வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

எரிதழல் ஏந்திழையே - கதை திரி

Status
Not open for further replies.
எரிதழல் ஏந்திழையே

1.அத்தியாயம்

நிசப்தம் நிறைந்த காரிருளைக் கிழித்துக் கொண்டு மரண ஓலத்தின் சப்தம் அம்மிகப்பெரிய மாளிகையை ஒரு நொடி ஆட்டம் காண செய்தது. கீச்சென்ற இரவுப் பூச்சிகளின் சத்தம் கூட அந்நொடி மறைந்து போனது தான் போலும், அப்படியொரு பெரும் சத்தம் ஓங்கியொலித்தது.

அறையின் சுவற்றில் குருதியின் சிவப்பு நிறம் துளிகளாய் தெளித்திருக்க, கையில் இரத்தம் பொங்க தன் அடி வயிற்றைப் பற்றிக்கொண்டு, தூணின் மீது சாய்ந்தபடி சரிந்துக்கிடந்தார் இராஜாங்கம்.

தனக்கென தனி சாம்ராஜ்யத்தை அமைத்து எப்படியெப்படியோ வாழ நினைத்த இராஜாங்கத்தின் இராஜாங்கம் மெல்ல மெல்ல முடிவை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்க,

ஐம்பது வயதைக் கடந்தவரின் வைராக்கியம் மட்டும் குறைந்தப்பாடில்லை. 'மரணமா...! எனக்கா!' என்று மனதில் உறுதி எடுத்துக்கொண்டவர், தனக்கு எதிரே நின்றிருந்தவளை கண்கள் சிவக்க உக்கிரப்பார்வைப் பார்த்தார்.

அந்நொடி எங்கிருந்து வந்தது வேகம் என்று அவருக்கே தெரியவில்லை. வீறுக்கொண்டு எழ முயன்றவர், ஒரு நொடி தடுமாறினாலும் மறுநொடி தூணைப் பற்றி நின்றபடி, அவளை தன் சிவந்தக் கண்களால் பொசுக்க முயலும் பார்வையில் பார்த்தார்.

"ஏழை சிறுக்கி, உன் புத்தியை காட்டிட்டியே... உன்ன கொல்லாமா விடவே மாட்டேன்....டி." என்றவன் வெஞ்சினத்துடன் தன் கைத்துப்பாக்கியை எடுத்து அவளை சுட முயன்ற நொடி, அவனது பின்னிடுப்பில் கூர் ஈட்டியொன்று முதுகைத் துளைத்துக் கொண்டு வயிற்றில் பாய்ந்தது.

அந்நொடி அத்தாக்குதலை அவர் எதிர்பார்க்கவில்லை. தள்ளாடிக் கொண்டே திரும்பிப் பார்த்தவரதுக் கண்கள் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து தான் போனது.

'மாரில் தூக்கி வளர்த்த குழந்தையின் கைகளிலா தன் சாவு?' என்று அதிர்ந்து விழித்தவரது அதரங்கள் இரத்தத்தை அவன் பாதத்தின் முன்பு சிதறவிட்டிருக்க, அந்நொடி அவனைப் பார்த்தப்படியே அவரது உயிரும் அவரை விட்டு ஒரேயடியாக பிரிந்திருந்தது.

தன் முன்னே விழுந்துக் கிடப்பவரை கண்களில் நீர்க் கோர்க்க பார்த்தவனின் வயதோ வெறும் பன்னிரண்டுதான். பன்னிரண்டு வயதில் அவன் செய்த செயலால் உயிரொன்று காத்தது என்றாலும், நாளை அவனுக்கு கிடைக்கப் போகும் பட்டமோ கொலையாளி மட்டுமே.

இறந்தவரது விழிகள் இரண்டும் அவனையே பார்த்தப்படி திறந்துக்கிடக்க, அவனது கண்கள் முழுவதும் இரத்த நிறம் நிறைந்திருக்க, தேகம் ஒருவாறு படபடக்க, "வா...வாசுமா...." என்று திக்கித் திணறி எதிரே இருந்தவளை பார்த்து பெரும் அழுகையில் கதறியவனோ, அதிர்ச்சியில் மயங்கி கீழே சரிந்திருந்தான்.

அடுத்த நாள் காலை காவல் துறையினர் அவனை எழுப்பியிருக்க, அடித்துப் பிடித்து எழுந்தவன் தேடியது என்னவோ அவனது வாசுமாவை தான். ஆனால் அவள் இருப்பதற்கான தடம் சிறிதும் அவ்விடமில்லை.

"கொலை நீ தான் பண்ணியா?" என்ற காவல் அதிகாரியின் கேள்விக்கு கூட பதில் கூறாது சுற்றும் முற்றும் தேடினான்.

சுற்றிலும் சூழ்ந்த கூட்டமும், அழுகையும், பேச்சுக்களும், அச்சிறுவனின் மனதில் துளியும் பதியவில்லை.

காவல் துறையினர் கைது செய்தப்படி அவனை அழைத்துச் செல்வதுக் கூட அவன் புத்திக்கு எட்டவில்லை. பன்னிரண்டு வயதில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான் அந்த பாலகன்.

நீதிமன்றத்தில் கூட அவன் ஒரு வார்த்தை பேசவில்லை. ஒப்புக்கொண்டான் தான் தான் கொலையாளி என்று. ஆனால் வார்த்தைக்குக் கூட 'வாசுமா' என்று அவனால் அழைக்கப்படும் வாசுகியைப் பற்றி அவன் கூறவில்லை. புத்திசாலியான குழந்தை தான் அவன். ஆதலாலோ என்னவோ வாசுகியைப் பற்றி துளியும் அவன் கூறவில்லை.

இருப்பினும் ஒவ்வொரு நாளும் அவன் கண்கள் அவனது வாசுமாவைத் தேட, நாட்கள் செல்ல செல்ல அவனது அதீத பாசமே அவர் மீது வெறுப்பையும் சேர்த்து உருவாக்கியிருந்தது.

"வாசுமா உங்களை நான் ரொம்ப வெறுக்கிறேன். ஐ ஹேட் யூ வாசுமா." என்றவனது விசும்பல் அந்த வாசுகியின் காதிலும் விழுந்தது போலும்.

ஒவ்வொரு நாட்களை கடக்கும் போதும் வேதனையில் தத்தளித்துக் கொண்டே தான் இருந்தார் வாசுகி.

கண்முன் நிகழ்ந்த பெரும் நிகழ்வு அது அல்லவா! உயிரைக் காத்தவனை அப்படியே விட்டுவிட்டு வந்தவள் அவள் அல்லவா! சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒருவரை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்லும் அதில் வாசுகி என்ன விதி விலக்க, அவள் பட்ட துயரங்களை அச்சிறுவனும் பட்டுவிட்டுப் போகட்டும் என்றவள் கனவிலும் நினைக்கவில்லை‌.

இருந்தும் சந்தர்ப்பம் நிகழ்த்தியிருக்க,
நாட்கள் மெல்ல நகர்ந்து வருடங்கள் பல கடந்து சென்றும் கூட இன்றும் உள்ளுக்குள் வேதனையில் மறுகிக் கிடக்கிறார் வாசுகி.

"வாசுமா.. எப்போ என்ன பார்க்க வருவீங்க?" என்னும் குரல் உறங்கிக் கொண்டிருந்தவளின் காதுகளை அடைவதுப் போல் பிரம்மை உண்டாக, பல வருடங்கள் கழித்தும் கேட்கும் மழலைச் சிறுவனின் குரலில் பட்டென்று உறக்கத்திலிருந்து கண் விழித்திருந்தார் வாசுகி.

தலையில் ஆங்கேங்க எட்டிப் பார்க்கும் நரை, வயதுக்குரிய முதிர்ச்சி அவ்வளவு தான் மாற்றமே தவிர்த்து அவரின் கலையான முகம் மட்டும் அப்படியே இருந்தது.

முகமெல்லாம் வியர்த்து விட்டது அவருக்கு. அருகிலிருந்த தண்ணீர் குவளையை தேடி எடுத்தவருக்கு காலிக் குவளையே கையில் கிடைக்க, முகத்தை சேலை முந்தானைக் கொண்டு துடைத்தவரோ, படுக்கையறையை விட்டு சமயலறையை நோக்கி நடந்துச் சென்றார்.

அங்கிருந்த ஒரு சொம்புத் தண்ணீரை எடுத்து அருந்தியும் அவர் தாகம் தணியவில்லை. இத்தனை வருடங்கள் கழிந்தும் அச்சிறுவனின் முகமே அவரின் கண்முன் வந்துச்சென்றது.

சுற்றும் முற்றும் பார்த்தவர், வீட்டின் கதவினைத் திறந்துக் கொண்டு வெளியே சென்றிருந்தார். வீட்டின் பக்கவாட்டிலிருந்த மாமரத்தின் கீழ் சுற்றியிருந்த வெள்ளை நிற ரோஜக்களை வெறித்துப் பார்த்தவரதுக் கண்கள் அவரையும் மீறி கலங்கியிருக்க, அவரது மனமோ மானசீகமாக அவனிடம் மன்னிப்பை யாசித்திருந்தது.

அக்கணம் "தேவா" என்னும் குரல் அவரது சிந்தையைக் களைத்திருக்க, தன் விசும்பலையும், அழுகையையும் அடக்கிக் கொண்டவள், மிக எதார்த்தமாக திரும்பிப் பார்த்தாள்.

அங்கு நின்றிருந்தது என்னவோ அவளது கணவன் தான். பதினெட்டு வருட திருமண பந்தத்தில் எதுவுமே மாறவில்லையே. அடிக்கடி இரவு தூங்காமல் அவள் இவ்விடம் வந்து நிற்பது ஒன்றும் புதிதல்ல. இருந்தும் அவரிடமிருந்து வெளிப்பட்டது என்னவோ பெரும் மூச்சுக் காற்று ஒன்று மட்டுமே.

"இன்னும் எத்தனை நாளுக்கு தான் இப்படியே இருப்ப தேவா? மனசுல பூட்டி வெச்சிருக்க விசயத்தை சொல்லிடு.. இல்லைனா இப்படி தான் காலம் பூரா நீ இங்க வந்து நின்னு யோசிக்க வேண்டியது தான்." என்று மிக இயல்பாய் அவர் கூறிவிட்டார்.

"சில விசயங்களை சொல்லாமல் இருந்தால் தான் நிம்மதியாக வாழ முடியும்‌." என்று மட்டும் உரைத்தவளோ அவரைப் பார்த்து சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்திருக்க,

"நீ என்னைக்குமே புரியாத புதிர் தான் தேவா... தேவவாசுகி." என்றவரும் மனைவின் புன்சிரிப்பில் மதிமயங்கியபடியே அவள் பின்னால் சென்றார்.

அவள் மறைக்க நினைக்கும் விசயங்கள் மீண்டும் துளிர் விட்டு விருட்சமாய் வளர்ந்து நிற்பதை அவள் அறியவில்லை போலும், அவள் விட்டுச்சென்ற தழலோ அவளை சந்திக்கும் நொடிக்காக காத்திருந்தது.

அதே சமயம், மகாபலிபுரம் செல்லும் சாலையில் சீறிப்பாய்ந்துக் கொண்டிருந்தது சிவப்பு நிற ஜீப் ரேங்குலர். ஜீப்பினுளொருவன் முகத்தை தொப்பியொன்றால் மறைத்தப்படி உறங்கிக் கொண்டிருக்க, ஜீப்பை அதிவேகமாக ஓட்டிக் கொண்டிருந்தது என்னவோ மற்றொருவன்.

அவன் பவித்ரன். முகம் முழுவதையும் தன் தாடியில் மறைத்திருந்தான். அவனது சிறுக் கண்களோ மிக கூர்மையாய் சாலையில் பதிந்திருந்தது. அளவான உயரம், அதற்கேற்ற உடல்வாகு, சிரித்தே பிறரை மயக்கும் அதரங்கள், அந்த புன்னகையை மறைக்கும் தாடி மொத்ததில் அழகன் தான் அவன். அளவாக குடித்திருந்தால் மிகத் தெளிவாகவே பார்வையை சாலையில் பதித்தப்படி சென்றுக் கொண்டிருந்தான்.

புயலென சீறிப்பாய்ந்துக் கொண்டிருந்தவனோ, "இடியே விழுந்தாலும் இவன் எழுந்திரிக்கப் போறதே இல்ல" என்று புலம்பியபடி அந்த கும்மிருட்டிலும் இயற்கையை ரசித்துக்கொண்டு வந்தான் பவித்ரன்.

ஆளறவமற்ற அந்த கும்மிருட்டைக் கிழிக்கும் வண்ணம் ஒரு பெண்ணின் குரல் அவனது காதுகளை வந்தடைந்திருந்தது. அதிவிரைவாக சென்றுக் கொண்டிருந்தவன் வேகத்தைக் குறைத்து ஜீப்பை பாதி வழியில் நிறுத்தியிருந்தான்.

"எதோ சத்தம் கேட்டுச்சே?" என்று செவியை தீட்டி பொறுமையுடன் கேட்க, மீண்டும் அமைதி மட்டுமே அவ்விடம் நிலவியது.

தன் பிரம்மையோ? என்றவன் சிந்தித்தாலும் சத்தம் கேட்டதே என்கின்ற எண்ணம் அவனை அவ்விடமிருந்து செல்ல யோசிக்க வைத்திருந்தது. மீண்டும் ஜீப்பை மெதுவாக அங்கிருந்து இயக்கத் தொடங்கியிருந்தவனதுக் கண்கள் அவ்வப்போது ஜீப்பின் பக்கவாட்டு கண்ணாடி வழியே பார்வையை பதித்தது.

சாலையில் நிலவு வெளிச்சத்தில் இரண்டு ஆண்கள் ஓர் பெண்ணை வாயைப் பொத்திக் கொண்டு இழுத்துச் செல்லும் காட்சி அப்பட்டமாய் கண்ணாடியில் தெரிய, இதழை லேசாக வளைத்து புன்னகைத்தவனோ,

"ஹீரோயிசம் காட்ட நேரம் வந்திருச்சு. மவனே.... வரேன்டா உங்களுக்கு ஆப்பு வைக்க." என்று முணுமுணுத்தவனது முகம் நொடியில் இறுகியது.

ஜீப்பை சடாரென்று வளைத்துத் திருப்பியவனது செயலை அவ்விரண்டு ஆண்களும் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை போலும்‌.

போதைப் பொருளின் உதவியில் மிருகமாய் நின்ற இவ்விருவரை தவிர்த்து, சாலையின் ஓரத்தில் மறைக்கப்பட்ட மகிழுந்தில் மூவர் இருக்க, ஐவரும் சேர்ந்து சாலையில் இரவு வேளையில் ஐடி பணி முடித்து திரும்பி வந்துக் கொண்டிருந்த இளம்பெண்ணை திட்டமிட்டு கடத்திக் கொண்டு இவ்விடம் வந்திருக்க, அவர்களிடமிருந்து தப்பி ஓடி வந்த வேளையில் அவள் எழுப்பிய சத்தம் தான் ஆணவனின் காதுகளை எட்டியிருந்தது. மேலும் அவள் சத்தமிட முடியாதவாறு இருவர் அவளை வளைத்துப் பிடித்துக் கொண்டனர். இருப்பினும் வசமாக பவித்ரனிடம் மாட்டிக் கொண்டு விட்டனர் இருவரும்.

ஜீப்பை அவர்கள் முன்பு கொண்டு வந்து நிறுத்தியவன், அசட்டையாக கதவைத் திறந்துக் கொண்டு, அவர்கள் முன்பு வந்து நின்றவனதுப் பார்வையில் துளியும் பயம் தெரியவில்லை.

தனது ஸ்லீவை கை முட்டி வரை மடித்துக்கொண்டே, "நான் பொறுமையா சொல்றேன். அந்த பொண்ணை விட்டுட்டு இங்கயிருந்து ஓடியிருங்க. இல்லைனா நடக்கும் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பு இல்ல." என்று மிக நிதானமாக கூறினான்.

"இதோ பாருடா ஒத்தையா வந்துட்டு எங்களை மிரட்டுறியா? டேய் வாங்கடா இவனை கொன்னு புதைச்சுட்டு நம்ம வேளையை பார்ப்போம்." என்றொருவன் கூறியிருக்கவும் மற்ற மூவரும் அவனை சூழ்ந்து நிற்கவும் சரியாக இருந்தது.

"அண்ணா ப்ளீஸ் என்ன காப்பாத்துங்க." என்றவள் கதறி அழுதாள்.

அடுத்த நொடியே அவளை ஓங்கியொருவன் அடித்தது மட்டுமின்றி, "கழுதை அவனே சாகத் தான் போற? இதுல உதவி வேற கேட்குறியா?" என்று எகத்தாளம் நிறைந்த பார்வையை பவித்ரனைப் பார்த்துக் கொண்டே கூற, அப்பெண்ணோ மயங்கி மற்றொருவன் கையில் சரிந்தாள்.

அவனது செயலில் கடுப்படுந்த பவித்ரனோ, கோபம் கொந்தளிக்க, "டைம் ஓவர்." என்று கூறியபடி எதிரில் இருந்தவனை ஓங்கி அடிக்கவும், மற்றவர்கள் அவனை அடிக்கவும், ஒரே நொடியில் மாறிமாறி சண்டை பெரிதாகிக் கொண்டே சென்றது.

அவர்கள் ஐவர், இவன் ஒருவன் என்பதால் இவன் மீதும் அடிகள் ஒருபுறம் விழுந்துக் கொண்டிருக்க, தன் முழு பலத்தையும் திரட்டி ஒவ்வொருவராக மாறிமாறி வீழ்த்திக் கொண்டிருந்தான் பவித்ரன்.

அதிலொருவன் இரும்பு ராடைக் கொண்டு பவித்ரனை தாக்க வர, அவனோ வளைந்துக் கொண்டு நகர்ந்திருக்க, இரும்புக் கம்பியோ ஜீப்பின் பக்கவாட்டு கண்ணாடியை அடித்து நொறுக்கியிருந்தது.

"டேய்...டேய் சொதப்பிட்டியேடா.... கண்ணை எங்க வெச்சுட்டு வந்த? போச்சு போ இனி நீங்க பிழைக்குறது கஷ்டம் தான்" என்று பவித்ரனோ அடிப்பதை மறந்து அவனிடம் எகிறிக் கொண்டு செல்ல, மற்றொருவன் கட்டையால் அவனது முதுகை ஓங்கித் தாக்க வர, அந்நொடி வலுப்பொருந்தியக் கரமொன்று கட்டையை பலமாக பற்றிக் கொண்டு தடுத்திருந்தது.

தாக்க முனைந்தவனோ வியர்வைத் தெறிக்க நிமிர்ந்துப் பார்க்க, முறுக்கேறிய கைகளைக் கொண்ட எதிரில் நின்றவனோ, "தூக்கத்துல இருந்தப்போ என்ன எழுப்புனது எவன்டா?" என்று வெகு நிதானமாக கேட்டான்.

அவனது குரல் கேட்டு திரும்பிய பவித்ரனோ புன்னகை மாறாது, "அது இவன் தான் மச்சி?" என்று எதிரில் நிற்பவனைக் கைக்காட்டியிருக்க,

அதில் ஆணவனோ பவித்ரனைப் பார்த்து கண்ணசைக்க, பவித்ரன் அந்த நபரின் கரம் பற்றி வெகு விசையுடன் இழுத்து அவனை நோக்கி விட்டிருக்க, அவனது முகத்தில் ஓங்கியொரு குத்து விட்டு இரத்தம் தெறிக்க விழ வைத்திருந்தான் அவன்.

அவன் அபாரஜீத். நெடுநெடுவென்ற உயரம். அசட்டை மிகுந்த அலட்சியப் பார்வை. சிரிக்க மறுத்த இறுகிய முகம், முறுக்கேறிய இருக்கரங்களில் ஒற்றைக் கரம் முழுவதிலும் போடப்பட்டிருந்த டாட்டூ, முறையாய் பயிற்சி செய்த வலிய தேகம் இதுவே அவனது சாராம்சமாய் இருக்க, உறக்க கலக்கத்திலும் தனக்குரிய திமிர் குறையாது நின்றிருந்தான் பவித்ரனின் ஆருயிர் நண்பன் அபாரஜீத்.

"நானாவது டைம் கொடுத்துட்டு அடிப்பேன். ஆனால் அவன் அடிச்சுட்டு தான் டைமே கொடுப்பான்." என்று அங்கு வாய்பிளந்து நின்ற மற்றவர்களைப் பார்த்து கேலியாக கூறிய பவித்ரனோ ஓய்யாரமாய் ஜீப்பீன் மீது சாய்ந்து நின்றுக் கொண்டான்.

இம்முறை அங்கிருந்த அனைவரையும் அடித்து வீழ்த்துவது அபாரஜீத்தின் முறையானது. ஐவரும் ஒவ்வொரு திசையில் குற்றுயிரும் கொலையுருமாய் விழுந்துக் கிடந்தனர்.

மயக்கத்திலிருந்த பெண்ணவளை எழுப்பி, அவள் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் சென்றனர் இருவரும். அபாரஜீத் பெரிதாக எதையும் கண்டுக் கொள்ளவில்லை. பவித்ரனோ அவளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பேசிக் கொண்டு வந்தான்.

அவளை பத்திரமாக சேர்த்துவிட்டு இருவரும் மீண்டும் ஜீப்பை அவர்கள் செல்லும் வழி நோக்கி திருப்பிக் கொண்டு வந்திருந்தனர்.

"அபி, நல்லவேளை சரியான நேரத்துல நம்ம அங்க போனதுனால அந்த பொண்ணு தப்பிச்சா? இல்லையாடா?" என்றவனின் கேள்விக்கு கேலியாக இதழை சுளித்தான் அபாரஜீத்.

"இப்படியே, யாரும் யாரையும் காப்பாத்தா சரியான நேரத்துக்கு வரமாட்டாங்க. நம்மளை நம்ம தான் காப்பாத்தணும்." என்று அலட்சிய பதில் கூறினான் அபாரஜீத்.

"இந்த மாதிரி பொறுக்கீங்க இருக்கவரைக்கும் என்னடா பண்ண முடியும்? இவனுங்களை கொன்னு புதைச்சா கூட தப்பில்லை."

"பவின், நீ எதுக்கு இவ்ளோ ரியாக்ஷன் கொடுக்கற? போனோம் கண்ணு முன்னாடி நடந்ததை தடுத்தோம், அவ்வளவு தான். யாருக்கும் யாரையும் கொல்றதுக்கு உரிமையில்ல. அப்படி கொன்னா மட்டும் திருந்திடவா போறாங்க? நம்ம வேளையை பார்த்து போயிகிட்டே இருக்கணும்." என்றான் அசட்டையாக.

"அப்போ சார் ஏன் வந்து அந்த பொறுக்கீங்களை அடிச்சீங்க?" என்கின்ற கேள்விக்கு புன்னகை மட்டுமே பரிசளித்தான்.

மிக அரிதாக வெளிப்படும் புன்னகை ஒரு நண்பனாய் அவனைக் கவராமல் இல்லை. இருந்தும் அபராஜீத்தை முறைத்தவன்,

"நான் அப்படி இல்லடா... தட்டிக் கேட்பேன். வன்முறை பண்றவங்களை வன்முறையால தான் தண்டிப்பேன்." என்றான் கோபமாக.

"அது உன் ஒப்பீனியன்டா." என்று மீண்டும் அலட்சிய பதில் அளித்தவன் உறக்கத்தை தொடர்ந்திருந்தான்.

சேருமிடம் வந்ததும் ஜீப்பை நிறுத்தியிருந்தான் பவித்ரன். வண்டியை அவன் நிறுத்தவும் அபராஜீத்தும் எழுந்திருந்தான்.

ஜீப்பை விட்டு இறங்கிய பவித்ரனோ விறுவிறுவென்று அங்கிருந்த செல்ல, "ஒரு நிமிசம் பவின்." என்ற பவித்ரனோ அவனை நோக்கி நடந்து வந்தான்.

"எதுக்காக அடிச்சேனு கேட்டல்ல? அந்த பொண்ணுக்காக இல்லை. உனக்காக.. உனக்காக மட்டும் தான். உன் மேல கைவைக்க எவனுக்கும் உரிமையில்ல என்னத்தவிர" என்ற உறுதியான குரலில் கூறியவன் கடைசி வார்த்தையை மட்டும் சிறு கேலியுடன் கூறிவிட்டு செல்ல,

செல்லும் அவனை பார்த்து புன்னகைத்த பவித்ரன் அறியவில்லை, தன் உயிர் நண்பனே தன்னை தாக்கவிருக்கிறான் என்பதை. அவனிழைக்க போகும் அநீதி அவனுள்ளே பேரிடரை விளைவிக்க காத்திருந்தது.

அதுவும் ஒரு பெண்ணால்.....
 
Last edited:

2.அத்தியாயம்

ஆளுயர முகம் பார்க்கும் கண்ணாடி முன் அமர்ந்திருந்தவளது கண்கள் மட்டும் கண்ணாடியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. எழில்மிகு ஆபரணங்கள் நெற்றித் தொடங்கி பாதம் வரை அழகுற பொருந்தியிருக்க, அத்தனை பாந்தமாக மிளிர்ந்தாள் பெண்ணவள். இருப்பினும் அவளது பெரிய கண்கள் பலவித யோசனைகளை சுமந்துக்கொண்டு உணர்வு போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தது.

நெற்றியில் தொடங்கி ஒற்றை துளி வியர்வை அவள் கன்னம் தொட்டு தொண்டையை நனைத்து, நெஞ்சுக் குழியில் தஞ்சம் புகுந்திருந்தது. கால்கள் ஒருபுறம் மெலிதாய் நடுங்க, ஒரு வித அச்சம் பெண்ணவளை அச்சுறுத்த, எச்சிலைக் கூட்டி விழுங்கினாள் தேவவாசுகி.

பார்த்தாலே பிடிக்கும் தோற்றம், மரியாதைமிகுப் பேச்சு, சதைப்பற்று அல்லாது எழில் வளைவுகளைக் கொண்ட உடல்வாகு, இடைத் தொடும் அடர்த்தியான கார்க்கூந்தல், மாநிற தேகம் என்று மொத்தத்தில் ஆர்பாட்டமின்றிய எளிமைமிகு பதினெட்டு வயதை பூர்த்தி செய்த அழகுப்பெண்ணவள்.

இன்று அவளுக்கு திருமணம். ஆனால் என்றுமே புன்னகைக்கும் அவளது செவ்விதழ்கள் சிரிப்பைத் தொலைத்திருந்தது அந்நொடி. நேற்று வரை மாப்பிள்ளை யாரென்பதை அவள் அறியவில்லை. ஆனால் இன்று இவர் தான் மாப்பிள்ளை என்று அறிந்த நொடி அதிர்ச்சியில் உறைந்தவள் தான் இன்னும் அதிலிருந்து மீண்டு வரவில்லை‌.

ஓவென கத்தி அழத் துடிக்கும் குரல்வளையை அழுத்தமாக மூடிக்கொண்டாள். கண்களிலிருந்து கண்ணீர் வர பெரும் போராட்டத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தது. இருப்பினும் விரக்தியில் முகக்கண்ணாடியை வெறித்துப்பார்த்தாள்.

அக்கணம் கதவு திறக்கப்படும் சத்தம் அவளது செவியில் நுழைந்தது. இருந்தும் அவள் திரும்பிப் பார்க்கவில்லை. உள்ளே நுழைந்தவரின் நரையிட்ட கேசம் செயற்கை நிறமூட்டியின் மூலம் கருமை நிறத்தில் பளபளத்தது. பட்டு வேஷ்டி சட்டை அணிந்தபடி சிறு புன்னகையுடன் நுழைந்தார் அந்த ஐம்பது வயதை நிறைவு செய்ய காத்திருக்கும் மனிதன் இராஜாங்கம்.

"என்ன கல்யாண பொண்ணு ரெடியா?" சிரித்துக் கொண்டே கேட்டவரின் பார்வை, கண்ணாடியில் தெரிந்த அவளது வதனத்தை அளந்துக் கொண்டிருந்தது.

"பரவாயில்லை என் ஸ்டெட்டஸ்க்கு தகுதி இல்லாத பொண்ணாக இருந்தாலும், இந்த நகையெல்லாம் போட்டதும் தனி அழகும், கம்பீரமும் வந்திடுது. இன்னும் கொஞ்ச நேரத்தில என் பொண்டாட்டியாகப் போற, அதனால அதுகேத்த மாதிரி நடந்துக்கோ. சீக்கிரம் மணமேடைக்கு வந்திடு என் வருங்கால பொண்டாட்டி." என்றவனது பார்வை மட்டும் அவளை துளைத்தெடுத்து விட்டே அங்கிருந்து நகர்ந்திருக்க,

அவன் வந்ததிலிருந்து உடல் கூசி நின்றவளோ, செல்லும் அவனை அருவருப்புடன் ஒரு பார்வை பார்த்தாள்.

அவன் சென்றதுமே அறைக்குள் நுழைந்திருந்தாள் செந்தாமரை. தேவவாசுகியின் அன்னை‌.

"என் தங்கப்பொண்ணு எம்புட்டு அழகா இருக்கடி நீ." என்று திருஷ்டி கழிக்க வரும் அன்னையை பார்வையால் தள்ளி நிறுத்தினாள் வாசுகி.

"என் கிட்ட வராதீங்க. உண்மையை சொல்லுங்க நான் உனக்கு பொறந்த பொண்ணு தானா?" என்ற மகளின் கேள்வியில் சிலையென நின்றாள் செந்தாமரை.

"என்னடி கேள்வி இது. எப்படி இப்படி எல்லாம் பேசுற?"

"சரியான கேள்வி தானே கேட்டேன். எங்கிட்ட நீ என்ன சொன்ன அம்மா? நினைவு இருக்கா? இல்ல நினைவுப்படுத்தவா?"

"வாசுகி, அது வந்து அப்போ நான் பொய் தான் சொன்னேன். ஆனால் அதுவும் உன் நல்லதுக்காகத்தான்."

"எதுமா நல்லது? எது என் நல்லது? வயசான ஆளு அன்னைக்கு வீட்டுக்கு பொண்ணு கேட்டு வந்தப்போ, அவரோட பையனுக்குனு சொல்லி தானே இந்த கல்யாணத்தை உறுதி செஞ்ச? நீ சொன்னா சரியா இருக்கும்னு உன்ன நம்பி தானே படிப்பை பாதியிலேயே நிறுத்தி இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். எப்படி உன்னால எனக்கு இப்படி ஒரு துரோகத்தை பண்ண முடிஞ்சுது?" என்றவளுக்கு உடல் உஷ்ணத்தில் கொதித்தது.

"வாசு நீ கட்டிக்கப் போறவரு எவ்வளவு பெரிய பணக்காரர்னு நான் சொல்லித் தெரிய வேண்டாம். போதும் அரைவேளை சோத்துக்கு நம்ம கஷ்டப்பட்டது எல்லாம் போதும். இனியாவது நீ நல்லா வாழனும். நீ எவ்வளவு வேணாலும் படிக்கலாம். உனக்கு பிடிச்சது எல்லாம் பண்ணலாம். இந்த ஆடம்பர வாழ்க்கை எல்லாம் நம்ம கனவுல கூட நினைச்சு பார்க்க முடியாதுடி."

"ச்சீ வாயை மூடுமா.. உன்னோட பணத்தாசைக்கு என்னை பலிக் கொடுத்துட்டியே?" என்றவளது கண்கள் உவர்ப்பான கண்ணீரை உதிர்த்தது.

அவள் வார்த்தைகள் தாமரையின் மனதை வலிக்கச் செய்தப் போதிலும், குரல் கரகரத்துப் போய் நின்ற போதிலும், மகளை ஒரு பார்வை பார்த்தவர்,

"அப்பா...அப்பானு உருகுவியே.... உன் அப்பனோட மருத்துவ செலவுக்கு பணம் கொடுத்தது யாருனு நினைச்ச? இந்த பெரிய மனுசன் தான். எனக்கு வேற வழித் தெரியலைடி. சின்ன வயசுல இருந்து நீ கேட்டது எதையும் வாங்கிக் கொடுக்க இயலாத ஏழ்மையை நினைக்கும் போதே வெறுப்பா இருக்கு. உன் அப்பனை காதலிச்சு கல்யாணம் பண்ணேன். ஆனால் இப்போ பிச்சை எடுக்காதக் குறையா அஞ்சுக்கும் பத்துக்கும் பத்து பாத்திரம் தேச்சு கஷ்டப்பட்டுட்டே இருக்கேன். சின்ன வயசுல என் கை காப்பு காச்சிருக்குறது பார்த்து, அம்மா நான் பெரியவளானதும் உன்ன ராணி மாதிரி பார்த்துக்குவேனு சொல்லுவியேடி ஆத்தா... அது எல்லாம் மறந்துப் போச்சா? என்ன ராணி மாதிரி பார்த்துக்க வேண்டாம். நீ ராணி மாதிரி வாழனும் தங்கம். அதுக்காக என்ன வேணாலும் பண்ணலாம் தப்பு இல்ல." என்றவரது வார்த்தைகள் விசும்பல்களாக வெளிப்பட்டது.

"அதுக்காக ஒரு கிழவனை கல்யாணம் பண்ண சொல்றியாமா? அவருக்கு நம்ம அப்பா வயசை விட கூடுதல். உனக்கு கொஞ்சம் கூட உறுத்தவே இல்லையாம்மா?" என்றவள் கூறும் போதே தொண்டைக்குழி அடைக்கும் உணர்வு பெண்ணவளுக்கு.

"கிழவன்னு நினைச்சா கிழவன் தான். ஒன்னு புருஞ்சுக்கோ இந்த உலகத்துல எவனும் யோக்கியன் கிடையாதுடி. இந்த பொல்லாத உலகத்துல வயித்துல ஒவ்வொரு நாளும் நெருப்புக் கட்டிக்கிட்டு திரியுறேன் தெரியுமா? ஆசை வார்த்தை பேசுறவனை நம்பி போனால் மோசம் போக வேண்டியது தான். எல்லாருக்கு தேவை இந்த இளமை தான். அதை இழந்து நம்ம நிற்குறப்போ நம்மளை தூக்கிப் போட்டு போயிகிட்டே இருப்பானுங்க. அந்த காலத்துலயே லண்டன் போய் படிச்சவரு. சதாகாலமும் தொழிலை மேம்படுத்த போராடி, கூடப் பிறந்தவளுகளுக்கு எல்லாம் கண்ணாலம் பண்ணி இவர் கல்யாணம் பண்ணப்போ, இவரோட முதல் தாரம் அல்பாய்சுலயே போய் சேர்ந்தது தான் மிச்சம். இவரோட நீ நல்ல வாழலாம் டி. உனக்கு பொறக்கப் போற குழந்தை தான் இந்த ஜெமினையே ஆளப் போகுது." என்றெல்லாம் அவர் பேசிக்கொண்டே செல்ல வாசுகியின் காதில் எதுவுமே ஒலிக்கவில்லை.

குடும்ப நிலைக்காக தன்னையே இழக்கத் துணிந்தவள், "போதும்... இப்போ என்ன இந்த கருமாதி..." என்று சொல்ல வந்தவள் பாதியில் நிறுத்தி "மன்னிச்சிடு கல்யாணம் நடக்கணும் அவ்வளவு தானே? நடக்கும் போங்க... ஆக வேண்டிய வேலையை மட்டும் பாருங்க." என்றவள் தாமரையின் முகத்தைக் கூட காண விரும்பவில்லை.

"அம்மா சொன்னா உன் நல்லதுக்காக மட்டும் தான் இருக்கும். அதை நீயும் ஒரு காலத்துல புரிஞ்சுப்ப." என்றவரும் அங்கிருந்து நகர்ந்து விட,

விரக்தியின் விளிம்பிற்கு சென்றவளோ, ஐயர் அழைக்கவும் மணமேடையை நோக்கி நடக்கத் தொடங்கினாள். உயிரென நினைத்த தன் குடும்பமே இத்தகைய துரோகத்தை தன் வாழ்வில் செய்திருக்க, உறவுகளை தொலைத்து விட்டு நடைப்பிணம் போல் மெல்ல நடந்து வந்தவளதுக் கரத்தை உரசிச் சென்றது சின்னஞ்சிறு கைகள்.

தன் விரலைப் பற்றிய கைகளை கூட பெண்ணவள் கவனிக்கவில்லை. தீயின் மீது நடந்து செல்பவளைப் போல் முகம் இறுக வலியுடன் தலைக்குனிந்தப்படி சென்றுக் கொண்டிருந்தாள் வாசுகி.

ஈ மொய்ப்பதுப் போன்ற இராஜாங்கத்தின் பார்வையை எதிர்க்கொள்ளத் தயங்கியபடி அவனருகே அமர்ந்துக் கொண்டாள் வாசுகி.

ஐயர் மந்திரங்களை உதிர்க்க, ஜடம் போல் அமர்ந்திருந்தவளதுக் கழுத்தில் இன்னும் சில வினாடிகளில் இராஜாங்கம் தாலியை கட்டுவதற்கு தயாராக இருக்க, அந்நொடி கேட்ட ஒரே ஒரு குரல் பெண்ணவளை நிமிர்ந்துப் பார்க்க செய்தது.

"தேவா.... தேவா... அடியே வாசுகி... எழுந்திருமா..." என்ற கணவனின் குரலில் கண்களை மூடி சாய்ந்திருந்தவளோ அதிர்ச்சி குன்றாது கண்களை திறந்து தன்னவரை நிமிர்ந்துப் பார்த்தாள்.

ஒரு நொடி கடந்த காலத்திற்கே சென்று விட்டு வந்தவளுக்கு தன் கணவன் நரேந்திரனைப் பார்த்ததும் தான் நின்ற மூச்சே திரும்பி வந்ததுப் போன்ற எண்ணம் உதித்தது.

தன் வாழ்வில் நடந்த நிகழ்வினை கண் மூடி நினைத்தப்படி வந்தவளுக்கு, இன்று நினைத்தாலும் முகமெல்லாம் குப்பென்று வியர்த்து தான் போனது.

"என்னங்க... என்னாச்சு?" என்றாள் வாசுகி பதட்டம் சிறிதும் குறையாது.

"அதை நான் கேட்கணும் தேவா... அண்ணா வீட்டுக்கே வந்துட்டோம். இன்னும் ஆழ்ந்து தூங்கிட்டு வர? நீ இந்த உலகத்துல தான் இருக்கியா?"

"மன்னிச்சிடுங்க மாமா. பழைய நினைவுகள் தான்." என்றவளின் முகம் நொடியில் வாடியிருந்தது.

"கசப்பான விசயத்தை நல்ல நாள் அதுவுமா நினைக்கணுமா சொல்லு? இன்னைக்கு நம்ம நிலாவுக்கு எங்கேஜ்மெண்ட் புரியுதா? சோ சிரிச்சு என்ஜாய் பண்ணுங்க மேடம்." என்றார் அவளை இலகுவாக்கும் பொருட்டு.

"சரிங்க தலைவரே. போகலாம் வாங்க." என்றாள் வாசுகி முகம் முழுவதும் புன்னகைத்தப்படி.

அவளது சொல்லில் புன்னகைத்தவரோ, "முன்னாடி போ. கார் பார்க்கிங்ல விட்டுட்டு வரேன்." என்றார்.

மகிழுந்திலிருந்து இறங்கியவள், மங்களகரமான அவ்வில்லத்தைப் பார்த்து லேசாக முறுவலித்தாள். பின் காரில் வரும் பொழுது தோன்றிய கசப்பான நினைவுகளை புறம் தள்ளி வைத்தவளோ, ஆழ்ந்த பெருமூச்சொன்றை இழுத்து விட்டப்படி, வீட்டிற்குள் நுழைந்திருந்தாள்.

"வாசு வாமா... இதுதான் நீ வர நேரமா.... கல்யாண பொண்ணோட சித்தியும் சித்தப்பாவும் இம்புட்டு நேரம் கழிச்சா வருவீங்க?" என்று அத்தை முறையில் உள்ளவர் பேச, அதற்குள் அவ்விடம் வந்திருந்தார் ஜெயசுதா.

வாசுகியைக் கண்டதும் வலுக்கட்டாயமாக புன்னகைத்தவரோ, "வாங்க வாசுகி... எங்க தம்பியைக் காணோம்?" என்று கடமைக்கென கேட்க,

"வண்டியை நிறுத்திட்டு வராரு அக்கா." என்றாள் வாசுகி அதே புன்னகை மாறாது.

"ஓ சரி சரி. கொஞ்சம் வேலையிருக்கு வரேன்." என்று ஜெயசுதா அங்கிருந்து நகர்ந்துவிட,

வாசுகியின் கண்கள் தேடியது என்னவோ யுவநிலாவைத் தான். சுவற்றில் மாட்டப்பட்டிருந்த ஜெயசுதா, ஜெயராமன் மற்றும் யுவநிலாவின் குடும்ப புகைப்படத்தைப் பார்த்தவளதுக் கண்களில் ஒருவித ஏக்கம் வந்துச் சென்றது.

பதினெட்டு வருடக்கால திருமண வாழ்க்கையில் நரேந்திரன், வாசுகி தம்பதியனர் இருவருக்குமே குழந்தை வரத்தை அக்கடவுள் நல்கவில்லையே. யுவநிலாவின் மீதே உயிரே இவர்கள் வைத்திருந்தாலும், ஜெயசுதாவின் ஒதுக்கம் இவளை யுவநிலாவிடமிருந்து தள்ளியே வைத்திருந்தது.

பல ஆண்டுகள் கழித்து யுவநிலாவை காணப் போகும் மகிழ்ச்சியில் அவளைத் தேடிக் கொண்டே ஒவ்வொரு அறையாக சென்றாள் வாசுகி.

அதே சமயம் மாடியில் உள்ள ஒரு அறையில் கண்ணாடியின் முன்பு அமர்ந்திருந்தப்படி ஒப்பனைகளை செய்துக் கொண்டிருந்தாள் யுவநிலா.

சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அவளது பரதம் ஆடும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றே பறைச்சாற்றும் பரதத்தின் மீது அவள் கொண்ட நேசக் காதலை.

பரதத்திற்கு அவள் புரியும் ஒப்பனைகள் அதிகப்படியாக இருக்கும். ஆனால் இன்று மிகக் குறைந்த ஒப்பணையில் தேவதையென மிளர்ந்தப்படி தயாராகிக் கொண்டிருந்தாள் யுவநிலா.

பெயருக்கு ஏற்றார் போல் பௌர்ணமி நிலாவைப் போன்ற வட்டமுகம் பெண்ணவளுக்கு. அதில் அஞ்சனமிட்ட அவளது பெரியக் கண்களும், கூர்மையான நாசிதணில் வீற்றிருந்த சிறு ஒற்றைக் கல் மூக்குத்தியும், இதழோரம் லேசாக விரிந்திடும் பொழுது தெரியும் முத்துப்பற்களின் புன்னகையுமென்று மொத்ததில் அழகுப் பாவையென மிளிர்ந்தாள் யுவநிலா.

"யுவி.." என்ற ஒற்றைக் குரல் அவள் செவியில் நுழைந்த கணம் அவள் கண்களில் புது மலர்ச்சி தென்பட்டது.

அந்நொடி அவள் திரும்பிப் பார்க்க அவ்விடத்திலோ யாருமில்லை.

"சித்தி நீங்க இன்னுமா வரலை?" என்று கவலையில் ஆழ்ந்துப் போனவளுக்கு இன்னும் தெரியவில்லை வாசுகி வந்துவிட்டாள் என்று.

சித்தி என்னும் உறவு எத்தனை அழகானது என்பதை வாசுகியிடம் அல்லவா அவள் உணர்ந்திருக்கிறாள். ஆயிரம் உறவு வந்தப் போதும் வாசுகியின் ஒற்றை அன்பில் கரைந்து உருகியவளுக்கு சிறு வயது முதலே வாசுகியின் மீது தீராத காதல் உண்டு.

ஜாதக காரணங்கள் முன் வைத்து சீக்கிரமாகவே திருமணம் பற்றிய பேச்சு வார்த்தைகள் வீட்டில் எழ, வாசுகியிடம் பேசிவிட்டே திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தாள் யுவநிலா.

அந்த அளவிற்கு வாசுகியின் மீது உயிரே வைத்திருந்தாள் நிலா. இதை காணும் பொழுது தான் ஜெயசுதாவிற்கு வாசுகியின் மீது வெறுப்புத் தோன்றியது. ஆதலாலோ என்னவோ வாசுகியை அவர் வீட்டிற்கு கூட சரியாக அழைக்க மாட்டார். தன் கணவனின் தம்பி என்கின்ற முறையில் நரேந்திரனின் மீது மட்டும் மரியாதை வைத்திருந்தார் ஜெயசுதா.

யுவநிலாவை வாசுகி தேடிக்கொண்டிருக்க, உறவுகளின் வருகை, அவ்விடமிருந்த வேலைகளென்று வாசுகிக்கு செல்ல நேரமின்றி போய்விட, இன்னும் சற்று நேரத்தில் மாப்பிள்ளை வீட்டினர் வந்து விடுவார்கள் என்பதால் வேலைகளை இழுத்துப் போட்டப்படி செய்துக் கொண்டிருந்தார் வாசுகி.

மாப்பிள்ளை வீட்டினர் முதலில் வந்து சேர்ந்திருந்தனர். அதன் பின்னரே அவ்வீட்டின் முன் சிவப்பு நிற ஜீப்பொன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினான் மாப்பிள்ளை பவித்ரன்.

வேஷ்டி சட்டையில் வந்து இறங்கியவனை சூழ்ந்துக் கொண்டனர் சின்னஞ்சிறு வாண்டுகள்.

"ஐ சிவப்பு கலர் காருடா.." என்றொரு சிறுவன் கூற, "அது ஜீப்புடா.." என்று மற்றொருவன் கூற,

"ஜீப்பு காக்கி கலர்ல தான் இருக்கும். இது மாருதி காருடா." என்றான் மற்றொரு பொடியன்.

"அடப்பாவிங்களா என் அறுபத்தி ஆறு லட்ச ஜீப்பை இப்படி கூறு போடுறானுங்களே... இவனுங்களை.." என்று பற்களைக் கடித்தவன் கைகளை ஓங்க வர, அதற்குள் சுற்றியுள்ளவர்களின் பார்வை தன் மீதுப் பதிவதைக் கருத்தில் பதிந்தவன்,

"ஹீ.. கொசு..." என்று புன்னகைத்தப்படி சமாளித்தவாறே கைகளை கீழே இறக்கியிருந்தான்.

வாயிலில் ஆறு வயது சிறுமி கைகளில் சந்தனமும் குங்குமம் கொண்ட தட்டினை வைத்திருக்க, குழந்தையைப் பார்த்து புன்னகைத்தான்.

"அங்கிள் சந்தனம் எடுத்துக்கோங்க." மழலைக் குரலில் கூற,

"அடடே நீ ரொம்ப அழகா இருக்க? என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்று குழந்தையைப் பார்த்தபடி கூறியவனை சந்தனத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொள்ள,

"நான் யோசிச்சு சொல்றேன்." என்று குழந்தையும் கூற, அங்கிருந்த அனைவரும் இவர்களது பேச்சைக் கேட்டு களுக்கென்று சிரித்தனர்.

அசடு வழிந்தவனோ, சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றிருந்தான்.

'டேய் அபி இன்னுமாடா மாலை வாங்கிட்டு வர, சின்னக் குழந்தைங்க எல்லாம் என்ன வெச்சு செய்துங்கடா?' என்று மனதில் புலம்பியவாறே வீட்டிற்குள் அடியெடுத்து வைத்திருந்தவனோ தெரியாமல் வாசுகியின் மீது மோதியிருந்தான்.

"சாரி, ஆண்ட்டி" என்றவன் அவரிடம் மன்னிப்பை கேட்பதற்குள்,

"பரவாயில்லைங்க தம்பி." என்றபடி மின்னலென அங்கிருந்து சென்று விட்டார் வாசுகி.

"ஆரம்பமே அமர்க்களமா இருக்கே? எங்க என்ன பெத்த தெய்வம்?" என்று கண்களை அவன் சுழலவிட, பவித்ரனின் அன்னை சந்திரகலாவோ, "பவி இங்க வாடா." என்று கை அசைத்திருக்க, எதுவும் பேசாது அன்னையிடம் சென்று அமர்ந்துக் கொண்டான் பவித்ரன்.

புகைப்படக் கலைஞர்களோ அவன் வந்தது தொடக்கம் வளைத்து வளைத்து புகைப்படமெடுக்க, "ஹலோ பிரதர் போதும். கொஞ்சம் பொண்ணையும் போய் போட்டோ எடுங்க." என்றவனோ அவர்களை அனுப்பி வைத்துவிட, ஒரு வித நிம்மதியுடன் மூச்சை இழுத்து விட்டான் பவித்ரன்.

ஜாதகம் பார்த்தது முதல் பெண் பார்த்தது வரை அனைத்தும் அவனின் அன்னையின் பொறுப்பாகியிருக்க, நாளை நிச்சயத்தை வைத்துவிட்டு அபாரஜீத்துடன் நள்ளிரவு தான் வீடு வந்து சேர்ந்திருந்தான் பவித்ரன்.

எங்கு மகன் இப்படியே ஊர்சுற்றியபடி இருந்துவிடுவானோ என்கின்ற பயத்தை அகற்றுவதற்காகவே இந்நிச்சயத்தை நன்முறையில் நடத்திவிட ஆயத்தம் ஆனார் சந்திரகலா.

"கடவுளே இந்த நிச்சயம் நல்ல படியா நடக்கணும்." என்று சந்திரகலா வேண்டிக் கொண்டிருக்க,

"என்ன ஆத்தா வேண்டுதல் பலமா இருக்கு? நல்ல வேண்டிக்கோ பொண்ணு மட்டும் எனக்கு பிடிக்கலை கண்டிப்பா நான் எழுந்து போயிடுவேன்." என்று அவரை அச்சுறுத்துவதற்காகவே கூறிவிட்டு முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டு நகைத்தான் பவித்ரன்.

"டேய் மகனே அப்படி எதுவும் பண்ணிடாதாடா... உனக்கு புண்ணியமா போகும்."

"உன் பையன் அப்படி எல்லாம் பண்ணுவேனா... சும்மா மாதா ஜீ."

'நீ பண்ணக்கூடியவன் தான்.' என்று மனதில் நினைத்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாது அமைதியாக புன்னகைத்தார் சந்திரகலா.

அதே சமயம் வீட்டின் முன் தோட்டத்தில் வைத்து பெண்ணவளை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர் புகைப்படக் கலைஞர்கள்.

மிகவும் எளிமையான மஞ்சள் வர்ண பட்டுப்புடவையில், பழமை வாய்ந்த ஆன்டிக் அணிகலன்களை அணிந்துக் கொண்டு, ஏந்திழைப் போன்று நின்றிருந்தாள் யுவநிலா.

"சிஸ்டர் கொஞ்சம் சிரிங்க" என்று புகைப்படக் கலைஞர் கூறியிருக்க, ஏற்கனவே நிச்சயதார்த்தம் பற்றிய பதட்டத்தில் நின்றிருந்தவளுக்கு மருந்துக்கும் புன்னகை வெளிப்படவில்லை. ஒரு விதப் பதட்டத்துடனே இருந்தாள் யுவநிலா.

"நல்லா சிரிங்க சிஸ்டர். என்ன நீங்க சிரிக்கவே மாட்றீங்க? மாப்பிள்ளை எப்படி சிரிக்கிறார் தெரியுமா?" என்றபடி பவித்ரனை அவர் எடுத்திருந்த ஒரு சில புகைப்படங்களை காட்டிட,

பவித்ரன் சிரிக்கும், குழந்தைகளைப் பார்த்து முறைக்கும், பெண்ணவளின் தந்தையைப் பார்த்து திருதிருவென முழிக்கும் ஒரு சில முகப்பாவணைகளைக் கண்டவளுக்கு எங்கிருந்து தான் அப்படியொரு புன்னகை வெளிப்பட்டது என்றே தெரியவில்லை.

சத்தமாக வாய்விட்டு சிரித்து விட்டாள் பெண்ணவள். ஒரு நொடி புகைப்பட கலைஞரே மிரண்டு தான் போனார் பெண்ணவளின் புன் சிரிப்பில்.

அந்நொடி நிச்சயதார்த்த மாலையை வாங்கியபடி புல்லட்டில் வந்திறங்கிய அபாரஜீத்தின் காதுகளை பெண்ணவளின் புன்னகை வந்தடைந்திருந்தது.

திடீரென கேட்கும் சிரிப்பு சத்ததில் முகம் சுருக்கியவனோ, யாரென்று எட்டிப் பார்க்க, அங்கு நின்றிருந்த மங்கையவளைக் கண்டதும் ஒரு நொடி உற்று கவனிக்கத் தொடங்கியிருந்தான் ஆணவன்.

இதுவரை எப்பெண்ணையும் ஆணவனின் கண்கள் தீண்டியதில்லை. முதல்முறையாக ஒரு பெண்ணை அவ்வாறு ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் புன்னகைக்கும் பொழுது அத்தனை அழகாய் இருந்தாள். இதழோடு கண்களும் சேர்ந்து புன்னகைத்தது. உயிரோட்டமான அவளது பார்வையும், கூர் நாசியும் அவனின் இமைகளை மூட விடாமல் வசிகரித்தது.

ஆழமான பார்வை அவனுடையதாய் இருக்க, தன்னை பார்வையால் ஒருவன் விழுங்கிக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்திடாதா பேதையவளோ, புன்னகையில் திளைத்தபடி நின்றிருந்தாள்.

அவனால் அவள் படவிருக்கும் துயர் அவள் அறியாதுப் போனது தான் விந்தையோ!

"யுவி..." என்ற அழைப்பில் பெண்ணவள் திரும்பிப் பார்த்தாள் என்றால் ஆணவனோ அந்நொடியே தன்னிலை உணர்ந்து தெளிந்தான்.....

நண்பன் மணக்கவிருக்கும் மங்கையவளை முதல் பார்வையிலேயே துகிலுரித்துக் கொண்டிருப்பவனே அவளை காயப்படுத்தவும் காத்திருந்தான்.

விதியின் செயலை யார் நினைத்தாலும் மாற்ற இயலாது
அதில் அவள் மட்டும் விதிவிலக்கோ.....!
 
Last edited:
3.அத்தியாயம்

காதல் விசித்திரமான ஒன்று. ஒருவரை பிடித்து, பழகி ஆழ்ந்து வருவதும் காதல் தான். ஒருவரை பார்த்த கணமே தனக்கானவள் அல்லது தனக்கானவன் என்று முதல் பார்வையிலேயே தோன்றி விடுவதும் காதல் தான். அது எப்பொழுது யாருக்கு துளிர்க்கும் என்று சட்டென்று கூறிட இயலாது.

பார்த்த ஒற்றைப் பார்வையிலேயே அவளை உள்வாங்கிக் கொண்டிருந்தவனின் கவனம் "யுவி" என்ற அழைப்பில் மீண்டது.

அழைப்பு வந்ததும் தான் தாமதம், பெரும் உவகைப் பொங்க திரும்பிப் பார்த்தாள் யுவநிலா...

தன்னெதிரே நின்றிருந்தவரை வெகு நாட்கள் கழித்துப் பார்த்த மகிழ்ச்சியில் "சித்தப்பா" என்றவள் துள்ளிக் குதித்துக் கொண்டு அவரை பாசத்துடன் அணைத்துக் கொண்டாள்.

"எப்படி இருக்கீங்க? வாசு சித்தி எங்கே?" என்றாள் கண்கள் விரிய,

"தேவா உள்ள தான் இருக்கா. என் சக்கரைப் பொண்ணுக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல நிச்சயம் ஆரம்பிக்க போகுது. மொதல்ல உள்ள வா." என்றவர் யுவநிலாவை அழைத்துக் கொண்டு சென்றுவிட, செல்லும் அவளையே இமை மூடாது பார்த்தப்படி இருந்த அபாரஜீத்தின் உதடுகள் மட்டும் "யுவி..." என்று அழைத்துப் பார்த்துக் கொண்டது.

அந்த பரந்த முகப்பு அறையின் முன் உறவினர்களின் முன்னிலையில் யுவநிலாவிற்கும், பவித்ரனுக்கும் நிச்சியதார்த்தப் பத்திரிகை வாசிக்கப்பட்டது.

தனக்கே உரிய நளினமும், நலங்கு வைத்த பின் தோன்றிய கூடுதல் அழகும் கொண்டு பூரிப்புடன் பவித்ரனின் எதிரே அமர்ந்திருந்தாள் பெண்ணவள். முதலில் திருமணத்தில் ஆவல் கொள்ளாத பவித்ரனுக்கும் கூட அவளைக் கண்டதும் பிடித்தம் ஏற்பட்டது போல, பெண்ணவள் வந்தது தொடக்கம் அவன் மனம் அவனிடத்திலேயே இல்லாது போனது தான் மிச்சம்.

இவர்கள் இருவரின் மனநிலை இப்படியிருக்க, இவர்கள் இருவருக்கும் பக்கவாட்டில் நடுநாயகமாக நின்றிருந்தவனது நிலையோ புரிந்துக் கொள்ள இயலாத வண்ணம் இருந்தது. அவன் முகத்தில் எவ்வித உணர்வும் வெளிப்படவில்லை. என்றும் இருப்பதைக் காட்டிலும் மிக அமைதியாகவும், நிதானமாகவும் நின்றிருந்தான். ஒருபுறம் நண்பனது வாழ்க்கை என்றாலும் மறுபுறம் அவன் பார்வை படிந்தது எல்லாம் பெண்ணவள் மீது தான்.

நன்கு நிதானமாக தன் இரையைப் பார்க்கும் கழுகினைப் போன்றல்லவா பெண்ணவளை பார்த்துக் கொண்டிருந்தான் ஆணவன். ஏனோ நண்பனுக்கு சொந்தமாகப் போகிறாள் என்ற நிதர்சனம் அவன் புத்திக்கு அந்நொடி எட்டவில்லை போல!

ஒரு புறம் உயிர் நண்பன். அவனுக்காக எதையும் செய்பவன் என்றாலும் அந்நொடி பெண்ணவளை பவித்ரனுக்காக இழக்க ஆணவனின் மனம் ஒப்புக் கொள்ளவில்லை. நண்பனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணாய் அவள் நின்றிருந்த போதிலும் அவள் தனக்கானவள் என்கின்ற எண்ணம் மட்டுமே அவனது சிந்தையில் ஆழ்ந்திருந்தது. அதுவரை அவ்விடம் இயல்பாய் நின்றிருந்தவனால் பெண்ணவள் பவித்ரனின் அருகே சென்று நின்றதும் அதனை ஏற்றுக் கொள்ள இயலாது போனது. மேலும் அவள் சிரித்துக்கொண்டே பவித்ரனிடம் இயல்பாய் பேசும் காட்சி அவனை கொஞ்சம் கொஞ்சமாக மூர்க்கனாக்கத் தொடங்கியிருந்தது.

கண்கள் சிவக்க, முறுக்கேறிய தன் கரத்தை மடக்கிக் கொண்டு தன்னைக் கட்டுப்படுத்த முயன்றவனது முயற்சி பூஜ்ஜியமாகி விட, அதற்கு மேல் அவ்விடமிருந்தால் விபாரீதமாகிவிடும் என்று உணர்ந்தவனோ அங்கிருந்து விறுவிறுவென்று நகர்ந்திருந்தான்.

சந்திரகலாவும், யுவநிலாவின் பெற்றோர்களான ஜெயராமன் மற்றும் ஜெயசுதா தம்பதியினர் இரு இல்லத் திருமணம் நிச்சயிக்கப்பட்டதற்கு சான்றாக தட்டை மாற்றிக் கொள்ள எழுந்தனர். வாசுகியும் நரேந்திரனும் ஓரமாக நின்றிருந்தாலும் மனம் நிறைந்த மகிழ்வுடன் அதனை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களை அந்நொடியிலும் கவனித்த யுவநிலா சட்டென்று "வாசு சித்தி, சித்தப்பா இங்க வாங்க." என்றாள் புன்னகை முகமாக.

தன் மகளுக்கு தோன்றியது தனக்கு தோன்றாமல் போய்விட்டதே என்று தன்னைத் தானே ஜெயராமன் குறைபட்டுக் கொண்டாலும் தன் தம்பியையும், தம்பி மனைவியும் மகிழ்வுடன் அவர் அழைக்க, ஜெயசுதாவிற்கு தான் முகமே இல்லை.

சம்பந்தி வீட்டாரின் முன் எதையும் காட்டிக் கொள்ள விரும்பாதவர், "வாங்க தம்பி, வா வாசுகி." என்றவர் சந்திரகலாவைப் பார்த்து, "நிலாவுக்கு இவங்க சித்தி அப்புறம் சித்தப்பா. நிலா மேல உயிரே வெச்சிருக்காங்க. பாவம் அவங்களுக்கு குழந்தை பாக்கியத்தை தான் கடவுள் தரலை." என்று கூறவும் வாசுகியின் முகம் நொடியில் மாறியது.

மனைவியின் கரம் பற்றி ஆறுதல் கூறினார் நரேந்திரன்.

"அம்மா, அவங்களுக்கு பொண்ணு நான் இருக்கேன்ல." என்று யுவநிலா சட்டென்று கூற,

"இல்லையா பின்ன..." என்ற ஜெயராமனும் மனைவியை ஒரு பார்வையால் அதட்டினார்.

"பெரியவங்க நாலு பேரும் சேர்ந்து தட்டை மாத்துறதுல எனக்கும் ரொம்ப சந்தோஷம் தான் சம்மந்தி." என்றார் சந்திரகலா.

பின் நால்வரும் சேர்ந்தே தட்டை மாற்ற தயாரகிய கணம் வாசுகியின் மீது தன் பார்வை பதித்தான் பவித்ரன். அவரை கண்டதுமே அவன் முகத்தில் சிந்தனை ரேகை பதியத் தொடங்கியிருந்தது.

"வாசு சித்தியை முன்னமே பார்த்திருக்கீங்களா?" என்று யுவநிலா அவனது பார்வையை கவனித்துக் கொண்டு கேட்க,

"உன் வாசுமாவை மேபி முன் கூட்டியே பார்த்திருப்பேன் போல." என்றவனோ பின் மௌனமாகிப் போனான்.

நால்வரும் சேர்ந்து தட்டை சந்திரகலாவிடம் மாற்றிக் கொள்ள, இனிதே நன்முறையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தேறியிருக்க, பவித்ரனின் கண்களோ அபாரஜீத்தை தேடத் தொடங்கியிருந்தது.

பார்வைக்கு எட்டும் தூரம் வரை நண்பனைத் தேடி விட்டான், ஆனால் அவ்விடம் அவன் இருந்ததற்கான தடையமே இல்லாமல் இருக்க, தன் தாயை ஜாடையில் அழைத்தான் பவித்ரன்.

"அம்மா, அபியை பார்த்தீங்களா?" என்றவன் கேட்க,

"அப்போ கூட இருந்தானேடா... ஒருவேளை வெளியே இருப்பான் நீ ஃபோன் பண்ணி பாரு. அப்புறம் மை சன் வாழ்த்துக்கள்... ஒரு வழியா அம்மாவோட இலட்சியத்தை நிறைவேத்திட்ட..."

"ஆமா இது பெரிய அணு ஆய்த சோதனை நிறைவேத்தி வெச்சுட்டேன். ஏதோ எனக்கு பொண்ணை கொஞ்சம் பிடிச்சதுனால ஓகே சொல்லிருக்கேன். மத்தபடி உன் இலட்சியத்துக்காக எல்லாம் இல்ல." என்றவன் அங்கிருந்து நகர்ந்து விட,

"எப்படியோ நல்லது நடந்தா சரி." என்றவரும் பெருமூச்சு விட்டுக் கொண்டார்.

யுவநிலாவின் அருகே வந்த வாசுகியோ பெண்ணவளின் நெற்றியில் வாஞ்சையுடன் மென் முத்தத்தைப் பதித்தார்.

"நம்ம வீட்டுல இருந்தது காட்டிலும் நீ அங்க சந்தோசமாவும், தைரியமாகவும் இருக்கணும். நீ எப்பவும் நல்லா இருப்பா குட்டிமா." என்றவருக்கு ஒரு நொடி ஆனந்ததில் கண்கள் கலங்கியிருக்க,

"அச்சோ ஸ்வீட் சித்தி... உன் ஆசிர்வாதம் போதும் நான் நல்லா இருப்பேன்." என்றவள் வாசுகியை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டாள்.

ஆனால் அவர்கள் இருவரும் அறியாத ஒன்று பெண்ணவளின் வாழ்வில் நடந்தேறக் காத்திருந்தது. வாசுகி துட்சமாய் தூக்கி எறிந்த ஒன்று விருட்சமாய் வளர்ந்து அவளுக்காக காத்துக் கொண்டிருந்தது.

"அப்புறம் ஜெயா ஒரே பொண்ணையும் கரை சேர்க்கப் போற வாழ்த்துக்கள். இன்னும் உன் பொண்ணு அந்த வாசுகியை பிடிச்சுட்டு தான் இருக்கா போல? வாசுகி வந்தா சொந்தா அம்மாவையே மறந்துடுறா அந்த அளவுக்கு சித்தி மேல பாசம்..." என்று உறவு பெண்மணி வத்தி வைக்க,

"என்னைக்கும் சித்தி சித்தி தான். அம்மாவாக முடியாது." என்று ஜெயசுதா வாசுகிக்கு கேட்கும் வண்ணம் உரக்கவே கூறியிருக்க, அவரது செயல் யுவநிலா காதுகளையும் எட்டத் தவறவில்லை.

வாசுகியின் முகம் நொடியில் வாடிவிட, யுவநிலாவை பார்த்தவர் "இதோ வந்துடுறேன் குட்டிமா." என்றவாறு அங்கிருந்து விறுவிறுவென்று நகர்ந்தவரை ஒற்றை அழைப்பில் நிற்க வைத்தாள் யுவநிலா

"வாசு அம்மா..." என்ற யுவநிலாவின் ஒற்றை அழைப்பில் உறைந்துப் போய் நின்றவரின் கண்கள் நொடியில் கலங்கியிருந்தது.

தாய்மை வார்த்தைகளில் விவரிக்க இயலாத காவியம். பெற்றெடுத்தால் மட்டுமா தாய்? மனதால் எக்குழந்தையையும் தன் குழந்தையைப் போல் பாவித்து தூய அன்பினை காட்டினாலும் தாய்மை தானே!

யுவநிலாவின் செருப்படி பதிலில் ஜெயசுதாவின் முகம் கருத்தது என்றால் வாசுகியின் உள்ளம் கசிந்துருகிப் போனது.

"வாசுமா...." என்ற அழைப்பை நீண்ட வருடங்கள் கழித்து யுவநிலாவின் குரலிலிருந்து கேட்க, அவரையும் மீறி உடல் சிலிர்த்து அடங்கியது.

"யுவி..." என்றவரது குரல் உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவிக்க, "வாசும்மா... எனக்கு ரொம்ப தாகமா இருக்கு மோர் உங்க கையால கலக்கி தரீங்களா?" என்றவள் குழந்தை தனத்துடன் முகத்தை வைத்தபடி கேட்க,

"இதோ தரேன்." என்றவரோ அகம் மகிழ்ந்தபடி அங்கிருந்து சென்றிருக்க, தன் தாயின் அருகே வந்தவளோ,

"அம்மா உங்ககிட்ட பேசணும் கொஞ்சம் உள்ள வரீங்களா?" என்று அழைத்து சொன்றாள்.

சமயலறைக்குள் நுழைந்த வாசுகிக்கோ ஒரு நொடி கைகள் வேலை செய்வதை நிறுத்தியிருந்தது. அந்த அழைப்பை கண்களை மூடி அனுபவித்தவளுக்கு தேகம் நடுங்கியது.

அன்று இராஜாங்கம் இவள் கழுத்தில் தாலியைக் கட்டிட முயன்ற நேரம், "வாசும்மா..." என்ற மழலையின் அழைப்பில் அல்லவா நிமிர்ந்துப் பார்த்தாள்.

கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களுக்கு பிறகு இவ்வழைப்பு அவள் காதுகளை வந்தடைந்திருந்தது.

அன்று தாய்மைக்கு அவள் ஏங்கவில்லை இன்று ஏங்கி நிற்கிறாள். அன்று சிறு பாலகனின் அன்பை புரிந்துக் கொள்ள தவறியவள் இன்று வளர்ந்த பெண்ணவளின் அன்பை அவதானித்துக் கொண்டிருக்கிறாள்.

"நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் உன்னை அப்படியே கைவிட்டுட்டு வந்திருக்கக் கூடாது வர்மா...." என்றவரின் கண்கள் நொடியில் கலங்கியிருக்க, முதல்முறையாக அவனை காண வேண்டும் என்கின்ற ஆவல் அவர் மனதில் தோன்றியிருந்தது.

இங்கு தன் அன்னையை அறைக்கு அழைத்து வந்திருந்தாள் யுவநிலா.

"அம்மா, உங்ககிட்ட ரொம்ப நாளா கேட்க நினைச்ச விசயம் தான். இப்போ கேட்குறேன். அப்படி என்னம்மா உனக்கு வாசு சித்தி மேல வன்மம்? மொத்த வன்ம குடோனையும் அவங்க மேல இறக்குற?"

"என்னடி என்ன பேச்சு பேசுற? உனக்கு என்ன தெரியும்னு இப்படி எல்லாம் பேசுற? நான் வன்ம குடோனா?"

"எனக்கு ஒன்னு தெரியாதனால தான் கேட்குறேன்?"

"அவளுக்கு குழந்தை இல்லை. உன்னையே எங்கிட்ட இருந்து பறிக்க பார்த்தவ. நீ சின்ன குழந்தையா இருக்கும் போதே என்ன பத்தி உங்கிட்ட வத்தி வைப்பா."

"போதும் அம்மா, நீ சித்தியை புருஞ்சுகிட்டது அவ்வளவு தான். ஒரு நாளும் சித்தி உன்ன தப்பா சொன்னது இல்ல. உன்னை எப்பவும் உயர்வா மட்டும் தான் சொல்லியிருக்காங்க. நீ பாட்டி பேச்சு கேட்டுட்டு அவங்களை தப்பா புரிஞ்சிருக்க. கோலிமூட்டி பாட்டி செத்தே இரண்டு வருசம் ஆகுது... இனியாவது நீ திருந்தும்மா?" என்றவளோ அங்கிருந்து சென்றிருந்தாள்.

"போடி போ, உன்ன அப்படி மயக்கி வெச்சிருக்கா அந்த வாசுகி." என்றவரும் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிட்டார்.

சந்திரகலாவோ மகனைத் தேடிக் கொண்டிருந்தார். உணவு உண்ணும் நேரத்தில் அபாரஜீத்தை தேடிக்கொண்டு அவனும் சென்றுவிட, பெண் வீட்டாரிடம் என்ன கூறுவது என்று தெரியாது தனித்து போய் தலையில் கை வைத்தப்படி நின்றிருந்தார் சந்திரகலா.

உடனே மகனுக்கு கைப்பேசியில் அழைப்பை விடுத்தவர், "மகனே எங்கடா இருக்க?" என்றார் பரிதவிப்பாக.

"நான் வெளியே வந்திருக்கேன்மா..." என்றான் பற்களைக் கடித்தப்படி.

"தம்பி, நிச்சயம் பண்ணிட்டு சம்மந்தி வீட்டுல கை நனைக்காம போக கூடாதுடா."

"அம்மா, நீ கை என்ன? கால் கூட நனைச்சுட்டு வா... ஒன்னும் பிரச்சினை இல்ல... நான் முக்கியமான விசயமா வெளியே வந்திருக்கேனு சொல்லுங்க.. என் மாமானார் நம்பர் அனுப்புங்க நான் பேசிக்கிறேன்." என்றவன் கைப்பேசியை வைத்திருக்க, ஆழ்ந்த பெருமூச்சை விட்டுக் கொண்டார் சந்திரகலா.

பெண் வீட்டாரிடம் ஒருவாறு அவர் சமாளித்துவிட்டு கிளம்பியிருக்க, யுவநிலாவிற்கு தான் முகமே இல்லை. பெரியவர்களிடம் கூறாது செல்வது என்ன பழக்கம்? என்று பவித்ரனைத் தான் மனதில் கடிந்துக் கொண்டாள் பெண்ணவள்.

அன்றைய இரவு கடற்கரையின் முன் அமர்ந்துக் கொண்டிருந்தான் அபாரஜீத்‌. ஆழ்ந்த கடற்கரையில் அவனையும் நிலவினையும் தவிர்த்து யாருமேயில்லை. நிலாவை பார்த்தவனுக்கு யுவநிலாவின் நினைவு வந்து தாக்க, கண்களோ நொடியில் சிவந்துப் போனது.

"நான்... உன்ன பார்க்க போறது இல்ல" என்று நிலவினை காணப் பிடிக்காது நன்கு குடித்திருந்தவனோ அலைகளை வெறித்துக் கொண்டபடி இருக்க, அவனது தோள்பட்டையை பற்றியிருந்தது ஒரு வலிய கரம்.

கரத்தின் வலிமைக் கண்டு அதை யாரென்று உணர்ந்தவனோ "பரவாயில்லையே நான் இங்க தான் இருப்பேனு சரியா கண்டு பிடிச்சுட்ட?" என்றான் உதட்டோரம் சிறு அலட்சிய புன்னகை துளிர்க்க,

"அபி, இது என்ன பழக்கம்? எங்கிட்ட சொல்லாமலே கிளம்பிட்ட?" என்றான் பவித்ரன் சற்று காட்டமாக.

"இனி அப்படி தான். உனக்கு கல்யாணம் ஆகிடும் நீயும் மாறிடுவ? அப்புறம் எல்லாம் மாறிடும்?" என்றவனை பார்த்து இதமாய் புன்னகைத்தான் பவித்ரன்.

நட்புக்குள் பிரிவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் பேசுகிறான் என்று தான் பவித்ரன் நினைத்துக் கொண்டான். ஆனால் உண்மையில் அவன் மனதிலிருந்ததோ வேறு.

"உஃப் இது தான் உன் பிரச்சனையா? நான் தான் பயந்துட்டேன். நான் உன்னோட பவின்டா... உன்னோட நண்பன் உனக்காக என்ன வேணாலும் பண்ணுவேனே தவிர்த்து நான் மாற மாட்டேன்."

"என்ன வேணாலும் பண்ணுவியா மச்சி...?" என்றான் போதையிலும்
அவனை கூர்மையாக பார்த்தபடி...

"ஆமாடா..." என்றான் புன்னகையுடன்.

அடுத்து ஆணவன் கூறிய பதிலில் பவித்ரனின் புன்னகை நொடியில் வற்றிப் போனது.
 
Status
Not open for further replies.
Top