வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

கனவாகுமோ உந்தன் நினைவுகள் - கதை திரி

Status
Not open for further replies.
கனவு 8


குறுகிய சந்துகள் உள்ள பகுதி என்பதால் ஆட்டோவில் வந்தனர். சிறு சிறு குடிசைகள் அல்லது சிமெண்ட் ஓடுகளினால் ஆன சிறு வீடுகளே பெரும்பாலும் இருந்தன. மாடிவீடுகள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவே இருந்தன. வீட்டுக்குள் இருக்கும் சமையல் அறை குளியல் அறை வீட்டின் முன் பக்கம் தான் இருந்தன.

ஒருபக்கம் விறகு அடுப்பு மண்ணெண்ணெய் ஸ்டவ் சமையல் பாத்திரங்கள் இருக்க மறுபக்கம் சிறு தடுப்புடன் குளியல் அறை பக்கத்தில் துணி துவைக்கும் கல், பிளாஸ்டிக் குடங்கள், பிளாஸ்டிக் கேன்கள் அதில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. வீட்டிற்கு முன் கழிவு நீர் செல்லும் கால்வாய்கள் இல்லாமல் அங்கு இருப்பவர்களே சிறிதாக கால்வாய்கள் வழி செய்திருக்க அதில் கழிவு நீர் ஓடிக்கொண்டு இருந்தது.

அந்த குறுகிய தெருவில் ஆட்டோ வளைந்து நெளிந்து சென்று ஒரு மாடி வீட்டின் முன் நின்றது. இருவரும் இறங்கி பணத்தை கொடுத்துவிட்டு
"வாங்க லட்சுமணன்" என்று சேகர் முன்னே செல்ல அவனின் பின் சென்றவனின் பார்வை அந்த இடத்தைத்தான் சுற்றி பார்த்துக்கொண்டே சென்றது. மாலை வேளை என்பதால் அதிக ஆள்நடமாட்டம் இல்லை. ஒரிருவரே லட்சுமணனை வியப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தன.

அந்த குறுகிய மாடிப்படியில் ஏற்றிச்செல்ல அங்கிருந்த அனைத்து அறைக்கதவுகளும் பூட்டி இருந்தன. கடைசியாக இருந்த கதவின் முன் நின்று சாவியை எடுத்து கதவை திறந்த சேகர் "வாங்க லட்சுமணன்" என்று உள்ளே சென்றான். பின் சென்ற லட்சுமணன் அறை சுற்றி பார்க்கவே தேவையே இல்லை. உள்ளே சென்றதும் எதிர் சுவற்றில் மூன்று அடுக்கு அலமாரி இருந்தது. அதில் மேல் அடுக்கில் பழைய சூட்கேஸ் இருந்தது. அடுத்த அடுக்கில் சில புத்தகங்கள் சில பைல்கள் இருந்தன அடுத்த அடுக்கில் இரண்டு தலையணை இரண்டு போர்வை இருந்தது.

அலமாரிக்கு பக்கத்தில் இரண்டு பழைய பாய்கள் சுருட்டி நிற்க வைத்து இருந்தது. அதற்கு பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் குடம் பிளாஸ்டிக் தட்டு போட்டு மூடியிருக்க அதன் மீது இரண்டு டம்ளர் ஒரு தண்ணீர் சொம்பு சில்வரில் இருந்தன. வலது பக்கம் இருந்த சுவரில் ஹாங்கர் ஒன்றில் சில உடைகள் மாட்டப்பட்டு இருக்க அதன் அருகில் முகம் பார்க்கும் கண்ணாடி சிறிய மர அலமாரியில் வைக்கப்பட்டு இருக்க அதனுடன் சீப்பு, தேங்காய் எண்ணெய் பாட்டில், பவுடர் டப்பா இருந்தது மற்ற சுவர் முழுவதும் சினிமா நடிகர் நடிகைகள் படங்கள் ஒட்டப்பட்டு இருந்தன.

கதவின் அருகில் ஒரு சிறு ஒற்றை கதவு சன்னல் இருந்தது. அங்கு ஒரு குளியல் சேப் டப்பாவும் துணி துவைக்கும் சேப் ஒன்று அதன் கவரிலேயே சுற்றப்பட்டு இருக்க பக்கத்தில் ஓரு பல் விலக்கும் பிரஸ் சிறு டூத் பேஸ்ட்டும் கவரில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது அதன் பக்கத்தில் ஒரு துணி துவைக்க பயன்படுத்தும் பிரஸ் இருந்தது. சன்னலுக்கு கீழே இரண்டு பிளாஸ்டிக் பக்கெட் ஒரு மக்கு இருந்தது. அதுவே அந்த அறையை நிறைத்தது போல் தான் இருந்தது அந்த அளவுக்கு சிறிய அறை ஒருவர் மட்டுமே கைகால்களை விரித்து படுத்தால் சரியாக இருக்கும் இருவர் படுத்தால் கைகால்கள் விரித்து படுக்க முடியாது.

பத்துக்கு எட்டு அளவு இருந்தது அந்த அறை. லட்சுமணனின் முகத்தைத்தான் சேகர் பார்த்துக்கொண்டு இருந்தான்.

லட்சுமணனின் முகம் அந்த அறைக்கண்டு முகச்சுளிப்போ பிடித்தமின்னையையோ காட்டவில்லை. அந்த இடத்தை வியப்புடன் தான் பார்த்தானே தவிர அவன் மனதில் தன் வீட்டையோ தன் அறையையோ ஒப்பிடவில்லை ஏன் அந்த நியாபகம் கூட வரவில்லை. தான் இந்த இடத்தில் பொருந்தி வாழ வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே தோன்றியது.

சேகரை பார்த்து "நல்லா இருக்கு" என்றான் லட்சுமணன்.

சேகர் தான் புரியாமல் "லட்சுமணன்?..." என்றான் கேள்வியாக

அதை கண்ட லட்சுமணன் மெல்லிய புன்னகை செய்து "இடத்தை நல்லா வச்சு இருக்கிங்க அதை சொன்னேன்" என்றான்.

"லட்சுமணன் இந்த சின்ன இடம் உங்களுக்கு பிடிச்சு இருக்கா?... நீங்க எல்லா வசதிகளும் இருக்கும் பெரிய வீட்டில் இருந்து இருப்பிங்க இந்த இடம் பிடிக்காது என்று நினைத்தேன்" என்றான்.

"சேகர் நீங்க நினைப்பது சரிதான் நான் பெரிய வீட்டில் இருந்தவன் தான் அதனால் இந்த இடம் பிடிக்காது என்று இல்லையே. இந்த இடம் கூட இல்லாமல் எவ்வளவு பேர் பிளாட்பாரத்தில் இருப்பதை பார்த்து இருக்கேன் அப்படி பார்த்தால் இந்த இடம் பெரியது தானே" என்றான்.

"லட்சுமணன் நிஜமாகவே நீங்க இப்படி மெச்சூரா இருப்பிங்க என்று நினைக்கவே இல்லை. உங்களை வெளியுலகம் தெரியாமல் பொத்தி பொத்தி வளர்த்து இருக்காங்க. எப்படியாவது திரும்ப உங்க வீட்டுக்கே அனுப்பி வைக்கனும் நினைச்சேன். ஆனால் நீங்க சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல உங்களை மாற்றிக்கொள்ளும் பக்குவம் இருக்கு என்று இப்பத்தான் தெரியுது" என்றான் சேகர்.

"சூழ்நிலைக்கேற்ப மாறும் பச்சோந்தி என்று சொல்லுறீங்களா சேகர்" என்றதும்

"அய்யோ.. அப்படி இல்லை லட்சுமணன் நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை" என்று பதட்டத்துடன் சேகர் சொல்லவும் லட்சுமணன் வாய்விட்டு சிரித்தான்.

சேகர் புரியாமல் பார்க்கவும் அருகில் சென்று அணைத்து விடுவித்தவன் "பச்சோந்தி என்று சொல்லுறது தப்பில்லை சேகர். எல்லோரும் எப்பவுமே ஒரு விஷயத்தில் இருக்கும் பாசிட்டிவ் விசயத்தை விட்டு விட்டு நெகட்டீவை தான் பேசுவாங்க.

பச்சோந்தி இடத்திற்கு ஏற்றார் போல மாறுவதை நாம் நெகட்டிவாக எடுத்துக்கிறோம். ஆனால் அது எதுக்காக அப்படி நிறம் மாறுது தன்னை எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக்க மாறுது. அதனால் எதிர்த்து போராடமுடியாத போது தன்னை தற்காத்து கொள்ளவும் தனக்கான உணவை பெறவும் அப்படி மாறும் திறனை கொண்டு இருக்கு. அதில் இருந்து நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய பாசிட்டிவ் விஷயம் சூழ்நிலைக்கு ஏற்ப நாம் வாழ கத்துக்கனும் என்பதைத்தான்."

"இந்த சூழ்நிலை புதுசு அந்த பதட்டத்தில் வந்த போது உங்களை பார்த்ததும் எல்லாம் பேசினேன். அதனால் என்னை அப்படி நினைத்து இருக்கிங்க. உங்களை பார்த்ததும் என் மனசுக்கு நல்லவர் நமக்கு உதவுவார் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் தான் சட்டென்று என்னை பற்றி சொன்னேன். அந்த இடத்தில் வேறு யாராவது இருந்து இருந்தால் கண்டிப்பாக அப்படி பேசி இருக்கமாட்டேன்."

"எனக்கு இந்த மாதிரி சூழ்நிலையில் வாழ்ந்த அனுபவம் இல்லை என்றாலும் இருக்கும் இடத்திற்கு ஏற்ப எப்படி வாழனும் என்று கேள்வி ஞானம் இருக்கு. என் அம்மா எப்பவும் ராமாயணம் மகாபாரதம் கதைகள் சொல்லிட்டு இருப்பாங்க. அதில் அரசனாக வேண்டிய ராமர் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்ததையும், மகாபாரதத்தில் பாண்டவர்கள் காட்டில் பதிரெண்டு ஆண்டுகளும் நாட்டுக்குள்ள சில காலம் தாங்கள் யார் என்பதை மறைத்து வாழ்ந்தார்கள் என்பதையும் கூறியிருக்காங்க."

"அரச குடும்பத்தில் பிறந்தவர்கள் அந்த காலத்தில் காட்டில் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருப்பாங்க. இப்ப நாம் இருக்கும் நவின காலத்தில் காட்டிற்கே டூர் போயிட்டு வராங்க. இப்ப போய் இவ்வளவு மக்கள் வாழும் இடத்தில் வாழமுடியாதா என்ன?.... ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும் தான் அதை சரி செய்ய எனக்கு உங்க நட்பு கிடைத்து இருக்கே சேகர் நீங்க உதவமாட்டிங்களா?... என்று லட்சுமணன் கேட்டதும்.

சேகர் லட்சுமணனின் கை பிடித்து "கண்டிப்பாக" என்று கூறினான். பேசிக்கொண்டே வெளியில் இருந்த குளியல் அறை கழிவறை காட்டிவிட்டு மீண்டும் அறைக்கு வந்து அங்கு தங்கி இருப்பவர்கள் வீட்டு உரிமையாளர் அந்த ஏரியா மக்கள் எப்படி என்று பேசிக்கொண்டே இருந்தனர்.

இரவாகிய போது வெளியே சென்றவர்கள் ஒவ்வொருவராக லட்சுமணன் வந்ததை அறிந்து யார் என்று விசாரிக்க சேகர் அறைக்கு வந்தனர். லட்சுமணனை பற்றி விசாரித்து விட்டு சிறிது நேரம் இருவரிடமும் பேசிச்சென்றனர்.

லட்சுமணனக்கு சட்டென்று அவர்களிடம் பேசுவது சங்கடமாக இருப்பதை அறிந்த சேகர் பெரும்பாலும் அவனே பேசி வந்தவர்களை அனுப்பினான்.

"எப்படி சேகர் நாம வரும் போது யாரும் இல்லையே எப்படி என்னை பற்றி தெரிந்து வந்து விசாரிக்கறாங்க" என்றான் ஆச்சரியமாக

சேகர் புன்னகையுடன் "இங்க ஒருத்தர் பார்த்தால் கூட இந்த ஏரியா முழுவதும் தெரிந்திடும். நம்ப வரும் போது ஒரிருவர் பார்த்து இருப்பாங்க அதான். இங்க இருக்கவங்க எல்லாரும் நல்லவங்க என்று சொல்ல முடியாது லட்சுமணன் நாம்தான் ஜாக்கிரதையாக இருக்கனும். எல்லார்கிட்டையும் அதிகமாக பேசவும் வேண்டாம் பேசாமலும் இருக்கக்கூடாது. சிலர் பக்கத்தில் கூட போகக்கூடாது அதுபோல ஆட்களும் இங்க இருக்காங்க. எப்பவும் எச்சரிக்கையாக இருக்கறது நல்லது. இதை உங்களை பயமுறுத்த சொல்லலை, சினிமா தவிர வேற வேலைக்கு போகமுடியாதவங்க சிலர் வயிற்று பசிக்காக ரவுடித்தனம் பண்ணுவாங்க. அப்படி பட்டவங்க கிட்ட நம்ப ஒதுங்கி இருக்கனும். சிலர் தவறான வேலைகள் செய்யுறவங்களும் இருக்காங்க அவங்களை பார்த்தாலே நீங்களே கண்டுபிடித்திடுவிங்க. நான் எப்படியும் உங்க கூட தானே இருக்கப்போறேன் எல்லாம் பார்த்துக்கலாம்" என்று கூறியவன் நேரத்தை பார்க்க அது ஓன்பதை நெருங்கி இருந்தது.

"லட்சுமணன் நீங்க இருங்க நான் போய் சூடாக பால் வாங்கிட்டு வரேன். ரொட்டி சாப்பிட்டு பால் குடித்தால் நன்றாக இருக்கும்" என்றவன் அங்கிருந்த தண்ணீர் சொம்பை எடுத்துக்கொண்டு சென்றான் சேகர்.

சேகர் கூறியவற்றை அசை போட்ட லட்சுமணன் சேகரை பார்க்காமல் இருந்து இருந்தால் என்ன நடந்து இருக்கும். ஒன்று புரியாமல் நிற்பதை பார்த்து வேறு யாராவது உதவிக்கு வந்து இருந்தாலும் இப்படி சேகர் போல உதவி இருப்பார்களா?... சேகர் சொன்னது போல் என்னிடம் பணம் இருப்பதை தெரிந்து இருந்தால் திருடி சென்று கூட இருக்கலாம்.

இப்படி ஒரு நல்ல நண்பன் கிடைக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும். மனதில் தாயின் முகம் வந்தது. தன் தாயின் வேண்டுதல் தான் நல்லது நடக்க காரணம் என்று தோன்றியதும் வேகமாக எழுந்தவன் தன் பெட்டியை திறந்து அதில் இருந்த டைரியை எடுத்தான். அம்மா எப்படி இருக்கிங்க உங்க மனசை வருத்தப்படுத்திட்டு வந்திட்டேன் சாரி அம்மா. இங்க எனக்கு ஒரு நல்ல நண்பர் கிடைத்து இருக்கார் அம்மா. நீங்க எனக்காக கடவுள் கிட்ட வேண்டி இருப்பிங்க அதான் எனக்கு நல்ல நண்பர் கிடைத்து இருக்கார். சீக்கிரம் என் ஆசையை நிறைவேற்றி விட்டு உங்களை பார்க்க வரேன்மா. என் சின்ன குட்டியை பத்திரமாக பார்த்துகங்க அம்மா. மிஸ் யூ சின்ன குட்டி என்று எழுதியவன் மீண்டும் பெட்டியில் டைரியை வைத்து மூடியிருந்தான்.
 
கனவு 9



மறுநாள் சோஷியல் மீடியா முழுவதும் டைரக்டர் நாதன் எடுத்து கொண்டு இருக்கும் சரித்திர படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. டைரக்டருக்கும் நடிகருக்கும் இடையே படப்பிடிப்பு தளத்தில் பிரச்சினை ஏற்பட்டு நடிகர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடு திரும்பியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது என்று அனைத்து ஊடகங்களிலும் ஆளாளுக்கு ஒரு காரணங்களை திரித்து பேசிக்கொண்டு இருந்தன.

ஹால் சோபாவில் அமர்ந்து தன் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டு இருந்த ஆருத்ரனை ஆவென பார்த்துக்கொண்டு இருந்தான் ரகுநந்தன்.

"டேய் போதும் குளோஸ் பண்ணு இதுவரை நூறு கொசு ஐம்பது ஈ உள்ள போய் இருக்கு" என்று லேப்டாப்பில் இருந்து கண் எடுக்காமலே புன்னகையுடன் கூறினான் ஆருத்ரன்.

"டேய் என்னடா பண்ண இப்படி ஒரே நாளில் சூட்டிங்கை நிறுத்தி இருக்க என்று கேட்டான் ரகுநந்தன்.

ஆருத்ரனிடம் இருந்து மெல்லிய புன்னகை வந்ததே தவிர பதில் வரவில்லை. எப்படியும் அவன் சொல்ல மாட்டான் என்பது தெரிந்த விஷயம் தானே. அதனால் அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை பற்றி பேசினான் ரகுநந்தன்.

- - - - - - - -


தலையணையில் முகத்தை புதைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் நிரஞ்சனி. இனி இந்த நிம்மதியான உறக்கம் தன் வாழ்க்கையில் கிடைக்க நிறைய போராட்டங்களை கடக்கவேண்டும் என்பதை உணராமல் உறங்கிக்கொண்டு இருந்தாள் நிரஞ்சனி. தந்தையின் கோபக்குரலும் அதனுடன் சேர்த்து பொருட்கள் உடையும் சத்தமும் நிரஞ்சனியின் தூக்கத்தை கலைத்தது. சற்று அதிர்வுடன் எழுந்தமர்ந்தாள் நிரஞ்சனி.

'டாடி வர இன்னும் பத்து நாள் ஆகும் என்று சொல்லி இருந்தாரே அதுக்குள்ள வந்துட்டாரா?... ஏன் இவ்வளவு சத்தமாக கத்திட்டு இருக்கார். எதுவோ உடையும் சத்தமும் கேட்குதே' என்ற எண்ணங்களுடன் எழுந்து குளியல் அறை புகுந்தவள் சில நிமிடங்களில் வெளியே வந்த போது இன்னும் அதிகமாக தந்தையின் குரல் கேட்கவும் வேகமாக அறை விட்டு வெளியேறி மாடியில் இருந்து கீழே பார்த்தவளுக்கு பெரும் அதிர்ச்சியே

ஹாலில் இருந்த அலங்காரப்பொருட்கள் அனைத்தும் சில்லுசில்லாக உடைந்து இருந்தது. மேலும் வேறு எதாவது பொருள் உடைக்க தேடிக்கொண்டு இருந்தார் நாதன்.

வேகமாக கீழே இறங்கிய நிரஞ்சனி உடைந்த பொருட்கள் மீது காலை வைக்காமல் நடந்து தந்தையின் அருகில் சென்றவள் "டாடி..." என்று அழைத்துக்கொண்டே அவரின் கைகளை பிடித்தாள்.

கோபத்துடன் கையை உதறப்போனவர் "டாடி என்னாச்சு?... என்ற நிரஞ்சனியின் குரலில் சட்டென உதறாமல் நிறுத்தியவர் அமைதியாக நின்றார்.

"டாடி என்னாச்சு ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிங்க எதாவது பிராப்ளமா டாடி. ஷூட்டிங் முடிய இன்னும் பத்து நாள் இருக்கு என்று சொன்னீங்களே டாடி. இப்போ சீக்கிரமா வந்துட்டீங்க வேற எதுனா பிராப்ளமா டாடி?... என்ன ஆச்சு சொல்லுங்க?...". என்று கேள்விகளை தொடுத்துக்கொண்டு இருந்த நிரஞ்சனிக்கு பதில் சொல்லாமல் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கண்மூடி தலை சாய்த்துக் கொண்டார் நாதன்.

அவரின் அருகில் அமர்ந்து "டாடி... டாடி..." என்று நிரஞ்சனி அழைக்கவும் கண்களை திறக்காமலே

"அந்த ஹீரோ இன்னும் இருபது கோடி தந்தால்தான் படத்தில் நடிப்பேன் சொல்லிட்டு போயிட்டான் ரஞ்சுமா அதனால் ஷுட்டிங் கேன்சல் ஆயிடுச்சு" என்றார் நாதன்.

"வாட் இருபது கோடியா?... ஏற்கனவே புல் பேமெண்ட் கொடுத்தாச்சு என்று சொல்லி இருந்திங்களே டாடி" என்றாள்.

"ஆமாம் புல் பேமெண்ட் போன மாசமே வாங்கிட்டான். இப்ப திடீர்னு இருபது கோடி கொடுத்தால் தான் மீதி பத்து நாள் நடிப்பேன் சொல்லிட்டான். முக்கியமான கிளைமாக்ஸ் காட்சி என்பதால் பெரிய செட் போட்டு நிறைய துணை நடிகர் நடிகைகள் வச்சு எடுத்திட்டு இருந்தேன் கையில் இருந்த பணம் மொத்தம் செலவு ஆகிடுச்சி. இப்ப வந்து அவன் பணம் கொடுத்தால் தான் நடிப்பேன் சொல்லிட்டு போயிட்டான். உடனே சூட்டிங் ஆரம்பிக்கவில்லை என்றால் அந்த செட்டிங் போட்டது, அந்த இடத்து வாடகை துணை நடிகர்களுக்கு கொடுத்த பணம் எல்லாம் வேஸ்டாக போயிடும்" என்று புலம்பினார் நாதன்.

"இப்ப என்ன பண்ணுறது டாடி?..." என்றாள் கவலையான குரலில் நிரஞ்சனி.

"இப்போதைக்கு இந்த வீடு மட்டும் தான் இருக்கு மற்ற இடங்களை எல்லாம் ஏற்கனவே அடகு வச்சாச்சு. படத்தின் மற்ற வேலைகளை முடிக்க இந்த வீட்டை அடகு வைக்கலாம் என்று இருந்தேன். இப்ப உடனடியாக இந்த வீட்டை அடகு வச்சு அந்த ஹீரோக்கு பணத்தை கொடுத்து படத்தை முடித்து விட்டுத்தான் மற்றதை யோசிக்கனும்" என்ற போது அவரின் போன் ஒலித்தது.

கையில் எடுத்து பார்த்தபோது அவரின் உதவியாளர் பெயர் திரையில் தெரியவும் வேகமாக ஆன் செய்து காதில் வைத்தவர் "என்ன நான் சொன்னது விசாரிச்சியா?..." என்ற அதிகாரக்குரலில் பேசினார்.

அந்த பக்கம் இருந்த அவரின் உதவியாளர் "சார் டைரக்டர் சிவம் சார் ஒரு பைனான்ஸ் நிறுவனம் பெயர் சொன்னார். அவங்க மும்பையில் போமஸ் பைனான்ஸ் நிறுவனம். இப்போது தமிழ் நாட்டில் அவங்க பிசினஸ் ஆரம்பித்து இருக்காங்களாம். அவங்க நம்ப எதிர்பார்க்கும் பணத்தை தறுவாங்க என்று சொல்லி அவங்க போன் நம்பர் அட்ரஸ் கொடுத்து இருக்கார். அவங்க கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கவா சார்?..." என்றான் பவ்யமான குரலில் கேட்டான்.

"அதை வேற என் கிட்ட கேட்கனுமா முதலில் இன்னைக்கே அப்பாயின்மென்ட் கிடைக்குமா என்று கேட்டு வாங்கிட்டு பேசு" என்று கூறி போனை வைத்தார் நாதன்.

"என்னாச்சு டாடி?..." என்றாள்.

"மும்பை பைனான்ஸ் கம்பெனி ஒன்னு புதுசாக இங்க வந்து இருக்காங்களாம் அவங்க நம்ப எதிர்பார்க்கும் பணம் கொடுப்பாங்க என்று சொல்லுறான் அப்பாயின்மென்ட் வாங்க சொல்லியிருக்கேன் இன்றைக்கே அப்பாயின்மென்ட் கிடைத்தால் நாளைக்கு திரும்ப சூட்டிங் ஆரம்பித்து விடலாம்" என்று கவலையான குரலில் சொன்னார் நாதன்.

"தந்தையின் கவலையான குரல் நிரஞ்சனிக்கும் கவலையை கொடுத்தது. தந்தையை திசை திருப்பும் பொருட்டு டாடி காபி குடிச்சிங்களா?...." என்று கேட்டாள்.

அவர் இல்லை என்று தலையாட்டவும் "நான் எடுத்திட்டு வரேன் டாடி" என்று சமையல் அறை நோக்கி சென்ற போது தான் இவ்வளவு நடந்த போதும் தாய் தந்தையின் அருகில் வந்து தடுக்கவும் இல்லை, அவரை சமாதானமும் செய்யவில்லையே என்ற எண்ணங்களுடன் சென்றவளுக்கு சமையலறையில் எப்போதும் போல அமைதியாக சமைத்து கொண்டு இருந்த தாயைக் கண்டாள் நிரஞ்சனி.

இவ்வளவு நாட்கள் தாயின் விலகல் கண்ணில் பட்டாலும் அது கருத்தில் கொண்டு போனது இல்லை நிரஞ்சனி. இதுவரை தந்தையின் சந்தோஷமான நேரங்களில் அவளும் தந்தையும் மட்டுமே கொண்டாடி இருக்கின்றனர். தாயை நிரஞ்சனியும் அழைத்தது இல்லை நாதனும் மனைவியை சந்தோஷ கொண்டாட்டங்களில் பங்கு பெற அழைத்தது இல்லை.

ஆனால் இன்று தந்தையின் கஷ்டமான நேரத்தில் கூட ஒரு ஆறுதல் பேச்சு கூட கொடுக்காமல் எந்த வித கவலையும் இல்லாமல் இருக்கிறாரே என்ற எண்ணம் தோன்றியது. அந்த எண்ணம் நிரஞ்சனிக்கு கோபத்தை கொடுக்க "அம்மா...." என்றாள் கோபமாக

மகளின் கோபக்குரலுக்கு எந்தவித பதட்டமும் இல்லாமல் "என்ன?..." என்றார் பாக்யவதி.

தாயின் அமைதியான குரல் நிரஞ்சனிக்கு மேலும் கோபத்தை கொடுக்க

"என்னவா?... இங்க இவ்வளவு நேரம் நடந்ததை பார்த்திட்டு தானே இருந்திங்க அப்பாவை தடுத்து அமைதி படுத்தி இருக்கலாம் இல்லையா?..." என்று கேட்டாள்.

"நான் பேசினால் அவர் அமைதி ஆகிவிடுவாரா?..." என்ற கேள்வியை கேட்டு விட்டு தன் வேலையை தொடர்ந்தார் பாக்யவதி.

தாயின் பதிலில் இன்னும் கோபம் அதிகமாக தன் கோபத்தை வார்த்தைகளாக தாயின் மனதை கூறு போட்டாள். "இவ்வளவு நாள் அவருடைய பணத்தில் தான் வாழ்ந்திட்டு இருக்கிங்க. இந்த செகுசு வாழ்க்கைக்குத்தானே பிடிக்காத புருஷன் கூட வாழ்ந்திட்டு இருக்கிங்க. இப்ப அந்த பணம் அவர் கிட்ட இல்லை என்று தெரிந்ததும் என்ன செய்யப்போகிறீங்க?..." என்ற கேள்வியை கேட்டவள் பிளாஸ்கில் இருந்த காபியை இரண்டு கப்புகளில் ஊற்றி எடுத்துக்கொண்டு சமையலறையில் இருந்து வெளியேறி இருந்தாள்.

அதுவரை அமைதியாக இருந்த பாக்யவதியின் முகம் மகளின் கேள்வியில் அதிர்ந்து பின் கண்கள் கலங்கி வேகமாக கண்ணீர் கன்னங்களில் உருண்டோடியது. மகள் சொல்லாமல் சொல்லிச்சென்ற வார்த்தையின் வலியை அந்த தாயால் தாங்க முடியாமல் அப்படியே தரையில் அமர்ந்து சத்தம் வராமல் கண்ணீர் விட்டார்.

தாய் இந்த வீட்டில் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்கிறாள், தாயின் குணம் என்ன என்பதை கூட அறியாமல் வளர்ந்து இருக்கும் மகளை நினைத்தும் அவளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற எண்ணமும் சேர்ந்து கொள்ள பாக்யவதியின் கண்ணீர் நீண்ட நேரம் வழிந்து கொண்டிருந்தது.

பத்து மாதம் பல போராட்டங்களை தாண்டி பெற்றெடுத்த தாயை வறுத்தியதை கூட அறியாமல் நாதனுக்கு ஆறுதல் கொடுத்துக்கொண்டு இருந்தாள் நிரஞ்சனி.

- - - - - - -


ஆருத்ரனின் போன் ஒலிக்கவும் யார் என்று பார்த்தவன் ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டான்.

அந்த பக்கம் இருந்து "ஹலோ சார் நான் பைனான்ஸ் மேனேஜர் மகேஷ் பேசுறேன்" என்றான்.

"சொல்லுங்க மகேஷ்" என்றான் ஆருத்ரன்.

"சார் டைரக்டர் நாதன் சாரேட உதவியாளர் உங்க அப்பாயின்மென்ட் கேட்கிறார்" என்றான்.

"எதுக்கு மகேஷ்?...". என்று எதுவும் அறியாதவன் போல கேட்டான். அருகில் அமர்ந்து இருந்த ரகுநந்தன் அண்ணனை பார்த்து உதட்டசைவில் " மகாநடிகன்டா" என்றான்.

அதை பார்த்த ஆருத்ரன் தம்பியை பார்த்து ஒற்றை கண் சிமிட்டினான்.

"சார் நாதன் சாருக்கு பணம் வேண்டுமாம். இன்றைக்கே உங்க அப்பாயின்மென்ட் கிடைக்குமா என்று கேட்குறாங்க" என்றான் மகேஷ்.

"இன்றைக்கா?..." என்று யோசிப்பது போல் சில வினாடிகள் அமைதியாக இருந்து விட்டு "இன்றைக்கும் நாளைக்கும் பிஸி மகேஷ், அதனால் நாளை மறுநாள் காலையில் பதினோரு மணிக்கு அப்பாயின்மென்ட் கொடுங்க" என்று கூறி போனை அனைத்தவன் ரகுநந்தனின் ஏன் என்ற பார்வைக்கு

"எல்லாம் ஈசியாக கிடைத்தால் எப்படி?... கிடைக்குமா?... கிடைக்காதா?... என்று தவிப்போடு காத்திருப்பது எவ்வளவு கொடுமையானது என்று உணர வேண்டாமா?... என்ற போது ஆருத்ரனின் முகம் இறுகியது.

ஆருத்ரனின் பேச்சை கேட்ட ரகுநந்தனின் முகமும் இறுக்கமாகியது.

"நேரில் பார்த்தால் இன்னும் நன்றாக இருக்கும்" என்றான் ரகுநந்தன்.

"பார்க்கலாம்" என்றான் ஆருத்ரன்.

- - - - - - -

உதவியாளனின் போனுக்காக தவிப்புடன் நாதனும் நிரஞ்சனியும் காத்திருந்தனர். போன் வந்ததும் வேகமாக ஆன் செய்து "அப்பாயின்மென்ட் கிடைச்சுதா?... எப்ப வரச்சொன்னாங்க?...." என்றார் நாதன் பரபரப்புடன்

"சார் அவங்க அப்பாயின்மென்ட் நாளை மறுநாள் தான் கிடைத்தது" என்றான் உதவியாளர்.

"ஏன் இன்னைக்கே வாங்க வேண்டியதுதானே?..." என்று கோபமாக கேட்டார் நாதன்.

"சார் அவங்க எடுக்கப்போற படம் பற்றிய டிஸ்கஷனில் இருக்காங்களாம். அதனால் அவங்க இரண்டு நாளுக்கு பிறகு தான் அப்பாயின்மென்ட் கிடைத்து இருக்கு" என்றான்.

"படம் எடுக்கறாங்களா யார்?... என்றார் நாதன்.

"சார் ஆர். ஆர். இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் பேமலி இப்ப புதுசா நவநீதன் புரடக்ஷன்ஸ் என்று மும்பையில் ஆரம்பித்தாங்களே அவங்க பேமலியோடது தான் இந்த பைனான்ஸ் நிறுவனமும்" என்றான் உதவியாளன்.

"ஓஓ... அப்படியா... பெரிய இடம் தான். கண்டிப்பாக பணம் கிடைக்கும் என்று சொன்னாங்களா?.... " என்று கேட்டார் நாதன்.

"சார் அவங்க நேரில் பார்த்து பேசிட்டு தான் சொல்லுவாங்க என்று மேனேஜர் சொன்னார். நாளை மறுநாள் காலை பதினோரு மணிக்கு வரச்சொல்லி இருக்காங்க" என்றான்.

"சரி" என்று போனை அனைத்து வைத்தார் நாதன்.

நிரஞ்சனி, "டாடி என்ன சொன்னாங்க" என்றாள் ஆவலாக

நாதன் அனைத்தையும் நிரஞ்சனி இடம் கூறினார்.

அந்த இரண்டு நாளும் நாதனும் நிரஞ்சனியும் பதட்டமும் தவிப்புமாக நாளை கழித்தனர் என்றால் பாக்யவதி எப்போதும் மகளிடம் பேசும் ஓரிரண்டு வார்த்தைகளும் இல்லாமல் தாணுன்டு தன் வேலை உண்டு என்று அவர்களின் கண் முன் வராமல் ஒதுங்கி இருந்தார்.

 
கனவு 10



புதிய இடம் ஏசி இல்லை மெத்தை இல்லை கொசுக்கடி என்ற காரணத்தால் இரவு முழுவதும் உறங்காமல் இருந்தவன் அதிகாலையில் தான் உறங்கி இருந்தான் லட்சுமணன்.

எளிதாக வார்த்தையில் பழக்கிறேன். நான் என்ன காட்டிலா இருக்கப்போகிறேன், மக்கள் வாழும் பகுதியில் தானே இருக்கப்போகிறேன் என்று எளிதாக சொல்லிவிடலாம். ஆனால் அந்த இடத்தில் வாழும் போது தான் அது எவ்வளவு கடினம் என்பதை ஒரே இரவில் உணர்ந்தான் லட்சுமணன்.

காட்டில் கூட வாழ்வதில் இவ்வளவு கஷ்டம் இருந்து இருக்காது என்று தோன்றியது. அங்கு இயற்கையான காற்றும் கிடைத்து இருக்கும். கொடிய மிருகங்கள் வந்தால் தற்காத்துக் கொள்ள வழிமுறைகள் இருக்கும் அதை பயன்படுத்தி மிருகங்களிடம் இருந்து தப்பி இருக்கலாம். ஆனால் மிருகங்களை விட பல மடங்கு சிறிய கொசுவின் கடியில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள லட்சுமணனால் முடியாது போனது. இரவு படுக்கும் போது கொசுவத்தி சுருள் ஏற்றி வைத்து விட்டு தான் சேகர் படுத்தான்.

படுத்து சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்த சேகர் விரைவில் உறங்கி போனான். ஆனால் லட்சுமணனுக்கு அந்த கொசுவத்தி வாசனை பிடிக்காமல் இருந்தது. மெல்ல சுற்றிக்கொண்டு இருந்த மின் விசிறியில் இருந்து வந்த காற்று அவனுக்கு போதாமல் வேர்த்தது. அது ஒரு பக்கம் என்றால் கொசுவத்தியின் வாசனை அவனை உறங்கவிடவில்லை. சில மணி நேரத்தில் கொசுவத்தி முழுவதும் எரிந்து முடிந்த போது அப்பாடி என்று பெருமூச்சை விட்டவன் தூங்க கண்மூடிய சிறிது நேரத்தில் கொசுக்களின் படையெடுப்புகள் அவனை தூங்க விடவில்லை.

சேகர் தன் கையில் இருந்த போர்வையால் தன்னை முழுமையாக போர்த்திக்கொண்டு உறங்கிப்போனான். ஆனால் லட்சுமணனுக்கு ஏற்கனவே காற்று பற்றாமல் உடல் வேர்த்து போயிருக்க அதில் எங்கிருந்து போர்த்திக் கொண்டு உறங்குவது.

உறங்கும் சேகரை எழுப்பி விடக்கூடாது என்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தவன் மெல்லிய வெளிச்சத்தில் அலமாரியில் இருந்த விசிறியை எடுத்து சத்தம் வராமல் விசிறிக்கொண்டு இருந்தான்.

அதிகாலையில் தான் சற்று குளிர்ந்த காற்று உடலில் படவும் தன்னை அறியாமல் உறங்கிப்போயிருந்தான் லட்சுமணன்.

வேகமாக கதவு தட்டும் ஓசையில் சற்றே புரண்டு படுத்தான். முதலில் எங்கோ கதவு தட்டுவது போல் கேட்க நேரம் சொல்லச்சொல்ல அந்த ஓசை அதிகமாக கேட்கவும் அதிர்ந்து எழுந்தமர்ந்தான். சில வினாடிகள் எங்கு இருக்கிறோம் என்பது தெரியாமல் சுற்றி பார்வை பார்த்ததும் தான் தான் இருக்கும் இடம் தெரிந்தது.

மீண்டும் கதவு தட்டப்படவும் இதோ வரேன் என்று குரல் கொடுத்தும் கதவு தட்டுவது நின்றது. தன் மீது இருந்த போர்வையை விலக்கியவன் அப்போது தான் பக்கத்தில் சேகர் இல்லாததை பார்த்ததும் இரவு சேகர் கூறியது நியாபகம் வந்தது. பால் வாங்கி வரச்சென்ற சேகர் திரும்பிய போது புன்னகையுடன் வந்திருந்தான். "லட்சுமணன் என்னை நாளைக்கு பெரிய டைரக்டர் ஒருத்தர் வரச்சொல்லி இருக்கார். இப்பதான் சண்டை மாஸ்டராக இருக்குற பிரண்ட் ஒருத்தன் சொன்னான். அவன் என்னை பார்க்கத்தான் வந்திட்டு இருந்தான் என்னை ரோட்டில் பார்த்ததும் சொன்னான். இந்த டைரக்டர் மட்டும் அவர் உதவியாளராக சேர்த்திட்டால் நல்லா இருக்கும்" என்று சந்தோஷமாக பேசியவன் பின் "உங்களுக்கு கீழே ஆண்டாள் அக்காகிட்ட காலையிலும் மதியமும் ரூமுக்கே சாப்பாடு கொண்டு வந்து கொடுக்க சொல்லி இருக்கேன். அதனால் நீங்க வெளியே எங்கும் போக வேண்டாம். சாப்பிட்டு மாத்திரை போட்டுட்டு ரெஸ்ட் எடுங்க" என்று கூறி படுத்திருந்தான்.

காலையிலும் லட்சுமணனை எழுப்பி கதவை தாழ் போட்டுக்கொண்டு தூங்குமாறு சொன்ன சேகர் லட்சுமணன் தாழ் போட்ட பிறகே சென்று இருந்தான்.

மெல்ல எழுந்து சோம்பல் முறித்தவன் தன் உடைகளை சரி செய்த பின் கதவின் தாழ்ப்பாளை விலக்கி விட்டு கதவை திறந்தவன் சற்று பிரமித்து போனான்.

ரவிவர்மனின் ஓவியத்தை மிஞ்சும் விதமாக நின்றிருந்தாள் ஒருத்தி. முகத்தில் எங்கும் சிறு ஒப்பனையும் இல்லை ஆனால் அவனுக்கு அவளை பார்த்ததும் ரவிவர்மன் ஓவியத்தை மிஞ்சும் அழகி என்று தோன்றியது. அவன் வாழ்ந்த பணக்கார வட்டத்தில் எப்போதும் நாகரிக உடையும் முகத்தில் அதிகப்படியான மேக்கப் போட்ட பெண்களைத்தான் இதுவரை பார்த்திருக்கிறான்.

சிவந்த நிறம் வட்ட முகம் அடர்ந்த புருவங்கள் நெற்றியில் சிறு பனித்துளிகளாக வேர்த்து இருக்க சிவப்பு நிற பொட்டு சற்று பெரியதாக வைத்து இருந்தாள். எடுப்பான மூக்கில் நட்சத்திரம் வடிவில் நடுவில் ஒரு கல் பதித்த மூக்குத்தி மிளிர்ந்து கொண்டு அவளின் அழகை மேலும் அதிகமாக காட்டியது. இயற்கையாக சிவந்து இருந்த உதடுகள் சற்றே உப்பிய கன்னங்கள் காதுகளில் பிளாஸ்டிக் தொங்கட்டான் அணிந்து இருந்தாள்.

முடியை மொத்தமாக இழுத்து கொண்டை போட்டு இருந்த போதும் சில முடிக்கற்றைகள் அவளின் நெற்றியிலும் காதோரமும் அவளை உரசிக்கொண்டு இருந்தன. முகத்தில் இருந்த பார்வை மெல்ல கழுத்தை நோக்கி கீழிறங்கியது. ஆனால் அவனுக்கு எதுவும் காணக்கிடைக்கவில்லை.

பெரிய காலர் வைத்த ஆண்கள் அணியும் பாலியஸ்டர் சட்டை அணிந்து இருந்தாள். அது அவளின் ஒல்லியான தேகத்தில் தொள தொள என இருந்தது. பச்சை கலரில் சிவப்பு பூ போட்ட காட்டன் பாவாடை அணிந்திருந்தவள் படியில் ஏறும்போது கால் தடுக்காமல் இருக்கும் பொருட்டு ஒரு பக்கமாக பாவாடையை சற்று தூக்கி செருகியிருந்ததால் அதில் அவளின் ஒரு பாதம் பாதியும் மறுபாதம் முழுமையாகவும் தெரிந்தது. பாதத்தில் மெல்லிய கொலுசு ஒன்று அம்சமாக அமர்ந்திருந்தது.

கதவை திறந்த சில வினாடிகள் தன்னை மறந்து பார்த்துக்கொண்டு இருந்தவனின் முகத்துக்கு நேரே கைகள் சொடுக்கிடும் சத்தமும் அதன் கூடவே அவளின் கையசைவிற்கு ஏற்ப குலுங்கிய கண்ணாடி வளையல்களின் ஓசையிலும் சுயம் வந்தவன் பார்வை அவளின் குலுங்கிய வளையல் மீதே இருந்தது.

முழுக்கை சட்டை என்பதால் அவளின் கைகளில் இருந்த வளையல் அவன் பார்த்த போது தெரியவில்லை. இப்போது அவள் கையை தூக்கி சொடக்கிடவும் பெரிதாக இருந்த சட்டைக்கை அவள் கையை தூக்கியதால் கீழிறங்கி அவளின் கையில் அணிந்திருந்த வளையல் அவன் கண்ணில் பட்டது. ஒரு பச்சை வளையல் ஒரு சிகப்பு வளையல் என்று ஆறு வளையல்கள் அணிந்து இருந்தாள். அடுத்த கையில் அதே போல போட்டு இருக்கிறாளா என ஆராய்ந்தவனுக்கு முழுவதும் சட்டை மறைத்து கைவிரல்கள் மட்டும் சில பாத்திரங்களை பிடித்து இருந்தது தெரிந்தது.

மீண்டும் சொடக்கிடும் சத்தமும் வளையல் குலுங்கும் ஓசையும் கூடவே "சார்... சார்...". என்ற இனிமையான குரலும் அவனை கலைத்தது.

"ஆங்... என்ன?..." என்றான்.

"இதை கொஞ்சம் வாங்கிக்கிறிங்களா..." என்றாள்.

"என்ன இது?... யார் நீங்க?...." என்று குழப்பத்துடன் கேட்டான்.

"சார் இதில் டிபன் இருக்கு சேகர் அண்ணன் உங்களுக்கு கொடுக்க சொல்லிட்டு போனார்" என்றாள்.

அப்போது தான் சேகர் சொன்ன ஆண்டாள் அக்கா கொடுப்பாங்க என்றது நியாபகம் வர இவளா ஆண்டாள் அக்கா?... இவளை பார்த்தால் சின்ன பெண்ணாக இருக்கா?... என்ற ஆராய்ச்சியில் மீண்டும் இறங்கி விட

"சார் இதை வாங்கிட்டா நான் போவேன் எனக்கு கடையில் நிறைய வேலை இருக்கு" என்றாள்.

மீண்டும் சுயம் வந்தவன் கையை நீட்ட அதில் உணவு பாத்திரங்களை வைத்தவள் "நான் அப்புறம் பாத்திரங்களை வந்து வாங்கிக்கறேன் சார்" என்றவள் திரும்பி நடக்கவும்

"சேகர் ஆண்டாள் அக்கா தானே எடுத்து வந்து கொடுப்பாங்க என்று சொன்னார் நீங்க?..." என்ற கேள்வியோடு நிறுத்தியவனின் முகத்தில் அவள் யார் என்று அறியும் ஆவல் இருந்தது.

"உங்க ஆண்டாள் அக்காவுக்கு படியேற கஷ்டமாக இருக்கும் என்று அவங்க பெண்ணு ஊர்மிளா எடுத்து வந்து கொடுத்தேன் போதுமா" என்று திரும்பி அவனைப் பார்க்காமல் சொல்லி விட்டு அங்கிருந்து சென்றவளின் முகத்தில் புன்னகை இருந்தது.

பார்க்க அமுல்பேபி மாதிரி இருந்துட்டு எப்படி பார்க்கிறான். இவனுக்கு போய் ஒன்னும் தெரியாது பார்த்துக்குங்க என்று சொல்லிட்டு போறார் அந்த சேகர் அண்ணன் என்று மனதில் நினைத்தவள் துள்ளலுடன் பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டு சென்றாள்.

இங்கே ஒருவன் அவள் போன வழியையே தன்னை மறந்து பார்த்துக்கொண்டு இருந்தான். பறவையின் சத்தத்தில் நினைவு திரும்பியவன் 'டேய் லடசுமணா என்னடா பண்ணிட்டு இருக்க' என்று தன்னையே கேட்டுக்கொண்டவன் 'இது சரியில்லடா நீ எதுக்கு வந்து இருக்கியே அதை மட்டும் பாரு. பெண்ணுங்களையே பார்க்காதவன் போல பார்த்திட்டு இருந்தியே அவள் என்ன நினைத்து இருப்பாள்' என்ற சிந்தனைகளிடையே பல் துலக்கி வந்தவன் பாத்திரங்களை திறந்து பார்த்த போது சூடான இட்லி சட்னி சாம்பார் என்று இருந்தது.

பார்க்கும் போதே நாவில் நீர் சுரக்க வேகமாக இட்லியை பிட்டு சாம்பாரில் புரட்டி வாயில் வைத்தவனுக்கு அதன் சுவையும் பிடித்துப்போக வேகமாக உண்டு முடித்தான்.

வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு இன்று தான் வயிறு நிரம்ப உண்டு இருந்தான். உண்ட மயக்கமும் முந்திய நாள் உறங்காமல் இருந்ததும் சேர்ந்து லட்சுமணுக்கு உறக்கம் வரவே மாத்திரைகளை போட்டுக்கொண்டு படுத்துவிட்டான்.

எவ்வளவு நேரம் உறங்கி இருப்பானோ அதிகமான பேச்சு சத்தம் அவனை தூக்கத்தில் இருந்து எழுப்பியது.

என்ன இவ்வளவு சத்தம் என்று எழுந்து அமர்ந்தவன் காதில் பெண்களின் குரல் அதிகமாக கேட்கவும் என்னவோ என்று எழுந்து அறையை விட்டு வெளியே வந்தவன் மாடியில் இருந்து கீழே பார்க்க அங்கே இரண்டு பெண்கள் கையில் துடைப்பத்துடன் சண்டை போட்டுக்கொண்டு இருந்தனர்.

அந்த இரண்டு பெண்களில் ஒருத்தியாக இருந்தது ஊர்மிளா. அவள் நின்றிருந்த கோலம் லட்சுமணுக்கு சற்று பீதியை கொடுத்தது. கையில் துடைப்பத்தை வைத்து கொண்டு ஆட்டி ஆட்டி அவள் வயதில் இருக்கும் பெண்ணுடன் சண்டை போட்டுக்கொண்டு இருந்தாள். அந்த பெண்ணும் உனக்கு சளைத்தவள் நானில்லை என்று சரிக்கு சரியாக நின்று சண்டை போட்டுக்கொண்டு இருந்தாள்.

அப்படி என்ன தான் சண்டை என்று ஊன்றி கவனித்தான் லடசுமணன்.

"அடியேய் உன் வீட்டு குப்பை எதுக்குடி என் வீட்டுப்பக்கம் தள்ளி விட்ட?...". என்றாள் ஊர்மிளா.

"நான் எங்கடி உன் வீட்டு பக்கம் குப்பையை தள்ளினேன்" என்றாள் அந்த பெண்.

"நீ தள்ளாமல் குப்பை கால் முளைச்சா என் வீட்டு பக்கம் வந்தது" என்றாள் ஊர்மிளா.

"நீ சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் குப்பை காற்றில் பறந்து உன் வீட்டுப்பக்கம் வந்திருக்கு" என்றாள் அந்த பெண்.

"இவ்வளவு பெரிய தெருவில் அது எப்படி காற்று சரியா குப்பையை என் வீட்டு வாசலில் போட்டு இருக்கும் நீதான்டி தள்ளி விட்டு இருப்பாய். காலையில் நான் அழகாக கோலம் போடும்போதே உன் கண்ணு அந்த கோலத்து மேல் தான் இருந்தது. உனக்கு கோலம் போட வரலை என்று என் கோலத்தின் மீது கண்ணுவச்சவ இப்ப அது மேல குப்பையை தள்ளி விட்டு இருக்க" என்றாள் ஊர்மிளா.

அப்படி என்ன கோலம் போட்டு இருக்காள் என்று அவள் வீட்டு வாசற்படியில் பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது. அந்த பெண்ணின் கோலத்தை விட சற்று பெரிதாக இருந்த போதும் ஏதோ சுமாராகத்தான் பூக்கோலம் ஒன்றை போட்டு இருந்தாள். அந்த கோலத்தின் மீது சிறிது குப்பை காற்றில் பறந்து வந்ததாகத்தான் அவனுக்கு தோன்றியது.

இதற்காக இந்த சண்டை சரியான சண்டைக்காரி போல என்று இவன் நினைத்த நேரம் அந்த வழியாக போன இருவர் இவர்கள் சண்டையை பார்த்ததும் நின்று வேடிக்கை பார்க்கத்துக்கொண்டு இருந்தனர். அவர்களை பார்த்து

"இங்க என்ன படமா காட்டிட்டு இருக்காங்க பெரிசு" என்று தன் கையில் இருந்த துடைப்பத்தை நிமிர்த்தி மறுகையால் அதன் அடிப்பகுதியை தட்டி தூக்கி காட்டிக்கொண்டு ஊர்மிளா கேட்கவும் அந்த இருவரும்

"அய்யோ நாங்க இல்லை" என்று பயந்தவர்கள் வேகமாக சென்றனர்.

"அது அந்த பயம் இருக்கனும் வயசு பெண்ணுங்க பார்த்தால் உடனே ஜொள்ளு விட்டுட்டு நின்னுடவேண்டியது" என்றவள் மீண்டும் அந்த பெண்ணிடம் சண்டைக்கு போகவும்

அந்நேரம் நாற்பது வயது இருக்கும் பெண் ஒருவர் கையில் கட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வேகமாக வரவும்

"ஆத்தாடி நானில்லை" என்று அந்த பக்கத்து வீட்டு பெண் ஓடிவிடவும்.

"அம்மா தெருவில் ஒரே குப்பையா இருந்தது அதை பெருக்க வந்தேன்மா" என்றவள் வேகமாக வீதியை பெருக்கினாள் ஊர்மிளா. அவளின் முதுகில் கட்டையால் ஒரு அடி அந்த பெண்மணி கொடுக்கவும்

"அம்மா..." என்று அலறினாள் ஊர்மிளா.

அதை பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது. அந்த பெண்மணி தான் ஆண்டாள் அக்கா அவளின் அம்மா என்று நினைத்தவன் அவர் அவள் முதுகில் அந்த கட்டையால் சும்மா தட்டினார் என்பது அவனுக்கே நன்றாக தெரிந்தது அதற்கு அவள் வலிப்பது போல அலறியது அவனுக்கு சிரிப்பை தந்தது.

"வீட்டுக்குள்ள அவ்வளவு வேலை இருக்கு அதை பார்க்காமல் நட்டநடு மத்தியானத்தில் வீதியை பெருக்குறேன் என்று அவள் கூட வம்பிழுத்திட்டு இருக்கியா" என்று மீண்டும் கட்டையால் அடிக்க இப்போது மீண்டும் அலறியவள்

"அவள் நம்ப வீட்டு பக்கம் குப்பையை தள்ளி விட்டாள் அதை தான் கேட்டுட்டு இருந்தேன் அம்மா. என்னை போய் அடிக்கிறியே" என்று அழுவது போல் பேசியவளை மீண்டும் தன் கையில் இருந்த கட்டையை அவள் அம்மா தூக்கவும்

"அய்யோ... அம்மா...". என்று கத்திக்கொண்டு வீட்டிலினுள் ஓடினாள் ஊர்மிளா.

சரியான சேட்டைக்காரியாக இருப்பாள் போல என்று நினைத்தவன் புன்னகையுடன் அறைக்குள் சென்றான் லட்சுமணன்.


 
கனவு 11



அந்த இரண்டு நாளும் நாதனுக்கும் நிரஞ்சனிக்கும் தவிப்பும் பதட்டமாக மெதுவாக கழிந்தது என்றால் ஆருத்ரனும் ரகுநந்தனும் டைரக்டர் ராஜா உடன் சேர்ந்து படத்தில் நடிக்க மற்ற நடிகர்கள் நடிகைகளை தேர்ந்தெடுப்பதும் படம் எடுக்க மற்ற தொழில் நுட்ப ஆட்களுடன் பேசி தங்கள் படத்திற்கு பொருத்தமானவர்களை தேர்ந்தெடுப்பதிலும் இரண்டு நாள் இரண்டு நிமிடமாக கழிந்தது.

மூன்றாம் நாளும் விடிந்ததும் நாதன் காலையிலேயே ரெடியாகி ஹால் சோபாவில் அமர்ந்து நொடிக்கு ஒருமுறை கடிகாரத்தை பார்த்திருந்தார். நிரஞ்சனியும் அன்று சீக்கிரம் எழுந்து வந்து தந்தைக்கு தாய் போட்டு வைத்திருந்த காப்பியை ஊற்றி எடுத்து வந்து கொடுத்தவள் தானும் அவரின் அருகில் அமர்ந்து காப்பியை குடித்தாள். பின் தந்தையின் கையை பிடித்து

"கண்டிப்பாக அவங்க உங்களை பார்த்ததும் நீங்க யார் தெரிந்து நீங்க கேட்கிற பணத்தை கொடுத்திடுவாங்க டாடி. நீங்க எவ்வளவு பெரிய டைரக்டர் என்று அவங்களுக்கு தெரிந்து இருக்கும். அதனால் கண்டிப்பாக நீங்க கேட்கிற பணத்தை இன்னைக்கே கொடுத்திடுவாங்க டாடி" என்று தந்தைக்கு நம்பிக்கை கொடுத்துக்கொண்டு இருந்தாள்.

இதை எதையும் கண்டு கொள்ளாமல் எப்போதும் போல் பாக்யவதி தன் சமையல் வேலைகளை முடித்தவர் டைனிங் டேபிளில் காலை உணவை எடுத்து வந்து வைத்துக்கொண்டு இருந்தார். அவரை பார்த்து முறைத்துக் கொண்டே தந்தையிடம் பேசிக்கொண்டு இருந்தாள் நிரஞ்சனி.

அதை சட்டை செய்யாமல் அனைத்தையும் எடுத்து வந்து வைத்த பாக்யவதி அவரின் அடுத்த வேலையை செய்ய வீட்டின் பின்புறம் இருக்கும் தோட்டம் பக்கம் சென்றார். அங்கு சென்றதும் அதுவரை சோகத்தை சுமந்து இருந்த அவரின் முகம் புன்னகை பூத்தது. அவரின் செல்ல பிள்ளைகள் பூக்கள் தூவி அவரை வரவேற்றனர்.

அந்த சொல்ல பிள்ளைகளின் அருகில் சென்று அணைத்து முத்தமிட்டவர் "செல்லங்களா அம்மா வந்திட்டேன்" என்றவர் அங்கிருந்த குழாயை திறந்து நீரை பிடித்து பிள்ளைகளுக்கு வலிக்காமல் ஊற்றினார்.

அவரின் அன்பில் திளைத்த அவரின் பிள்ளைகளும் காற்றில் அசைந்தாடி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இந்த வீட்டில் பாக்யவதிக்கு பிடித்த இடம் என்றால் இந்த தோட்டம் தான். பத்து மாதம் சுமந்து பெற்ற தன் பெண்ணிடம் காட்ட முடியாத, பெற முடியாத அன்பை எல்லாம் அவர் வளர்க்கும் மரம், செடி, கொடிகளிடம் காட்டியும் பெற்றும் கொண்டிருக்கிறார். அவரின் பேச்சைக்கூட கேட்க ஆளில்லாத அந்த வீட்டில் அவர் பேசுவது இங்கு தான்.

மனதில் உள்ள சந்தோஷத்தையும் துன்பத்தையும் இந்த செடிகளிடம் மட்டுமே அவர் பகிர்ந்து கொள்வார். அந்த வீட்டில் வாட்ச்மேன் தவிர வேறு எந்த வேலைக்காரர்களும் இல்லை அனைத்து வேலைகளையும் பாக்யவதி ஒருவரே பார்ப்பார். தோட்டத்திலும் வாசனை பூக்கள் தரும் செடி, கொடிகள், பழமரங்கள், காய்கறி செடிகள், கொடிகள் என்று எல்லாமே அவரே வாங்கி வந்து வைத்து பராமரித்து வருகிறார்.

வாட்ச்மேன் உதவிக்கு வந்தாலும் வேண்டாம் என்று மறுத்து அவரே தோட்டத்தை சுத்தம் செய்வது முதல் அனைத்தும் பார்த்துக்கொள்வார். இன்றும் அனைத்திற்கும் தண்ணீர் ஊற்றியவர் வீட்டினுள் சொல்லாமல் அங்கிருந்த மரநிழலில் அமர்ந்து மனதுக்குள் பேசிக்கொண்டு இருந்தார்.

வீட்டிலினுள் தந்தையை வற்புறுத்தி காலை உணவை உண்ண வைத்து கொண்டு இருந்தாள் நிரஞ்சனி. நாதனின் மனமோ இப்போது பணம் கிடைத்தால் தான் படத்தை முடிக்க முடியும். பிறகு மற்ற வேலைகளையும் முடித்து படத்தை வெளியிட்டால் தான் இத்தனை வருடங்கள் சம்பாதித்ததை திரும்ப மீட்க முடியும், இல்லை என்றால் வீதியில் தான் நிற்க வேண்டும் என்ற பயம் மனதில் ஓடிக்கொண்டு இருப்பதால் அவரால் ஒரு வாய் உணவைக்கூட உண்ணமுடியவில்லை.

நிரஞ்சனியின் வற்புறுத்தலால் இரண்டு வாய் உண்டவருக்கு அதற்கு மேல் உண்ணமுடியாமல் கையை கழுவிவிட்டு எழுந்து விட்டார். மீண்டும் சோபாவில் உட்கார்ந்தவருக்கு பழைய நினைவுகள் மனதில் ஓடின.

இந்த கதையை எழுதியவர் அவரே. சில தயாரிப்பாளர்களிடம் கதை சொன்னவர் அந்த கதையை பிரமாண்டமாக முன்னூறு கோடி செலவில் எடுக்க திட்டமிட்டு உள்ளதாக சொன்னதும் அனைத்து தயாரிப்பாளர்களும் பின்வாங்கி விட்டனர்.

அவரால் முன்னுக்கு வந்த தயாரிப்பாளர்கள் கூட அவ்வளவு பணம் இல்லை என்று கைவிரித்து விட்டனர். கடைசியாக தானே படத்தை தயாரிக்கலாம் என்று முடிவு செய்தவர். அதற்கான வேலையில் இறங்கினார். தன் சொத்துக்களை அடகு வைத்து படத்தை எடுக்க ஆரம்பித்தவர் ஒரு வருடத்தில் எடுக்க நினைத்தவருக்கு படம் எடுக்க ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடியவில்லை. அதனால் அவர் திட்டமிட்ட முன்னூறு கோடி பணம் இப்போது ஐந்நூறு கோடியை நெருங்கி இருந்தது.

இந்த படம் எடுத்து முடித்து வெளியிட்டு வெற்றிகரமாக ஓடினால் தான் அவரின் மொத்த சொத்தையும் திரும்ப மீட்க முடியும் இல்லை என்றால் அவரின் வாழ்க்கை ஆரம்பித்த இடத்திலேயே சென்று நின்று விடும். அந்த பயம் அவரை கொஞ்ச நாட்களாக நிம்மதியை இழக்க செய்து இருந்தது.

இன்று அந்த பைனான்ஸ் நிறுவனத்திடம் பேசி எப்படியாவது பணத்தை வாங்கி படத்தை முடித்து சீக்கிரம் வெளியிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எண்ணங்களுடன் நேரத்தை பார்த்துக்கொண்டு இருந்தார்.

மணி எட்டை தாண்டியதும் அதற்கு மேல் அமரமுடியாமல் கிளம்பி விட்டார் நாதன். காரில் சென்று கொண்டிருந்தவர் தன் உதவியாளருக்கு போன் செய்து சீக்கிரம் தங்கள் ஆபிஸ் வருமாறு கட்டளையிட்டார். அவரின் அலுவலகமும் வடபழனியில் இருந்தது. சீக்கிரம் அலுவலகம் வந்தவர் தன் உதவியாளன் வராமல் இருக்கவும் மீண்டும் உதவியாளனுக்கு போன் செய்து திட்டிக்கொண்டு இருந்தார்.

பதினோரு மணிக்கு செல்ல வேண்டியதற்கு காலை ஒன்பது மணிக்கே உதவியாளரை போட்டு வருத்துக் கொண்டு இருந்தார் நாதன். உதவியாளனும் அவசரமாக வந்து சேர்ந்ததும் அப்போதே கிளம்ப வேண்டும் என்று சொன்னவரை என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தான் உதவியாளன்.

பத்து மணிக்கு தான் அந்த பைனான்ஸ் நிறுவனம் திறப்பார்கள் என்று கூறி நாதனை அமரவைக்க படாதபாடு பட்டுப்போனான் உதவியாளன். என்ன பொழப்புடா என்று தன் மனதுக்குள் நொந்து கொண்டான் உதவியாளன்.

மணி பத்தை நெருங்கியதும் கிளம்பிவிட்டார் நாதன் வேறு வழியில்லாமல் உதவியாளனும் கிளம்பினான். ஐந்து நிமிடங்களில் பைனான்ஸ் நிறுவனம் வந்து சேர்ந்து விட்டனர். அப்போது தான் நிறுவனம் திறந்து கொண்டு இருந்தனர் பணியாளர்கள். சிறிது நேரம் காரிலேயே இருந்து விட்டு பின் உள்ளே சென்றனர்.

பணியாளர்கள் அனைவரும் அவர் யார் என்று அறிந்து இருந்ததால் வணக்கம் செலுத்தினர். மேனேஜர் வரவேற்று இன்னும் முதலாளி வரவில்லை அமருங்கள் என்று சொல்லி சென்று தன் பணியை செய்ய ஆரம்பித்து விட்டார். நாதன் தான் தவிப்புடன் அமர்ந்திருந்தார். சிறிது நேரம் பொறுத்தவர் உதவியாளரிடம் எப்போது முதலாளி வருவார் என்று கேட்டு வரச்சொல்ல அவனும் தயக்கத்துடன் மேனேஜர் அறை சென்று கேட்டு வந்தான்.

"சார் மேனேஜர் முதலாளிக்கு நீங்க வந்ததை சொல்லினாராம் அவரும் வரேன் என்று சொல்லி இருக்கார். ஆனால் எப்ப வருவார் என்று சொல்லமுடியாது பட வேலையில் பிஸியாக இருக்கிறார் வருவார் என்று மேனேஜர் சொல்லுறார்" என்று கூறினான்.

ஆனால் அவன் சொன்னதற்கு மாறாக ஆருத்ரனும் ரகுநந்தனும் வந்து தங்கள் அறையில் இருந்த கண்ணாடி வழியாக நாதனின் தவிப்புகளை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் வருவதற்கு தனிப்பட்ட வழி இருப்பதால் அந்த வழியாக ஏற்கனவே வந்திருந்தனர்.

அறையில் இருக்கும் கண்ணாடி உள்ளிருந்து வெளியே பார்க்கலாம் ஆனால் வெளியிலிருந்து பார்த்தால் உள்ளே எதுவும் தெரியாது. அவருக்கு கொடுத்த பதினோரு மணியை தாண்டிய போதும் அவரை அழைக்கவில்லை அண்ணன் தம்பி இருவரும்.

மணி பண்ணிரண்டை நெருங்கிய போது டைரக்டர் ராஜா வந்தார். அவர் வந்ததும் நாதனை கண்டதும் வணக்கம் கூறி அவரிடம் ஓரிரண்டு வார்த்தைகள் பேசிய போது உன்னிடம் எல்லாம் நான் பேசனுமா என்ற திமிருடன் ராஜாவிடம் பேசாமல் இருந்தார் நாதன்.

அதை கண்ட ஆருத்ரன் பல்லைக்கடித்து உன் கொழுப்பை அடக்கிறேன்டா என்றவன் இன்டர்காம் எடுத்து ராஜாவை உள்ளே அனுப்பும்படி பணியாளரிடம் பணித்தான். அந்த பணியாளரும் எழுந்து வரவும் நாதன் தன்னை தான் அழைக்க வருகிறான் என்று அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து எழுந்து கொள்ள வந்த பணியாளன் ராஜாவிடம் பணிவாக "சார் உங்களை வரச்சொன்னார் சார்" என்றான்.

ராஜாவும் எழுந்து சென்றார். நாதனுக்கு அவமானமாக இருந்தது. தான் வந்து இரண்டு மணிநேரத்திற்கு மேல் ஆகியும் தன்னை அழைக்காமல் இப்போது தான் வந்த அவனை அழைக்கிறார்களே தன்னை விட அவன் பெரிய ஆளா எதோ ஒரு பத்து படம் எடுத்து இருப்பானா அவனைப்போய் வந்தவுடன் அழைக்கிறார்களே என்று மனதில் திட்டிக்கொண்டு இருந்தார்.

நாதனின் உதவியாள் "சார் இவர் தான் இவங்க எடுக்குற படத்திற்கு டைரக்டர்" என்றதும் ராஜா மீது இன்னும் கோபம் அதிகமாகியது.

மதிய உணவு நேரம் வந்த போது மேனேஜர் வந்து "சார் லஞ்ச் முடித்து விட்டு வந்திடுங்க சார். உள்ள முக்கியமான டிஸ்கஷனில் இருக்காங்க. அது முடிந்தால் தான் சார் உங்களை கூப்பிடுவாங்க" என்றார்.

ஆனால் நாதன் வெளியே சென்று சாப்பிட்டு வருவதற்குள் அவர்கள் எங்காவது கிளம்பி விட்டால் என்ன செய்வது என்று பசிக்கவில்லை என்று மறுத்து விட்டார்.

நாதனின் உதவியாளன் தான் மனதுக்குள் புலம்பிக்கொண்டு இருந்தான். இந்த ஆளுக்கு பசிக்கவில்லை என்றால் மத்தவங்களுக்கும் பசிக்காதா காலையில் பொண்டாட்டி செய்து வைத்த இட்லியை கூட சாப்பிடவிடாமல் போன் பண்ணி வரவச்சான். இப்ப மதிய சாப்பாடு சாப்பிட முடியாமல் பண்ணிட்டான். முதலில் வேற வேலையை பார்த்திட்டு போகனும். இதுக்கு மேல இவன்கிட்ட எல்லாம் குப்பை கொட்ட முடியாது என்று மனதில் நாதனை வறுத்தெடுத்துக்கொண்டு இருந்தான்.

ஒரு வழியாக மூன்று மணிக்கு அவரை உள்ளே அழைத்தனர். உள்ளே வந்த நாதன் சற்று திகைத்து போனார். எப்படியும் தன் வயது உள்ளவர் தான் முதலாளியாக இருப்பார் என்று வந்தவருக்கு இரண்டு இளைஞர்கள் இருப்பதை கண்டதும் சற்று ஏமாற்றம் தான். இவர்களிடம் பணம் வாங்க முடியுமா என்ற எண்ணம் மனதில் தோன்றியது.

அவர்கள் எதிரில் சென்று கைகுலுக்க கை நீட்டிய போது அண்ணன் தம்பி இருவரும் கை குலுக்கவில்லை. ஆருத்ரன் உட்காரும்படி சைகை செய்தான்.

ஆருத்ரனும் ரகுநந்தனும் அருகருகே அமர்ந்து இருக்க பக்கவாட்டில் ஒரு புறம் மேனேஜர் அமர்ந்து இருந்தார் என்றால் மற்றொரு பக்கம் டைரக்டர் ராஜா அமர்ந்து இருந்தார். ஆருத்ரனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் நாதன் அமர்ந்தார். அவருக்கு அருகில் இருந்த இருக்கையில் நாதனின் உதவியாளனை அமரும்படி சைகை செய்தான் ஆருத்ரன். அவனும் தயக்கத்துடன் அமர்ந்தான்.


மேனேஜர் தான் முதலில் பேசினார். "சார் சொல்லுங்க எவ்வளவு பணம் வேண்டும்" என்றார்.

நாதனுக்கு அவமானமாக இருந்தது. தான் எவ்வளவு பெரிய டைரக்டர் ஒரு சின்ன மரியாதை கூட கொடுக்கவில்லை. இப்போது அவரின் நிலை தாழ்ந்து இருப்பதால் தான் இந்த சின்ன பசங்க கூட மரியாதை கொடுக்கவில்லை. இந்த படம் நல்லா ஓடியதும் முதலில் இவனுங்க பணத்தை கொடுத்திட்டு நான் யார் என்று காட்டுறேன்டா என்று மனதில் கருவியவர் வெளியே புன்னகையுடன் "எனக்கு ஐம்பது கோடி பணம் தேவைப்படுகிறது" என்றார்.

"சார் அமௌன்ட் அதிகமாக இருக்கு அதுக்கு ஈடாக என்ன இருக்கு சார்" என்றார் மேனேஜர்.

தன் கையில் இருந்த வீட்டின் பத்திரங்களை கொடுத்தவர். ஆருத்ரனை பார்த்து "சார் பணம் கொஞ்சம் அவசரமாக தேவைப்படுது. பட சூட்டிங் பாதியில் நிற்குது நீங்கள் பணம் கொடுத்தால் படம் ரிலீஸ் ஆனதும் கொடுத்திட்டுறேன் சார்" என்று பணிவாக பேசினார்.

ஆருத்ரன் அவரை பார்த்தானே தவிர எதுவும் பேசவில்லை.

பத்திரங்களை படித்து பார்த்த மேனேஜர் போனில் சில கணக்குகளை போட்டவர் பின் ஆருத்தனிடம் பேசினார்.

"சார் இந்த இடத்தோட மதிப்பு முப்பதில் இருந்து முப்பத்தைந்து கோடி தான்" என்றார்.

"அப்ப ஒரு இருபத்தி ஐந்து கோடி தான் கொடுக்க முடியும் இல்லையா?..." என்று மேனேஜரிடம் கேட்டான் ஆருத்ரன்.

"ஆமாம் சார்" என்று ஆருத்ரனிடம் சொன்னவர் நாதன் புறம் திரும்பி "சார் இந்த இடத்திற்கு இருபத்தி ஐந்து கோடி தான் கொடுக்க முடியும்" என்றார்.

"சார் எனக்கு ஐம்பது கோடி தேவைப்படுது சார் கொடுத்திங்க என்றால் கண்டிப்பாக உங்க பணத்தை முதலில் திருப்பி தந்துடுவேன் சார். நான் முப்பத்தைந்து வருசத்திற்கு மேலாக இந்த சினிமாத்துறையில் இருக்கேன். கண்டிப்பாக உங்க பணத்தை வட்டியோட திருப்பி தந்திடுறேன் சார் என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு ஐம்பது கோடி தாங்க சார்" என்றார் நாதன்.

"நாங்க இந்த தொழிலை நம்பிக்கையை வச்சிட்டு செய்தால் இன்னேரம் இழுத்து மூடிட்டு நடுத்தெருவில் நின்னு இருப்போம். எங்களுக்கு தேவை நீங்க கேட்கிற பணத்திற்கு ஈடான பொருள் அது இருந்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும் இல்லை என்றால் நீங்க கிளம்பலாம்" என்றான் ஆருத்ரன்.
 
கனவு 12



அறைக்குள் வந்த லட்சுமணன் திரும்ப படுக்கும் எண்ணம் இல்லாமல் சேகரின் பொருட்கள் இருந்த இடத்தில் சில கதை புத்தகங்கள் இருப்பதை கண்டவன் அதை எடுத்துக்கொண்டு கீழே அமர்ந்து புத்தகத்தின் பக்கங்களை புரட்டினான். அந்த நேரம் மெல்லிய கொலுசொலி அவன் காதுகளில் விழவும் அவள் தான் வருகிறாள் என்று மனம் கூறியது.

வாசற்படியில் நிழலாடிய போதும் தலைதூக்கி பார்க்காமல் மும்முரமாக படித்துகொண்டிருப்பது போல் இருந்தான் லட்சுமணன்.

மெல்லிய வளையோசையுடன் கதவு தட்டும் ஒலி அவன் காதுகளில் விழுந்த போதும் தலை நிமிரவில்லை. இப்போது வேகமாக வளையோசையுடன் கதவு தட்டும் ஓசையும் சார் என்று அழைக்கும் குரலும் கேட்கவும் தலைநிமிர்ந்து பார்த்தான் லட்சுமணன்.

அவனை முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள் ஊர்மிளா.

ஐயோ இவள் என்ன இப்படி முறைக்கிறாள் என்று நினைத்தவன் வேகமாக எழுந்தான்.

ஏன் சார் இவ்வளவு பெரிய உருவம் வந்து நிற்பது கூட தெரியாமல் அப்படி என்ன கனவு கண்டுட்டு இருக்கிங்க. வந்து இதை வாங்கிட்டு காலையில் கொடுத்த பாத்திரங்களை கொடுங்க என்றாள்.

அவன் பார்வை காலையில் கொடுத்த பாத்திரங்கள் பக்கம் சென்றது. அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவளின் பார்வையும் அவன் பார்வை சென்ற பக்கம் போனது.

அங்கு காலையில் கொடுத்த பாத்திரம் கழுவாமல் இருப்பதை கண்டவள்.

ஏன் சார் சாப்பிட்ட பாத்திரத்தை கழுவாமல் அப்படியே வச்சு இருக்கிங்க என்றாள்.

எப்படி வாஷ் பண்ணுறது என்று எனக்கு தெரியாதே?... என்றான் கவலையான குரலில் லட்சுமணன்.

அவனை ஆச்சரியமாக பார்த்தவள் அப்போ சேகர் அண்ணன் சொன்னது போல் பணக்கார வீட்டு பையன் தான் போல என்று நினைத்தவள் கையில் எடுத்து வந்த உணவை கீழே வைத்தவள் கழுவாமல் இருந்த பாத்திரங்களை எடுத்தவள்

இன்னைக்கு ஒரு முறை நான் கழுவறதை பாருங்க அப்புறம் நீங்களே சாப்பிட்ட உடன் கழுவி வச்சிடுங்க. கழுவாமல் பாத்திரத்தை எங்கம்மா பார்த்தால் அப்புறம் உங்களுக்கு சாப்பாடே கொடுக்க மாட்டாங்க என்றவள் வெளியே வந்து அங்கிருந்த சேப் கொஞ்சம் எடுத்தவள் பாத்திரத்தை துலக்கி விட்டு கழுவினாள் ஊர்மிளா.

அதை உன்னிப்பாக கவனித்தவன் அவள் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு கிளம்பவும் "ரொம்ப தேங்க்ஸ் ஊர்மிளா" என்றான்.

"என்னது ஊர்மிளாவா?... என்றவள் மனதுக்குள் இவர் என்ன உரிமைப்பட்டவளை கூப்பிடுற மாதிரி கூப்பிடறார் என்று நினைத்தாள்.

"ஆமாம் நீங்க தான் காலையில் உங்க பேர் ஊர்மிளா என்று சொன்னிங்க" என்றான்.

"பேர் சொன்னால் உடனே கூப்பிட்டு விடுவிங்களா?.... என்றாள்.

"கூப்பிடத்தானே பேர் வைப்பாங்க" என்று அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல் பேசினான்.

"அவனிடம் எப்படி சொல்லி விளக்குவது என்று புரியாமல் இருந்தவள் பின் "எங்கம்மா எதிரில் இப்படி என் பெயரை கூப்பிட்டாள் உங்களை அடிக்க விறகு கட்டையை தூக்கிட்டு வருவாங்க" என்றாள்.

"ஏன் பெயர் சொல்லி கூப்பிடுவது தப்பா?... என்று கேட்டான்.

"தப்பு தான் சார் நீங்க வந்து இரண்டு நாள் கூட ஆகலை அதுக்குள்ள இப்படி என் பேர் சொல்லி கூப்பிட்றதை பார்க்குறவங்க தப்பா பேசமாட்டாங்களா?..." என்றாள்.

"இதில் என்ன தப்பு இருக்கு?..." என்று புரியாமல் கேட்டான்.

"முன்னபின்ன தெரியாதவங்களை பெயர் சொல்லி கூப்பிடக்கூடாது" என்றாள்.

"ஏன் உன்னை தான் எனக்கு தெரியுமே?..." என்றான்.

அய்யோ இவருக்கு எப்படி சொல்லி புரியவைப்பது ஜாடையாக சொன்னால் புரியலையே என்று நினைத்தவள் பின் நேரடியாக சொல்லிவிட்டால் நல்லது என்று தோன்றவே

"சார் வயது பெண்ணு பெயர் சொல்லி உரிமையாக அழைக்கனும் என்றாள் அது அவங்க அப்பா அம்மா அண்ணன் தம்பி இப்படி ரொம்ப நெருக்கமானவங்கதான் பேர் சொல்லி கூப்பிடனும் வெளி ஆட்கள் எல்லாம் தங்கச்சி இல்லைனா வாம்மா, வாங்க என்று மரியாதையாக கூப்பிடனும் இப்படி எல்லார் எதிரிலும் வயசு பெண்ணை ஒரு வயசுப்பையன் பேர் சொல்லி கூப்பிட்டால் எல்லாரும் தப்பாக பேசுவாங்க" என்றாள்.

அப்போதும் அவனுக்கு சரியாக புரியவில்லை தான் இருந்தும் சரி என்று தலையாட்டினான். அவன் பழகிய மேல் தட்டு வர்க்கத்தில் தங்களை விட பெரியவர்களை கூட பெயர் சொல்லி அழைப்பதோடு இல்லாமல் செல்ல பேர் வைத்து கூப்பிடக்கூட செய்வார்கள்.

ஆனால் இவள் என்னை விட சின்ன பெண் இவளை பேர் சொல்லி கூப்பிட்டது தப்பு என்று சொல்லுறாளே என்ற சிந்தனையிலேயே இருந்தவன் மாலை சேகர் வந்த உடன்

"பெண்களை பேர் சொல்லி கூப்பிடக்கூடாதா சேகர்?..." என்று கேட்டான்.

லட்சுமணனின் கேள்வியே அது யார் என்று புரிந்து விட "ஆண்டாள் அக்கா பெண்ணை பேர் சொல்லி கூப்பிட்டிங்களா" என்றான்.

லட்சுமணன் ஆமாம் என்றதும்

"பெண்ணுங்க பெயர் சொல்லி அழைப்பது தப்பில்லை தான் ஆனால் ஆண்டாள் அக்காவுக்கு அது பிடிக்காது. அந்த அக்கா கிராமத்தில் இருந்து வந்தவங்க அங்கெல்லாம் எல்லோரையும் மரியாதையாக கூப்பிடுவாங்க."

"ஆனால் இங்க இருக்கிறவங்க ரொம்ப உரிமை மீறல் செய்வாங்க. வயசு பெண்ணுங்களை முறை வச்சு பேசுவாங்க சிலர் வாடி போடி என்று கூட பேசுவாங்க. அதெல்லாம் அந்த அக்காவுக்கு பிடிக்காது. அதனால் தன் பெண்ணை யாரும் அப்படி கூப்பிடக்கூடாது என்பதால் தன் பெண்ணை ஆண்கள் பெயர் சொல்லி கூப்பிட்டாலே சண்டைக்கு போய்விடுவார்கள்."

"யாராவது உறவு முறை வைத்து பேசினாலும் பிடிக்காது. அவங்களுக்கு இந்த இடத்தில் இருக்கவே பிடிக்காது. அவங்க கணவருக்கு கொடுத்த வாக்குக்காக தான் இங்க இருக்காங்க"என்றான்

லட்சுமணன் கேள்வியாக நோக்கவும்

"ஆண்டாள் அக்கா கிராமத்தில் கொஞ்சம் வசதியான குடும்பத்தில் பிறந்தவங்க. அவங்க ஊருக்கு கிராமத்து படம் எடுக்க சினிமாக்காரர்கள் போய் இருக்காங்க. அதில் ஒருத்தர் தான் சண்டை பயிற்சியாளரா இருந்த மாணிக்கம். அவரை பார்த்ததும் ஆண்டாள் அக்காக்கு பிடிச்சு போயிருக்கு மாணிக்கத்திற்கு அதே போல தான்.

இரண்டு பேரும் யாருக்கும் தெரியாமல் சினிமா சூட்டிங் இல்லாத நேரத்தில் மாந்தோப்பில் சந்தித்து காதலை வளர்த்து இருக்காங்க. படவேலை முடிந்து கிளம்பும் போது அவரை பிரியமுடியாமல் தன்னுடனே யாருக்கும் தெரியாமல் கூட்டிட்டு வந்திட்டார் மாணிக்கம்.

இங்க வந்ததும் நண்பர்கள் உதவியுடன் கல்யாணம் பண்ணிகிட்டாங்க. அப்புறம் இங்க வந்த ஆண்டாள் அக்காவுக்கு இந்த இடம் பேச்சு எதுவும் பிடிக்கலை. கணவர் கிட்ட வேற இடத்திற்கு போகலாம் என்று சொல்லி இருக்காங்க. மாணிக்கம் எப்படியோ பேசி சமாதானம் பண்ணி இங்கேயே நல்லா வாழ்ந்து இருக்காங்க."

"இங்க இருக்கறவங்க யார் கூடவும் பழகாமல் இருந்து இருக்காங்க. அப்புறம் கொஞ்ச நாளில் கன்சீவ் ஆகியிருக்காங்க அப்ப முடியாமல் இருந்த சமயத்தில் அக்கம் பக்கத்தில் உள்ள சில பெண்கள் வந்து உதவி இருக்காங்க அப்புறம் தான் கொஞ்சம் கொஞ்சமாக இங்க இருக்கவங்க கூட பழகி இருக்காங்க."

"அதுவும் பார்த்து தான் பழகி இருக்காங்க. அந்த சமயத்தில் அவங்க அப்பா, அண்ணன் இன்னும் சில சொந்தக்காரர்கள் எல்லாம் தேடி வந்து எங்கிட்ட சொல்லி இருந்தால் கல்யாணம் பண்ணி அங்கேயே மாப்பிள்ளைக்கு தொழில் அமைச்சு கொடுத்து இருப்போமே என்று சொல்லி இப்பவும் கிளம்பி வாங்க என்று கூப்பிட்டு இருக்காங்க."

"மாணிக்கம் பேசும் முன்னே ஆண்டாள் அக்கா வேண்டாம் அது என் புருஷனுக்கு மரியாதை இல்லை. நாங்க இங்கேயே இருக்கோம். உங்களுக்கு பார்க்க வேண்டும் என்றால் இங்க வந்து இரண்டு நாள் தங்கி பார்த்துட்டு போங்க என்று சொல்லி அனுப்பிட்டாங்க."

"பிரசவத்திற்கு வந்து கூப்பிட்ட போதும் பேகலை. குழந்தை பிறந்ததும் அவங்க அம்மா அப்பா வந்து தங்கினாங்க. இந்த இடத்தில் இருக்க முடியாமல் பத்து நாள் இருந்திட்டு மகளை ஊருக்கு கூப்பிட்டு இருக்காங்க அப்பவும் போகலையாம்."

"அதுக்கு பிறகு அக்கம் பக்கத்தினர் உதவியோட மகளை அவங்களே பார்த்துக்கிட்டாங்க. மாணிக்கம் பெரும்பாலும் சூட்டிங் போயிடுவதால் மகளும் அவங்களும் தனியாக இருக்கும் போது சில ஆண்கள் வந்து உதவி வேண்டுமா அண்ணன் இல்லாத சமயத்தில் என்னை பார்த்துக்க சொன்னார் என்று வந்திருக்கானுங்க"

"முதலிலேயே அவங்க நோக்கம் என்ன என்று தெரிந்ததால் அமைதியாக இருந்தால் இன்னும் அதிகமாக உரிமை எடுப்பார்கள் என்று நினைத்தவர். அப்படி வந்த சிலரை அடித்து துரத்தி இருக்கிறார். அதில் இருந்து தவறான நோக்கத்தில் யாரும் அவரை நெருங்கியது இல்லை."

"பெரும்பாலானவர்கள் அவரிடம் ஒதுங்கி சொல்ல சிலர் மட்டுமே நட்புடன் பழகினர். மகளுக்கு எட்டு வயது ஆகிய போது மாணிக்கத்திற்கு படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு முதுகெலும்பில் அடிபட்டு படுத்த படுக்கையாகிவிட்டார். படக்குழு அவருக்கு நஷ்ட ஈடு கொடுத்து இருக்காங்க. அதை வைத்து வைத்தியம் பார்த்தும் அவரை சரி செய்யமுடியலை. படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை ஆகிவிட்டது."

"அப்போதும் ஆண்டாள் அக்காவை ஊருக்கு வந்துவிடுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று அவங்க பெற்றோரும் கூடப்பிறந்தவங்களும் அழைத்து இருக்காங்க. இந்த நிலைமையில் சென்றால் மரியாதை இருக்காது என்று நினைத்து மறுத்து விட்டார்."

"பிறகு கணவரை பார்த்துக்கொண்டே வருமானத்திற்காக இந்த இட்லி கடையை ஆரம்பித்து இருக்காங்க. மகளையும் நல்லபடியாக வளர்த்து பதிரெண்டாம் வகுப்பு வரை படிக்க வச்சிருக்காங்க. போன வருஷம் தான் உடல்நிலை மோசமாகி மாணிக்கம் இறந்தார்."

"அவர் இறந்த பிறகும் அவங்க ஊருக்கு போகலை கணவரின் கடைசி ஆசை மகளை ஹீரோயின் ஆக்கனும் என்பது தான். ஆண்டாள் அக்காவிற்கு மகளை நடிக்க வைப்பதில் விருப்பம் இல்லை என்றாலும் கணவரின் ஆசையை நிறைவேற்றனும் என்று ஒரு வருஷமாக வாய்ப்பு கேட்டு போயிட்டு இருக்காங்க."

"வாய்ப்புகள் வருது ஆனால் அதுக்கு முன்னாடி எல்லோரும் முன் வைப்பது அட்ஜஸ்ட்மென்ட்க்கு சம்மதம் என்றால் ஓகே என்கிறார்கள்" என்று சேகர் கூறியதும்

"அட்ஜஸ்ட்மென்ட்டா புரியலையே சேகர்?... " என்று கேட்டான் லட்சுமணன்.

"அது வந்து..." என்று தயங்கிய சேகர் பின் "அவங்க படுக்கைக்கு கூப்பிட்டாலும் ஓகே சொல்லனும்" என்றதும் லட்சுமணனின் முகம் கோபத்தில் சிவந்தது. கை நரம்புகள் புடைத்தன.

"யாரது இப்படி எல்லாம் கேட்டது" என்றான் கோபத்துடன்.

சேகருக்கு லட்சுமணனின் கோபம் ஆச்சரியத்தை கொடுத்தது.

"இங்க நிறைய பேர் இப்படி தான் லட்சுமணன். வெளியுலகிற்கு நல்லவங்களா காட்டிப்பாங்க. உள்ளே போனால் எல்லாம் சாக்கடைகள் தான்."

"அதனால் தான் ஆண்டாள் அக்கா மகளை பொத்தி பொத்தி வச்சிட்டு இருக்காங்க. இன்னும் ஒரு வருடம் பார்த்துட்டு நல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அவர்கள் ஊருக்கே போய் நல்ல பையனாக பார்த்து கல்யாணம் முடிக்கனும் என்று சொல்லிவிட்டு இருக்காங்க."

"அவங்க அப்பா இவர் மேல் சொத்து கொஞ்சம் எழுதி வச்சு இருக்காராம் அதனால் அங்கே போயிடனும் என்று சொன்னாங்க."

"நான் இங்க வந்த புதிதில் அவங்களை அக்கா என்று அழைத்த போது மறுத்தாங்க. இரண்டு வருடம் என்னையும் என் நடத்தையும் பார்த்த பிறகு தான் என்னை அக்கா என்று அவங்களை கூப்பிடச்சொன்னாங்க."

"அவங்க கணவரை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போகும் போது நானும் அவங்க கேட்காமலே உதவிகள் செய்வேன். அந்த சமயத்தில் தான் அவங்க மனதில் இருப்பதை எல்லாம் என்கிட்ட சொல்லுவாங்க."

"இங்க இருக்கிறவங்க எல்லாம் அவங்க கம்பீரமான முகத்தைத்தான் பார்த்து இருப்பாங்க. ஆனால் அவங்க மனசுக்குள்ள இருக்கும் வேதனையை இதுவரைக்கும் யாரிடமும் சொன்னதில்லை என்னிடம் மட்டும் தான் சொல்லி இருக்காங்க."

"என்னை ஒரு தம்பியா நினைச்சு தான் எல்லாத்தையும் சொன்னாங்க. இப்ப அவங்க கவலை எல்லாம் நல்ல இடத்தில் மகளை திருமண‌ம் செ‌ய்து வைத்து வாழறதை பார்க்கனும் என்பது தான். மகளை கழுகுகள் கூட்டத்திடம் இருந்து காப்பாற்றிட்டு இருக்காங்க."

" உங்களுக்கு சாப்பாடு கூட அவங்க பெண்ணு கிட்ட கொடுத்து இருக்காங்க என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கு. அப்படி எல்லாம் இங்க அனுப்ப மாட்டாங்க. இங்க தங்கியிருக்க பசங்கள் சிலர் பார்க்கும் பார்வையே சரியில்லை. அதனால் இங்க அனுப்பவே மாட்டாங்க. அவங்க எல்லாம் இல்லை என்று தெரிந்த பின் தான் கொடுத்து இருப்பாங்க என்று நினைக்கிறேன். அதுவும் நான் உங்களை பற்றி சொன்ன விஷயம் தான் அவங்க பெண்ணை அனுப்பி இருக்காங்க" என்றான் சேகர்.

"என்னை பற்றி என்ன சொன்னீங்க சேகர்?..." என்றான் ஆர்வமாக லட்சுமணன்.

உங்க குணத்தை பற்றி சொன்னேன் என்று அவன் ஆண்டாள் அக்காவிடம் பேசியதை கூறியவன் வாங்க எவ்வளவு நேரம் இங்கேயே இருப்பிங்க வெளியே போயிட்டு வரலாம்" என்று சேகர் அழைக்கவும் லட்சுமணன் கிளம்பினான்.
 
கனவு 13



"நாங்க இந்த தொழிலை நம்பிக்கையை வச்சிட்டு செய்தால் இன்னேரம் இழுத்து மூடிட்டு நடுத்தெருவில் நின்னு இருப்போம். எங்களுக்கு தேவை நீங்க கேட்கிற பணத்திற்கு ஈடான பொருள் அது இருந்தால் உங்களுக்கு பணம் கிடைக்கும் இல்லை என்றால் நீங்க கிளம்பலாம்". என்ற ஆருத்ரனின் பேச்சைக் கேட்டதும் நாதனுக்கு விதிர்விதிர்த்து போனது இங்கே பணம் கிடைக்காமல் போனால் தன் நிலை என்னவாகும் என்று நினைத்தவர்.

"சார் தப்பாக நினைக்காதீங்க என் நிலைமை அப்படி இருக்கிறதால் உங்க உதவி கிடைத்தால் மீண்டும் விடுவேன் அதனால் தான் அப்படி கேட்டேன் சார். இந்த ஒரு சொத்து தவிர இப்போதைக்கு வேற இல்லை சார் கொஞ்சம் நீங்க மனசு வச்சா நான் இந்த படத்தை முடித்து வெளிவந்தால் என் பிரச்சனை எல்லாம் தீர்ந்து விடும் உங்க பணமும் கொடுத்திடுவேன்" என்று கெஞ்சுவது போல் பேசினார்.

ஆருத்ரனும் ரகுநந்தனும் அவரின் கெஞ்சல் பேச்சை கேட்டு மனதிற்குள் சந்தோஷப்பட்டார்கள் என்றால் வெளியே இறுக்கமான முகத்துடன் இருந்தனர்.

நாதனின் பேச்சை கேட்ட ராஜாவிற்கு என்ன தோன்றியதோ ஆருத்ரனை பார்த்து "சார் எனக்கு ஒரு ஐடியா தோன்றுது அது உங்களுக்கு ஓகேவா பாருங்க. அப்ப நம்ப பிரச்சனையும் தீர்ந்து விடும் சார் பிரச்சனையும் தீர்ந்து விடும்" என்றார்.

நாதனும் ராஜா சொல்வது புரியாமல் இவன் என்ன சொல்கிறான் என்று பார்த்தார்.

"என்ன ஐடியா சொல்லுங்கள் சார்" என்றான் ஆருத்ரன்.

"சார் நம்ப படத்திற்கு ஹீரோயின் தேடிட்டு இருக்கோம் இல்லையா அந்த கேரக்டருக்கு சாரோட பெண் செட் ஆவாங்க என்று தோன்றுது. அப்படி அவங்க செட் ஆனால் நாம் அக்ரீமெண்ட் போட்டு அவங்களை நம்ப படத்தில் மட்டும் சார் பணம் தரும் வரைக்கும் நடிக்க வைத்துக் கொள்ளலாம்" என்றார்.

"சாருக்கு பெண் இருக்கா?..." என்று கேள்வியாக ராஜாவை நோக்கினான் ஆருத்ரன்.

ராஜாவின் பேச்சை கேட்ட நாதன் தனக்கு பணம் வர ஒரு வழி கிடைத்ததாக நினைத்தவர் ஆருத்ரன் ராஜாவிடம் கேட்ட கேள்விக்கு இவர் பதில் தந்தார்.

"ஆமாம் சார் என் பெண்ணுக்கு சினிமாவில் நடிக்க ரொம்ப ஆசை சார்" என்றார் நாதன்.

"நம்ப படத்தில் நடிக்க வைத்தால் கூட புதுமுக நடிகைக்கு சில லட்சங்கள் கொடுக்கறதே பெரிசு நீங்க கோடிகள் கொடுக்க சொல்லுறீங்களே சார்" என்று ராஜாவிடம் கேட்டான் ஆருத்ரன்.

"சார் இந்த ஒரு படத்திற்கு நான் சொல்லலை குறிபிட்ட வருஷங்கள் உங்க படங்கள் மட்டுமே நடிக்கனும் வேற தயாரிப்பில் நடிக்கக்கூடாது. அப்ப நீங்க எடுக்குற பெரும்பாலான படங்களில் அவங்களை நடிக்க வைக்கலாம்" என்றார் ராஜா.

"அந்த அளவுக்கு நடிப்பு வருமா?... அவங்களுக்கு என்று கேள்வி கேட்டான் ஆருத்ரன்.

"அவங்க உடம்பில் ஓடும் ரத்தம் சினிமாவை நேசிக்கறவங்க ரத்தம் சார் அவங்க அம்மாவும் நடிகை தான். அதனால் நடிக்கும் திறமை அவங்க ரத்தத்தில் கண்டிப்பாக இருக்கும்" என்றார் ராஜா.

"ஓ.. அப்படியா அப்ப நாளைக்கு அவங்களை வரச்சொல்லுங்க பார்த்திட்டு சில ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்த பிறகு முடிவு பண்ணலாம்" என்றான் ஆருத்ரன்.

நாதனுக்கு இப்போது என்ன பேசுவது என்று தெரியவில்லை. எதாவது பேசினால் பணம் இல்லை என்று சொல்லி விடுவார்களோ என்ற பயம் இருக்கவே அமைதியாக இருந்தார்.

"சார் நாளைக்கு உங்க பெண்ணை நவநீதன் ஸ்டுடியோவிற்கு அனுப்பி வைங்க" என்றார் ராஜா.

ஆருத்ரன் எழுந்து கொள்ள அவனுடன் ரகுநந்தனும் ராஜாவும் எழுந்து வெளியே சென்று விட்டனர். நாதன் தான் அப்படியே அமர்ந்து இருந்தார். பைனான்ஸ் நிறுவனத்தின் மேனேஜர் "சார்..." என்றதும் நினைவு வந்தவராக அங்கிருந்து எழுந்தவர் மேனேஜரிடம் "நாளைக்கு எப்ப வரனும்?..." என்று கேட்டார்.

"இப்ப சார் எதுவும் சொல்லலை, உங்க பெண்ணை நாளைக்கு பார்த்திட்டு அவங்க படத்திற்கு ஓகே என்றால் உங்களை மீட் பண்ணுறதை பத்தி சொல்லுவார். நான் உங்களுக்கு கால் பண்ணுறேன் சார்" என்றார் மேனேஜர்.

சரி என்று தலையாட்டியவர் கவலையான முகத்துடன் அங்கிருந்து வெளியேறினார். உதவியாளருக்கு நாதனை பார்க்க பரிதாபமாகத்தான் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமா துறையில் முக்கிய இடத்தில் இருந்தவர். இன்று யார் யாரிடமோ கையேந்திக்கொண்டு இருக்கிறார். இந்த சரித்திரப்படம் ஆரம்பித்த நேரம் அவரை பாதாளத்தில் தள்ளி விட்டது என்று எண்ணிக்கொண்டு அவர் பின் சென்றான்.

வீட்டுக்கு வந்தவரை ஆவலாக எதிர் நோக்கினாள் நிரஞ்சனி. அவர் முகமே பணம் கிடைக்கவில்லை என்று தெரிந்ததும் அவளின் முகமும் சோகத்தை தத்தெடுத்தது.

உள்ளே வந்து சோர்வாக அமர்ந்தவருக்கு வேகமாக தண்ணீர் எடுத்து வந்து தந்தாள். அவர் முழுபாட்டிலில் உள்ள தண்ணீரையும் குடித்து முடித்த பிறகே பாட்டிலை கீழே வைத்தார்.

"டாடி என்னாச்சு?..." என்று அருகில் அமர்ந்து அவரின் கைபிடித்து கேட்டாள்.

"ச்சு.." என்று உச்சு கொட்டியவர் சோபாவில் கண்மூடி சாய்ந்தவர் சில நிமிடத்திற்கு பிறகு "நம்ப எதிர்பார்க்கிற அமௌன்ட் கிடைக்குமா என்று தெரியலை ரஞ்சிமா" என்றார் கவலையான குரலில்.

"ஏன் டாடி நீங்க யாரு என்று தெரிந்துமா கொடுக்கலை" என்று கேட்டாள்.

"அவனுங்க மும்பைக்காரனுங்க மரியாதை கூட கொடுக்கத் தெரியலை ரொம்ப திமிர் பிடித்தவனாக இருக்கானுங்க. இந்த இடத்தின் மதிப்புக்கு ஏற்ற பணம் தான் தரமுடியும் என்று சொல்லிட்டான். அதுவும் முகத்தில் அடித்த மாதிரி அதிகமாக பணம் கேட்டால் பணம் கிடைக்காது வெளியே போக சொல்லிட்டான்" அவன் என்றதும்

"டாடி... " என்று அதிர்ந்தாள் நிரஞ்சனி. "என்ன சொல்லுறீங்க டாடி உங்களை இன்சல்ட் பண்ணாங்களா டாடி?..." என்றவளின் மனதில் அவனை பார்க்காமலே அவன் மீது கோபம் வந்திருந்தது. என் டாடியை அவன் எப்படி இன்சல்ட் பண்ணலாம் என்று முகமறியா அவன் மீது கோபத்தை வளர்த்தாள் நிரஞ்சனி.

"ஆமாம் ரஞ்சிமா அப்புறம் எப்படியோ பேசி சமாதானம் செய்தேன். அப்பவும் இருபத்தி ஐந்து கோடி தான் தருவேன் என்று சொல்லிட்டான்" என்றார்.

"மிச்ச பணத்திற்கு என்ன பண்ணுறது டாடி?..." என்று வருந்தினாள்.

"அந்த ராஜா தான் ஒரு வழி சொல்லி இருக்கான் அது ஓகே ஆனால் இன்னும் பணம் கிடைக்கும்" என்றார்.

"யார் டாடி ராஜா?... என்று கேட்டாள்.

"அதான் அந்த டைரக்டர் ராஜா" என்று நாதன் கூறியதும் சமையல் அறையில் வேலை செய்து கொண்டு இருந்த பாக்யவதியின் கைகள் அப்படியே சில வினாடிகள் நின்றன. அவரின் கண்கள் கலங்கின, மேலும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தவர்களின் பேச்சை இப்போது உன்னிப்பாக கவனித்தார் பாக்யவதி.

"ஓ... அவரா டாடி அவர் எப்படி அங்க வந்தார்" என்றாள்.

"அவனுங்க எடுக்குற படத்திற்கு அவன் தான் டைரக்டராம், அவனும் அங்க வந்து பேசிட்டு இருந்தான். அவன் தான் இப்ப எடுக்கப்போற படத்திற்கு ஹீரோயின் தேடிட்டு இருக்கோம் உங்க பெண்ணை நடிக்க வைக்கலாம் என்று சொன்னான்."

"டாடி என்ன சொல்லுறீங்க நான் அவங்க படத்தில் நடிப்பதற்கும் உங்களுக்கு பணம் தருவதற்கும் என்ன சம்மந்தம்?... என்று கேட்டாள்.

"சம்மந்தம் இருக்கு ரஞ்சிமா அவங்க இந்த படத்தில் மட்டும் இல்லாமல் அடுத்தடுத்து எடுக்கும் படத்திற்கும் நீயே ஹீரோயினாக நடிக்கனும், சில வருஷத்திற்கு அவங்க படத்தில் மட்டும் நடிக்கும் படி அக்ரீமெண்ட் போட்டு பணம் கொடுக்கிற மாதிரி சொல்லி இருக்காங்க" என்றார்.

"டாடி அப்ப உங்க படத்தில் நடிக்க முடியாதே" என்றாள் நிரஞ்சனி.

"நம்ப பணம் திருப்பி கொடுத்திட்டால் அக்ரீமெண்ட் கேன்சல் ஆயிடும். நீ ஒரு படத்தில் மட்டும் தான் நடிக்க வேண்டியது இருக்கும். என் படம் ரிலீஸ் ஆகிட்டால் அவங்க கிட்ட வாங்குன பணத்தை திருப்பி கொடுத்திட்டு அக்ரீமெண்ட் கேன்சல் பண்ணிடலாம் ரஞ்சிமா" என்றார் நாதன்.

சமையல் அறையில் இருந்து வெளியே வந்த பாக்யவதி "என் மகள் நடிக்க சம்மதிக்க மாட்டேன். அவள் சினிமாவில் நடிக்க மாட்டாள்" என்றார்.

"அம்மா நடிக்க முடியுமா?... முடியாதா?... என்று நான் தான் முடிவு எடுக்கனும் நீங்க இல்லை. டாடி இப்படி கஷ்டப்பட்டுட்டு இருக்கும் போது உங்களால் எப்படி இப்படி பேச முடியுது. கொஞ்சம் கூட உங்களுக்கு அன்பு பாசம் எதுவும் இல்லை நீங்க மட்டும் நல்லா இருந்தால் போதும் என்று நினைக்கும் சுயநலவாதி, உங்களை மாதிரி என்னால் இருக்க முடியாது. என்னால் டாடிக்கு உதவமுடியுதே என்று சந்தோஷப்பட்டுட்டு இருக்கேன். கண்டிப்பாக நான் சினிமாவில் நடிப்பேன்" என்றாள் நிரஞ்சனி.

"வேண்டாம் நிரஞ்சனி சினிமாவில் நடிக்க வேண்டாம்" என்றார் பாக்யவதி.

நிரஞ்சனி தனக்காக பேசியதை கேட்டவர் பாக்யவதியை பார்த்து எள்ளல் புன்னகை சிந்தினார் நாதன்.

அதை கண்ட பாக்யவதி மனம் மகளை நினைத்து வேதனை அடைந்தது. இந்த இக்கட்டில் இருந்து என் மகளை காப்பாற்று கடவுளே என்று வேண்டியவருக்கு ஒரே ஒரு ஆறுதல் டைரக்டர் ராஜா தான். அவர் தன் மகளை பார்த்துக்கொள்வார் என்று நம்பிக்கை இருந்தது.

ஆனால் அந்த டைரக்டருக்கு மேல் ஒருத்தன் இருப்பதும் அவன் தன் மகளை குத்தி கிழிக்க வெறியுடன் கட்டம் கட்டி காத்து இருப்பதும் அந்த தாய்க்கு தெரியாமல் போனது.

மறுநாள் எப்போது விடியும் என்று காத்திருந்தவர்கள் விடிந்ததும் கிளம்பி விட்டனர். பாக்யவதி தடுத்தும் நிரஞ்சனி கேட்கவில்லை நாதனுடன் கிளம்பி சென்று இருந்தாள்.

தன் ஆபிஸிற்கு அழைத்து சென்ற நாதன் அவர்கள் சொல்லும் படி செய்து எப்படியாவது அவர்கள் பணம் தரும்படி செய்து விடு என்று திரும்பத் திரும்ப நிரஞ்சனியிடம் கூறினார்.

ராஜா சொன்ன ஸ்டுடியோவிற்கு நிரஞ்சனியுடன் நாதன் சொல்லாமல் உதவியாளருடன் அனுப்பி வைத்து விட்டு பைனான்ஸ் மேனேஜரின் போனுக்காக காத்திருந்தார் நாதன்.

புதிதாக உருவாகிக்கொண்டு இருந்த நவநீதன் ஸ்டுடியோவிற்கு தான் நிரஞ்சனியை வரச்சொல்லி இருந்தனர்.

நிரஞ்சனியின் வரவிற்காக ஆருத்ரனும் ரகுநந்தனும் காத்திருந்தனர். காரில் வந்து இறங்கியதை அவனின் முன் இருந்த லேப்டாப்பில் பார்த்துக்கொண்டு இருந்த ஆருத்ரனின் முகம் இறுகியது.

அறைக்கு வெளியே நின்று கதவை தட்டிய நாதனின் உதவியாளன் ரகுநந்தன் உள்ளே வருமாறு அழைத்ததும் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் நிரஞ்சனி. முட்டிக்கு மேல் இறுகிய மிடியும் கையில்லாத சிறிய டாப்ஸ் அணிந்து இருந்தவளின் முகத்தில் எப்போதும் இருக்கும் மேக்கப்பை விட அதிகமாக இருந்தது. தலைமுடி விரித்து விட்டிருந்தவள் உள்ளே நுழையும் போது ஸ்டைலாக தலையை கோதிக்கொண்டே ஹைஹீல்ஸ் சத்தம் எழுப்ப நடந்து வந்தவளின் பார்வையில் முதலில் பட்டது ரகுநந்தன் தான்.

இவள் அவனைப்பார்த்ததும் ஹாய் என்றான். நிரஞ்சனியும் ஹாய் என்று கூறி புன்னகை செய்தாள். பின் தான் அங்கு அமர்ந்து இருந்த ஆருத்ரனை பார்த்தாள். அவனை பார்த்ததும் தந்தை சொன்னது இவனைத்தான் என்று தோன்றியது. பார்க்கும் முன்பே அவன் மேல் கோபத்துடன் இருந்தவள் இப்போது நேரில் பார்த்ததும் அவனை பிடிக்காமல் போனது அடர்ந்த மீசை தாடியுடன் இறுகிய தோற்றத்தில் இருந்தவனின் மீது வெறுப்பு தான் உண்டானது.

வெறுப்பை வெளிக்காட்டாமல் புன்னகையுடன் ஆருத்ரனை பார்த்து "ஹாய்..." என்றாள். அவன் பதிலுக்கு எதுவும் பேசாமல் அமைதியாக அவளையே இறுகிய முகத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.

இவன் என்ன இப்படி பார்க்கிறான் என்று நினைத்தவள் அங்கிருந்த இருக்கையில் உட்காருவதா வேண்டாமா என்று தெரியவில்லையே என்று சிந்தித்தவள் ரகுநந்தனை பார்த்தாள்.

அவனோ இப்போது தான் பரீட்சைக்கு படிப்பது போல அவன் முன் இருந்த பைலை பார்த்துக்கொண்டு இருந்தான். என்ன செய்வது என்று புரியாமல் நின்று இருந்தாள் நிரஞ்சனி. வேறு சமயமாக இருந்திருந்தால் தைரியமாக அவர்கள் அனுமதி இல்லாமல் இருக்கையில் அமர்ந்து இருப்பாள். இப்போது அவள் தந்தையின் நிலைமையை நினைத்து அமைதியாக நின்றிருந்தாள்.

தான் செய்யும் செயல் கோபத்தை உண்டு பண்ணி டாடிக்கு பணம் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது அந்த காரணத்திற்காகவே அமைதியாக நின்றிருந்தாள் நிரஞ்சனி.
 
கனவு 14



அறையில் இருந்து வெளியேறும் போது மதிய உணவு பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு சேகரும் லட்சுமணனும் கீழே சென்றனர்.


பக்கத்தில் இருந்த வீடு தான் ஆண்டாள் அக்கா வீடு என்று சொல்லி லட்சுமணனை அங்கு அழைத்து சென்றான் சேகர்.


வீட்டின் முன்புறம் அமர்ந்து தாயும் மகளும் உரலில் மாவு ஆட்டிக்கொண்டு இருந்தனர்.


"அக்கா..." என்று குரல் கொடுத்தான் சேகர்.


அந்த குரலில் திரும்பிப்பார்த்த ஆண்டாள் சேகருடன் புதியவன் ஒருவன் வந்ததை கண்டதும் இவன் தான் சேகர் சொன்னவன் போல என்று நினைத்தவர், மாவு ஆட்டுவதை விட்டு விட்டு எழுந்து, "வா சேகர் வாப்பா தம்பி" என்று இருவரையும் வரவேற்றார்.


"நீங்க உங்க வேலையை பாருங்க, நான் இந்த பாத்திரங்களை கொடுத்திட்டு அப்படியே லட்சுமணனை உங்களுக்கு அறிமுகம் பண்ணிட்டு போகலாம் என்று வந்தேன். இவர் தான் நான் சொன்ன லட்சுமணன் அக்கா" என்றான் சேகர்.


லட்சுமணன் கைகுவித்து "வணக்கம் அக்கா, நீங்க கொடுத்த சாப்பாடு டிபன் ரொம்ப நல்லா இருந்திச்சு" என்றான் புன்னகையுடன்


"வணக்கம் தம்பி" என்றவர் "என்ன தம்பி நான் எதோ பசிக்குது என்று வருபவர்களுக்கு எனக்கு தெரிந்த அளவுக்கு இருக்கும் சாமான்களை வச்சு சமைக்கிறேன். நீங்க பெரிய இடத்து பையன் என்று சேகர் சொன்னாப்புல உங்க வீட்ல விதவிதமான சாப்பாடு சாப்பிட்டு இருப்பிங்க. நீங்க என் சாப்பாடு நல்லா இருக்கு என்று சொல்லுறீங்களே" என்றார்.


"நான் சும்மா சொல்லலை அக்கா, என் அம்மா சொல்லுவாங்க அன்பா பழைய கஞ்சி கொடுத்தாலும் அது தேவாமிர்தமாக இருக்குமாம். ஆனால் நீங்க விதவிதமா சமைச்சி அன்போட என் பசியாற கொடுத்திருந்திங்க அக்கா. வீட்டில் இருந்து வந்ததில் இருந்து இன்னைக்கு தான் என் அம்மா கையில் சாப்பிட்டால் இருக்கும் ருசி போல உணர்ந்தேன்" என்றவனின் குரல் சற்று கரகரத்தது.


லட்சுமணனின் குரலில் இருந்த ஏக்கம் ஆண்டாள் அக்கா, சேகர் மனதில் சற்று கவலையுடன் லட்சுமணனை பார்க்க வைத்தது என்றால், கீழே அமர்ந்து மாவை ஆட்டிக்கொண்டு இருந்த ஊர்மிளாவின் மனதில்


பார்க்க ஒன்னும் தெரியாத மாதிரி இருந்துட்டு, வந்த ஒரே நாளில் என்னை தான் வசியம் பண்ணிட்டான் என்று பார்த்தால், என் அம்மாவையும் இப்படி அவனை பார்த்து உருகவச்சுட்டானே சரியான நடிகன் தாண்டா என்று நினைத்தவளுக்கு, அப்போது தான் மனதில் வந்த வார்த்தை அவளை திகைக்க வைத்தது.


என்னை வசியம் பண்ணிட்டானா?... அப்படினா பார்த்தவுடனே மயங்கிட்டேனா?... இன்னைக்கு தான் இவனை பார்த்தேன். அதுக்குள்ள என் மனசில் இப்படி ஒரு எண்ணம் எப்படி வந்தது. இது மட்டும் அம்மாக்கு தெரிந்தது என்னை கொன்று போட்டுடுவாங்க. இனி இவன் இருக்கும் பக்கமே போகக்கூடாது. அப்ப தான் இப்படி எண்ணங்கள் எல்லாம் வராது என்று நினைத்தவள் தலைநிமிராமல் தன் வேலையை பார்த்தாள்.


லட்சுமணனும் அங்கு வந்த போது அவள் இருப்பதை பார்த்தானே தவிர அதன் பிறகு அவள் இருக்கும் பக்கம் அவன் பார்வை போகவில்லை. ஆண்டாள் அக்காவை மட்டுமே பார்த்து பேசினான்.


"உட்காருங்க தம்பி டீ போடுறேன்" என்றார் ஆண்டாள்.


"வேண்டாம் அக்கா நாங்க ரோடு பக்கம் தான் போறோம், இவருக்கு இந்த இடத்தில் இருப்பதை எல்லாம் காட்டத்தான் கூட்டிட்டு போறேன். நாங்க கிளம்புறோம் அக்கா நீங்க வேலையை பாருங்க" என்று கூறிவிட்டு லட்சுமணன் அழைத்து கொண்டு சென்றான்.

லட்சுமணனும் ஆண்டாள் அக்காவிடம் விடை பெற்று சேகருடன் சென்றான். வழியில் உள்ள சில இடங்களை சுட்டிக்காட்டி பேசிக்கொண்டு சென்றான் சேகர். ஓரிடத்தில் ஐந்தாறு பேர் அமர்ந்து புகைத்துக்கொண்டு அந்தப்பக்கம் செல்பவர்களை வம்பு இழுத்துக்கொண்டு இருந்தனர்.


அவர்களை சில அடி தூரத்தில் இருக்கும்போதே பார்த்த சேகர்
"லட்சுமணன் அவங்க என்ன பேசினாலும் பேசாமல் அமைதியா அவங்களை பார்க்காமல் வாங்க" என்று சொல்லிவிட்டு நடந்தான். இவர்களை பார்த்ததும் அங்கிருந்த ஒருவன்


"டேய் இங்க பாருங்கடா நம்ப டைரக்டர் புது ஆளை பிடித்திருக்கான். ஆளும் செமயா இருக்கான்" என்றான்.


இன்னொருவன் "டைரக்டரே நீ தான் எங்க கூட சேரமாட்ட புது ஆளையாவது எங்க கூட சேர்த்து விடு. ஆளும் சூப்பரா லட்டு மாதிரி இருக்கான்" என்று கூறி சிரிக்க உடன் இருந்தவர்களும் சிரித்தனர்.


லட்சுமணனுக்கு அவர்கள் பேசுவது புரியவில்லை என்றாலும் எதுவும் பேசாமல் அந்தப்பக்கம் பார்க்காமல் நடந்து சிறிது தூரம் சென்றதும்


"அவங்க என்ன சொன்னாங்க சேகர் எனக்கு எதுவும் புரியவில்லை" என்று கேட்டான் லட்சுமணன்.


"நான் சொன்னேன் இல்லையா பணத்திற்காக என்னவென்றாலும் செய்வாங்க என்று அது இந்த கேங் தான்.. போதை, மது, மாது என்று எல்லாமே இவங்க செய்வாங்க. இவங்கிட்ட எப்போதும் விலகியே இருங்க. அவங்க தேவையில்லாமல் வம்பு செய்தால் கூட ஒதுங்கி போயிடுங்க. அவங்களுக்கு பெரிய இடத்து ஆதரவு இருருக்கிறதால் இப்படித்தான் வலிய வந்து வம்பு செய்வாங்க." மேலும் அவர்களை பற்றி சொல்லிக்கொண்டே சென்றான். நீண்ட தூரம் நடந்தவர்கள் பஸ் போகும் மெயின் சாலைக்கு வந்தடைந்தனர்.


அங்கிருந்த பஸ் நிறுத்தத்தை காட்டி அங்கிருந்து செல்லும் சில பேருந்து எண்களை கூறி அந்த பஸ்சில் சென்றால் எந்த இடத்திற்கு செல்ல முடியும் என்று சொல்லிக்கொண்டே அருகில் இருந்த டீக்கடைக்கு சென்றனர்.


டீக்கடை பெஞ்சில் அமர்ந்து இரண்டு டீ சொன்னான் சேகர்.


"என்னா சேகரு ஆள் டிப்டாப்பா இருக்கார் ஊருக்கு புதுசா?..." என்று டீக்கடை கல்லாவில் அமர்ந்து இருந்த முதலாளி கேட்டார்.


"ஆமாம் அண்ணே என் பிரண்டு தான், ஊரில் இருந்து வந்து இருக்கார். கொஞ்ச நாள் இங்க தான் இருப்பார். நம்ப கடை பக்கம் வந்தால் பார்த்துக்கங்க அண்ணே" என்றான் சேகர்.


"உன்னோட பிரண்ட் என்று சொல்லிட்டியே சேகர் அப்புறம் பார்க்காமல் விட்டுடுவேனா நான் பார்த்துக்கிறேன்" என்றார் கடை முதலாளி.


கடைப்பையன் டீ எடுத்து வந்து கொடுக்கவும் வாங்கி லட்சுமணன் இடம் ஒன்றை கொடுத்த சேகர் தனது டீயை எடுத்து குடித்தான்.


டீ குடித்து முடித்து அதற்கான காசு கொடுத்து விட்டு "வரேன் அண்ணே" என்று அங்கிருந்து கிளம்பினர்.


"நான் இங்க வந்த புதிதில் கையில் இருந்த பணம் செலவு ஆனதும் இந்த டீக்கடை அண்ணன் கிட்ட தான் முதல் முதலில் வேலை கேட்டேன். என்னை பார்த்ததும் அவருக்கு என்ன தோன்றியதோ வேண்டாம் என்று சொல்லாமல் வேலைக்கு சேர்த்துக்கிட்டார். ஆனால் இரண்டு நாள் என்னையும் என் வேலையும் கவனித்தவர் மூன்றாவது நாள் வந்தபோது வேலை செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார்."



"நான் ஏன் என்று புரியாமல் நின்னுட்டு இருக்கும் போது அங்கு உட்கார்ந்து இருந்த ஒருத்தர் கிட்ட நான் சொன்ன ஆள் இவர் தான் என்று சொன்னார். வந்தவர் என்னை ஆராய்ச்சியா பார்த்தார்."


"உனக்கு கார் ஓட்டத்தெரியுமா என்று வந்தவர் கேட்டார். நானும் புரியாமல் தெரியும் என்று சொன்னேன். லைசென்ஸ் இருக்கா என்று கேட்டார். அதற்கும் இருக்கு என்றேன். காலேஜ் படிக்கும் போது பிரண்ட்ஸ் கூட சேர்ந்து கத்துக்கிட்டு லைசென்ஸ் வாங்கியது. அதுதான் அன்னைக்கு எனக்கு உதவிச்சு."


"அப்புறம் வந்தவர் நல்லாதா பேச்சு இப்ப கையில் லைசென்ஸ் இருக்கா என்று கேட்டார். நான் ரூமில் இருக்கு என்றதும், அப்ப சீக்கிரம் போய் எடுத்திட்டு வா என்றார் வந்தவர்."


"நான் ஒன்றும் புரியாமல் டீக்கடை அண்ணனை பார்த்தேன். அவர் என்னை பார்த்து சிரித்தவர், தம்பி நீ படிச்சவன் இப்படி டீக்கடையில் உன்னை எச்சி கிளாஸ் கழுவ வைக்க எனக்கு பிடிக்கலை. அதான் உனக்கு வேற வேலை ஏற்பாடு செய்தேன். இவர் என் நண்பர் தான் டிராவல்ஸ் வச்சு இருக்கார். அவர் கூட போ என்றார்."


"சினிமா வாய்ப்புக்காக வரவங்களுக்கு இங்க யாரும் வேலை தரமாட்டாங்க, காரணம் நிரந்தரமா செய்யமாட்டாங்க என்று தான். ஆனால் என்னை நம்பி எனக்காக நல்ல வேலையை அவர் வாங்கி கொடுத்ததும், எனக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அவரை கையெடுத்து கும்பிட்டேன். அவர் என் கையை தட்டி விட்டவர். "


"நான் இந்த ஊருக்கு பிழைக்க வந்த போது ஒரு நல்ல மனுஷன் உதவினார். அந்த உதவி தான் இன்னைக்கு நான் இந்த கடையில் முதலாளியாக உட்கார்ந்து இருக்கேன். அவர் மட்டும் உதவி செய்யாமல் போயிருந்தால் இன்னைக்கு நான் ஒரு திருடனாக இருந்து இருப்பேன். பசிக்கொடுமையினால் அன்னைக்கு திருட இருந்தேன். அது அவர் கண்ணில் பட்டு என்னை கூட்டிட்டு போய் சாப்பாடு வாங்கிக் கொடுத்ததோடு விடாமல் ஒரு ஓட்டலில் வேலையும் வாங்கிக் கொடுத்தார்."


"அவர் சொன்ன வார்த்தை தான், நீ மட்டும் நல்லா இருந்தால் போதும் என்று நினைக்காதே, உன் சந்ததியும் நல்லா இருக்கனும் என்று நினை. நீ செய்யுற பாவ புண்ணியம் தான் உன் சந்ததிக்கு போகும். உன்னால் முடிந்த அளவுக்கு நாலு பேருக்கு நல்லது பண்ணு அப்படி என்று சொன்னார்."


" அதை நான் இன்னைக்கு வரைக்கும் என்னால் முடிந்த அளவுக்கு செய்திட்டு வரேன். அதுபோல் நீயும் உன்னால் முடிந்ததை செய் சேகர் என்று சொல்லி அனுப்பினார். "


"நானும் கொஞ்ச நாள் ஆட்டோ, கார் என்று ஓட்டிட்டு நடுவில் சினிமா வாய்ப்பும் தேடிட்டு இருந்தேன். அப்புறம் சில வாய்ப்புகள் வந்ததும் வேலையை விட்டுட்டேன்."


"அதன் பிறகு எப்போதாவது வண்டி ஓட்டுறவங்க லீவ் என்றால் அந்த முதலாளி எனக்கு தான் ஆள் அனுப்பி வரமுடியுமா என்று கேட்பார். நானும் போவேன், அங்க வேலை இல்லாத நேரத்தில் தான் வேற எதாவது இடத்தில் வேலைக்கு போவேன், நீங்க வந்த அன்னைக்கும் அந்த டாக்ஸி டிரைவர் லீவு என்று தான் எனக்கு ஓட்ட கிடைத்தது. அதனால் தான் உங்களை சந்திக்க முடிந்தது" என்றான் சேகர்.



"அவர் சொன்ன வார்த்தை தான் எனக்கும் உதவி செய்ய வைத்ததா சேகர்?..." என்று கேட்டான் லட்சுமணன்.


"அந்த வார்த்தை மட்டும் இல்லை லட்சுமணன், நீங்க அன்னைக்கு நின்ன கோலம் தான் என்னை உங்க கிட்ட வரவச்சது. வழி தெரியாமல் நிற்கும் சின்ன குழந்தையின் தவிப்பு உங்க முகத்தில் தெரிந்தது. அதை பார்த்ததும் தான் நான் உங்க கிட்ட வந்து பேசினேன்" என்றான் சேகர்.


பேசிக்கொண்டே சிறிய பூங்காவிற்கு வந்திருந்தனர். லட்சுமணன் சட்டென்று சேகரை இறுக அணைத்துக்கொண்டான்.


"ரொம்ப நன்றி லட்சுமணன் நீங்க மட்டும் அன்னைக்கு உதவாமல் போயிருந்தால் நான் என்ன ஆகியிருப்பேனோ?.... இந்த நன்றியை நான் என்னைக்கும் மறக்கமாட்டேன் சேகர்". என்றவனின் குரல் தழுதழுத்தது.


"லட்சுமணன் என்ன இது இவ்வளவு எமோஷன் ஆகறீங்க. மனிதனா பிறந்தால் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருக்கனும் என்று சின்ன வயதில் பாட்டி சொல்லுவாங்க. உங்களுக்கு உதவி தேவைப்பட்டது என்னால் முடிந்த உதவி என்றதால் செய்தேன். இதே போல நாளைக்கு எனக்கு ஒரு உதவி தேவை என்றால் நீங்க செய்யமாட்டிங்களா?..." என்ற கேள்வியை சேகர் கேட்டதும்


"கண்டிப்பாக சேகர் நான் உங்களுக்கு செய்ய கடமை பட்டு இருக்கேன். எவ்வளவு பெரிய இக்கட்டான சூழ்நிலையில் எனக்கு உதவி செய்தது மட்டுமில்லாமல் வாழ்க்கை பாடத்தை கத்துக்கொடுத்திட்டும் இருக்கிங்க தெரியுமா?..." என்றான் லட்சுமணன்.


" போதும் லட்சுமணன் அதையே பேசவேண்டாம் வாங்க அந்த மரத்தடியில் உட்காரலாம்" என்று சொல்லி சேகர் முன் சொல்ல பின் சென்றான் லட்சுமணன். அது பெரிய மரமாக இருந்தது. மரத்தை சுற்றி சிமெண்ட் இருக்கைகள் போடப்பட்டு இருக்கவும் அதில் சென்று அமர்ந்தனர்.


அது மாலை நேரம் என்பதால் நிறைய பேர் பார்க்கில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அதனால் சேகரும் லட்சுமணனும் மெல்லிய குரலில் பேசிக்கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் மரத்திற்கு அந்தப் பக்கம் இருந்து குரல் கேட்டது.


பேசிக்கொண்டு இருந்த சேகர் பேச்சை நிறுத்தி விட்டு அந்த பக்கம் பேசும் குரலை கவனித்தான்.


அண்ணே என் தம்பி பசிக்குது என்று அழுகிறான். அவனுக்கு சாப்பிட வாங்கித்தர காசு இருந்தால் கொடுக்க அண்ணே என்ற குரலும் சிறு பிள்ளையின் அழுகுரலும் கேட்டது.
 
கனவு 15



எதிரில் நின்று இருந்தவளை இறுகிய முகத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தவன், அவள் பேசாமல் இருக்கவும் தன் முன் இருந்த போனை எடுத்து "உள்ளே வா" என்று அழைத்துவிட்டு வைத்தான்.


அறைக்கு வெளியே இருந்த செக்யூரிட்டி உள்ளே வந்து "சார்..." என்று நின்றார்.


"இப்படித்தான் விசாரிக்காமல் கண்டவங்களையும் உள்ள விடுவாங்களா?..." என்று இறுகிய முகத்துடன் கேட்டான் ஆருத்ரன்.


முதலாளியின் கோபத்தை கண்ட செக்யூரிட்டி "சார் நீங்க தான் பார்க்க வரச்சொன்னிங்க என்று இவங்க கூட வந்தவர் சொன்னார். அதான் சார் உள்ளே விட்டேன்" என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே திறந்து இருந்த கதவை மெல்ல தட்டிவிட்டு உள்ளே வந்தான் நாதனின் உதவியாளன்.


"குட்மார்னிங் சார்". என்றவன் பின் "சாரி சார் நாதன் சார் கால் பண்ணார் அதான் மேடத்தை உள்ளே அனுப்பிட்டு பேசிட்டு வந்தேன்" என்றான்.


செக்யூரிட்டியை வெளியே போகும்படி சைகை செய்தவன், செக்யூரிட்டி சென்று கதவை மூடியதும், "உங்க மேடத்திற்கு பேஸிக் மேனர்ஸ் கூட தெரியாதா?... ஒரிடத்திற்கு வந்தால் தன்னை யார் என்று கூட அறிமுகப்படித்திக்க தெரியலை. சொல்லாமலே தெரிந்திக்க அவங்க பெரிய விஐபியா?... நல்ல வளர்ப்பு!...." என்று நிரஞ்சனியை பார்த்தவனின் பார்வையில் ஏளனம் இருந்தது.



அவனின் பேச்சும், ஏளனப்பார்வையும் நிரஞ்சனிக்கு கோபத்தை கொடுத்தது. மனதுக்குள் 'எனக்கு மேனர்ஸ் இல்லையா?.. அது உனக்கு இருக்கா?... என் டாடி எவ்வளவு பெரிய டைரக்டர் அவருக்கு ஒரு விஸ் கூட பண்ணாதவன் என்னை பத்தி பேசுறான். பணம் இருக்கு என்ற திமிர்' என்று மனதுக்குள் அவனை வறுத்தெடுத்துக்கொண்டு இருந்தாள்.


"சாரி சார் மேடம் இது மாதிரி வெளிய வருவது இதுதான் முதல் தடவை, அதான் எப்படி நடந்துக்கனும் தெரியலை" என்றான் உதவியாளன்.


ஆருத்ரனின் பார்வை நிரஞ்சனியின் தேகம் முழுவதும் வலம் வந்தது. "உங்க மேடத்தை பார்த்தால் சின்ன குழந்தை போல தெரியலையே எப்படியும் காலேஜ் படிக்கும் பெண் போலத்தான் தெரியுது.... வளர்ப்பு தான் சரியில்லை என்று பார்த்தால், படித்த நாலெட்ஜ் என்று ஒன்று இருக்கும் இல்ல அதுவும் இல்லையா?..." என்று கேட்டான்.


"சார்...." என்றவன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்றான் உதவியாளன்.


"உங்க மேடம் இங்க சினிமாவில் நடிக்க வாய்ப்புக்காக வந்து இருக்காங்க. ஆனால் அவங்க வந்தது எப்படி தெரியுமா இருந்தது, என்னவோ அவங்க தான் இந்த இடத்தின் முதலாளி என்ற தோரணையில் வந்து நிக்கிறாங்க. பணிவுனா என்ன என்று அவங்க வீட்டில் சொல்லித்தரலையா?..."


"இப்பவும் வாய் திறந்து ஒரு மன்னிப்பு கூட கேட்காமல் அப்படியே தான் நின்னுட்டு இருக்காங்க. இவங்க நடவடிக்கை பார்த்தால் எங்க படத்திற்கு இவங்க செட் ஆகமாட்டாங்க என்று தோன்றுது, அதனால் நீங்க கிளம்புங்க நான் வேற ஹீரோயின் பார்த்துக்கிறேன் என்றான் ஆருத்ரன்.


ஆருத்ரனை மனதுக்குள் திட்டிக்கொண்டு இருந்தவள் அவனின் பணிவுனா என்ன என்று சொல்லித்தரலையா என்ற வார்த்தையை கேட்டதும் தாயின் பேச்சுக்கள் காதில் ஒலித்தன.

நிரஞ்சு இப்படி எல்லாம் ஆண்பிள்ளைத்தனமாக இருக்கக்கூடாது பெண்ணுக்கு பணிவு வேண்டும் என்றது ஞாபகம் வந்தது.


அதேசமயம் ஆருத்ரனின் ஒரு மன்னிப்பு கூட கேட்காமல் அப்படியே நிற்கிறாங்க என்ற வார்த்தையும் காதில் கேட்கவும் 'நான் என்ன தவறு செய்தேன் இவனிடம் மன்னிப்பு கேட்க. உள்ளே வந்தவர்களை வரவேற்று உட்கார சொன்ன பிறகு தானே அறிமுகம் செய்யவேண்டும்.


தப்பு செய்தது இவன் ஆனால் பழியை என் மேல் போடுறான் திமிர் பிடித்தவன், பணம் இவனிடம் இருந்தால் எல்லோரும் இவனுக்கு பணிந்து போகனுமா முடியாது போட' என்று மனதில் வறுத்துக்கொண்டு இருந்தவளின் செவியில் இவங்க என் படத்திற்கு செட் ஆகமாட்டாங்க போங்க என்றதும் தான் தந்தையின் நிலையும் அவர் சொல்லிய வார்த்தைகளும் நினைவு வந்து அவளுக்கு பயத்தை கொடுத்தது.


டாடி அவ்வளவு தூரம் சொன்னாரே இவங்க பணம் இல்லை என்றால் வீதியில் தான் நிற்கவேண்டும், நீ அவர்களை கோபப்படுத்தாமல் அவர்கள் சொல்வதை செய்து பணம் கிடைக்கும் படி செய் என்று சொல்லி அனுப்பினாரே, இப்போது இவர்கள் வாய்ப்பு இல்லை என்று வெளியே அனுப்பினால் பணம் கிடைக்காதே என்ற எண்ணம் வந்ததும் அதுவரை இருந்த நிமிர்வு எல்லாம் வடிந்து விட


"சாரி சார்" என்று மெல்லிய குரலில் சென்னாள்.


அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவனின் காதில் அவள் கூறியது விழுந்தபோதும் கேட்காதது போல "உங்க மேடம் என்ன சொல்லுறாங்க கேட்கலையே?..." என்றான்.


"சார் அவங்க.." என்று உதவியாளன் பேசவும் ஆருத்ரன் அவனை பார்த்த பார்வையில் பேச்சு நின்றது.


"அவங்க தேவைக்கு அவங்க தான் பேசனும்" என்று இறுகிய குரலில் சொன்னான் ஆருத்ரன்.


அதுவரை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற பயத்துடன் இருந்தவள், அவனின் பேச்சை கேட்டதும் என் தேவைக்கு நான் தான் பேசனும் என்று மனதில் உருப்போட்டு திடத்தை கொண்டு வந்து பேசினாள் நிரஞ்சனி.


"சாரி சார், என்னோட பேர் நிரஞ்சனி டைரக்டர் நாதன் என்னோட டாடி, உங்க படத்தில் ஹீரோயின் வாய்ப்புக்காக வந்து இருக்கேன்" என்று சத்தமாக பேசி விட்டு ஆருத்ரனின் முகம் பார்த்தாள்.


அவனின் முகம் முன்பு இருந்த இறுக்கத்தோடு இப்போது கோபத்தில் சிவந்து அவளை கொன்று விடும் வெறியுடன் பார்த்துக்கொண்டு இருந்தது.


அதைக்கண்ட நிரஞ்சனி பயந்து இரண்டடி பின்னால் சென்று நின்றாள். ஏன் இவன் இப்படி பார்க்கிறான். இவன் சொன்ன பிறகு என்னை அறிமுகம் செய்து கொண்டதற்காக இவ்வளவு கோபமா?... இல்லை வேறு எதற்கு இப்படி என்னை கொல்லும் வெறியுடன் பார்க்கிறான்?... என்று புரியாமல் அச்சத்துடன் நின்றிருந்தாள்.


அதுவரை எதுவும் பேசாமல் இருந்த ரகுநந்தன் டேபிளில் இருந்த போனை எடுத்து "அந்த மேக்கப் போடும் கேர்ள்ஸை உள்ளே அனுப்புங்க" என்று சொல்லி வைத்தவன்.


"மேக்கப் போடுறவங்க வருவாங்க அவங்க கூட போய் நீ ரெடியாகு," என்று நிரஞ்சனியை பார்த்து சொன்னவன் நாதனின் உதவியாளரிடம் "மேக்கப் டெஸ்ட் எடுத்து முடிக்கும் வரை நீங்க வெளியே வெயிட் பண்ணுங்க சார்" என்றான்.


அந்த நேரம் கதவை தட்டி விட்டு இரண்டு பெண்கள் உள்ளே வந்தனர்.


"நாங்க சென்னது போல் இவங்களுக்கு மேக்கப் போடுங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் டைரக்டர் வந்திடுவார் கூட்டிட்டு போங்க" என்றவன்


நிரஞ்சனியை பார்த்து "இவங்க கூட போ நிரஞ்சனி" என்றான் ரகுநந்தன்.


அதற்காகவே காத்திருந்தது போல் ரகுநந்தனுக்கு தலையசைத்தவள் ஆருத்ரனை பார்க்க அவன் இப்போதும் முறைத்துக்கொண்டு தான் இருந்தான்.


'அம்மாடி இவன் என்ன இப்படி முறைக்கிறான்' என்று நினைத்தவள் வேகமாக அறையில் இருந்து வெளியேறிய பின் நெஞ்சில் கை வைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டாள்.


கொஞ்ச நேரத்திற்கே இவன் எதிரில் இருக்க முடியலையே படம் முடியும் வரைக்கும் என்னாகுமோ என்று நினைத்தவளுக்கு, பின் இவன் தயாரிப்பாளர் தானே எப்போதாவது தான் படப்பிடிப்பு வருவான், அப்ப இவன் கண்ணில் படாமல் இருக்கனும் என்று நினைத்துக்கொண்டு சென்றாள்.


சில நிமிடங்கள் அவன் இருக்கும் இடத்தில் இருந்ததற்கே மூச்சடைத்து போனவளுக்கு, அவன் தான் அந்த படத்தின் நாயகன் என்று தெரிந்தால் மயங்கி விழுவாளோ?... இல்லை உயிரை விடுவாளோ ?...


அனைவரும் அறையில் இருந்து வெளியேறிய பின்பே இறுக்கமாக பிடித்திருந்த ஆருத்ரனின் கையை விட்டான் ரகுநந்தன்.


ஆருத்ரனின் கையை பிடிக்காமல் இருந்திருந்தால் கண்டிப்பாக அங்கிருந்த எதாவது ஒரு பொருள் நிரஞ்சனியின் மீது விழுந்து இருக்கும் அதை தடுக்கவே நிரஞ்சனி பேசிய போது ரகுநந்தன் அண்ணனின் கையை இறுக்கி பிடித்தவன் இப்போது தான் விட்டான்.



"ருத்ரா நீ என்ன செய்யுற என்று உனக்கு புரியுதா இல்லையா?... என்ன காரியம் செய்ய இருந்த தெரியுமா?..." என்றான் ரகுநந்தன்.


"என்ன செய்யுறேன் என்று தெரியாமல் செய்வதற்கு நான் என்ன பைத்தியமா?..." என்ற சொன்னவனின் குரல் இன்னும் இறுக்கத்தில் தான் இருந்தது.


"உனக்கு எதுக்கு அவள் மீது இவ்வளவு கோபம்?..." என்று கேட்டான் ரகுநந்தன்.


"கோபமா அவள் பேசிய பேச்சிற்கு அவளை கொன்று போட்டு இருப்பேன், நீ தான் செய்யமுடியாமல் தடுத்தடா" என்று தம்பியை முறைத்தான் ஆருத்ரன்.


"ருத்ரா இப்ப நீதான் சின்ன பையன் மாதிரி நடத்துக்கிற அவளுக்கு எதுவும் தெரியாது. தெரிந்தே அப்படி பேசுவாளா, நம்பலை விட அவதான் பாவம்டா. தப்பு செய்தவர்களை விட்டுட்டு அந்த தவறால் பாதிக்கப்பட்டவங்களை தட்டிப்பது சரியா?... அவளை கொன்று விட்டு நீ சந்தோஷமாக இருப்பியா?... இல்லை நம்ப குடும்பம் தான் சந்தோஷமாக இருக்குமா?... அவள் நம்ப வீட்டுக்கு வரப்போற குட்டி தேவதைடா, அவள் வருகைக்காக எத்தனை பேர் காத்திட்டு இருக்காங்க. அவள் இல்லாமல் உன்னால் இருக்க முடியாமா?..."


"அவள் முதலாளியா என்று கேட்டியே" என்றவன் ஆருத்ரனின் நெஞ்சில் கை வைத்து "இங்க கேளு அவள் யாரு என்று சொல்லும், அவளை கஷ்டப்படுத்த நினைக்கிறீயே அவள் கண்ணீர் விட்டால் உன்னால் தாங்க முடியுமா?..." என்று கேட்டான் ரகுநந்தன்.


சிறிது நேரம் அந்த இடத்தில் எந்த பேச்சும் இல்லாமல் அவரவர் சிந்தனையில் இருந்தனர். சில நிமிடங்கள் கழிந்து இருக்க


"ஹாஹாஹா...." என்று வாய்விட்டு சிரித்த ரகுநந்தன், ஆருத்ரனை பார்த்து "அவள் முதலாளியா ஆனதும் இதுக்கெல்லாம் உனக்கு வட்டியோட தரப்போறாடா" என்றான்.


"அவளால் இந்த ஆருத்ரனை ஒன்னும் பண்ண முடியாதுடா" என்றவனின் உதட்டோரத்தில் மெல்லிய புன்னகை வந்தது.


"அடேய் அண்ணா நாட்டுக்கே ராஜாவாக இருந்தாலும் பெண்டாட்டி காலில் விழுந்து தான் ஆகனும். அதுவும் நீ பண்ணிக்கிட்டு இருக்க காரியத்திற்கு நீ எவ்வளவு முறை அவள் காலில் விழவேண்டியது இருக்க போகுதோ" என்று புன்னகையுடன் கூறிய ரகுநந்தனை போலியாக முறைத்த ஆருத்ரன் அவனை அடிக்க எழ அதை கண்டு கொண்ட ரகுநந்தன் ஆருத்ரனின் கையில் சிக்காமல் எழுந்து ஓடினான்.


"அவளுக்கு தெரியலை என்றாலும் நீயும், அங்க இருக்க அந்த ஆறு மச்சான்களும் போதும்டா சொல்லி கொடுக்க" என்றவன் ரகுநந்தனை பிடித்து இருந்தான்.


"அந்த அரை டஜன் மச்சான்ஸ் மட்டும் இல்லை அண்ணா வீட்டில் இருக்க எல்லோரும் அவளுக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க. அப்ப நீ தான் தனியா நின்னு எல்லாரையும் சமாளிக்கனும்" என்றான் ரகுநந்தன்.


"எனக்கு சப்போர்ட் பண்ண என் மாமா இருக்காரே கூடவே அத்தையும் இருக்காங்க, அவங்க சப்போர்ட் இருக்கும் போது யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது" என்று சந்தோஷமாக சொல்லியவனின் முகம் இப்போது கவலையுடன் தம்பியை நோக்கி "இதெல்லாம் நடக்குமாடா?..." என்றான்.


அதுவரை ரகுநந்தன் முகத்தில் இருந்த புன்னகையும் வடிந்து முகத்தில் கவலை அப்பிக்கொள்ள "அண்ணா கண்டிப்பாக நடக்கும்டா" என்று கூறி ஆருத்ரனை அணைத்துக்கொண்டான்.


ஆருத்ரனை கைபிடித்து அழைத்து சென்று அங்கிருந்த சோபாவில் அமரவைத்து விட்டு பக்கவாட்டில் இருந்த அறைக்கு சென்றவன் திரும்பி வந்த போது இரண்டு கப் காபி எடுத்து வந்து அண்ணனிடம் ஒன்றை கொடுத்தவன் தானும் ஒன்றை குடித்தான்.


சூடான பானம் தொண்டையில் இருந்த துக்கங்களை குறைத்து தொம்பை அளித்தது.


தன் கைகடிகாரத்தில் மணியை பார்த்த ரகுநந்தன் "இன்னும் ராஜா சாரை காணுமே அண்ணா எதாவது பிரச்சனை ஆகியிருக்குமா?...." என்று கேட்டான்.


"இல்லடா அங்கிள் கிளம்பிட்டேன் என்று மெசேஜ் அனுப்பினார். டிராபிக்கில் மாட்டி இருப்பார் வந்திடுவார்" என்றான்.


"சரி அப்ப வா அங்க அவள் என்ன பாடுபடுறாளோ, அங்கேயும் உன் கைவரிசையை காட்டி இருக்க, உனக்கு எப்படிடா இப்படி எல்லாம் அவளை டார்ச்சர் பண்ண தோணுது. அவள் குழந்தைடா, அவள் முகத்தை பார்த்துமா அப்படி எல்லாம் செய்ய தோணுது" என்று கேட்டுக்கொண்டே அறையில் இருந்து வெளியேறினான் ரகுநந்தன்.


அவன் பின் சென்ற ஆருத்ரன் "அவள் முகத்தை பார்க்கத்தானே சொன்னதே..." என்றவனை திரும்பி ரகுநந்தன் பார்க்கவும் முகத்தில் கனவு மின்ன தன் தலைகோதி புன்னகையுடன் பார்வையை எங்கோ பதித்தபடி நடந்த அண்ணனை கண்டான்.


அண்ணனின் புன்னகை முகத்தை கண்டவனுக்கு இவன் ஆசை சீக்கிரம் நல்லபடியாக நிறைவேற்று கண்ணா என்ற வேண்டுதலுடன் நடந்தான் ரகுநந்தன்.
 
Status
Not open for further replies.
Top