கனவு 2
நகரமும் இல்லாமல் கிராமமும் இல்லாத அந்த ஊரில் மிகவும் பாரம்பரியமான குடும்பம் வாழும் அந்த பெரிய வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் வராண்டாவில் கூடியிருந்தனர்.
அங்கிருந்த ஒவ்வொருவரின் முகங்களும் பலவித உணர்ச்சிகளை தங்கியிருந்தன. கோபம், ஆற்றாமை, இயலாமை, கண்ணீர், பரிதவிப்புமாக இருந்தன.
கோபத்துடன் இறுகி நின்ற தன் மகனின் கை பிடித்து கொண்டு கண்ணில் கண்ணீரும் பரிதவிப்புமாக
"கண்ணா போகதடா நீயில்லாமல் அம்மா எப்படி இருப்பேன் கண்ணா. அப்பா உனக்கு நல்லதை தான் சொல்லுவார். அவர் பேச்சை கேட்டுட்டு இங்கேயே இருப்பா. உனக்கு பிடிக்காத எந்த வேலையும் செய்ய வேண்டாம். நீ இங்கேயே அம்மா கூடவே இரு கண்ணா என்று மகனின் கையை பிடித்து கொண்டு கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்தார் அம்மா.
தாயின் கண்ணீரை கண்டும் இளகாமல் இறுக்கத்துடன் நின்ற மகனோ "அம்மா இவ்வளவு பேச்சை கேட்ட பிறகும் நான் இந்த வீட்டில் இருக்கனுமா?... அவ்வளவு ரோசம் இல்லாதவனாக நீங்க என்னை வளர்க்கலை. நான் சொன்ன வார்த்தையை நிறைவேற்றிய பிறகு தான் என் காலடி இந்த வீட்டு வாசற்படியை மிதிக்கும். அப்ப தெரியும் இந்த லட்சுமணன் யார் என்று எல்லோருக்கும்" என்றவனின் பார்வை தன் குடும்பத்தினர் மீது கோபமாக படிந்தது.
அவன் தான் குடும்பம், உறவு எதுவும் வேண்டாம் என் கனவு தான் முக்கியம் என்று சொல்லுறானே அவனை எதுக்கு இப்படி கொஞ்சிட்டு இருக்கிற விடுமா, வெளியே போய் நாலுநாள் சோறு தண்ணி இல்லாமல் இருந்தால் தானாக திரும்பி வந்திடப்போகிறான் என்று பேசிய தந்தையின் பேச்சு லட்மணனுக்கு கோபத்தை அதிகமாக்கியது.
கோபத்துடன் "அப்பா...." என்றான்.
"என்னடா நான் சொன்னதில் என்ன தப்பு இருக்கு படிப்பை முடித்து விட்டு வந்து தொழிலை கவனிக்காமல் சினிமாவில் நடிக்கப்போறேன் என்று சொல்லுகிறாய். நாலுநாள் சினிமா எடுக்கறதை பார்த்ததும் நடிக்க ஆசை வந்திடுச்சா இல்லை நடிக்க வந்த எவளையாவது பிடித்து போய் அவள் பின்னாடி போக நடிக்கனும் என்று கிளம்பறியா?..." என்ற தந்தையின் பேச்சை கேட்டு வந்த அதித கோபத்தில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்ட பூக்குவளையை தூக்கி எறிந்ததில் அது சுவற்றில் பட்டு சில்லுசில்லாக உடைந்தது.
"கண்ணா.. என்ற பல அழைப்புகளுடன் அங்கிருந்தவர்கள் அதிர்வுடன் லட்சுமணனை பார்க்கவும். அவனோ யாரையும் பார்க்காமல் தந்தையை மட்டும் முறைத்து கொண்டு நின்று இருந்தான்.
மகனின் செயலில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அவனை பார்த்துக்கொண்டு இருந்தவர் "சினிமா துறையில் சாதிச்சவங்களை விட தோல்வி அடைந்து சுத்திட்டு வாழ்க்கையை இழந்தவங்க தான் அதிகம். ஆசை மட்டும் இருந்தால் வாய்ப்பு கிடைத்து விடாது அதிர்ஷ்டமும் திறமையும் இருக்கனும். அப்படியே வாய்ப்பு கிடைத்து ஒரு படம் வெற்றி பெற்றாலும் அடுத்த வாய்ப்பு இல்லாமல் சினிமா விட்டு எவ்வளவே பேர் காணாமல் போய் இருக்காங்க. ஒரு சிலர் அடுத்த வாய்ப்புக்காக அலைஞ்சிட்டு இருக்காங்க."
"சினிமாத்துறை ஒரு புதை குழி ஆசையா வரவங்க எல்லோரையும் தனக்குள் புதைத்திடும் திரும்ப வரமுடியாமல் காணாமல் செய்திடும். யாரோ ஒன்று இரண்டு பேர் மேலே வந்திடுவாங்க உனக்கு அந்த தொழில் வேண்டாம்.
ராஜா மாதிரி வாழுறதை விட்டுட்டு வாய்ப்பு கேட்டு ஒவ்வொருத்தன் கையையும் காலையும் பிடிக்கனுமா?... உனக்கு என்ன தலையெழுத்து. நம்ப தொழில் செய்ய பிடிக்கவில்லை என்றால் உனக்கு பிடிச்சமாதிரி வேற தொழில் பண்ணு இந்த சினிமா வேண்டாம்" என்றார் தந்தை.
"அது எப்பவும் நடக்காது அப்பா உங்களுக்கு இருக்கிற அதே வைராக்கியம் எனக்கும் இருக்கு. ஏன்னா நான் உங்க இரத்தம் தானே கண்டிப்பாக நான் சினிமா உலகத்தில் எனக்கென ஒரு பேரை உருவாக்கிட்டுத்தான் இந்த வீட்டுக்கு திரும்ப வருவேன். அதுவரை எனக்கு பின்னாடி இருக்க உங்க பேரையோ உங்க செல்வாக்கையோ நீங்க கொடுத்த படிப்பையோ உங்க பணத்தையோ பயன்படுத்த மாட்டேன்" என்று சபதம் செய்தான் லட்சுமணன்.
"கண்ணா என்னடா இப்படி பேசுற உனக்கு சினிமாவில் நடிக்கனும் என்றால் நடிச்சுக்கோ ஆனால் அதுவரை உனக்கு வேண்டியதை அப்பா செய்வார் வேண்டாம் என்று சொல்லாதடா கண்ணா" என்றார் அன்னை.
"அம்மா... என்னை பார்த்தால் உங்களுக்கு எப்படி தெரிகிறது ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட என்னால் சம்பாதிக்க முடியாது என்று நினைக்கிறீங்களா?...." என்று தாயின் பாசத்தை உணராத தனயன் பேசினான்.
"அய்யோ... கண்ணா நான் அப்படி சொல்லலைடா நீ வேலைக்கு போயிட்டு நடிக்க வாய்ப்பு தேடுறது கஷ்டம் என்று தான் உனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும் வரை உன் செலவுக்கு பணம் அனுப்புறேன் கண்ணா. உனக்கு அப்பா கிட்ட பணம் வாங்க பிடிக்கலை என்றால் உன் தாத்தா எனக்கு கொடுத்தது இருக்கு அந்த பணத்தில் நல்ல வீடா எடுத்து தங்கி சமையலுக்கு ஒரு ஆள் போட்டுக்க கண்ணா. உனக்கு வெளியே சாப்பிட்டால் ஒத்துக்காதுப்பா அதுக்கு தான் அம்மா சொல்லுறேன். இதுக்கு மட்டுமாவது சம்மதம் சொல்லு கண்ணா" என்று கண்ணீர் சிந்திய தாயின் பாசத்தை உணராமல்
"அம்மா என்ன பேசுறீங்க யாருடைய உதவியும் இல்லாமல் என் சொந்தக்காலில் நின்று சாதிக்கனும் என்று சொல்லுறேன், நீங்க பணம் கொடுக்கிறேன் என்று சொல்லுறீங்க. உங்க பையன் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்றால் மற்றவங்க எப்படி நம்புவாங்க. நீங்க பேசுற ஒவ்வொரு வார்த்தையும் எதுக்கும் லாயக்கில்லாதவன் என்று சொல்லுறது மாதிரி இருக்கு" என்றவனை இடைமறித்தார் தாய்.
"அய்யோ கண்ணா.... அம்மா உன்னை போய் அப்படி சொல்வேனா உனக்கு வேலை செய்து பழக்கம் இல்லையே அதனால் தான் அம்மா அப்படி சொன்னேன்" என்று கண்ணீருடன் பேசிக்கொண்டு இருந்தவரை
"போதும் நிறுத்துங்க ஒன்னும் தெரியாது என்று சொல்லி மட்டம் தட்டுற பேச்சை நிறுத்துங்க" என்ற மகனின் கோபக்குரலில் தாய் சட்டென்று வாயை மூடிக் கொண்டார்.
"நான் போறேன் என்னை தேடி யாரும் வரக்கூடாது. நான் எங்கே இருக்கேன் எப்படி இருக்கேன் என்று யாரையும் வேவு பார்க்க அனுப்பாதிங்க". என்று கூறியவன் அங்கிருந்தவர்களை பார்க்காமல் ஏற்கனவே எடுத்து வைத்து இருந்த துணிப்பெட்டியை எடுத்துக்கொண்டு விறுவிறு என வீட்டை விட்டு வெளியேறினான் லட்சுமணன்.
"கண்ணா... கண்ணா.... என்ற பல கண்ணீர் குரல் காதில் விழுந்தபோதும் வெளியேறி சென்று இருந்தான் லட்சுமணன்.
பிறந்ததில் இருந்து கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமல் வசதியாக வளர்ந்தவன் லட்சுமணன். அதுவும் வீட்டின் கடைக்குட்டி அதித பாசத்தில் வளர்ந்தவன். படிப்பை முடித்து வந்து சில மாதங்களாக ஊரைச் சுற்றிக்கொண்டு இருந்தவனின் கண்ணில் பட்டது சினிமா ஷூட்டிங். முதலில் சாதாரணமாக பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு நடிகர்களை கண்டு மக்களின் ஆர்ப்பாட்டம் அவர்களை கொண்டாடுவதையும் கண்டவனுக்கு உற்சாகம் தர தொடர்ந்து நான்கு நாட்கள் அந்த இடத்திலேயே இருந்து பார்த்தவனுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது.
எதை கேட்டாலும் செய்து தரும் குடும்பத்தினரிடம் தன் ஆசை சொன்னதும் நடத்தி வைத்து விடுவார்கள் என்று நினைத்து கூறியவனுக்கு முதல் ஏமாற்றம் அங்கே கிடைத்தது. குடும்பத்தினர் அனைவரும் அதற்கு மறுப்பை தெரிவித்தனர். ஏமாற்றமே அறிந்து இல்லாதவனுக்கு முதல் ஏமாற்றம் அவனுக்குள் கோபத்தை ஏற்படுத்தியது.
தான் ஒன்று கேட்டு இல்லை என்று எப்படி சொல்லுவார்கள் என்ற கோபமும், எப்படியும் தான் கேட்பதை நடத்தித்தான் ஆகவேண்டும் பிடிவாதமும் அவனை ஆட்கொண்டது.
குடும்பத்தினரிடம் இருந்து மறுப்புகள் வர வர அவனுக்கு தான் நினைத்ததை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறி உண்டாக வீட்டினரின் கொஞ்சல் கெஞ்சல் அழுகை எல்லாவற்றையும் தாண்டி பிடிவாதத்துடன் வீட்டை விட்டு வெளியேறி இருந்தான் லட்சுமணன்.
பிள்ளைகள் கேட்கும் முன்பே அனைத்தும் செய்து கொடுக்கும் தந்தைக்கு மகனின் இந்த சினிமா மோகத்தை சுத்தமாக பிடிக்கவில்லை. சிறிது நாளில் மகனுக்கு சினிமாவின் மீது இருக்கும் மோகம் குறைந்து விடும் என்று நினைத்தவருக்கு மகனுக்கு நாளுக்கு நாள் சினிமா மோகம் அதிகரித்தது மிகுந்த கவலை அளித்தது.
தன் மகன் அன்பு, பாசம், உறவு என்ற கூட்டுக்குள் வளர்ந்தவனுக்கு திரைக்கு முன் ஒரு முகமும் திரைக்கு பின் வேறுமாதிரி முகமும் இருக்கும் சினிமா துறையில் நுழைய விடுவது பிடிக்கவில்லை. எது உண்மை முகம் எது போலி முகம் என்று பிரித்து பார்க்க தெரியாத தன் மகனின் குணத்தையும் அவனின் பின் இருக்கும் பணத்தையும் கண்டு எளிதில் அவனை ஏமாற்ற வாப்பிருப்பதால் அவனை தடுத்து இருந்தார் தந்தை.
ஆனால் மகனோ பிடிவாதத்தின் மொத்த உருவமாக மாறி குடும்பத்தினர் அனைவரையும் எதிர்த்து வெளியேறி இருந்தான். மகனின் இந்த அவசரமும் நினைத்ததை முடிக்க வேண்டும் என்ற பிடிவாத குணத்தை கண்ட தந்தை வெளியுலகம் சென்று சில நாட்கள் வாழ்ந்தால் அனுபவ அறிவு மகனை பக்குவப்படுத்தும் என்றே அவனை தடுக்காமல் விட்டிருந்தார்.
வேகநடையுடன் நடந்து கொண்டு இருந்தவனின் மனம் உலைக்களமாக கொதித்தது. எப்படி எல்லாம் பேசுகிறார் இந்த அப்பா. நடிக்க ஆசையா?... இல்லை பெண் மீது ஆசையா?... என்று கேட்கிறாரே.
நான் பெண்கள் பின்னால் சுற்றுபவனா?... என்று நினைத்தவனுக்கு மேலும் மேலும் தந்தையின் மீது கோபம் பெருகியது. அவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து மெயின் ரோடு வந்தது கூட தெரியாமல் கோபத்துடன் நடந்து கொண்டு இருந்தவனை
"சார் எங்க போகனும்?..." என்று கேட்ட குரலில் நினைவுலகம் வந்தவனுக்கு தான் இருக்கும் இடம் புரிய சில வினாடிகள் ஆகின.
"சார் எங்க போகனும் சவாரி வரிங்களா?..." என்று மீண்டும் ஆட்டோக்காரர் கேட்கவும்
"ரயில்வே ஸ்டேஷன் போகனும்" என்று லட்சுமணன் கூறவும்.
"வாங்க சார் மீட்டருக்கு மேல போட்டுக் கொடுங்க சார் நீங்க தான் முதல் சவாரி" என்று ஆட்டோக்காரன் கேட்கவும்
தலையாட்டி ஆட்டோவினுள் ஏறப்போனவனை "தம்பி" என்ற பழகிய குரல் அழைக்கவும் சட்டென்று நின்று திரும்பி பார்த்த போது அவனின் வீட்டில் வேலை செய்யும் நடுத்தர வயது வேலையாள் வேகமாக வந்து கொண்டிருந்தார்.
"ஒரு நிமிஷம்" என்று ஆட்டோ ஓட்டுனரிடம் கூறிவிட்டு வேலையாள் நோக்கி நடந்தான் லட்சுமணன்.
வேலையாள் கையில் இருந்த சிறு பையை லட்சுமணனிடம் கொடுக்கவும் அதை வாங்கி உள்ளே பார்த்தவன் அதில் இரண்டு நூறு ரூபாய் கட்டுகள் இருந்தது.
கேள்வியாக வேலையாளை நோக்கினான் லட்சுமணன்.
வேலையாள் என்ன சொல்வது என்று சற்று திணறியவர் பின் "தம்பி இது என் சம்பளப்பணம் நேற்று தான் ஊருக்கு போகனும் என்று மொத்தமாக வாங்கி வச்சிருந்தேன்" என்றார் தயக்கத்துடன்
"அதை ஏன் என்கிட்ட கொடுக்கிறீங்க?..." என்றான்.
"இல்ல தம்பி வீட்டில் இருந்து நீங்க பணம் எதுவும் எடுத்துட்டு போகலை என்று பெரியம்மா அழுதிட்டு இருந்தாங்க. இப்ப பயணத்திற்கு உங்களுக்கு தேவைப்படும் என்று தான் என் பணத்தை கொடுத்தேன். நீங்க பணம் வந்ததும் திருப்பி கொடுங்க தம்பி" என்றவரின் பார்வை அவனின் முகத்தில் இல்லாமல் தலைகுனிந்து இருந்தது.
அவரின் தலைகுனிவே லட்சுமணனுக்கு வேறு கதையை சொன்னது.
"இந்த பணத்தை எங்கிட்ட கொடுக்க சொல்லி யார் கொடுத்தது?..." என்று லட்சுமணன் கேட்டதும் வேலையாள் திகைத்துப்போனார்.
"அது... தம்பி.." என்று திக்கித்திணறி பேசியவரின் கையில் பணப்பையை திணித்த லட்சுமணன் திரும்பி நடக்க அவனின் முன் வேகமாக வந்த வேலையாள் "தம்பி உங்க மாமா தான் கொடுக்கச்சொன்னார்" என்றதும் லட்சுமணன் முகம் இறுகியது.
"தம்பி இது உங்க குடும்பத்து பணம் இல்லை உங்க மாமாவுடைய பணம் என்று சொல்லச்சொன்னார். அப்புறம் இது கடனாகத்தான் கொடுக்கிறேன் அதனால் திரும்ப வட்டியோட கொடுத்திடனும் என்று சொல்லச்சொன்னார்" என்று வேலையாள் சொன்னதும்
அதுவரை இருந்த இறுக்கம் குறைந்து முகத்தில் மெல்லிய புன்னகை வந்தது லட்சுமணனுக்கு. வேலையாளின் கையில் இருந்த பையை வாங்கியவன் "கண்டிப்பாக வட்டி போட்டு கொடுக்கிறேன் என்று அவர்கிட்ட சொல்லுங்க" என்றவன் ஆட்டோவில் ஏறி அமர்ந்தான்.
ஆட்டோ சத்தத்துடன் கிளம்பி வேகமெடுத்து அங்கிருந்து ரயில் நிலையம் நோக்கி சென்றது.