மாமாவோட தங்கச்சி குடும்பம் விருந்துக்கு வர்றாங்க, நான்தான் எல்லோருக்கும் சமைக்கணும். என்னால அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நகர முடியாத அளவுக்கு வேல. இப்ப கூட மார்க்கெட்டுக்கு போகத்தான் வெளிக்கிடுறேன். அதனால நான் நாளைக்கு காலையில வரட்டா?" பிரணீதா கேட்க

"சரிம்மா, காலையில எல்லாரும் கிளம்பினத்துக்குப் பிறகு கால் பண்ணுறேன் வீட்டுக்கு வந்துடு."

"இல்லம்மா நான் வீட்டுக்கு வரல்ல..." அவள் மறுக்க

"ஏன் பிரணீ, நீ நம்ம வீட்டுக்கு வந்து ரொம்ப நாளாச்சு. ஏம்மா வர மறுக்கிற?"

"ஒன்னுயில்லம்மா, அவ்வளவு தூரம் தனியா வர முடியாதும்மா." ஏதோ சமாளிப்பாய்க் கூற

"என்னடி சொல்லுற, நம்ம வீடு என்ன அவ்வளவு தூரத்திலயா இருக்கு?"

"அது தனியா வரணுமில்ல."

"தனியா மார்க்கெட் வரப் போற ஆனால் நம்ம வீட்டுக்கு வர உனக்கு தூரமாப் போச்சில்ல." வருத்தத்துடன் நீலவேணி வினவ

"அது... வந்து... புரிஞ்சுக்கோம்மா."

"எதப் புரிஞ்சுக்க சொல்லுற?" பேசிக் கொண்டிருக்கும் போதே அவளை யாரோ அழைக்கும் குரல் கேட்டது.

"ம்மா, என் மாமியார் தான் என் பேரை ஏலத்துல விட்ட மாதிரி கத்திட்டிருக்காங்க. நான் போகணும். ம்மா! நம்ம வீட்டுக்கு நாலு தெருத் தள்ளி இருக்க பிள்ளையார் கோவிலுக்கு நாளைக்கு காலையில பத்து மணி போல வந்துடுங்கம்மா, நானும் வந்துடுறேன்."

"ஏன் பிரணீ, நம்ம வீட்டுக்கு வரமாட்டேன்னு சொல்லுற?" அவர் அந்தக் கேள்வியிலே நிற்க

"அதைப் பிறகு சொல்லுறேன், நான் காரணமில்லாம எதுவும் சொல்லல்லம்மா, புரிஞ்சுக்கங்க. நாளைக்கு கரெக்ட் டைத்துக்கு வந்துடுறேன், நீங்களும் லேட் பண்ணாம வந்திடுங்க. இப்போ வச்சிடுறேன் இல்லென்னா என் மாமியார் கதவ உடச்சிட்டு உள்ள வந்திடும்."

"சரி பிரணீ, வரும் போது எனக்கொரு கால் பண்ணிட்டு வா." எனக் கூறியவர் அழைப்பைத் துண்டிக்கப் போக, அதற்குள் கதவு படபடவென தட்டும் ஒலியும்

"இதோ வர்றேன் அத்தை." என்ற பிரணீதாவின் பயந்த குரலுமாய் அவளின் அழைப்புத் துண்டிக்கப்பட, கலங்கிப் போனார் நீலவேணி்.

'சம்மந்திம்மா கூப்பிட்டதும் ஏன் இந்தப் பிரணீ இவ்வளவு பயந்து போகுது? வீட்டுக்கு வரவும் தயங்கி தவிக்குது, அழுத்திக் கூப்பிட்டா மறுத்து நிக்குது. புரிஞ்சுக்கன்னு கெஞ்சல் வேற, என் மக வாழ்க்கையில என்னம்மோ இருக்கு, இந்தப் பொண்ணு எல்லாத்தையும் மறைக்குது. ஐயோ! அவ வீட்டுல என்னதான் நடக்குதுன்னு ஒன்னும் புரியல்லையே! கடவுளே என் பொண்ணு வாழ்க்கையக் காப்பாத்து.' தன் மகள் வாழ்வை எண்ணிக் கலங்கியவராய் ஒரு பெருமூச்சுடன் அலைபேசியையே வெறித்திருந்தார் நீலவேணி. அழைப்பு துண்டிக்கப்பட்ட பத்தாவது நிமிடத்தில் மீண்டும் நீலவேணியை அழைத்திருந்தாள் பிரணீதா. அவளின் எண்களைத் திரையில் கண்டதும் யோசனையுடன் நீலவேணி அழைப்பை ஏற்க

"ஹலோ, அம்மா."

"என்ன பிரணீம்மா, திரும்ப கால் பண்ணியிருக்க, என்ன விசயம், ஏதாவது பிரச்சனையா?" பதட்டத்துடன் வினவிய தாயிடம்

"ஒரு பிரச்சனையுமில்ல, ம்மா! கொஞ்சம் பொருள் வாங்க வேண்டி இருக்கு, இப்போ நான் மார்க்கெட்டுக்குத்தான் போகப் போறேன். போற வழியில கோயிலுக்கு வந்து உங்களை சந்திச்சுட்டுப் போறேனே. ம்மா! இப்ப உங்களால உடனே கோயிலுக்கு வர முடியுமா?" சிறு கெஞ்சலுடன் கேட்க

"உங்கிட்ட நிறைய பேசணும் பிரணீ. இப்பவே மணி ஒம்பது, இதுல உங்க வீட்டுல விருந்துக்கு வேற ஆளுங்க வர்றாங்கன்னு சொல்லுற. இதுக்குள்ள மார்க்கெட்டுக்கும் போகணும். அவசரமா பேசுற விசயமில்ல பிரணீ, அதனால நீ நாளைக்கே வாம்மா."

"நாளைக்கு வரணும் என்றால் இந்த வீட்டுல ஏதாவது காரணம் சொல்லணும். ஏன், எதுக்குன்னு ஆயிரம் கேள்வி வரும். அதுக்குத் தான் இப்பவே வர முடியுமான்னு உங்ககிட்ட கேட்குறேன். காலையில நேரத்தோடவே பாதி வேல முடிச்சிட்டேன். சமையலுக்குரிய மட்டன், சிக்கன், கொஞ்சம் காய்கறி இதெல்லாம் தான் வாங்கணும். வாங்கிட்டு வந்தா சமைக்கிற வேலை மட்டும்தான். அதனால இப்பவே நான் கிளம்பி வர்றேன். இன்றைக்கு கொஞ்சம் பிந்தினாலும் ஏதாவது காரணம் சொல்லிக்கலாம், நாளைக்குன்னா நிச்சயமா சரி வராதும்மா. ப்ளீஸ் என்னோட நிலமைய புரிஞ்சிக்கங்க. நீங்களும் இப்பவே கிளம்பி வாங்கம்மா."

"அப்படி என்னடி உன்னோட நிலமை, பெத்த அம்மாகிட்ட சொல்ல முடியாத நிலமை, பொறந்த வீட்டுக்கு வர முடியாத நிலமை, ஒரு கோயிலுக்குப் போக முடியாத நிலமை. ஆ.... சொல்லு பிரணீ? அப்படி அங்க நீ என்ன வாழ்க்கை வாழ்ந்துட்டிருக்க?" நீலவேணியின் கோபம் எல்லை கடக்க,

"அம்மா இதைப்பத்தி நம்ம அப்புறம் பேசலாம். ப்ளீஸ் ம்மா இப்பவே கிளம்பி கோயிலுக்கு வாங்கம்மா." மகளின் கெஞ்சலில் தாயின் கோபம் மெல்ல மட்டுப்பட

"என்னம்மோ சொல்லுற, சரி பிரணீம்மா நான் பத்து நிமிசத்துல அங்க இருப்பேன், நீயும் சீக்கிரம் வந்துடு." என்று அழைப்பை துண்டித்தவர் மகள் பேசியதை நினைத்து மனதில் பாரம் ஏறிக் கொள்ள, கணத்த மனதுடனே தயாராகி தன் மூத்த மகளைக் காண கோயிலுக்குச் சென்றார்.

*****

வேலைக்கு வந்ததும் வராததுமாக சிவராமனைத் தேடிச் சென்றவளை வரவேற்றது அவரின் காலி இருக்கைகளே.

'என்ன, சார் எப்பயும் கரெக்ட் டைமுக்கு வந்துடுவாரே, இன்றைக்கு ஏன் இவ்வளவு லேட்....' தனக்குள் சிந்தித்தவாறு நின்றிருந்தவளைக் கண்ட வீணா

"என்ன ப்ரியா, இங்க என்ன பண்ணுறீங்க?"

"வீணா மேடம், ஜிஎம் சார் இன்னும் வரல்லையா?"

"சார் லீவ்ல இருக்காரே!"

"என்ன, லீவ்லயா? நான் உடனே அவரைப் பார்க்கணுமே."

"என்ன அந்த அப்ளிகேஷன் விசயமாவா?"

"ஆமா வீணா மேடம், சிவராமன் சார் எப்ப வருவார்?"

"கமிங் மன்டேதான் வருவாங்கன்னு நினைக்கிறேன்."

"கமிங் மன்டேயா?" யோசனையுடன் நின்ற ப்ரியாவிடம்

"என்ன விசயம் ப்ரியா, ரொம்ப அவசரமா?"

"அது நான் பெர்ஸனல் லோனுக்கு அப்ளை பண்ணியிருந்தேன். இப்போ எனக்கு அந்த லோன் தேவையில்ல அதனால அதைக் கென்ஸல் பண்ணலாம் என்று."

"ஓ... அப்போ அது பர்ஷனல் லோன் அப்ளிக்கேஷனா?" அவள் ஆமெனத் தலையாட்ட

"அப்படின்னா நீங்க எம்டி சாரத்தான் பார்க்கணும், பட் அவரும் நாளைக்கு இல்லென்னா நாளைக் கழிச்சுத்தான் வருவார். வந்ததும் சாரைப் போய் பாருங்க. சிவராமன் சார் வர்ற வரைக்கும் அருண் சார்தான் எல்லாத்தையும் பார்த்துக்குவாங்க. எதுன்னாலும் எம்டிக்கிட்ட போய் பேசுங்க ப்ரியா."

"ஐயையோ! இல்லல்ல நான் ஜிஎம் சார்ட்டயே பேசிக்கிறேன், எம்டி எல்லாம் வேணவே வேணாம்." அவள் சொன்ன விதத்தில் சிரித்த வீணா

"ஆனாலும் அருண் சாரப் பார்த்து இப்படி அநியாயத்துக்குப் பயப்படுறீங்களே ப்ரியா. அவர் என்ன பூதம் போலயா இருக்கார். இல்லையே ஆள் பார்க்கிறதுக்கு சும்மா அட்டகாசமாயில்ல இருக்கார்." வீணா ரசித்துக் கூற

'அவர் அதுக்கும் மேல, என் நிலமை உனக்கு எங்கம்மா புரியப் போகுது.' தனக்குள் எண்ணமிட்டவள்

"இல்ல வீணா மேம், அவர் வந்து ரெண்டாவது நாளே லோன் அப்ளிக்கேஷன் என்று அவர் முன்னாடி போய் நிக்க எனக்கு ஒரு மாதிரி இருக்கு அதான். வேற, பயமெல்லாம் ஒன்னுமில்ல." என்றவளின் சிந்தனை முழுக்க அடுத்து என்ன செய்வதென சிந்தித்துக் கொண்டிருக்க, சட்டென்று அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றியதும் வீணாவைப் பார்த்தவள்

"மேம்! நீங்க அந்த அப்ளிக்கேஷனை கென்ஸல் பண்ணிடுறீங்களா? ப்ளீஸ்." வழி கண்டு விட்ட மகிழ்ச்சியில் கேட்டவளிடம்

"சார் சொல்லாம நான் எதுவும் செய்ய முடியாது ப்ரியா. சோ, சார்கிட்ட கேட்டுட்டு, அவர் ஓகே சொன்னால் நான் அதைக் கென்ஷல் பண்ணிடுறேன், ஓகேவா?" அதன்பிறகே நிம்மதியாக மூச்சுவிட்டவள்

"ஓகே, தேங்க் யூ சோ மச், வீணா மேம். சரி நான் என் இடத்துக்குப் போறேன்." வீணாவிடம் விடை பெற்று தன் பகுதிக்கு வந்தவள் அதன் பிறகே நிம்மதியாக நேற்றைய மிகுதி வேலைகளை முடித்ததோடு நாளை சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கையையும் தயாராக்கிவிட்டே வீடு திரும்பினாள்.

வீசும்......
 
Status
Not open for further replies.
Top