வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

ஏகாந்தத்தில் எரியும் ஏந்திழை- கதை திரி

Status
Not open for further replies.
அத்தியாயம் 1

கால்கள் பின்ன முதலிரவு அறைக்குள் அமர்ந்து இருந்தாள் கயல்விழி...

வயது பதினெட்டு தான் தொட்டிருக்கின்றது...

தாம்பத்தியம் பற்றி சிறு அறிவு கூட இல்லை...

ப்ளஸ் டூ முடித்ததுமே மாப்பிளையை தேடி கட்டி வைத்து விட்டார்கள்...

மாப்பிள்ளை அரச நிறுவனத்தில் க்ளார்க் ஆக பணி புரிகின்றானாம்...

மூன்று பிள்ளைகள் அடங்கிய அவர்கள் குடும்பத்தில் இரு அக்காமார்களும் திருமணம் முடித்து சென்று இருக்க, இவன் தான் கடைக்குட்டி...

அவன் தந்தை கனகரெட்ணம் உடல் நிலை முடியாதவர்... இன்றும் கூட சக்கர நாற்காலியில் தான் திருமணத்துக்கு வந்து இருந்தார்...

அவன் தாய் வைதேகியை பார்க்கவே கண்டிப்பானவர் போல தோன்றியது...

சீதனத்தில் அவர் பேசிய கறார் பேச்சு அவளும் அறிவாள்...

இவை அனைத்தும் தான் அவளுக்கு தெரியும்...

சின்ன வயதில் டாக்டர் ஆக வேண்டும் என்று எல்லாம் கனவு கண்டு இருக்கின்றாள்...

ப்ளஸ் டூ முடித்ததுமே, "சீதனத்துக்கு தான் பணம் சேர்த்து வச்சு இருக்கேன்... படிக்க வைக்கிறதுக்கு எல்லாம் செலவு பண்ண முடியாது, வேற வீட்டுக்கு போற பொண்ண படிக்க வச்சு என்ன கண்டோம்? பையனுக்கு செலவு பண்ணினாலும் பரவாயில்லை… நமக்கு பையனும் இல்லை... படிக்க வச்சுட்டு அப்புறம் கல்யாணத்துக்கு என்ன பண்ணுறது?" என்று அவளது அப்பா அவளது அம்மாவிடம் சொன்னது அவளது காதிலும் விழுந்தது...

குடும்பமே அந்நியமாகி விட்ட உணர்வு...

இதற்கு மேல் எங்க படிக்க வைக்க சொல்லி கேட்பது?

திருமணத்துக்கு சம்மதித்து விட்டாள்.

மாப்பிள்ளையை பற்றி ஒன்றுமே தெரியாது...

பெண் பார்க்க வந்த அன்று இரு வார்த்தைகள் பேசியதுடன் சரி...

பார்க்க லட்சணமான மாப்பிள்ளை தான்...

பெயர் ஜெயராம்...

மின்னல் வேகத்தில் திருமணமும் முடிந்து விட்டது...

இப்போது முதலிரவு அறைக்குள் வந்து அமர்ந்து விட்டாள்.

சிறகடித்து பறக்க வேண்டும் என்கின்ற ஆசைகள் எல்லாம் நிராசையாகி போயின...

அவள் வேறு அநியாயத்துக்கு அமைதியான பெண்...

வாயை திறந்து பேசவும் மாட்டாள்...

திருமணம் செய்வது என்று முடிவெடுத்த பின்னர், வலுக்கட்டாயமாக ஜெயராம் மீது கவனத்தை செலுத்த தொடங்கி இருந்தாள்...

அவளால் வேறு என்ன தான் செய்ய முடியும்...

இன்று முதலிரவு அறைக்குள் இருந்தவளுக்கு இதயத்தில் ஒரு படபடப்பு...

என்ன நடக்கும் என்று கூட அவளுக்கு தெரியாது...

அவன் உள்ளே இருப்பான் என்று பார்த்தால் அவன் இருக்கும் அடையாளமே இல்லை...

சற்று நேரத்தில் கதவை திறந்து கொண்டே உள்ளே வந்தான்...

கயல்விழியும் சட்டென்று எழுந்து நிற்க, அவனும் கதவை தாழிட்டு விட்டு அவள் முன்னே வந்து நின்று அவளை மேலிருந்து கீழ் பார்த்தவன், "சும்மா சொல்ல கூடாது, அழகா தான் இருக்க" என்றான்...

அவள் கன்னங்கள் சிவந்து போக, வெட்கத்துடன் தலையை குனிந்து கொண்டாள்.

அவன் இன்னுமே அவளை நெருங்க, தலையை குனிந்தவளுக்கு குப்பென்று மணம்... சிகரெட்டின் மணம்... சட்டென்று ஏறிட்டுப் பார்த்தாள்.

அவனிடம் இருந்து தான்...

இதயம் இப்போது பயத்தில் துடித்தது...

"சிகரெட் குடிப்பாரா?" என்று நினைத்தவளுக்கு அவனது உண்மையான முகம் இன்னுமே தெரியவில்லை...

அவனோ அவள் தயக்கத்தை எல்லாம் கண்டு கொள்ளாமல், அவள் முகத்தை தாங்கி இதழ்களில் இதழ் பதித்தான்...

குமட்டிக் கொண்டே வந்தது அவளுக்கு...

முதல் முத்தத்தின் இனிமையை அவளால் அனுபவிக்க கூட முடியவில்லை...

அருவருப்பாக இருந்தது...

சட்டென்று முகத்தை அவனிடம் இருந்து அகற்றிக் கொண்டாள்.

"என்ன?" என்றான் சற்று கோபம் கலந்த குரலில்...

"சிகரெட்" என்றாள் அவள் இழுவையாக...

"ஆமா குடிச்சேன்... அதுக்கென்ன?" என்றான் அவன்...

"எனக்கு பழக்கம் இல்ல" என்றாள் தழுதழுத்த குரலில்...

"இனி பழகிக்கோ" என்று சொன்னவன், அவளை இழுத்து விட்ட முத்தத்தை தொடர, அவளுக்கோ வெறுத்து போய் விட்டது...

முடியாது என்று அவனை தள்ளி விடவும் பயமாக இருந்தது...

அவள் உணர்வுகள் அவனுக்கு பொருட்டே இல்லை போலும்... தன் உணர்வுகளுக்கு வடிகால் மட்டும் தேடிக் கொண்டான்...

அவள் கண்களில் இருந்து கண்ணீர்...

உடல் வலியும் உள வலியும் சேர்ந்த கண்ணீர்...

உடல் வலி தவிர்க்க முடியாதது... அவன் கொஞ்சம் அனுசரணையாக இருந்தால் அவளுக்கும் அந்த வலி பெரிதாக தெரிந்து இருக்காது...

ஆனால் அவனோ தனது தேவையை முடித்துக் கொண்டே தூங்கி விட்டான்...

சின்ன சந்தோஷம் கூட இல்லாத முதலிரவு...

இது தான் வாழ்க்கை முழுவதுமா? என்று நினைத்தவளுக்கு தூக்கம் கொஞ்சமும் வரவில்லை...

அவன் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருந்தான்...

கொட்ட கொட்ட விழித்து இருந்து விட்டத்தை பார்த்துக் கொண்டு இருந்தவள் எப்போது தூங்கினாள் என்று தெரியவே இல்லை...

அடுத்த நாள் காலை கதவு தட்டும் சத்தம் கேட்டு தான் விழித்தாள்...

அவன் இன்னுமே தூங்கிக் கொண்டு இருந்தான்...

புடவையை சரி செய்து விட்டு கதவை திறக்க, வாசலில் நின்று இருந்தார் வைதேகி...

"இவ்ளோ நேரம் தூங்குவியா? சீக்கிரம் வந்து வாசல் தெளிச்சு கோலம் போடு" என்றார்...

முதல் நாளே அதட்டலாக பேசினார்...

அவளுக்கோ சுர்ரென்று வலித்தது...

கணவனிடமும் அனுசரணை இல்லை...

மாமியாரிடமும் அன்பு இல்லை...

ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, குளிக்க சென்றவள், குளித்து விட்டு வந்து வாசல் தெளித்து கோலம் போட ஆரம்பித்தாள்...

அவள் போட்டு முடிக்கவும், "இங்க வாடிம்மா" என்று வைதேகி அழைக்கவும் நேரம் சரியாக இருந்தது...

அவளும் உள்ளே சமயலறைக்குள் செல்ல, "இந்த தோசை எல்லாம் ஊத்தி சட்னி செஞ்சு வச்சிடு... ஜெயராம் எழுந்து சாப்பாட்டு மேசைல சாப்பாடு இல்லன்னா கண்ட மேனிக்கு திட்டுவான்" என்றார்...

அவளுக்கோ இப்போதே களைப்பு...

அடுத்தடுத்து வேலை...

மறுப்பு சொல்ல தெரியாத வாயில்லா பூச்சி அவள்...

அவனுக்காக தோசை ஊற்றி சட்னியும் செய்து முடித்தவள் அதனை மேசையில் வைக்கவும் அவன் வந்து சேரவும் நேரம் சரியாக இருந்தது...

குளித்து விட்டு வந்தவனோ மேசையில் அமர்ந்து சாப்பிட தொடங்கினான்...

அவள் தான் பரிமாறினாள்...

"சட்னிக்கு உப்பு கொஞ்சம் தூக்கலா இருக்கு... இனி கம்மி பண்ணிக்கோ" என்றான்...

"சரிங்க" என்றாள் பெண்ணவள்...

இதே சமயம் வைதேகியோ உணவை எடுத்துக் கொண்டே கணவனுக்கு கொடுக்க அறைக்குள் கொண்டு சென்றார்...

காலை உணவு செய்து முடிய, மதிய உணவு செய்ய சொல்லி கட்டளை வந்தது...

அது முடிய, வீட்டை துப்பரவு செய்ய சொன்னார்கள்...

அதன் பிறகு இரவு உணவு...

அதற்கு பிறகு ஜெயராமுடம் இரவை கழிக்க வேண்டும்...

பகலில் வேலைக்காரி, இரவில் தாசி...

இது தான் அவள் அடையாளம் அந்த வீட்டில்...

அதுவே தினசரி ஆகி போனது... அவளுக்கோ உடல் மரத்து மனம் வெறுத்துப் போனது...

இப்படியே ஒரு வாரம் சென்று இருக்கும்...

ஜெயராமின் அடுத்த அவதாரத்தை அவள் பார்க்க நேர்ந்தது...

ஒரு வாரம் தான் அவனால் தன்னை கட்டுப்படுத்த முடிந்தது... எடுத்து விட்டான் குடிமகன் அவதாரத்தை...

வேலைக்கு சென்று விட்டு வந்தவனோ, தட்டு தடுமாறி வீட்டினுள் நுழைந்தான்...

கால்கள் பின்னி பின்னி நடந்த நடையே அவன் நிதானத்தில் இல்லை என்று சொன்னது...

"ஏய் கயல்விழி" என்று சத்தமாக அழைத்துக் கொண்டே வந்தவனை ஓடி வந்து அதிர்ந்து பார்த்தாள் அவள்...

குடித்து இருக்கின்றான் என்று நினைக்கவே இதயம் பதறியது... குடிப்பழக்கம் வேறு அவனுக்கு இருக்கின்றது என்று நினைக்கவே மூச்சு நின்ற உணர்வு அவளுக்கு...

கேட்க தைரியம் இல்லை...கேட்கும் இடத்திலும் அவளை அவன் வைத்தது இல்லை...

சத்தம் கேட்டு முன்னறைக்கு வந்த அவன் தாய் வைதேகியோ, "என்ன பார்த்துட்டு இருக்கிற... உள்ளே அழைச்சிட்டு போய் படுக்க வை" என்று கயல்விழியை அதட்டினார்... ஏன் குடித்து இருக்கின்றான் என்று ஒரு கேள்வி இல்லை...

ஆண் குடித்து விட்டு வந்தாலும் பெண் படுக்க வைக்க வேண்டுமா?? என்ன நீதி இது... இவற்றை எல்லாம் அவளால் மனதுக்குள் நினைக்க மட்டுமே முடிந்தது...

தள்ளாடி விழ போனவனின் தோளில் கையை போட்ட அடுத்த கணம் நிலத்தில் வாந்தியை எடுத்து இருந்தான்... அவள் மீதும் தெறித்து இருந்தது... அருவருப்பாக இருந்தது... ஆனால் காட்டிக் கொள்ள முடியவில்லை...

"சீக்கிரம் இந்த இடத்தை சுத்தம் பண்ணு" என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் நுழைந்து விட்டார் அவள் மாமியார்...

அவளுக்கு அழுகையாக வந்தது...பதினெட்டு வயது தான் அவளுக்கு... ஆனால் நரகத்தில் வாழ்வது போன்ற உணர்வு..

ஜெயராமை அழைத்துக் கொண்டே கட்டிலில் அமர வைக்க அவனோ சட்டென்று படுத்து விட்டான். அவன் ஷேர்ட் எல்லாம் வாந்தி...

மலைமாடு போல இருப்பவனை அவளுக்கு தூக்கி கழுவ முடியுமா??

முதலில் அவன் வாந்தியை துடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே துணியை எடுத்து வந்து வாந்தியை துடைத்தாள்...

அழுதழுது துடைத்தாள்...

கண்ணீர் ஆறாக ஓடியது...

மனைவியை ராணி போல பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை... மனுஷியாக மதிக்கலாம் அல்லவா??

அவளால் நினைக்காமல் இருக்க முடியவே இல்லை...

அனைத்தையும் சுத்தம் செய்து விட்டு அறைக்குள் நுழைந்தவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...

கழிவறை நினைப்பில் சுவற்றில் சிறுநீர் கழித்துக் கொண்டு இருந்தான் அவள் கணவன்...

"ஐயோ என்ன பண்ணுறீங்க?" என்று அவள் பதற அதனை எல்லாம் சட்டை செய்யாது அவன் வந்து படுத்து விட்டான்...

அடிக்குரலில் சத்தமாக கத்தி அழவேண்டும் போல இருந்தது அவளுக்கு... ஆனால் இயலாமையில் சுவரில் சாய்ந்து அமர்ந்து மௌனமாக கண்ணீர் வடிக்க மட்டும் தான் முடிந்தது...

அழுதழுது அறையை சுத்தம் செய்தாள்...

இந்த கல்யாணத்தை எதற்கு முடித்து வைத்தார்கள் என்ற கேள்வி அவளுள்...

அனைத்தையும் சுத்தம் செய்து விட்டு அவசரமாக தொலைபேசியை எடுத்து தாய் மாதவிக்கு அழைத்தாள்...

அவரது தொலைபேசி அலற, "யாரு இந்த நேரத்துல" என்று தூக்க கலக்கத்தில் கேட்டார் மணிவண்ணன்...

கயல்விழியின் அப்பா...

மாதவியோ, "நம்ம கயல் தான்" என்று சொல்லிக் கொண்டே தொலைபேசியை காதில் வைக்க, "எதுக்கும்மா எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க?" என்று அழுகையுடன் வந்தது அவள் குரல்...

"என்னம்மா ஆச்சு?" என்றார் அவர்...

"குடிச்சிட்டு வர்றார்ம்மா" என்று சொல்ல, அவரோ மணிவண்ணனை பார்த்தவர், "மாப்பிள்ளை குடிக்கிறாராம்" என்றார்...

மணிவண்ணனோ, "அதெல்லாம் சகஜம் தானே... உன் பொண்ணுக்கு அனுசரிச்சு வாழ தெரியாதா என்ன?" என்று கேட்டு விட்டு படுத்து விட்டார்...

அவர்களுக்கோ அவள் வாழாவெட்டியாக வீட்டுக்கு வந்து விடுவாளோ என்று பயம்...

இதனைக் மறுமுனையில் இருந்து கேட்ட கயல்விழிக்கு சுருக்கென்று தைத்தது...

"எனக்கு இங்க இருக்க முடியாதும்மா, நான் வீட்டுக்கே வரேன்" என்று அவள் அழுது கொண்டே சொல்ல, மாதவியும் பயந்து விட்டார்...

அவளை அதட்டல் மூலம் தான் அடக்க முடியும் என்று நினைத்தவரோ, "என்ன விளையாடுறியா? வீட்டுக்கு வந்தா அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க என்ன பேசுவாங்க? கல்யாணம் முடிச்சு ஒரு வாரத்திலேயே வாழாவெட்டியா வர போறியா? மரியாதையா மாப்பிள்ளையை அனுசரிச்சு நடந்துக்கோ... இங்க மட்டும் நீ வந்தே, எங்க சாவு உன் முன்னாலேயே நடக்கும்" என்று சொன்னவரோ அவள், "அம்மா அம்மா" என்று அழைப்பதை கூட பொருட்படுத்தாமல் அலைபேசியை துண்டித்து இருந்தார்...

கையில் இருந்த அலைபேசியை வெறித்துப் பார்த்த பெண்ணவளுக்கு முதல் முறை பெண்ணாக பிறந்தது தான் செய்த பாவமோ என்று தோன்றியது...


"தேவதைகள் பறக்க முதலே சிறகொடித்து விடாதீர்கள்... மீண்டும் சிறகு முளைத்தாலும் பறக்க முடியாமல் திணறி விடுவார்கள்..."
 
Last edited:
அத்தியாயம் 2

நாட்கள் நகர, வாழ பழகி விட்டாள்...

"அனுசரித்து போ" என்று சொல்லி சொல்லியே பெண்களின் ஆசைகளையும் கனவுகளையும் புதைக்க கற்றுக் கொடுத்து விடுகின்றார்கள் அல்லவா?

அவள் மட்டும் என்ன விதிவிலக்கா?

தனக்காக வாழாத பெண்களில் அவளும் ஒருத்தி...

அன்று காலையில் எழுந்தவளுக்கு கடுமையான வயிற்றுவலி...

மாதவிடாய் வந்து விட்டது...

எழுந்து கொள்ள கூட அவளுக்கு உடலில் தெம்பில்லை...

பிறந்த வீட்டில் தாய் பார்த்துக் கொள்வார்...

புகுந்த வீட்டில் அந்த அனுசரணையை எதிர்பார்க்க முடியாதே...

கட்டிலில் வலியுடன் எழுந்து அமர்ந்தவள் காதில், "இன்னும் காஃபி போடலையா?" என்று வைதேகியின் சத்தம் கேட்டது...

இங்கே நேரத்துக்கு எல்லாமே கொடுத்து விட வேண்டும்...

ஜெயராமுக்கும் அவளது அத்தை மற்றும் மாமனாருக்கும் நேரத்துக்கே காஃபி கொடுத்து விட வேண்டும்...

கயல்விழி வந்ததும் வைதேகி செய்து கொண்டு இருந்த வேலைகள் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விட்டார்...

இப்போது எல்லாமே கயல்விழி மட்டுமே...

ஜெயராம் சாப்பாட்டு விஷயத்தில் நுணுக்கம் அதிகம் பார்ப்பான்...

உப்பு சற்று அதிகமாக இருந்தாலும் கண்ட மேனிக்கு திட்டு விழும்...

அதுவரை அவள் வியர்வை வழிய, கால்கள் வலிக்க சமைத்ததை பற்றி அவனுக்கு கவலை இல்லை...

தனது நாக்கு திருப்தி பட்டால் போதும், வயிறு நிறைந்தால் போதும் என்கின்ற எண்ணம் தான் அவனுக்கு...

அதற்காக ஹோட்டல் உணவும் சாப்பிட மாட்டான்... ஒத்துக் கொள்ளாது என்று தவிர்த்து விடுவான்...

அதனால் உயிர் போகும் நிலை என்றாலும் அவனுக்கு சமைத்து தான் ஆக வேண்டும்...

அது மட்டும் இல்லாமல், கனகரெட்ணத்துக்கு தனியாக வேறு கஞ்சி வைத்து கொடுக்க வேண்டும்...

களைத்து விடுவாள்...

அதற்கும் மேலாக காலையிலேயே மதிய உணவும் செய்து ஜெயராமுக்கு கொடுத்து விட வேண்டும்... வெறுப்பாக இருந்தது...

வயிற்று வலியுடன் எல்லாம் செய்வது அவளால் முடியுமா என்ன?

கால்கள் வேறு வலிக்க தொடங்கி விட்டது...

பற்களை கடித்துக் கொண்டே, தலையில் கொண்டை போட்டவள் சமயலறைக்குள் நுழைந்தாள்.

சமையல் வேலையையும் ஆரம்பித்தாள்...

ஒரு கட்டத்துக்கு மேல் முடியவில்லை...

காஃபியை கொண்டு போய் ஹாலில் இருந்த வைதேகியிடம் கொடுத்தவள், "அத்தை இன்னைக்கு நான் வீட்டுக்கு தூரமாயிட்டேன்" என்றாள்.

அவள் சொல்ல வந்தது என்னவோ தன்னுடைய வலியை பற்றி...

அவரோ, "அப்போ இன்னும் கர்ப்பம் ஆகுற எண்ணம் இல்லையா? நேரத்துக்கே கர்ப்பம் ஆகணும்... வீட்டுக்கு ஆம்பிள சிங்கம் ஒண்ணு பெத்து கொடுக்கணும்" என்றார் அதிகாரமாக...

அவளுக்கோ தூக்கி வாரிப் போட்டது...

அவள் என்னவோ சொல்ல வந்தால், அவர் என்னவோ பேசிக் கொண்டு இருக்கின்றார்...

அவருடன் பேச சென்றது தனது தவறு தான் என்று தன்னை தானே கடிந்து கொண்டே, மீண்டும் சமயலறைக்குள் நுழைந்து சமைக்க தொடங்கி விட்டாள்...

வலியின் நடுவே ஒரு சமையல்...

சமைத்து கொண்டு வந்து மேசையில் உணவையும் வைத்து விட்டாள்.

மயக்கம் வருவது போல இருந்தது... வேலை செய்ததில் உதிர போக்கு வேறு அதிகமாக இருந்தது...

ஆனால் அவளுக்கு அனுசரணையாக நான்கு வார்த்தைகள் பேச தான் யாரும் இல்லை...

வலியை தொண்டைக்குள் விழுங்கிக் கொண்டாள். ஜெயராமும் சாப்பிட அமர்ந்து விட்டான்...

அவளோ அவனுக்கு உணவை எடுத்து பரிமாறி விட்டு சமயலறைக்குள் பாத்திரங்களை கொண்டு வைக்க சென்றாள்.

சாப்பிட்டுக் கொண்டு இருந்த ஜெயராமோ, "ஏய் கயல்விழி, அந்த சாம்பாரை எடுத்து வா" என்றான் அதிகாரமாக...

அவளுக்கு இது ஒன்றும் புதிது இல்லையே... அவன் அன்பாக பேசினால் தானே அதிசயம்...

அவளும் சாம்பார் பாத்திரத்தை எடுத்துக் கொண்டே, அவன் அருகே சென்றவள் அதனை மேசையில் வைத்த கணம், அங்கே அமர்ந்து இருந்த வைதேகியோ, "சேட்டு ரெண்டு தடவை ஆள் அனுப்பிட்டான் ஜெய், பைசா பைசான்னு உசுர வாங்குறான்" என்று சொல்ல, ஜெயராமோ, "கடற்கரை பக்கம் இருக்கிற காணியை வித்து காசை கொடுத்துடலாம்" என்று சொன்னான்...

ஜெயராமுக்கு சாம்பாரை ஊற்றிக் கொண்டு இருந்த கயல்விழியோ, "காணி எல்லாம் விற்க வேணாம்னுங்க, அப்புறம் வாங்கவும் முடியாது, அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு அந்த காணியை வாங்கி கொடுத்தார்" என்று சொல்லி முடிக்கவில்லை, அவளை எரித்து விடுவது போல பார்த்தவன், "ப்ளஸ் டூ படிச்ச உனக்கு என்ன தெரியும்? படிக்காத முட்டாள் நீ... வந்துட்டா பெருசா அட்வைஸ் பண்ணுறதுக்கு" என்று எடுத்தெறிந்து பேசி விட்டான்...

அவள் பேச்சு அந்த வீட்டில் செல்லாத காசு தானே...

உடனே வைதேகி, "ஏதோ வீட்ல இருந்து கோடி கோடியா கொண்டு வந்த போல பேசுற... அந்த காணியை தவிர உன் அப்பன் என்ன கொடுத்தான்?" என்று சேர்த்து ஒத்து ஊதினார்...

அவளுக்கோ கண்கள் கலங்கி விட்டது...

அழுதழுதே சோர்ந்து போனாள்...

மௌனமாக அங்கே இருந்த நகர போனவள் மேல் ஜெய்ராமுக்கு வன்மம் தீரவே இல்லை...

தன் முடிவை அவள் எதிர்த்து பேசியதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை...

"ஏய் இங்க வா" என்றான்...

அவளும் அவன் முன்னே வந்து நிற்க, சட்டென எழுந்தவன் விட்டான் ஒரு அறை... அதுவும் சாப்பிட்ட எச்சில் கையினால்...

அவளோ அவனை அதிர்ந்து பார்க்க, "சாம்பாருக்கு உப்பை அள்ளி கொட்டி வச்சு இருக்க... சமைக்க தெரியாதா உனக்கு?" என்று கேட்டு விட்டு கையை உதறிக் கொண்டே அங்கிருந்து நகர, அதுவரை தேங்கி இருந்த கண்ணீர் கயல்விழியின் கண்ணில் இருந்து விழுந்தது...

வைதேகியோ, "சாம்பார் நல்லா தானே இருக்கு" என்று மனதுக்குள் நினைத்தாலும், "உன் அம்மா சமைக்க சொல்லி கொடுக்கலயா?" என்று கேட்டுக் கொண்டே சாப்பிட்டார்...

அதற்கு மேல் அவன் நிற்கவே இல்லை...

சாப்பிடாமல் சென்று விட்டான்...

"உன்னால என் புள்ள சாப்பிடாம போறான்" என்று அதற்கும் அவளுக்கு தான் திட்டு விழுந்தது...

கண்ணீருடன் சமயலறைக்குள் நுழைந்தாள்...

கன்னமெல்லாம் அவன் சாப்பிட்ட எச்சில் உணவு...

சமையல் கட்டை பிடித்துக் கொண்டே நின்றாள்.

கண்ணீர் ஆறாக பெருகியது...

உடல் வலியை விட, அவன் நடந்து கொண்டது வலித்தது...

கை நீட்டி அடிக்கிறான்...

கேள்வி கேட்க தைரியம் இல்லை அவளுக்கு...

அவளுக்கு மட்டும் அல்ல, பல பெண்களுக்கும் தான்...

அவளுக்கு அழ கூட அவகாசம் இல்லை போலும்...

"இந்த தட்டை எடுத்து வை" என்று அடுத்த அதட்டல் வைதேகியிடம் இருந்து...

கண்களை சேலை தலைப்பினால் துடைத்து விட்டு தட்டை எடுத்து கழுவ ஆரம்பித்தாள்...

அதனை தொடர்ந்து அவன் தினமும் அணியும் உடையை கழுவ வேண்டும்...

அதுவும் கையால் கழுவ வேண்டும்...

அவன் ஜட்டி தொடக்கம் எல்லாமே கழுவ வேண்டும்...

வேறு வழி இல்லை...

உடல் வலியையும் மன வலியையும் தாங்கிக் கொண்டே உடைகளை கழுவ ஆரம்பித்தாள்... இடையில் வைதேகியின் அழைப்பு...

"உன் மாமனார் வாந்தி எடுத்துட்டார்... சுத்தம் செய்" என்று...

சாப்பிட கூட இல்லை...

எழுந்து சென்று அதனை சுத்தம் செய்து முடித்தவளுக்கு மயக்கம் வந்தது...

மயங்கி விடுவோமோ என்று பயந்து உணவை எடுத்து அவசரமாக சாப்பிட ஆரம்பித்தாள்...

சாப்பிட்டு முடிக்கும் தருவாயில், "ஏதோ பெரிய கலெக்டர் உத்தியோகம் பார்க்கிற போல கொட்டுகிறத பாரு" என்று அவளுக்கு ஒரு குத்தல் பேச்சை பேசி விட்டு கடந்து சென்றார் வைதேகி...

அதற்கு மேல் அவளால் சாப்பிட முடியவில்லை... சாப்பாடு இறங்கவில்லை...

தட்டை கழுவி விட்டு மீண்டும் வேலை செய்ய சென்று விட்டாள்.

வேலை வேலை வேலை, விடிய விடிய அவளுக்கு வேலை தான்... பேசி சிரித்து சந்தோஷப்பட கூட யாருமே இல்லை...

அன்று மாலை வந்தது...

ஜெயராம் உலக அதிசயமாக குடிக்காமல் வந்து இருந்தான்...

அவளுடன் இணைய தோன்றும் நாட்களில் மட்டும் குடிக்க மாட்டான்... மூக்கு முட்ட குடித்தால் அதன் பிறகு எங்கனம் கூடல் கொள்வது?

அதற்காக அவளுக்கு சந்தோஷங்களை ஒன்றும் அவன் வாரி வழங்குவது இல்லை...

தனது தேவையை பூர்த்தி செய்து விட்டு தூங்கி விடுவான்...

பெண்களுக்கு உணர்வு இருந்தால் தானே வலி இருக்காது...

அவன் அவளுடைய உணர்வுகளையும் தூண்ட முயற்சிப்பது இல்லை...

தனது உணர்வுகள் அடங்கி விட்டால் போதும் மனநிலை தான்...

கூடலில் முத்தம் கூட அரிது தான்...

ஒரு இயந்திர வாழ்க்கை... வலியுடனான இயந்திர வாழ்க்கை...

அவளோ கடமைக்கு அவனுடன் இருப்பாள்...

தாம்பத்தியம் இவ்வளவு தானா? என்ற எண்ணம் அவளுக்கு வந்து விட்டது...

அதில் இப்போது நாட்டமும் அவளுக்கு இல்லை...

கூடலின் போது அவன் முகத்தை கூட பார்க்க பிடிக்காது அவளுக்கு...

கண்களை மூடிக் கொள்வாள்...

இன்றும் அவன் குடிக்காமல் வந்து இருக்க, அவளுக்கோ சின்ன தடுமாற்றம்...

அன்றிரவு சாப்பிட்டு விட்டு, அறைக்குள் நுழைந்ததுமே, கட்டிலில் படுத்து இருந்தவன், "வா" என்றான்...

அவளோ, "இன்னைக்கு நான் வீட்டுக்கு தூரமாயிட்டேன்... பீரியட்" என்றாள்.

சுர்ரென்று கோபம் அவனுக்கு...

"இதெல்லாம் நேரத்துக்கே சொல்ல மாட்டியா? குடிக்காம வந்தேன் இதுக்காக..." என்றான்.

அவளோ, "என்னை மன்னிச்சிடுங்க" என்று சொல்ல, கட்டிலில் எழுந்து அமர்ந்தவன் "என் மூடே போய்டுச்சு" என்று சொல்லிக் கொண்டே, தலையை அழுந்த பிடித்துக் கொண்டவன், "அப்போ நான் சொல்றத பண்ணு" என்றான்...

பெண்ணவளோ அவனை புரியாமல் பார்க்க, அவன் கொடுத்த விளக்கத்தில் அவளுக்கு மயக்கம் வராத குறை தான்...

"இல்ல எனக்கு பழக்கம் இல்ல" என்றாள்...

"பழகிக்கோ" என்றான் அதட்டலாக...

"எனக்கு குமட்டிட்டு வரும்" என்றாள்.

"சொல்றத பண்ணுடி" என்று சொல்லிக் கொண்டே, எழுந்து அவள் தலைமுடியை பிடிக்க, அவளுக்கோ அழுகை ஆறாக பெருகியது...

"கட்டிலிலே தாசியா இருக்கணும்னு உன் அம்மா சொல்லி வளர்க்கலையா?" என்றான்...

"இல்லங்க வேணாம் ப்ளீஸ்" என்று கையெடுத்து கும்பிட்டாள்.

அவன் கேட்பானா என்ன? வேண்டாம் வேண்டாம் என்று அவள் கதற கதற அவளை தான் நினைத்ததை செய்ய வைத்து விட வேண்டும் என்கின்ற வன்மமும் வெறியும் அவனுக்கு...

அவள் அழுது புலம்பினாலும் இறுதியில் வென்றது என்னவோ அவன் தான்...

சற்று நேரத்தில் அறைக்குள் இருந்து வெளியே ஓடி வந்தவள் குளியறைக்குள் சென்று வாந்தியாக எடுத்தாள்.

நடந்ததை அவளால் ஜீரணிக்க முடியவே இல்லை...

அழுகையாக வந்தது...

கட்டிலில் ஒரு பெண்ணின் மேனியை ஆட்சி செய்ய முதல், அவள் மனதை ஆட்சி செய்ய வேண்டும்...

அப்படி செய்தால் கேட்காமலே இன்பங்களை வாரிக் கொடுப்பாள்...

ஆனால் அவளை வேலைக்காரியாகவும் தாசியாகவும் பார்த்தால் அவளால் எப்படி மனம் ஒத்து தாம்பத்தியத்தில் ஈடுபட முடியும்?

கயல்விழியாலும் முடியவில்லை...

இது நிரந்தரம் ஆகி விடுமோ என்று பயமாக இருந்தது...

வற்புறுத்தி நடந்தால் அங்கே காதலுக்கு இடம் ஏது?

வாயை கழுவி விட்டு கண்ணாடியை ஏறிட்டுப் பார்த்தாள்.

அவள் மறுத்ததுக்காக கன்னத்தில் மீண்டும் அவன் கை தடம்...

அடித்து அடங்க வைக்க இது போர்க்களம் அல்ல என்று அவனுக்கு புரியவைக்க முடியவில்லை...

அவனது செயலை வெளியேவும் சொல்ல முடியாத நிலை...

மேனி எல்லாம் அருவருத்து போனது...

அழுதழுதே அவள் களைத்து விட்டாள்.

அவள் இந்த வீட்டிற்கு வந்ததில் இருந்தே சிரித்த கணங்கள் மிக மிக அரிது...

இல்லை இல்லை சிரித்த கணங்களே இல்லை எனலாம்...

மீண்டும் அவள் அறைக்குள் நுழைந்த போது அவன் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டு இருந்தான்... பெண்ணவளுக்கு தான் தூக்கம் எங்கோ தொலைந்து போனது...


"பெண்களுக்கும் ஆசை உண்டு, மோகம் உண்டு, காதல் உண்டு... ஆணாதிக்கம் முன்னே அவற்றை நசுக்கி விடாதீர்கள்... உணர்வுகளை வெளிப்படுத்த மறந்து மரத்து போய் விடுவாள்"
 
அத்தியாயம் 3

வலியுடனான வாழ்க்கை அவளுக்கு... கிட்டத்தட்ட இரு மாதங்கள் கழித்து கேலண்டரைப் பார்த்தாள்...

அவளது மாதவிடாய் நாள் தள்ளி போய் இருந்தது...

கர்ப்பமாக இருக்கின்றோமோ என்று அவளுக்குள் ஒரு ஐயம்...

தனக்கு வாழ்க்கையே அந்தரத்தில் இருக்கும் போது, குழந்தையா? என்று நினைத்தவளுக்கு தன்னை மீறி சந்தோஷப்பட முடியவே இல்லை...

தனது அழுத்தமும் அழுகையும் குழந்தையை பாதித்து விடுமோ என்று பயம் வேறு...

சமைத்து முடித்து விட்டு படுக்கை அறைக்குள் நுழைந்தாள்.

ஜெயராம் அலுவலகம் செல்ல ஆயத்தமாகிக் கொண்டு இருந்தான்...

அறை வாசலில் வந்து நின்றவள், கையை பிசைந்து கொண்டே நிற்க, "என்ன?" என்று கேட்டான் அவளை பார்க்காமலே...

"கர்ப்பமா இருக்கேன்னு நினைக்கிறன்" என்று சொல்ல, சட்டென திரும்பி அவளை பார்த்தவன் இதழ்கள் விரிய, "ஆம்பிளை பிள்ளை தானே பிறக்கும்" என்றான்...

தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு...

ஆணென்ன பெண்ணென்ன அவள் குழந்தை தானே...

பிறக்க முதலே குழந்தை மேல் ஒரு திணிப்பு...

"தெரியல" என்றாள் ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே...

"ஆம்பிளை பிள்ளை தான் பிறக்கணும்" என்றான் அழுத்தமாக...

அது அவள் கையில் இல்லையே... அவளும் என்ன தான் செய்வாள்?

பதில் சொல்லாமலே நின்று இருக்க, "டாக்டர் கிட்ட போய்ட்டு வருவோம், ஈவினிங் ரெடியா இரு" என்றான்...

அவளும், "ம்ம்" என்றாள்.

வெளியே வந்து அவன் தான் விடயத்தை வைதேகியிடம் சொன்னான்...

அவரோ, "ஆம்பிளை பிள்ளையா இருந்திடணும்" என்று சொல்லிக் கொண்டே இறைவனை வேண்ட, கயல்விழிக்கு வெறுத்துப் போய் விட்டது...

"நீங்களும் பெண் தானே" என்று வாய் வரை வார்த்தைகள் வந்தன...

கேட்க தைரியம் இல்லை.

விழுங்கிக் கொண்டாள்.

ஜெயராம் சாப்பிட்டு விட்டு அலுவலகத்துக்கு கிளம்பி விட்டான்...

கயல்விழி கர்ப்பமான போதும் வேலைகள் குறைந்த பாடு இல்லை...

வைதேகிக்கு சோம்பல்... அதனால் எல்லாம் கயல்விழியே செய்ய வேண்டிய கட்டாயம்...

மாலையானதும் அவளை அழைத்துக் கொண்டே டாக்டரிடம் சென்றான்...

அவரும் அவள் கர்ப்பத்தை உறுதி செய்ய அவன் இதழ் எல்லாம் புன்னகை...

தான் ஆண் என்று நிரூபித்த கர்வம்...

ஆண்மை குழந்தை கொடுப்பதில் இல்லை என்று அவனுக்கு புரிந்து கொள்ளும் புத்தி இல்லை...

அலுவலகத்துக்கு கொடுக்க இனிப்புகளை வாங்கிக் கொண்டே, அவளுடன் வீட்டுக்கு கிளம்பி இருந்தான்...

வரும் போது, "டாக்டர் ஆறு மாசம் வரைக்கும் சேர கூடாதுன்னு சொல்லி இருக்கார்ல" என்றான் அவன்...

"ம்ம்" என்றாள்.

அவனிடம் மௌனம்...

அவளை வீட்டில் விட்டவன், வாங்கிய இனிப்புக்களையும் அவள் கையில் கொடுத்து விட்டு கிளம்பி விட்டான்...

அவன் செல்லும் வேகமே, அவன் மதுபானம் குடிக்க தான் செல்கின்றான் என்று அவளுக்கு எடுத்து உரைத்தது...

பெருமூச்சுடன் அவன் வண்டியை சிறிது நேரம் பார்த்து விட்டு வீட்டினுள் நுழைந்து கொண்டாள்.

ஒரு தாய்க்கு வரும் அந்த இயல்பான சந்தோஷம் கூட அவளுக்கு இல்லை...

ஏனோ மனதில் ஒரு அழுத்தம்...

தனது பிறந்த வீட்டிற்கு சொல்லவும் அவளுக்கு தோன்றவில்லை... அவர்கள் அன்று பேசி விட்டு வைத்த பிறகு, அவளுக்கு தாய் தந்தையுடன் பேசவும் பிடிக்கவில்லை... வீட்டினுள் கயல்விழி நுழைந்ததுமே, "உன் அம்மா அப்பாவுக்கு சொல்லலையா நீ? நான் தான் சொன்னேன்" என்றார்...

அவள், "ம்ம்" என்றாள்.

"டாக்டர் என்ன சொன்னார்?" என்று அடுத்த கேள்வி...

"கர்ப்பம் தானாம்" என்றாள்.

"சரி எங்க உன் புருஷன்" என்று கேட்டார்...

"தெரியல, வெளிய போய் இருக்கார்" என்று சொல்ல, "வேற எங்க போக போறான்? பாருக்கு தானே போவான்" என்று சொல்லிக் கொண்டே டி வி யை பார்க்க ஆரம்பித்து விட, அவளோ பெருமூச்சுடன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

சற்று நேரத்தில் ஜெயராமின் பைக் சத்தம் கேட்டது...

வந்து விட்டான் என்று புரிந்தது...

வழக்கமாக யாராவது அவனை கொண்டு வந்து விடுவார்கள்...

அவ்வளவு நிதானம் இல்லாமல் இருப்பான்...

இன்று அவனே ஓடி வந்தான்...

கொஞ்சம் நிதானம் இருந்தது...

வீட்டினுள் நுழைந்ததுமே மது வாசனை குப்பென்று அடித்தது...

கயல்விழி வெளியே செல்லவில்லை, அப்படியே கட்டிலில் சாய்ந்து அமர்ந்து எங்கோ வெறித்தபடி இருந்தாள்.

"ஏய் கயல்" என்று அழைத்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள். அவளோ அவனை ஏறிட்டுப் பார்க்க, அவள் அருகே அமர்ந்தவள், "என்னடி பார்க்கிற? புருஷன் வந்தா வாசலுக்கு வந்து வரவேற்க்கணும்னு தெரியாதா?" என்று கேட்டுக் கொண்டே, அவள் புடவைக்கு மேல் சரியாக வயிற்றில் அவன் கையை வைத்தவன், "என் புள்ள இருக்கான், கவனமா பார்த்துக்கோ" என்றாள்.

குடி போதையில் பேசிக் கொண்டு இருந்தான்...

அவளுக்கு அருவருப்பாக இருந்தது...

ஆனால் அருவருப்பை காட்ட முடியாது...

உடல் மரத்து போய் அமர்ந்து இருந்தாள்.

"என் ராஜா" என்று போதையில் உளறிக் கொண்டே, அவள் வயிற்றில் முத்தமிட்டான்...

அவளோ, "பொண்ணா இருந்தா" என்றாள். அவனோ சட்டென அவளை ஏறிட்டு முறைத்தவன், "சாவடிச்சிடுவேன், உன்னையும் பிறக்க போற சனியனையும்..." என்றான்...

அவளுக்கு கண்கள் கலங்கி விட்டது...

பிறக்க இருக்கும் குழந்தைக்கு என்னவெல்லாம் பேசுகின்றான்...

இவனுக்கு வாயில் என்ன கத்தியா இருக்கிறது என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவே இல்லை...

அவனையே அவள் அதிர்ந்து பார்க்க, அவளை அவன் குடி வெறியில் கண்கள் சொருக பார்த்தவன், "பொட்டய பெத்தா எனகென்னடி மரியாதை... இன்னொரு வீட்டுக்கு போறவ எனக்கெதுக்கு... என்னை போல ஆம்பிள சிங்கமா பெத்து கொடு...பொட்டை கழுதைன்னா சீதனம் சேர்க்கணும்....நான் என்ன ஓட்டாண்டி ஆகணுமா?" என்று கேட்டுக் கொண்டே, அப்படியே சரிந்து படுத்து விட, அவளுக்கு தான் தூக்கம் தொலைந்து போனது...

கர்ப்பமான முதல் நாள் இருந்தே, அவளுக்கு அழுத்தம்...

அவள் வயிற்றில் வளர்வது என்ன குழந்தையாக இருக்கும் என்று அழுத்தம்...

அடுத்த நாள் அவளது தாய் தந்தை வந்தார்கள்...

கடமைக்கு வரவேற்றாள் அவ்வளவு தான்...

அடுத்தடுத்து அவனது இரு அக்கா மார்களும் வந்தார்கள்...

அவர்களுக்கு கையில் பெண் குழந்தைகள் இருந்தன...

"எனக்கென்னவோ பெண் குழந்தையா இருக்கும்னு தோணுது" என்று சொல்லி ஜெயராமின் வாயால் திட்டு வாங்கி விட்டு சென்றார்கள்...

அவள் வயிறும் பெருத்து ஐந்து மாதங்கள் ஆகி விட்டன...

வைத்தியரிடம் சென்ற ஜெயராமோ, "என்னை குழந்தைன்னு சொல்லுங்க டாக்டர்..." என்றான்...

அது சட்டத்துக்கு புறம்பானதே...

வைத்தியர் பதில் சொல்வதற்காக பெரிய தொகையை லஞ்சம் கேட்டார்... சொல்லாமல் இருக்க அவர் கையாண்ட உத்தி என்றும் சொல்லலாம்...

"எனக்கு தெரிஞ்சு கொள்ளவே வேணாம்" என்று சொல்லி விட்டான்...

அவ்வளவு பணம் செலவு செய்யும் நிலையில் அவனும் இல்லை...

ஏழாம் மாதம் ஆகி விட்டது...

அவளை பிரசவத்துக்காக அவள் தாயிடம் அனுப்பி விட்டு குடியுடன் நாளை நகர்த்தினான்...

தாய் வீட்டில் அவளுக்கு சற்று நிம்மதி இருந்தாலும், பிறக்கும் குழந்தை என்ன குழந்தையாக இருக்கும்? என்று யோசித்து யோசித்தே பதறி போனாள்...

நிம்மதியே இல்லாத கர்ப்ப காலம் அவளுக்கு...

அவன் அருகே இல்லை என்றாலும் அவனை நினைத்து பயம்...

இதே சமயம் வைதேகியோ, "இவ பிரசவத்துக்கு போனதும் தான் போனா, நான் தான் எல்லாமே பார்க்க வேண்டி இருக்கு" என்று முணுமுணுத்துக் கொண்டே வேலை செய்ய ஆரம்பித்தார்...

பிரசவ நாளும் கயல்விழிக்கு நெருங்கியது...

தனியாக அறைக்குள் யோசித்துக் கொண்டு இருந்த கயல்விழியை நோக்கி வந்த மாதவியோ அவள் அருகே கட்டிலில் அமர்ந்து கொண்டே, "என்னம்மா யோசிச்சிட்டு இருக்க? நீ வந்ததுல இருந்தே உன் முகம் சரி இல்லையே" என்றார்...

அவளோ அவரை யோசனையுடன் பார்த்தவள், "நான் பொண்ணா பிறந்த நேரம் அப்பா என்ன பண்ணுனார்?" என்று கேட்டாள்.

பெருமூச்சுடன், "உன் அப்பா பரவாயில்லை... ரெண்டு நாள் முகத்தை தூக்கி வச்சு இருந்தார்... அவ்வளவு தான்... ஆனா உன் அப்பாவோட அம்மா, என்னை கரிச்சு கொட்டிட்டே இருந்தாங்க, உனக்கு அப்புறம் கர்ப்பம் ஆனேன்... ஆனா அதுவும் பொண்ணா இருக்குமோன்னு பயந்து பயந்தே என்னோட கரு கலைஞ்சு போச்சு... அதுக்கப்புறம் எனக்கு குழந்தை தங்கவே இல்ல" என்றார்...

"பொண்ணா பிறக்கிறது பாவமாம்மா?" என்று கேட்டாள்.

மாதவிக்கு சுர்ரென்று தைத்தது...

"இல்லம்மா, இந்த சமூகம் பாவமா மாத்தி வச்சு இருக்காங்க" என்று சொல்ல, அவளோ, "எனக்கு பெண் குழந்தை பிறந்தா அவங்க வீட்ல என்ன சொல்வாங்கன்னு பயமா இருக்கும்மா" என்று சொல்லிக் கொண்டே, அவர் கையை பற்றிக் கொண்டாள்.

"பொண்ணா பிறந்தா கொண்டாடுற சமூகம் இல்லம்மா இது... அடுத்த வீட்டுக்கு போற பொண்ணு தானே, அப்படின்னு எல்லாருக்கே இளக்காரம்... ஆனா பெண் இல்லன்னா இந்த உலகமே இல்லன்னு அவங்களுக்கு தெரியாது... கொஞ்சம் அனுசரிச்சு போ... ஏதாவது பேசுனா கண்டுக்காம இருக்க கத்துக்கோ... கோபப்படாதே... புரியுதா" என்றார் மாதவி...

அவளும், "ம்ம்" என்று தலையாட்டினாள்...

அவர் விட்ட அதே தவறை மகளுக்கும் சொல்லிக் கொடுத்தார்...

அனைத்து பெண்களையும் தனக்குள் முடங்க வைக்கும் வார்த்தை, "அனுசரிச்சு போ"

உலகம் எல்லாருக்கும் பொதுவானது...

அனைவரும் சமனானவர்கள்...

ஆணோ பெண்ணோ உலகில் வாழ சம உரிமை உள்ளவர்கள்...

யாரும் யாருக்கும் அடிமை இல்லை...

குழந்தை என்றாலே வரம், இதில் ஆண் என்ன? பெண் என்ன?

இந்த நிதர்சனம் உணராத சமூகத்தில் அகப்பட்டு இருந்தாள் கயல்விழி...

"தேவதைகளுக்கு அடிமையாக கற்றுக் கொடுக்காதீர்கள், சிறகு விரிக்க கற்றுக் கொடுங்கள்... நீங்கள் இழந்த வாழ்க்கையை தேவதைகளும் இழக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை... நீங்கள் வாழாத வாழ்க்கையை அந்த தேவதைகளாவது சந்தோஷமாக வாழட்டும்"
 
அத்தியாயம் 4

நாட்கள் நகர்ந்தன,

கயல்விழிக்கு பிரசவ வலியும் வந்து விட்டது...

வைத்தியசாலையில் சேர்த்து இருந்தார்கள்...

அப்படியே அவள் தந்தை மணிவண்ணனோ ஜெயராமுக்கு விடயத்தை சொல்ல, அவனும் வைத்தியசாலைக்கு வந்து விட்டான்...

அவனுக்கோ பதட்டம்...

கயல்விழி உடல் நிலையை நினைத்து எல்லாம் பதட்டபடவில்லை அவன்...

பெண் குழந்தை பிறந்து விடுமோ என்று பதட்டம்...

பிரசவ அறைக்கு முன்னால், அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தான்...

கயல்விழிக்கும் அதே பதட்டம் தான்... பெண் குழந்தை மேல் அவளுக்கு விருப்பம் இருந்தாலும், ஜெயராம் என்ன செய்வான் என்று பதட்டம்...

பிரசவ வலி வேறு தாங்க முடியவில்லை...

நீண்ட போரட்டத்துக்கு பிறகு குழந்தை பிறந்தது...

குழந்தையை கையில் ஏந்திய பிரசவம் பார்த்த வைத்தியரோ, "பெண் குழந்தைம்மா" என்று சொல்லி, அவள் மார்பில் குழந்தையை வைத்த கணம், அவளுக்கோ உலகம் தலை கீழாக சுழல்வது போன்ற உணர்வு...

உயிருடன் மரித்து விட்டாள்...

உலகம் தலை கீழாக சுழலும் உணர்வு...

பிரசவ வலியை விட, இப்போது மனம் அதிகமாக வலித்தது...

வாய் விட்டு அழுதபடி கையால் குழந்தையை அணைத்துக் கொண்டாள்.

ஆணோ பெண்ணோ அன்னைக்கு எல்லாருமே குழந்தைகள் தான்...

அந்த பக்குவம் சுற்றி இருக்கும் சமூகத்துக்கு இல்லையே...

குழந்தை அவள் மார்பில் படுத்துக் கொண்டே அழுதது...

மீண்டும் குழந்தையை எடுத்த அங்கிருந்த பெண்ணோ, "பாப்பாவுக்கு எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிட்டு கொடுக்கிறோம், பால் கொடும்மா" என்று சொல்லிக் கொண்டே குழந்தையை தூக்கி செல்ல, அவளோ அப்படியே விட்டத்தை வெறித்தபடி படுத்து இருந்தாள்.

சுற்றி இருக்கும் சமூகமோ, 'ஏன் எனக்கு பெண் குழந்தை பிறந்தது?' என்று அவளையும் நினைக்க வைத்து விட்டார்கள்...

இதே சமயம், வெளியே வந்த வைத்தியசாலையில் வேலை செய்யும் பெண்ணோ, "இங்க கயல்விழியோட கணவர் இருக்காங்களா?" என்று கேட்க, ஜெயரமோ, "நான் தான், சொல்லுங்க" என்றபடி அவளை நோக்கி சென்றான்...

அந்த பெண்ணோ, "உங்களுக்கு பெண் குழந்தை பிறந்து இருக்கு" என்று அவள் சொன்னதும் தான் காரணம், அவன் முகம் இறுகி போனது...

"க்கும் போச்சு போ" என்று வைதேகி வேறு சொல்ல, "வாங்க" என்று வைதேகியிடம் சொன்னவன் விறு விறுவென அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான்...

மணிவண்ணன் பதறி விட்டார்.

"மாப்பிள்ளை" என்று சொல்லிக் கொண்டே, அவனை நோக்கி ஓடிச் செல்ல, அவனோ, அவரை முறைத்துப் பார்த்தவன், "பொட்டை புள்ளய பெத்து வச்சு இருக்கா உங்க பொண்ணு, இவள நான் வீட்டுக்கு கூட்டி போக மாட்டேன்... நீங்களாச்சு உங்க பொண்ணாச்சு" என்று சொல்ல, "ஐயோ மாப்பிள்ளை" என்றார் அவர் அவனை மறித்தபடி...

"யோவ் மரியாதை கேட்டுடும்" என்று அவன் ஒற்றை விரல் நீட்டி சொல்ல, அவருக்கோ செருப்பால் அடித்த உணர்வு...

சட்டென்று விலகி நிற்க, அவனோ அங்கிருந்து கிளம்பி விட்டான்...

மணிவண்ணனோ மாதவியை பார்க்க, அவரோ கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே கயல்விழியை பார்க்க உள்ளே சென்றார்...

அவளோ அப்போது தான் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டு இருந்தவளோ வாசலை பார்த்து விட்டு மாதவியை பார்த்தவள், "அவர் எங்க?" என்றாள்.

அவரோ கஷ்டப்பட்டு சிரித்துக் கொண்டே, "பாப்பா பால் ஒழுங்கா குடிக்கிறாளா?" என்று குழந்தையை வருட, "அவர் எங்கம்மா?" என்றாள் மீண்டும்...

அவரோ, "பொண்ணு பிறந்திடுச்சுன்னு பார்க்காம போய்ட்டார்" என்றார்...

அவளிடம் பெருமூச்சு...

"அப்பாடா போய்ட்டாரா?" என்றாள்.

மாதவி அவளை அதிர்ந்து பார்க்க, "குழந்தையை ஏதாவது பண்ணிடுவாரோன்னு பயந்துட்டு இருந்தேன்... பார்க்காம போனது கூட பரவாயில்லை" என்றாள்.

மாதவிக்கு அதிர்ச்சி...

"என்னடி பேசுற" என்றார்...

"என்னம்மா பேச சொல்றீங்க?" என்றாள் அவள்...

அவரோ, "குழந்தையோட அப்பா குழந்தைய பார்க்காம போய் இருக்காருன்னு உனக்கு வருத்தம் இல்லையா?" என்று கேட்க, அவளோ, "என் பொண்ணுக்கு எதுவும் ஆக கூடாதுன்னு நினைப்பு மட்டும் தான் மா இப்போ இருக்கு" என்றாள்.

இப்படி பேசுபவளது ரணம் எப்படி இருக்கும் என்று அவரால் நினைக்காமல் இருக்கவே முடியவில்லை...

சட்டென்று தனது கண்ணீரை துடைத்துக் கொண்டே, "நீ பாப்பாவை பாரு" என்று சொல்லிக் கொண்டே, அருகே அமர்ந்து கொண்டார்...

கயல்விழி குழந்தைக்காக இப்படி பேசினாலும், உள்ளுக்குள் வலித்தது...

சராசரி பெண்ணின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்று வலித்தது...

இந்த திருமணமே அவளுக்கு சாபமோ என்று தோன்றியது...

திருமணத்துக்கு முதல் இருந்த சந்தோஷம் இப்போது வரையும் இல்லை...

குழந்தை பிறந்த சமயமும் இல்லை...

என்ன வாழ்க்கை இது?

கயல்விழி மட்டும் அல்ல, பல பெண்களின் வாழ்க்கையே இப்படி தான்...

மனம் மொத்தமாக மரத்து போய் இருந்தது...

அதனை தொடர்ந்து மணிவண்ணன் குழந்தையை பார்க்க வந்து இருந்தார்...

"மாப்பிள்ளை மனசு மாறிடுவார்மா" என்றார்...

அவளிடம் பதில் இல்லை, ஒரு தலையசைப்பு மட்டுமே...

அதனை தொடர்ந்து வீட்டுக்கு அவளையும் குழந்தையையும் அழைத்து சென்றார்கள்...

அவளுக்கோ வீட்டில் குழந்தையை பார்த்துக் கொள்வதிலேயே நேரம் சென்றது...

ஒரு மாதம் கடந்து இருக்கும், மணிவண்ணனோ, "என்னம்மா மாப்பிள்ளை கூட பேசலையா?" என்று கேட்டார்...

"இல்லப்பா, அவருக்கு தோணுற நேரம் பார்க்க வரட்டும்" என்றாள்.

"ஒரு மாசம் ஆயிடுச்சேம்மா" என்றார்...

பதில் இல்லை அவளிடம்...

"அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க எல்லாம் தப்பா பேசுறாங்க, சொந்த பந்தங்கள் எல்லாம் ஜாடை பேசுறாங்க" என்று சொன்னார்...

அவளோ, "இப்போ என்னப்பா பண்ணனும்?" என்று கேட்க, "மாப்பிள்ளை கிட்ட ஒரு தடவை பேசி பாரும்மா" என்றார்...

அவளுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை...

ஒன்று கணவன் காலில் இல்லை என்றால் தந்தை காலில் தான் அவள் நிற்க வேண்டும்...

சொந்த காலில் நிற்க அவளுக்கு தைரியம் இல்லை...

மணிவண்ணனோ அவளை இப்போது விரட்டுவதில் குறியாக இருக்க, வேறு வழி இல்லாமல் தொலைபேசியை எடுத்து ஜெயராமுக்கு அழைத்தாள்.

அவன் அவள் நம்பரை பார்த்து விட்டு தொலைபேசியை எடுக்கவில்லை...

மீண்டும் அழைத்தாள்...

தொலைபேசியை எடுத்தான்...

"என்னடி?" என்று அதட்டலாக கேட்டான்...

அவளுக்கோ திக்கென்று இருந்தது...

"குழந்தையை பார்க்க வரலையே" என்றாள் நலிந்த குரலில்...

"அந்த சனியனை நான் வேற பார்க்க வரணுமா?" என்றான்...

நெஞ்சில் ஊசியால் குத்திய உணர்வு... அப்படியே திரும்பி குழந்தையை பார்த்தாள்...

"கவிதா" அந்த பச்சை மண்ணின் பெயர்...

சனியன் என்று விழிக்க அவனுக்கு எப்படி தான் மனம் வந்ததோ என்று நினைத்துக் கொண்டே, "நான் என்னங்க பண்ணுறது?" என்று கேட்கும் போதே கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது...

குரல் தழுதழுத்தது...

"பொட்ட புள்ளைய பெத்த உன் கிட்ட எனகென்னடி பேச்சு" என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்...

அவளோ அலைபேசியை வெறித்துப் பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.

அவன் அலைபேசியை வைத்ததுமே, அவன் அருகே இருந்த வைதேகி, "ஜெயராம், இப்படியே அவளை அங்க விட்டு வச்சா ஊரு நம்மள தப்பா பேசும்... எல்லாத்துக்கும் அவ கொடுத்த காணியை வித்து தான் பணம் கொடுக்கணும்... விக்குறதுக்கு இப்போ தான் நேரம் சரியா வந்து இருக்கு, அவ கையெழுத்து வேற வேணும்... அடுத்த புள்ள பையனா பெத்துக்கிட்டா சரி தானே" என்றார்...

அவருக்கோ வேலை எல்லாம் தான் செய்ய வேண்டும் என்கின்ற சலிப்பு...

பணம் என்று சொன்னதுமே ஜெயராம் நிதானமாக யோசிக்க தொடங்கினான்...

ஆம் அவள் சீதனமாக கொடுத்த காணியை இப்போது தான் விலை பேசி முடித்து இருக்கின்றான்...

அவள் கையெழுத்து வேறு அதற்கு வேண்டும்...

நீண்ட நேரம் யோசித்தவன், "சரி அவளை அழைச்சிட்டு வரேன்" என்று சொல்லிக் கொண்டே, ஆட்டோவில் புறப்பட்டான்...

இதே சமயம் கயல்விழியோ, "அவர் ஃபோனை வச்சுட்டார்பா" என்று கலங்கிய விழிகளுடன் சொல்லிக் கொண்டே இருக்கும் போது, அவர்கள் வீட்டின் முன்னே ஆட்டோ சத்தம் கேட்டது...

மணிவண்ணன் எழுந்து சென்று பார்த்தார்...

ஜெயராம் தான் வந்து இருந்தான்...

"நான் சொல்லல, மாப்பிள்ளைக்கு கோபம் குறைஞ்சு வந்துட்டார்" என்று சொல்லிக் கொண்டே, மணிவண்ணன் வாசலுக்கு சென்றவர், "வாங்க மாப்பிள்ளை" என்று அழைக்க, "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே வீட்டினுள் நுழைந்தவன், "சீக்கிரம் வா, வீட்டுக்கு போகலாம்" என்றான்...

அவள் கையில் தான் கவிதா இருந்தாள்.

குழந்தையை அவன் பார்க்கவே இல்லை...

பெண் குழந்தையை பாவம் என்று நினைத்து இருந்தவனுக்கு அப்போது தெரியவில்லை பெண் குழந்தை என்றால் வரம் என்று...

கயல்விழி கையில் இருந்த குழந்தையை வாங்கிய வைதேகியோ, "சீக்கிரம் ரெடியாகும்மா" என்றார்...

அவன் மனது மாறி விடுவாளோ என்கின்ற பதட்டம் அவருக்கு...

கயல்விழியும் வேகமாக உள்ளே சென்று உடைகளை அடுக்கி எடுத்துக் கொண்டே வெளியே வந்தாள்.

அவனோ, "வா" என்று சொல்லிக் கொண்டே, முன்னே செல்ல, அவள் உடைப்பெட்டியை எடுத்துக் கொண்டே அவனை பின் தொடர, மாதவி குழந்தையுடன் பின்னால் சென்றார்...

"கிளம்புறேன்" என்று ஒற்றை வார்த்தையை சொல்லிக் கொண்டே அவன் ஆட்டோவில் ஏறி விட்டான்...

மாதவியிடம் இருந்து குழந்தையை வாங்கியவள், "அப்போ வரேன்மா" என்று கண்ணீருடன் சொல்லிக் கொண்டே ஆட்டோவில் ஏறினாள்...

அவன் இப்போதும் குழந்தையை பார்க்கவே இல்லை...

வீடும் வந்தது...

அவள் குழந்தையுடன் இறங்கிக் கொள்ள, அவனோ ஆட்டோவுக்கு பணத்தை கொடுத்து விட்டு விறு விறுவென உள்ளே செல்ல, அவளுக்கோ உடை பெட்டியை எடுப்பதா இல்லை குழந்தையை தூக்குவதா என்று தெரியவில்லை...

அவள் தடுமாற்றத்தை பார்த்த ஆட்டோக்காரனா, "நானே பெட்டியை தூக்கி வைக்கிறேன்மா" என்று சொல்லிக் கொண்டே,உடைப்பெட்டியை தூக்கிக் கொண்டே வீட்டினுள் வைத்து விட்டு வந்தான்...

குழந்தையுடன் வந்து இருக்கின்றாள்...

ஆரத்தி இல்லை, "வா" என்ற ஒற்றை வரவேற்பு கூட இல்லை...

குழந்தையின் முகத்தை பார்த்தவளோ, "என்ன பாவம் பண்ணி என் வயித்துல பிறந்து இருக்கியா தெரியல" என்று சொல்லிக் கொண்டே, வலது காலை எடுத்து வைத்து படியேறி சென்றாள்.

"தேவதைகளுக்கு சொந்த காலில் நிற்க கற்றுக் கொடுங்கள், நிர்க்கதியாக நிற்கும் போது தனியாக நடக்க முடியாமல் திணறி போவார்கள்... அதனால் பிடிக்காத வாழ்க்கையை வாழ முனைவார்கள்..."
 
Status
Not open for further replies.
Top