வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

"நிசப்தமே ரீங்காரமாக!!"கதை திரி

Status
Not open for further replies.

அத்தியாயம் ஒன்று:

"ஏய் போடி இதுக்கு மேல படிச்சு நம்ம எல்லாம் என்ன பண்ண போறோம்? எப்படியும் நம்ம வீட்ல கல்யாணம் பண்ணி தான் கொடுக்க போறாங்க! அப்புறம் எதுக்கு தேவையில்லாம கஷ்டப்பட்டு படிச்சு போ அங்கிட்டு என்னால முடியாது.. என்னை பொறுத்த வரைக்கும் காலகாலத்துல கல்யாணத்தை பண்ணிக்கிட்டு ஒரு குழந்தையை பெத்துகிட்டு அப்புறம் அப்படியே போய்கிட்டு இருக்க வேண்டியதுதான்.. நம்ம என்ன படிச்சு வேலைக்கு போகப் போறோமா!"

"இப்படி எல்லாம் பேசாத சிந்தியா இந்த காலத்தில் படிப்பு ரொம்ப அவசியம்.."

"இல்ல ரஞ்சிதா என்னோட பெரியப்பா பொண்ணு ரெண்டு பேரும் படிச்சு என்ன பண்றாங்க?ஆளுக்கு ரெண்டு ரெண்டு குழந்தையை பெத்துகிட்டு வீட்டு வேலை பார்த்துகிட்டு புருஷனை கவனிச்சுக்கிட்டு அப்படியே லைப் ஓட்டிக்கிட்டு இருக்காங்க அப்புறம் எதுக்கு தேவையில்லாமல் நான் படிச்சு ஃபர்ஸ்ட் மார்க் எடுத்தா கூட வேஸ்ட் தான்!"

"ஏண்டி உங்க அப்பா அம்மா உன்னை வேலைக்கு போக சொல்ல மாட்டாங்களா?"

"யார் சொன்னது கண்டிப்பா எங்க அப்பா அம்மா என்னை வேலைக்கு போக சொல்லுவாங்க எனக்கு வேலைக்கு போறதுலல்லாம் கொஞ்சம் கூட இன்ட்ரஸ்ட் இல்ல..நம்ம கஷ்டப்பட்டு இங்க படிச்சு எவனோ ஒருத்தனுக்கு போயி அடிமையா இருந்து அவங்க வீட்ல வேலையை பார்த்து புள்ளைய பெத்து கொடுத்து அதையும் பார்த்துகிட்டு இதுல காசு வேற சம்பாதிச்சு கொடுக்கணுமா? எதுக்கு அப்புறம் நம்மள அவன் கல்யாணம் பண்ணிட்டு போறான்..ஒரு பொண்டாட்டிக்கு தேவையான அடிப்படை விஷயம் கூட செஞ்சு கொடுக்க முடியாத ஒருத்தனுக்கு கல்யாணம் தேவையில்லை.. நானும் எங்க அப்பா அம்மாட்ட மறைமுகமா எனக்கு கல்யாணம் ஆசை வந்தத சொல்லிட்டேன் இதுக்கு மேல அவங்க விருப்பம் தான்.. பாவம் அப்பா அம்மா இந்த காலத்துல பொண்ணுங்களுக்கு கொஞ்சம் கூட சேப்டி இல்ல புள்ள காலேஜுக்கு போயிட்டு ஸ்கூலுக்கு போயிட்டு கொஞ்சம் லேட்டா வந்தா கூட வீட்ல பெத்தவங்க பதறிப் போயிடுறாங்க காலம் அப்படி கெட்டு போய் கிடக்கு.. எவனாச்சும் காதலிச்சிட்டு வந்து நம்ம கிட்ட லவ்வ சொன்னா அதை ஏத்துக்காட்டி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம மூஞ்சில ஆசிட் அடிக்கிறாங்க இல்ல அந்த பொண்ணு உயிரோட இருக்க கூடாதுன்னு வெட்டிட்டு எங்கயாச்சும் தப்பிச்சு ஓடிப் போயிடுறாங்க.. இதுல பாதிக்கப்பட்ட அந்த பொண்ணுக்கு கொஞ்சம் கூட கருணை காட்டாமல் இந்த உலகம் என்னமோ தப்பு எல்லாம் அந்தப் பொண்ணு மேல தான் இருக்குதுன்னு ஒதுக்கி வச்சுடும்.."

"இப்ப எதுக்கு தேவையில்லாம இதை பேசிகிட்டு இருக்க சிந்தியா?"

"இல்லடி ரஞ்சி நீ இதுக்கு அப்புறம் மேல மேல படிக்க போற எனக்கு அப்படி கிடையாது இதோட நம்ம படிப்பு முடியுது.. வீட்ல அப்பா என்னோட ஜாதகத்தை கொடுத்து கல்யாண கிரகம் வந்துவிட்டதானு பார்க்க சொல்லி இருக்காங்க! எனக்கும் கல்யாணம் பண்ண ரொம்ப ஆசையா தான் இருக்கு நான் ஒன்னும் யாரையும் காதலிச்சிட்டு போய் அப்பா அம்மா கிட்ட கல்யாணம் பண்ணி வைக்க சொல்லலை.. அவங்களா ஒருத்தரை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க சொல்றேன் இதுல எனக்கு எதுவும் தப்பா தோணலை.."என்றதும் ரஞ்சிதாவும் அதற்கு மேலும் அவளிடம் சொல்லி புரிய வைக்க முடியாது என்று விட்டுவிட்டாள்.

"ஏம்மா என் புள்ள பசியில் தானே இப்படி அழுதுகிட்டு இருக்கு? பச்ச புள்ள அழுதுகிட்டு இருக்கும் போது அதுக்கு ஒரு வாய் சோறு கூட கொடுக்கணும் உனக்கு தோணலையா?"

"ஆமா உன் பிள்ளைக்கு வேற என்ன வேலை பொழப்பு எப்ப பார்த்தாலும் அழுதுகிட்டே இருக்கு நானும் எவ்வளவுதான் கொடுக்கிறது சனியன் எவ்வளவு கொடுத்தாலும் தின்னுகிட்டே இருக்கு!"என்றார் பரிமளம்.

"ஏன்மா இப்படி இருக்கீங்க ஒரு சின்ன குழந்தை பசியில் அழுகும் போது அதுக்கு ஒரு வேளை சாப்பாடு கொடுக்க இவ்வளவு கேவலமா பேசுற? அப்படி என்ன இதுவரைக்கும் என் பிள்ளைக்கு வாங்கி தள்ளிட்ட சொல்லு!"என்றாள் பரிமளத்தின் மகள் பிரியா.

"இன்னும் உன் பிள்ளைக்கு நாங்க என்ன பண்ணனும்னு எதிர்பார்க்கிறே?"

"எனக்கும் என் பிள்ளைக்கும் அப்படி என்ன நீ செஞ்சு முடிச்சிட்ட? ஏதோ என்னோட போதாத நேரம் என் புருஷன் காரன் வேலைக்கு போகாம வீட்டிலேயே உட்கார்ந்து கிட்டு அவங்க அப்பன் தம்பி கூட சேர்ந்து கூத்தடிக்கிறான் செலவுக்கு கூட விதி இல்லாம இரண்டு பிள்ளைகளையும் வச்சிக்கிட்டு கஷ்டப்பட முடியாமல் தான் இங்கே வந்தேன்..எல்லா பொண்ணுங்களும் பிரச்சனை வந்தா பிறந்து வீட்டுக்கு தான் போவாங்க நானும் அப்படி தான் வந்தேன்.. நீ படுத்தி வைக்கிற பாட்டுக்கு வேற எங்கேயாவது போய் தொலையனும்..எதுக்கு தான் அந்த கடவுள் என்னை போட்டு சோதிக்கிறார்ன்னு தெரியல்ல! கொஞ்ச நாளைக்கு பொறுமையா இரு நான் வேலை கிடைச்சதும் போயிடுவேன் போடுறது வெறும் ரேசன் அரசி அதுக்கு இவ்வளவு பிரச்சனை! உன் மகனுக்கு வேற பொண்ணு பார்க்க போற!!"

"இது எங்க குடும்பம் இதுல நீ தலையிட தேவையில்லை உன்னை வேற ஒரு வீட்டுக்கு கட்டிக் கொடுத்தாச்சு இனிமே நீ இந்த வீட்டுக்கு வெறும் விருந்தாடி மட்டும் தான்..உனக்கு தான் கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சுல்ல அப்புறம் எதுக்கு தேவையில்லாம இங்க வந்து உட்கார்ந்து நாட்டாமை பண்ணிட்டு இருக்க போய் உன் புருஷன் வீட்டில் உட்கார்ந்து நாட்டாமை பண்ணு.."என்று முகத்தில் அடித்தார் போன்று சொன்ன தாயை இயலாமையுடன் பார்த்தாள் பிரியா.

"என்கிட்ட நீ பேசுற ஒவ்வொரு வார்த்தைக்கும் சேர்த்து வச்சு அனுபவிப்ப பெத்த புள்ளையே உனக்கு சுமையா இருக்குன்னு நினைக்கிற நீ எல்லாம் எப்படி அடுத்த வீட்டு பொண்ணை வைத்து வாழவைக்கிறேன்னு நானும் தான் பார்க்கிறேன்.."என்று கோபத்துடன் சொன்ன பிரியா தன் இரண்டு வயது மகள் வர்ஷினியை தூக்கிக்கொண்டு உள்ளே சென்று விட்டாள்.

மகள் அப்படி கோபமாக சென்றது எல்லாம் பெரிதாக பாதிக்கவில்லை பரிமளத்தை.

மாறாக எப்போது இந்த வீட்டை விட்டு செல்லுவாள் அவளுக்கு போடும் அரிசியும் மிச்சப்படும் என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தார்.

"இங்க பாரு சங்கீதா உன் குடும்பம் கொஞ்சம் கூட சரியில்ல தேவையில்லாம நீயா போய் மாட்டிக்காத! உங்க அப்பா வீடு கட்ட பணம் இல்லாம கடனுக்கு வாங்கி வீடு கட்டும் போதே ஆடம்பரமாக கட்டி வச்சிருக்கிறார்.. போதாக்குறைக்கு நீ வேற உங்க அப்பா ரொம்ப கஷ்டப்படுறார் அவருக்கு யார் உதவி பண்ண இருக்காருன்னு என்கிட்ட போட்டு நச்சரிச்சதால வீட்டுக்கு தெரியாம 6 லட்சம் பணத்தை சுளையாய் எடுத்துக் கொடுத்து இருக்கேன்..இந்த விஷயம் மட்டும் வீட்ல இருக்க எல்லாருக்கும் தெரிஞ்சா எவ்வளவு பெரிய பிரச்சனை வரும் உனக்கே அது நல்லாவே தெரியும் பார்த்து இருந்துக்க!"

"எனக்கு தெரியும் உங்களுக்கு எப்பவுமே என் குடும்பம் இளப்பம் தான்.. அன்னைக்கு என் வீட்ல பெண் கேட்டு வரும்போது நாங்க சாதாரண குடும்பம்னு தெரிஞ்சு தானே பொண்ணு கேட்டு வந்தீங்க? இப்ப மட்டும் அதை எதுக்கு குத்தி குத்தி காட்டி பேசுறீங்க?"

"பேச்சை திசை திருப்பாத நான் எப்ப உன்னை பற்றி உன் குடும்பத்தை பற்றி தப்பா பேசி இருக்கேன் உன் குடும்பத்தில் நடந்துருக்கிற விஷயத்தை தான் உனக்கு நான் எடுத்து சொல்றேன்.."

"நீங்க ஒன்னும் சொல்ல வேணாம் எனக்கு எல்லாம் தெரியும் பொண்ணுங்க மட்டும் புகுந்த வீட்டுக்கு வரும்போது புருஷனோட அப்பா அம்மா நாத்தனார் கொழுந்தன் அவங்களோட சொந்தம் எல்லாரையும் அனுசரிக்கணும்.. ஆனா அந்த பொண்ணோட புருஷன் மட்டும் அந்த பொண்ணை தவிர வேற யாரையும் அனுசரிக்க மாட்டார் இது மட்டும் நம் சமுதாயத்தில் காலம் காலமா பெண்களுக்கு நடந்து வர்ற ஒரு பெரிய கொடுமை ஆனா நீங்க அப்படி இருக்க மாட்டீங்கன்னு தான் நான் நம்புறேன்.."என்று சரியாய் அடித்த மனைவியை முறைப்புடன் பார்த்தான் கண்ணன்.

"எனக்கு தெரியாது நான் சொல்றத சொல்லிட்டேன் இதுக்கப்புறம் உன் விருப்பம் இதுக்கு மேல எந்த பிரச்சினை வந்தாலும் அதுக்கு முழு பொறுப்பு நீ மட்டும் தான் எனக்கும் இந்த விஷயத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.."என்று கோபமாக சொன்ன கண்ணன் வெளியே சென்று விட, கணவன் கோபமாக சென்றாலும் சம்மதம் சொல்லிவிட்டு சென்றதை நினைத்து சந்தோஷப்பட்டாள் சங்கீதா.

"இங்க பாருங்க அத்தை நீங்க என்னை நம்பி தாராளமா உங்க பொண்ணை எங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்..உங்க குடும்பத்துல எப்படி நீங்க கஷ்டப்படுறீங்களோ அதே மாதிரி தான் எங்க குடும்பத்துலயும் நானும் கஷ்டப்பட்டு இப்ப இந்த குடும்பத்துக்கு வந்து சேர்ந்தேன்.. என் வீட்ல ஆரம்ப காலத்துல கஷ்டப்பட்டாலும் இப்ப சொந்தமா வீடு கட்டி எங்க அண்ணன் கை நிறைய சம்பாதிக்கிறான் அதுவும் வெளிநாட்டில் வேலை பார்க்கிறான்.. எங்க அண்ணனுக்கு உங்க மகளை கொடுத்தா தாங்கு தாங்கு என்று தாங்குவான் எங்க அம்மா அப்பா யாரும் உங்க பொண்ணு சந்தோசமா இருக்க குறுக்க வர மாட்டாங்க அங்க சந்தோஷமா இருக்கலாம் உங்க பொண்ணு..தயவு செஞ்சு எந்த விதமான மறுப்பும் சொல்லாமல் உங்க பொண்ண எங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சம்மதம் சொல்லுங்க.."

"எனக்கு என்ன சொல்றதுன்னு ஒண்ணுமே தெரியல சங்கீதா என் புருஷன் ஒரு குடிகாரரா இருக்கார் ஏதோ என் கொழுந்தன் தயவால் என் குடும்பம் இதுவரைக்கும் ஓடிக்கிட்டு இருக்கு.. இந்த மனுஷனும் 23 வருஷமா திருந்துவது மாதிரி தெரியல.. நானும் எப்படியோ குடும்பத்தை அப்படி இப்படின்னு ஓரளவுக்கு ஓடிக்கிட்டு இருக்கேன்.. இது எல்லாத்துக்கும் எப்பதான் விடிவுகாலம் வரும்னு தெரியல.."என்று சீதா சொல்லவும், இதுதான் சரியான வாய்ப்பு என்று அதை கெட்டியாக பிடித்துக் கொண்டாள் சங்கீதா.

"இப்ப நீங்க சொன்னீங்க பாருங்க இதுதான் ரொம்ப சரியான விஷயம்.. நீங்களும் ரெண்டு பொம்பள புள்ள வச்சிருக்கீங்க எங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கும் போது எதுவுமே செய்ய வேண்டாம் கட்டின புடவையோட உங்க பொண்ணு வந்தா போதும்..எங்க அண்ணன் வெளிநாட்டில் மாசம் கை நிறைய சம்பாதிக்கிறான் அவன் பொண்டாட்டிக்கு தேவையான எல்லாத்தையும் அவன் வாங்கி கொடுப்பான்.. நீங்க எந்த மறுப்பும் சொல்லாம என்னை நம்பி உங்க மகளை கட்டிக் கொடுங்க.."என்று புளிய மரத்தை பிடித்து கெட்டியாக தொங்குவது போல் தன் விஷயத்தில் கெட்டியாக பிடித்தபடி அவரிடம் மீண்டும் மீண்டும் அவர்களது இயலாமை நிலைமையை எடுத்துச் சொல்லி அவர்களது சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தாள்.

"சரிம்மா இது விஷயமா என் குடும்பத்தில் இருக்கிற எல்லார்கிட்டயும் பேசிட்டு சொல்றேன்.."

"சரிங்க கண்டிப்பா நீங்க நல்ல விஷயம் சொல்லுவீங்கன்னு நம்பிக்கையோடு இங்க இருந்து போறேன் கண்டிப்பா சீக்கிரமே உங்க வீட்ல கல்யாண சத்தம் கேட்கப் போகுது நீங்க வேணும்னாலும் பாருங்க நான் சொன்னது கண்டிப்பா நடக்கும்.."என்ற சங்கீதா தான் போட்ட திட்டம் நிறைவேறிய சந்தோசத்துடன் அங்கிருந்து சென்றாள்.

"டேய் சுரேஷ் வீட்ல பணம் கொஞ்சம் கூட இல்ல செலவுக்கு ஏதாவது போட்டு விடு.. உன் தங்கச்சி வேற உனக்கு கல்யாணம் பண்ணி ஆகணும்னு ஒத்த கால்ல நின்னுகிட்டு இருக்கா..உன் கல்யாண வேலை பார்க்கணும் நிறைய வேலைகள் அப்படியே கிடப்பில் கிடக்கு இதுல இன்னொரு தங்கச்சி வேற இங்க வந்து வாழா வெட்டியா உட்கார்ந்து இருக்கு.. அதுக்குத்தெண்ட சோறு போடறது மட்டும் இல்லாம அது பெத்து வச்சிருக்க சனியனுக்கும் சோறு போடணும் என்ன பண்றது எல்லாம் நம்ம தலையெழுத்து!"என்று மகளைப் பார்த்து வேண்டுமென்றே குத்திக் காட்டுவது போல் பேசிய பரிமளத்தை கண்களில் கண்ணீருடன் பார்த்தாள் பிரியா.

"எப்ப பாரு போன் போட்டா போதும் காசு வேணும் காசு வேணும் போட்டு நொச்சி நொச்சின்னு உயிரை எடுங்க..அந்த புள்ளைய தான் கல்யாணம் பண்ணி கொடுத்தீங்கல்ல இனிமே அதுக்கு எந்த செலவு வேணும்னாலும் அவ புருஷன் கிட்ட தானே கேட்டு வாங்கணும் இங்கேயே வந்து உட்காருவதற்கு எதுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தீங்க? இதுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்காம இருந்திருந்தா பத்து லட்சம் செலவு பண்ண காசு மிச்சம் ஆயிருக்கும் அதை வட்டிக்கு விட்டிருந்தால், இன்றைக்கு கையில எவ்வளவு பணம் வந்திருக்கும்.. உங்களுக்கெல்லாம் காசு கேட்கிறது அவ்வளவு ஈஸியா இருக்கு இங்க உக்காந்து ஒவ்வொரு பைசாவுக்கு எவ்வளவு கஷ்டப்படுறேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.. இதுக்கு மேல தயவு செஞ்சு என்கிட்ட ஒரு ரூபாய் கூட கேட்காதீங்க நாளைக்கு எனக்கு கல்யாணம் ஆகி பொண்டாட்டி வந்தா என் குடும்பத்துக்கு நான் ஏதாவது செய்யணும்.."

"ஏண்டா இன்னும் உனக்கு பொண்ணு கூட பாக்கல அதுக்குள்ள உன் குடும்பம் என் குடும்பம்ன்னும் பிரிச்சு பேசுற அளவுக்கு வந்துட்டியா?"என்று பொய்யாய் நீர் சிந்திய தாயின் பேச்சைக் கேட்க பிடிக்காமல் அழைப்பை துண்டித்து விட்டான் சுரேஷ்.

'எப்ப பாரு போன் போட்டாலும் நல்லா இருக்கியான்னு கூட ஒரு வார்த்தை கேக்கறதே இல்லை! போன் பண்றது என்கிட்ட இருக்க பணத்துக்காக தான் இல்லன்னா நீ எல்லாம் யாருன்னு கேள்வி கேட்கக்கூடிய ஆள் தான் நீ எல்லாம் எனக்குன்னு அம்மா வந்து வாச்சி இருக்கு பாரு..'என்று மனதுக்குள் தன் தாயை திட்டிய சுரேஷ் தன் வேலைகளை பார்ப்பதற்காக சென்று விட்டான்.

"ஏம்மா வார்த்தைக்கு வார்த்தை என்ன இப்படி குத்தி குத்தி காட்டி பேசுறியே? என் கல்யாணத்துக்கு அப்படி என்ன நீங்க பெருசா செஞ்சுட்டீங்க சொல்லு!"

"வாய மூடு ப்ரியா ஏன் உனக்கு என்ன செய்யாம எதுல குறை வச்சு கட்டிக் கொடுத்தோம்.. உங்க அக்காவுக்கு செஞ்சதுல ரெண்டு மடங்கு அதிகமாக தான் உனக்கு செஞ்சு கட்டிக் கொடுத்தோம்..அவளுக்கும் நான் தான் கல்யாணம் பண்ணி வச்சேன் புகுந்த வீட்ல என்ன பிரச்சனைனாளும் அதை அப்படியே சமாளிச்சு யாருக்கும் தெரியாம ஒளிச்சு மறைச்சு அந்த குடும்பத்தையும் பார்த்துகிட்டு இந்த குடும்பத்துக்கும் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செஞ்சுகிட்டு இருக்கா..இப்ப அவதான் உங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறா அவளையும் இந்த வயித்துல தான் பெற்றேன் உன்னையும் இந்த வயித்துல தான் பெத்தேன் அவளுக்கு இருக்க திறமை ஏன் உனக்கு இல்லாம போச்சு சொல்லு?"

"தயவு செஞ்சு என்னை பேச வைக்காதீங்க அவளை எவ்வளவு பெரிய இடத்துல கல்யாணம் பண்ணி கொடுத்தீங்க என்ன கல்யாணம் பண்ணவன் கவர்மெண்ட் வேலை இருக்குன்னு சொல்லி ஏமாத்தி கல்யாணம் பண்ணி 25 லட்சத்துக்கு கடன் வாங்கி கவர்மெண்ட் வேலையையும் விட்டுட்டு இப்ப கடன்காரன் ஊதாரியா சுத்திக்கிட்டு இருக்கான்..அவன் வேலைக்கு போய் நாலு காசு சம்பாதிச்சா நான் ஏன் இங்கே வர போறேன் எனக்கு மட்டும் என்ன தலையெழுத்தா?"என்று குரல் அடைத்தபடி பேச முடியாமல் பேசிய பிரியா கண்களில் வந்த கண்ணீரை சுண்டி எரிந்துவிட்டு தன் மகளை கைகளில் தூக்கிக் கொள்ள அவள் தாய் கேட்ட வார்த்தை அவளை உயிரோடு கொன்று விட்டது.

"பேச்சு எல்லாம் நல்ல பிரம்மாண்டமா தான் பேசுற? உன் புருஷன் தான் எதுக்கும் சரிபட்டு வர மாட்டான்னு தெரியுதே அப்புறம் எதுக்கு உன் வயித்தை ரொப்பி கிட்டு இங்க வர்ற? அதுவும் வயித்துள்ள இந்த தடவை ஒன்னுக்கு ரெண்டு வேற.. உனக்கு இதோ பிறந்திருக்க உன் பிள்ளைக்கு அடுத்து உனக்கு பிறக்க போற பிள்ளை அத்தனைக்கும் காலம் முழுக்க வச்சு நான் தான் சோறு போடணும் என் தலை எழுத்து நீ எல்லாம் பேசுறதுக்கு தகுதியே இல்ல உன் வாயை பொத்திகிட்டு போ.."என்று மகளையே அசிங்கமாக பேசிவிட்டு செல்லும் இந்த பரிமளம் எப்படி நாளைக்கு தனக்கு வர போகும் மருமகளை வைத்து பார்த்துக்கொள்ள போகிறார்?

தன் புகுந்த வீட்டில் தன் கணவனோடு சந்தோஷமாக வாழ வேண்டும் என்று யோசிக்கும் சிந்தியா ஒரு பக்கம்.

பெற்ற மகளுக்கு சோறு போடுவதற்கு கணக்கு பார்க்கும் பரிமளம் மறுபக்கம்.

தான் சம்பாதிக்கும் ஒரு ரூபாயாக இருந்தாலும் அதை கணக்கு பார்த்து செலவு செய்யும் சுரேஷ் மறுபக்கம்.

இந்த மூவரும் ஒரே புள்ளியில் இணையும் போது அங்கு இசைத்துக் கொண்டிருந்த ரீங்காரம் எப்படி தன் சத்தத்தை குறைத்து நிசப்தம் ஆகுமா? இல்லை ரீங்காரம் அதிகமாகி அனைவரின் காதுகளையும் செவிடாக்கி விடுமா?

 


அத்தியாயம் 2:

"இப்பதான் சங்கீதா உங்க அண்ணனுக்கு போன் பண்ணி பேசுனேன் அவனுக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிச்சிருக்காம்.. மேக்கொண்டு நம்மள பேச சொல்லிட்டான் எந்த பிரச்சினையும் இல்லை கண்டிப்பா உங்க அண்ணன் ஒத்துக்கொள்வான்னு உன்கிட்ட அப்பவே சொன்னேன் இல்ல.. சரி அதை விடு அந்த பொண்ணு வீடு எப்படி? நாம எதிர்பார்த்தது மாதிரி எல்லாம் சரியா இருக்குமா?"

"நீ கவலைப்படாதம்மா நீயும் நானும் திட்டம் போட்டது மாதிரியே எல்லாம் கனகச்சிதமா நடக்குது..கண்டிப்பா அந்த பொண்ணு நம்ம சொல்ற எதையும் மீறி நடக்காது நம்ம நில்லுனு சொன்னா நிக்கும் உட்கார்னு சொன்னாதான் உக்காரும் அந்த மாதிரி டைப் நீயும் நானும் எதிர்பார்த்தது மாதிரியே எல்லாம் நடக்கும்.."

"அப்பாடி இப்பதான் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு சங்கீதா நானும் நீயும் எதிர்பார்த்தது எல்லாம் நடந்துட்டா அந்த கடவுளுக்கு கண்டிப்பா ஒரு தேங்காயாவது உடைக்கணும்.."

"நீ ஒரு கஞ்ச பிசினாரி எதுக்கு ஒரு தேங்காய் அரை தேங்காய் கொண்டு போய் உடைப்பது போதும்.."

"நீ சொல்றது சரிதான் சங்கீ எதுக்கு ஒரு தேங்காயை வேஸ்ட் பண்ணிட்டு.."என்று கடவுளிடம் வைக்கும் வேண்டுதலுக்கு கூட கணக்கு பார்க்கும் தன் அன்னையை எண்ணி தலையில் அடித்துக் கொண்டாள் சங்கீதா.

"பாப்பா இந்த மாப்பிள்ளை போட்டோவை பார்.. நம்மள விட எல்லாத்துலையும் வசதி கூட உன்னை கண்டிப்பா நல்லா வச்சு பாத்துக்குவாங்க உன் சங்கீதா அத்தாச்சி அண்ணன் சங்கீதா நல்ல பொண்ணு கண்டிப்பா அவங்க அண்ணனும் நல்லவரா தான் இருப்பார்.. அதனால எந்த கவலையும் இல்லை உன்னை நம்பி அந்த வீட்டுக்கு கல்யாணம் பண்ணி அனுப்பலாம்னு நான் உங்க அப்பா சித்தப்பா பெரியப்பா எல்லாரும் சேர்ந்து முடிவெடுத்து இருக்கோம் உனக்கு விருப்பம் இருந்தா சொல்லு.."என்று செல்ப்போனை மகளிடம் கொடுத்து விட்டு வெளியேறினார் சீதா.

அவர் போனை கொடுத்து விட்டு சென்றதும் அதை ஆவலுடன் கைகளில் வாங்கிக் கொண்ட சிந்தியா போனில் இருக்கும் தன் வருங்கால கணவனின் புகைப்படத்தை பார்க்க பார்த்தவுடன் அவளுக்கு மிகவும் பிடித்து போய் விட்டது.

அவளுடன் படித்த தோழிகள் அனைவரும் திருமணம் செய்து கொண்டதும் இவளுக்கும் திருமணத்தின் மீது நாட்டம் வந்தது என்னவோ உண்மைதான்.
அதிலும் இப்பொழுது பார்க்கும் சீரியல்கள் எல்லாவற்றிலும் கணவன் மனைவி மீது உயிரையே வைத்து அவளைத் தாங்குவது போல் தன் கணவனும் தன்னை தாங்குவான்.. அதிலும் அவன் தன்னை விட அழகாக இருப்பதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.

பேதை பெண்ணுக்கு திருமணம் செய்து கொள்ளும் ஆண் அழகாக இருக்கிறானா என்பதை விட அவன் மனம் அழகாக இருக்கிறதா? தன்னை கண்கலங்காமல் பார்த்துக் கொள்வானா? என்பதை ஆராயாமல் விட்டுவிட்டாள்.

'நீங்க பாக்குறதுக்கு எவ்வளவு அழகா இருக்கீங்க?கண்டிப்பா உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க கூட ஜோடியா போகும் போது எல்லாரும் நம்மை பார்த்து பொறாமை படுவாங்க..'என்று போட்டோவில் இருந்த தன் வருங்கால கணவனிடம் பேச, அதற்கு மேல் எந்தவிதமான தயக்கமும் இல்லாது பெற்றோரிடத்தில் தன் சம்மதத்தை தெரிவிக்க, கல்யாண வேலைகளும் பரபரப்புடன் தொடங்கியது.

"இங்க பாருங்க எங்க வீட்ல எல்லாருக்கும் உங்க பொண்ண ரொம்ப புடிச்சிருக்கு.. எல்லாத்துக்கும் மேல எங்க அண்ணன் உங்க பொண்ணோட வருங்கால கணவனுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு.. அண்ணன் நிச்சயதார்த்தத்துக்கு வர முடியாது கண்டிப்பா கல்யாணம் ஒரு வாரம் இருக்க வந்துடுவான் இதற்கு மேல் ஆகுரத்தை நம்மை பார்க்க சொல்லிட்டான் உங்களோட முடிவு என்ன?"

"இதுல என்னோட முடிவுன்னும் எதுவும் இல்லை சங்கீதா.. எதுவா இருந்தாலும் மாப்பிள்ளை வீடு நீங்க சொல்றதுதான் ஆனால் கல்யாணத்துக்கு எங்களால முடிஞ்ச சீர் அத்தனையும் செய்வோம்.. எங்களுக்கு தேவை எங்க பொண்ணு காலம் முழுக்க சந்தோஷமா இருக்கணும் அவ்வளவுதான்.. உனக்கே தெரியும் என் குடும்பத்தோட நிலைமை என்னன்னு எங்களோட சக்தியை மீறி தான் எங்க பொண்ணுக்கு கடன் வாங்கி கல்யாணம் பண்ணி வைக்க போறோம் எவ்வளவு கடன் வந்தாலும் நாங்க கஷ்டப்பட்டு கட்டிடுவோம் எங்களுக்கு தேவை என் பொண்ணு சந்தோஷமா இருக்கணும் அம்புட்டு தான்.."

"அத பத்தி நீங்க எந்த கவலையும் படாதீங்க அம்மா நீங்களும் கொஞ்சம் சொல்லுங்க.."என்ற சங்கீதா பொம்மை போல அமர்ந்திருந்த தன் தாயை பார்க்கவும், சங்கீதா தான் பேசும் வரை பேசாது அமைதியாக இருக்க வேண்டும் என்று வரும்போது அவள் தாயிடம் கண்டிஷனாக சொல்லிவிட்டிருக்க,மகளாக சொல்லும் வரை வாய் திறக்காமல் அமர்ந்திருந்த பரிமளம் சங்கீதா பேச சொல்ல,"கவலைப்படாதீங்க சம்மந்தி அம்மா உங்க பொண்ணு இனிமே என் பொண்ணு மாதிரி மாதிரி என்ன இனிமே என்னோட பொண்ணு தான்..வீட்ல நானும் அவரும் மட்டும் தான் இனிமே எங்களுக்கு துணையா எங்க மருமகளும் இருப்பாள்..எந்த கவலையும் இல்லாம உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி குடுங்க.. கண்டிப்பா நீங்க வருத்தப்படுவது மாதிரி எதுவும் நாங்க செய்ய மாட்டோம்.."என்றதும் சீதாவுக்கும் அவள் குடும்பத்துக்கும் சங்கீதா குடும்பத்தை மிகவும் பிடித்தது.

அவர்களுடன் காட்சி பொருளாக அமர்ந்திருந்த பிரியா தன் வருங்கால அண்ணியை நினைத்து கவலை கொண்டாள்.

அவளால் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தவும் முடியவில்லை. என்னதான் இருந்தாலும் உடன் பிறந்தவன் ஆயிற்றே! அவன் வாழ்க்கையை சொந்த தங்கை தன்னால் அழிக்க முடியுமா? என்று அமைதியாக இருந்து விட்டாள்.

"சரிங்க இப்போதைக்கு கை நனச்சுக்கிட்டு தட்டு மாத்திக்கலாம்.. கல்யாணமும் பெருசா யாருக்கும் சொல்ல வேண்டாம் உங்க நெருங்கின சொந்தம் எங்க நெருங்கின சொந்தம் என்று ஒரு 50 பேர் வந்தால் மட்டும் போதும் எதுக்கு தேவையில்லாமல் போட்டு எல்லாரையும் இழுத்துக்கிட்டு?"என்று சுரேஷின் தந்தை பழனி சொல்ல, பெண் வீட்டுக்காரரும் அவர்கள் தங்கள் செலவுக்காக தான் அப்படி சொல்கிறார்கள் என்று அதை நல்ல விதத்தில் எடுத்துக் கொண்டார்கள்.

ஆனால் உண்மை எதுவெனில் திருமணம் அனைவருக்கும் சொல்லி செய்தால் பெரிய அளவில் செலவாகும் அதுவும் ஒரு சீர் கூட செய்யாது தன் வீட்டுக்கு வரும் மருமகளுக்கு இதுவே போதுமானது என்று ஏற்கனவே வீட்டில் பேசி முடிவு செய்துவிட்டு தான் வந்திருந்தார்கள்.

"சரி சரி நல்ல நேரம் முடிய போகுது வாங்க தட்ட மாத்திக்கலாம்.."என்று சங்கீதா அழைக்க, எளிமையாக தட்டை மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தத்தை முடித்தார்கள்.

சங்கீதா சந்தோஷத்தில் திளைத்துப் போயிருக்க அவளை முறைத்துப் பார்த்தான் கணவன் கண்ணன்.

"அப்புறம் அக்கா நீ ஆசைப்பட்டது மாதிரியே உனக்கு நல்லபடியா நிச்சயதார்த்தம் முடிந்தது உனக்கு சந்தோசம் தானே.."என்ற தங்கை நித்யாவை அணைத்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டாள் சிந்தியா.

அடுத்த ஒரு வாரம் ரெக்கை கட்டி பறந்து செல்ல, திருமண நாளும் இனிதே புலர்ந்தது.

"அப்புறம் மச்சான் இன்னைக்கு உனக்கு கல்யாணம் இன்னையில இருந்து குடும்பஸ்தன்.. எங்களை எல்லாம் மறந்துடாத மச்சான் அப்ப அப்ப காண்டாக்ட் பண்ணு.."

"டேய் உங்களை எல்லாம் என்னால மறக்க முடியுமா? வர்ற பொண்டாட்டிக்காக ஃப்ரெண்ட்ஷிப்பை விட்டுக் கொடுக்கிற கேவலமான நண்பன் நான் கிடையாது.."என்று தலையை சீவிய படி சுரேஷ் சொல்லிக் கொண்டிருக்க, அவனை அழைப்பதற்காக வந்த அவனது மச்சான் சத்தியம் காதில் இது விழுக, பக்குவ படாத வயதில் இருந்தவனுக்கு அவன் சொன்னதன் அர்த்தம் புரியவில்லை.

"மாமா நீங்க ரெடியாயிட்டீங்களா?உங்களை ஐயர் கூட்டிட்டு வர சொன்னாங்க மச்சான் நான் தான் உங்களை கூட்டிட்டு வரணுமாம் வாங்க போகலாம்.."என்று உரிமையோடு சுரேஷின் கைகளை பிடித்து அழைத்துச் செல்ல, அவனோடு சந்தோசமாக மணமேடைக்கு வந்தான் சுரேஷ்.

"நேரம் ஆகுது பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ.."என்று ஐயர் குரல் கொடுக்க பெண்ணையும் அழைத்துக் கொண்டு வந்தார்கள்.

முதன்முதலாக தன்னவளை அப்போதுதான் நேரில் பார்த்தான் சுரேஷ்.

அரக்கு நிற பட்டு புடவையில் கவரிங் நகைகள் அணிந்து பூமிக்கு வலித்து விடுமோ என்று பாதம் நோகாமல் அன்ன நடை நடந்து வந்தவளை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

மகன் அவனது வருங்கால மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை கொடுகொடுப்புடன் பார்த்த பரிமளம் பக்கத்தில் நின்று கொண்டிருந்த மகளிடம் அதை கண்களால் காட்ட அதற்கு பதிலாக சைகை செய்து கண்களை மூடி திறந்தாள் சங்கீதா.

"என்ன? கல்யாணம் முடியற வரை அமைதியாக இருமா எதுவும் செய்யக்கூடாது.. அண்ணன் சந்தோசமா இருக்கட்டும் எதுவும் சொல்ல வேண்டாம் நடக்கிறது எல்லாம் நடக்கட்டும்.."என்று சொல்லிவிட அதற்கு மேலும் பரிமளம் எதுவும் சொல்லாமல், கடமையே என்று அரிசியை தூவி ஆசீர்வாதம் செய்தார்.

சிந்தியா கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு தன் மனைவியாகிக் கொண்டான் சுரேஷ்.

சங்கீதாவின் கணவன் மச்சினன் என்ற முறையில் மோதிரம் போட சொல்லி தன் மகனிடம் கொடுத்து விட்டான்.

அந்த வீட்டு மருமகன் அவனுக்கு தான் அவர்களை ஆதி முதல் அந்தம் வரை தெரியும் அல்லவா?அவர்களிடம் செல்வது கூட பிடிக்காமல் தன் மகனை விட்டு தன் மச்சினனுக்கு மோதிரம் போட சொல்ல, அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

சிந்தியா வீட்டில் மணமகனுக்கு கை செயினும் மோதிரமும் போட்டிருந்தார்கள்.





கோவிலில் எளிமையாக திருமணம் நடந்து முடிந்திருந்ததால் ஹோட்டலில் வந்திருந்த சுமார் 40 பேருக்கு மட்டும் உணவு வாங்கி கொடுத்து இருந்தார்கள்.
சிந்தியா தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த கணவனைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியாது அவன் மீது மட்டும் கவனம் செலுத்தினாள்.

அவனைப் போலவே அவளும் இப்போதுதான் முதன்முதலாக அவனை நேரில் பார்க்கிறாள்.

ஒரு சிலர் புகைப்படத்தில் அழகாக இருப்பார்கள் நேரில் பார்க்கும் பொழுது அதற்கு எதிர்ப்பதமாக பார்க்க அழகாக இல்லாமல் இருப்பார்கள்.

அவளும் ஒரு வேலை தான் அவசரப்பட்டு இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டோமோ! என்று தனக்குத்தானே யோசித்து யோசித்து கவலைப்பட்டுக் கொண்டவள் இப்பொழுது தன் கணவன் புகைப்படத்திலிருந்ததை விட நேரில் அழகாக இருப்பதை கண்டு 'இவன் என் கணவன் எனக்கு மட்டுமே சொந்தமானவன் எனக்கே எனக்கு'என்று உள்ளம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க, மனம் முழுவதும் நிறைந்த சந்தோஷத்துடன் இருந்தாள்.

"அப்புறம் இங்க பாருங்க விருந்து முதல்ல நாங்க வைக்கிறோம்.. அதுக்கு அடுத்து வர நாலு நாள் நல்லா இல்லை அதுக்கப்புறம் நீங்க பொண்ணு வீட்ல விருந்து வைங்க.. உங்க வீட்டுக்கு மறு வீடு வரும் போது அனுப்பி வைக்கிறோம் இப்ப தேவை இல்லாமல் அங்கேயும் இங்கேயும் போட்டு அலைக்கழிக்க வேணாம்.. உங்க வீடு இங்க பக்கத்துல எல்லாம் இல்லை ரொம்ப தூரமா இருக்கு அதனால எங்க வீட்டிலேயே எல்லா ஏற்பாடுகளும் பண்றோம்.."என்றார் பழனி.
"இல்லைங்க சம்மந்தி எங்க வீட்டு வழக்கப்படி பொண்ணு வீட்லதான் சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு பண்ணுவோம்.. அதனால நீங்க தப்பா எடுத்துக்காம பெண்ணையும் மாப்பிள்ளையும் எங்க கூட அனுப்பி வச்சா நாங்க நாளைக்கு முதல் விருந்து வைத்து விடுகிறோம்.. அதுக்கப்புறம் நீங்க வச்சுக்கலாமே.."என்று தன்மையாகவே சிந்தியா தந்தை கனகம் சொல்ல, அவர் சொன்னதைக் கேட்டு கோபம் வந்துவிட்டது மாப்பிள்ளை வீட்டிற்கு.
"நீங்க என்ன நாங்க சொல்றதை கேட்காம உங்க இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்கீங்க?அதெல்லாம் முடியாது நாங்க என்ன சொல்றோமோ அதை தான் நீங்க கேக்கணும் வேணாம்னு சொன்னா உங்க பொண்ணு இங்கேயே இருக்கட்டும்..அதுவும் உங்க வீடு பாக்குறதுக்கு தீப்பெட்டி மாதிரி இருக்கு ஒரு ரூம் கூட இல்ல அதுல எப்படி அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா அவங்க ரெண்டு பேரையும் அங்கே விட்டுட்டு நீங்க எல்லாரும் வீட்டை விட்டு வெளிய போயிடுவீங்களா..?அதெல்லாம் எங்களுக்கு தெரியாது நாங்க என்ன சொல்றோமோ அதை மட்டும் தான் நீங்க கேக்கணும் இல்லாட்டி நாங்க முதல்ல சொன்னது தான் ஒரே முடிவு.."என்று ஒரே போடாக போட்டு விட,அரண்டு போய்விட்டார்கள் சிந்தியா குடும்பத்திலிருந்த அனைவரும்.

தன் பெண் அவர்கள் வீட்டிற்கு மருமகளாகி இன்னும் ஒரு மணி நேரம் தாண்டிராக நிலையில் அவர்கள் இப்படி பேசுவதை கேட்டு அதிர்ந்து போய்விட்டார்கள்.

திருமணத்திற்கு முன்பாக இனித்து இனித்து பேசியவர்கள் இப்பொழுது முகத்தில் அடித்தது போல் அதுவும் தாலி கட்டிய ஒரு மணி நேரத்தில் "உங்கள் பெண் உங்களோடு இருக்கட்டும்" என்று சொல்லவும் என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து போய்விட்டார்கள்.

சிந்தியா சுரேஷ் இருவரும் சங்கீதா பிரியா ஆகிய இருவரின் பிள்ளைகளோடும் பேசி சிரித்தபடி இருந்ததால் அவர்களுக்கு இது தெரியாமல் போனது.

"என்னங்க சம்பந்தி எதுக்கு இப்படி பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க? இப்ப என்ன நீங்க சொன்னது மாதிரி எங்க பொண்ணையும் உங்க கூடவே அனுப்பி வைக்கிறோம்.. தயவு செஞ்சு இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க சம்மந்தி என் பொண்ணு சின்ன பிள்ளை ஏதாவது தெரியாம தப்பு பண்ணிட்டா அனுசரிச்சு அவளிடம் சொன்னீங்கன்னா கண்டிப்பா அதை திருத்தி அமைதியா இருப்பா..எங்க பொண்ணால உங்க குடும்பத்தில் எந்த பிரச்சனையும் வராது எல்லாத்தையும் நாங்க சொல்லி தான் அனுப்பி வைக்கிறோம் உங்களை நம்பி தான் நாங்க ஒப்படைக்கிறோம்.."என்ற சிந்தியா குடும்பத்தினர் மன கலக்கத்துடன் தங்கள் வீட்டு பெண்ணை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு மனமே இல்லாமல் கிளம்பினார்கள்.

சிந்தியா அதுவரை தன் கணவனை பற்றி மட்டும் யோசித்துக் கொண்டிருந்தவள் இப்பொழுது தன் தாய் தந்தை தன் உறவினர் அனைவரும் தன்னை தனியாக விட்டுச் செல்லவும் கண்கள் தன்னால் கலங்கியது.

சிந்தியா தாய் தந்தை சகோதர சகோதரி என்று அனைவரும் அவளை கட்டி பிடித்துக் கொண்டு அழுக,அதையெல்லாம் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுரேஷ்க்கு அவர்கள் செய்வதெல்லாம் வேடிக்கையாக இருந்தது.

"இங்க பாருமா இதுவரைக்கும் யாரும் எதுவும் சொல்லாத படி உன்னை நல்லபடியா வளர்த்து கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு.. நீயும் எங்களுக்கு எந்த கெட்ட பெயரையும் வாங்கி கொடுக்காமல் இருந்த அதேபோல உன் புகுந்த வீட்லயும் எல்லாரையும் அனுசரிச்சு அவங்க மனசு கோணமா நடந்துக்கோ.. உன் புருஷன் என்ன சொல்றாரோ அவர் சொல்றதை கேட்டு அப்படியே நடந்துக்க என்னையும் உங்க அப்பாவையும் எப்படி அப்பா அம்மா மாதிரி நினைக்கிறாயோ அதே மாதிரி உன் மாமனார் மாமியார் ரெண்டு பேரையும் எங்களை பார்த்துக்கொள்வது மாதிரியே பார்த்துக்கணும்.. பார்த்து கவனமா இருடா போற இடத்துல சூதனமா இருக்கணும் இன்னும் ஒரு நாள் அப்புறம் நம்ம வீட்டுக்கு வந்துட்டு போகலாம்..நாங்களும் எங்கேயும் போகல இதோ பக்கத்துல தான் இருக்கோம் நாளைக்கு விருந்துக்கு வருவோம் உனக்கு பேசணும்னு தோணுச்சுன்னா போன் பண்ணி பேசு போற இடத்துல சந்தோசமா இரு எங்களுக்கு அது போதும்.."என்று சீதா மகளை அணைத்து படி கண்களில் நீர் வழிய சொல்ல, அவர்களை கட்டிப்பிடித்து அழுது கரைந்து விட்டாள் சிந்தியா.

மகளை சமாதானப்படுத்தி விட்டு செல்வதற்கே அவர்களுக்கு அரை மணி நேரம் முடிந்து இருக்க அதன் பிறகு அவளை அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள் சுரேஷ் குடும்பத்தார்கள்.

"இங்க பாரு இந்த கல்யாணத்துக்கு வராம இருந்தா எனக்கு அசிங்கம் அதனால் தான் வந்து தலையை காட்டிட்டு போறேன்.. நீயும் இன்னைக்கு சாயந்திரம் வீட்டுக்கு வந்து சேரனும் இதுக்கு மேல இங்க இருக்க கூடாது ஒழுங்கு மரியாதையா வந்துடு.."என்று மனைவியை எச்சரித்துவிட்டு தன் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு சென்று விட்டான் கண்ணன்.

"வலது கால் எடுத்து வச்சு உள்ள வா சிந்தியா.."என்று நாத்தனார் என்கிற முறையில் சங்கீதா அழைக்க, தன் புகுந்த வீட்டில் தன் கணவனோடு சேர்த்து சந்தோஷமாக அடி எடுத்து வைத்தாள் சிந்தியா.

பூஜை அறைக்கு அழைத்துச் சென்று விளக்கேற்றும் படி சொல்ல,அவர்கள் சொன்னது போலவே பூஜை அறையில் விளக்கு ஏற்றி முடித்தவள் கண்களை மூடி கடவுளிடம் தன் மனதில் உள்ளவற்றை பிரார்த்தித்துக் கொண்டாள்.

'கடவுளே எங்க அப்பா அம்மா எல்லாரையும் விட்டு எங்க வீட்டுக்கு வந்து இருக்கேன் எங்க அப்பா அம்மா பெயர் கெட்டுப் போகாதபடி இந்த வீட்டில் நான் நல்ல பெயர் எடுக்க வேண்டும் எனக்கு எந்த பிரச்சனையும் வராம நீங்க தான் பாத்துக்கணும்.. என் புகுந்த வீட்ல இருக்க எல்லாரையும் நல்லா பாத்துக்கோங்க நானும் என் புருஷனும் எப்பவும் சந்தோஷமா இருக்கணும் என் வேண்டுதலை நிறைவேற்றி வையுங்கள்.. என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்ய, அவள் வேண்டுதல் அந்த கடவுள் காதில் விழுகாமல் போனது தான் விதியோ.

சங்கீதாவும் பரிமளமும் தாங்கள் நினைத்தது போலவே இந்த திருமணம் நடந்து முடிந்ததை நினைத்து மனதிற்குள் மத்தளம் கொட்டி வாசித்தார்கள்.

பூ இதழ்களைப் போல மென்மையான மனம் கொண்ட பெண்ணவள் கடவுளிடம் வேண்டிக் கொண்ட அத்தனையும் அவள் வேண்டி கொண்டதற்கு எதிர்ப்பதமாகத்தான் நடக்கப்போகிறதை ஒருவேளை அறிந்து கொண்டால்??
விடை விதியின் கைகளில் காலத்தின் கட்டளையின் பெயரில்.

 

அத்தியாயம் மூன்று:​

"சிந்தியா போய் நல்லா தலைக்கு தேய்ச்சு குளிச்சிட்டு இந்த புடவையை கட்டிக்கிட்டு வா.."என்று அவள் வாங்கி வைத்திருந்த சாதாரண நைலான் புடவையை அவளிடம் கொடுக்க, அதை கைகளில் வாங்கிய சிந்தியா தயக்கமாக சங்கீதாவை பார்த்தாள்.​

"என்ன ஆச்சு ஏன் இப்படி பார்த்துகிட்டு இருக்க அப்ப உனக்கு புடவை கட்ட தெரியாதா?"​

"ஆமாங்கண்ணி ஒரு ரெண்டு தடவை எனக்கு யாராவது கட்டிவிட்டு பழகி விட்டா நானே அடுத்தடுத்து கட்டிக்குவேன்.."​

"ஏன் இத்தனை நாள் உங்க வீட்ல இருக்கும்போது உங்க அம்மாகிட்ட இதையெல்லாம் கத்துக்க வேண்டியது தானே? உனக்கு கல்யாணம் பண்ண போறாங்கன்னு நல்லா தெரியும் தானே அப்பவே உங்க அம்மாகிட்ட புடவை கட்டுவதற்கு சமைக்க பாத்திரம் கழுவ வீட்டு வேலை பார்க்க கத்துக்க வேண்டியது தானே!"என்று பட்டென சொல்ல, சிந்தியாவின் பூ முகம் வாடிப்போனது.​

"இல்ல அண்ணி அம்மாவை எதுவும் குறை சொல்லாதீங்க அவங்க இதையெல்லாம் கத்துக்க சொல்லி சொன்னாங்க தான்.. நான்தான் அத்தை கிட்ட வந்து இங்க உள்ள பழக்க வழக்கம் எல்லாத்தையும் கத்துக்கிட்டு அதுக்கு தகுந்தார் போல என்னை மாத்திக்கலாம்னு விட்டுட்டேன்..தயவு செஞ்சு நான் தப்பு செஞ்சு இருந்தா மன்னிச்சிடுங்க ஒரே ஒரு தடவை மட்டும் கட்டி விடுங்க அண்ணி அப்புறம் நானே கட்டிக்கிறேன்.."என்று பாவமாக கேட்க, முகத்தை திருப்பிக் கொண்ட சங்கீதா "பிரியா உன் அண்ணன் பொண்டாட்டிக்கு நீயே புடவை கட்டி விடு இவளை தயார் பண்ணு நான் போய் சாந்தி முகூர்த்தத்துக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் பண்றேன்.."என்று அவளை தங்கையிடம் ஒப்படைத்து விட்டு செல்ல, அவளுக்கு அந்த வீட்டில் தெரிந்தது எல்லாம் சங்கீதா ஒருத்தியை மட்டும் தான்.​

அதனால் தான் மனதில் தயக்கம் இருந்த போதும் வெளிப்படையாக கேட்டு விட்டாள்.​

இப்பொழுது அவள் தமக்கை வரவும், கண்களில் கண்ணீரே வந்து விட்டது.​

'ஒழுங்கு மரியாதையா உன் வீட்ல இருக்கும்போது உங்க அம்மா எல்லா வேலையும் பார்க்க சொல்லி உன்னை எவ்வளவு தூரம் சொன்னாங்க அப்பவே இதையெல்லாம் தெரிஞ்சு வச்சிருந்தா இப்ப வந்து இங்க கண்ண கசக்கி கிட்டு இருக்க வேண்டிய அவசியம் இருக்குமா? எப்பவுமே அம்மா சொல்றதை கேட்டா தப்பா நடக்குமா?'என்று அவள் மனம் அவளை திட்ட, மனதின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது அமைதியாகிவிட்டாள்.​

"கவலைப்படாதீங்க அண்ணி கல்யாணம் பண்ண புதுசுல எனக்கும் இந்த மாதிரி தான் புடவை கட்ட தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டேன்.. அதுக்கப்புறம் வீட்ல இருக்கும்போது நானே புடவை கட்டி கத்துக்கிட்டேன் அதே மாதிரி நீங்களும் கத்துக்கலாம்.."என்று தன்மையாக சொல்ல, பிரியா பேசிய வார்த்தைகள் ஓரளவு காயப்பட்ட சிந்தியா மனதை சமாதானப்படுத்தியது.​

இவளும் தன்னை பற்றி ஏதாவது தவறாக பேசி விடுவாளோ! என்று பயந்து கொண்டு இருந்த சிந்தியா அவள் சாதாரணமாக பேசியிருந்ததாள் மனம் சமாதானம் அடைந்தாள்.​

அதன் பிறகு அவளை தயார் செய்து முதலிரவு அறைக்கு அனுப்பி வைக்க, அதுவரை மற்றவற்றை யோசித்து கொண்டு இருந்த சிந்தியா கணவனோடு இருந்த அறைக்குள் தனியாக அனுப்பி வைக்கவும் மற்ற அனைத்தையும் மறந்து மனம் முழுவதும் அடுத்து நடக்கப் போவதை நினைத்து நடுங்க ஆரம்பித்தது.​

ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம் என்றால் அவள் திருமணம் அடுத்தபடியாக அவளுக்கு நடக்கும் கணவனுடனான முதல் தனிமை.​

அந்த தனிமை அவளும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது தான்.​

திருமணமானது முதல் அவளை சுற்றி அனைவரும் இருந்து கொண்டு இருந்ததால் கணவனை தனிமையில் சந்திக்க முடியவில்லை.​

இப்பொழுது தங்கள் இருவருக்கும் இடையில் யாரும் வர முடியாது அல்லவா?​

பால் சொம்பு கூட அல்லாது ஒரு சிறிய கிண்ணத்தில் பால் காய்ச்சி அதன் மீது ஒரு சிறிய டம்ளர் வைத்துக் கொடுத்திருந்தார்கள்.​

அவள் இதுவரை பார்த்த நாடகங்கள் படங்களில் எல்லாம் நாயகி சொம்பில் தான் பால் கொண்டு செல்வார்கள்.​

'ஒருவேளை நாம பார்த்தது எல்லாமே வெறும் கண் துடைப்பாக மட்டும் தான் இருக்குமோ? படத்துல டிவில காட்டுறது எல்லாம் நம்பிகிட்டு இருக்க முடியாது.. 'என்று மனசை சமாதானப்படுத்திக் கொண்டு, முதலிரவு அறைக்குள் கால்கள் தயங்க சிரமப்பட்டு உள்ளே நடந்து வந்தாள்.​

அங்கு இவளது வருகைக்காக காத்துக் கொண்டிருந்த சுரேஷ் மனதிற்குள் முதல்முறையாக ஒரு பிடித்தமின்மை.​

மற்ற பெண்களைப் போல் அவள் மனைவி சாதாரண உடல் வாகு கொண்டவள் அல்ல.​

மிகவும் ஒல்லியான தோற்றம் கொண்டவள் அதுவும் புடவை கட்டியதால் அவள் தோற்றம் அப்படியே தெரிய, அவன் மனதிற்குள் ஒரு நெருடல் வந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் பக்கத்தில் வந்த மனைவியை அணைத்துக் கொள்ள அவன் அணைப்பிலிருந்து முதலில் விலகினாள்.​

கேள்வியாக பார்த்த கணவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாது,"இல்லை முதல்ல பால் குடிக்கணும் அப்புறம் உங்க கால்ல விழுக சொன்னாங்க நல்ல நேரம் நைட் 10 மணிக்கு மேல் தான் அதுவரை பேசிகிட்டு இருக்க சொன்னாங்க.."என்று எங்கே அவன் தன்னை தவறாக நினைத்து விடுவானோ என்று மனப்பாடம் செய்தது போல் ஒப்பிக்க அவள் சொன்ன விதத்தில் சின்ன புன்னகை அரும்பியது அவன் முகத்தில்.​

"சரி வா இப்ப என் பக்கத்தில் உட்காரு.."என்று அவளை தன் பக்கத்தில் அமர வைத்துக் கொள்ள, கணவனுடனான முதல் நெருக்கம் அவளை என்னமோ செய்தது.​

"சரி சொல்லு உனக்கு பிடிச்சது பிடிக்காத விஷயம் இது பற்றி கொஞ்ச நேரம் சொல்லு நேரம் போயிடும்.."​

"இல்ல நீங்க முதல்ல உங்களுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதுன்னு எல்லாத்தையும் சொல்லுங்க ஒரு மனைவியா நான் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுக்கணும்..இப்பவே நீங்க எல்லாத்தையும் சொல்லிட்டா அதுக்கப்புறம் போக போக ஓரளவுக்கு நான் கத்துக்குறேன்.."​

"இப்போதைக்கு எனக்கு என் பொண்டாட்டி மட்டும் தான் வேணும் அதை தவிர வேறு எதுவும் வேண்டாம்.."என்று அவள் மூக்கை பிடித்து ஆட்ட, அவன் சொன்னதில் பெண்ணவள் முகம் நாணத்தில் சிவந்து போனது.​

"ஐயோ கடவுளே நான் இதைக் கேட்கல வேற ஏதாவது கொஞ்ச நேரம் பேசலாம்.."​

"ஊஹூம் நான் இதைப் பற்றி மட்டும் தான் பேசுவேன் எனக்கு இதைப் பற்றி பேச தான் ரொம்ப பிடிச்சிருக்கு.."என்று சின்ன குழந்தை போல் சொல்ல, அவன் சொன்ன விதத்தில் அவள் மனம் குளிர்ந்து போனது.​

அதன் பிறகு இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது அவர்களுக்கே புரியாத விஷயம் தான்.​

விடியற்காலை 4 மணிக்கு கண்விழித்த சிந்து தன் பக்கத்தில் குழந்தை போல் உறங்கிக் கொண்டிருந்த கணவனை கண்டதும் வெட்கத்தால் அவள் முகம் சிவந்து போனது.​

விடியற்காலையில் புது பெண் கோலமிட வேண்டும் என்று இரவே சங்கீதா சொல்லி அனுப்பியதால் விடியற்காலை 4 மணிக்கு எழுந்து விட்டாள்.​

"என்னங்க எந்திரிச்சு குளிங்க..உங்க தங்கச்சி இரண்டு பேரையும் காலையிலேயே எந்திரிச்சு குளிக்க சொன்னாங்க எந்திரிங்க.."என்று சுரேஷை எழுப்ப,"போடி இப்பதான் நான் மூணு மணிக்கு தூங்கினேன் அதுக்குள்ள எதுக்கு எழுப்பி விடுற? இப்ப நான் எந்திரிச்சு குளிச்சி என்ன பண்ண போறேன் போ எனக்கு தூக்கம் வருது.."என சிந்து இதழ்கள் புன்னகை சிந்தியது.​

"என்னங்க என் செல்ல புருஷன் தானே நீங்க எங்கே எந்திரிச்சு குளிங்க.."என்று அவனை சிரமப்பட்டு எழுப்பி குளிக்க வைக்க மணி நான்கரை கடந்து விட்டது.​

குளித்துவிட்டு மீண்டும் மனைவிடம் வர, அவளோ வேகமாக பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டாள்.​

இதழ்களில் சின்ன புன்னகையுடன் குளித்து முடித்துவிட்டு வெளியில் வர, அங்கு அவள் கணவன் விட்ட தூக்கத்தை மறுபடியும் தொடர்ந்து கொண்டே இருந்தான்.​

ஐந்து மணிக்கு வெளியில் கதவு தட்டும் சத்தம் கேட்க யார் என்று பார்த்தாள்.​

"என்னத்தை இந்த நேரம் வந்து கதவை தட்டுறீங்க?"​

"இல்லை சிந்தியா நானும் உன் மாமாவும் உன் கூட இருக்கனும்னு இங்க இருந்தோம் கீழ அவங்க எல்லாம் எந்திரிச்சிட்டாங்க.. கோலம் போட சொல்லி உன்னை எழுப்ப வந்தேன்..அதான் நீ எந்திரிச்சிட்டியா இல்லையான்னு பாத்துட்டு போகலாம்னு வந்தேன்.."என்று சங்கடத்துடன் சொல்ல,"இல்லத்த நான் எந்திரிச்சு குளிச்சு முடிச்சிட்டேன் இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்தில் கீழே வந்துடறேன் போங்க.."என்றவள் விடிய காலை என்பதால் நைட்டியை அணிந்து கொண்டு கீழே வர, பரிமளம் முகத்தை சுளித்துக்கொண்டார்.​

அவர் அப்படி செய்ததும் அதுவரை சந்தோஷமாக இருந்த சிந்து மனம் வாடி போனது.​

அதை எல்லாம் கண்டும் காணாதது போல் பிரியா ஏற்கனவே கூட்டி வைத்திருந்த வாசலில் அவளுக்கு தெரிந்த கோலம் ஒன்றை பெரிதாக போட்டுவிட்டு நிமிர, அவளை உள்ளே அழைத்து வந்த பிரியா தலையை பின்னால் தட்டி விட்டு "சரி போய் கொஞ்ச நேரம் தூங்குங்க அப்புறமா வரலாம்.."என்று அனுப்பி வைக்க, அவளை நன்றியுடன் பார்த்தபடி மேலே வந்து விட்டாள் சிந்தியா.​

திருமணத்திற்கு முதல் நாள் முழுவதும் பெற்றோரை பிரிந்து விடப் போகும் சோகம், இரவு மணப்பெண் அழைப்பு என்று இரவு முழுவதும் தூங்க விடாது காலையில் 4:00 மணிக்கு முகூர்த்தம் என்பதால் இரண்டு மணிக்கு எழுப்பி விட்டிருக்க அத்தோடு தேவையில்லாத அலைச்சல் எல்லாம் சேர்ந்து நேற்று இரவும் தூங்க முடியாது உறக்கத்திற்கு கெஞ்சிய கண்களை சிரமப்பட்டு விழித்து எழுந்தவள் எப்போதடா மீண்டும் படுத்து தூங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க, பிரியா அவளை மேலே சென்று படுக்க சொன்னதும் இதுதான் வாய்ப்பு என்று கணவன் பக்கத்தில் வந்து படுத்துக் கொள்ள, அவனும் அவள் வந்ததும் தூக்கம் கலைந்தவனாக அவள் பக்கத்தில் வர.."இங்க பாருங்க என்னால முடியாது கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கணும் மறுபடியும் குளிக்க முடியாது ப்ளீஸ்.."எனவும் அவள் நிலைமையை புரிந்து கொண்டவன் அவளை தொந்தரவு செய்ய மனம் வராமல் தன் கையணைப்பில் வைத்தபடி அவளோடு சேர்ந்து அவனும் உறங்கி போனான்.​

"என்னங்க இது என்னதான் இருந்தாலும் உங்க வீட்டுக்கு முதன்முதலா பொண்ணு வீட்டுக்காரங்க வரும்போது மாப்பிள்ளையோட அப்பா நீங்க கூப்பிடுறது இல்லையா?"என்று விருந்துக்கு வந்த இடத்தில் தங்களை அழைக்கவில்லையே என சிந்தியாவின் பெரியப்பா ஆதங்கப்பட்ட,"இதுல என்னங்க இருக்கு நீங்க எல்லாரும் நம்ம குடும்பத்து ஆளுங்க தானே?? அதனால்தான் யாரையும் கூப்பிடவில்லை சரி இப்ப என்ன உங்க எல்லாரையும் வாங்கணும்னு கூப்பிடனும் அம்புட்டு தானே எல்லாரும் வாங்க.."என்று கடமைக்கு அழைத்து விட்டு வெளியில் சென்று விட,சிந்தியா சுரேஷ் இருவரும் கோவிலுக்கு சென்று இருந்ததால் அவளுக்கு அங்கு நடந்தது தெரியாமல் போய்விட்டது.​

இருவரும் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வரும்போது தன் சொந்த பந்தங்கள் அனைவரும் தன் புகுந்த வீட்டில் இருப்பதை கண்டு குசியாகி போய்விட்டது சிந்தியாவுக்கு.​

"அப்பா அம்மா பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மாமா அத்தை அண்ணன் அத்தான் அக்கா தங்கச்சி பாப்பா பாட்டி எல்லாரும் வாங்க வாங்க.."என்று தன் சொந்தங்கள் அனைவரையும் புதிதாக வந்திருந்த வீட்டில் கண்டதும் தன் புகுந்த வீட்டை மறந்து அவர்களோடு ஐக்கியமாகிவிட்டாள்.​

அவர்களும் புகுந்த வீட்டில் தங்கள் பெண் எப்படி இருக்கிறாளோ? என்று கவலையோடு இருந்தவர்கள் சிந்தியா சந்தோசமாக அனைவரையும் வரவேற்க, அவர்கள் மனதில் இருந்த பாரம் வெகுவாக நீங்கி போனது.​

பரிமளம் சங்கீதா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள சங்கீதா தான் பார்த்துக் கொள்வதாக கண்களை மூடி திறந்தாள்.​

என்னதான் கணவன் முதல் நாளில் அவளிடம் கட்டளையாக வீட்டுக்கு வர வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றாலும் கணவனிடம் போனில் அழுது அப்படி இப்படி செய்து அன்று இரவு தன் பிறந்த வீட்டிலேயே தங்கி விட்டாள்.​

அது என்னவோ பிறந்த வீட்டில் வளரும் ஒவ்வொரு பெண்ணும் புகுந்த வீட்டிற்கு செல்லும் பொழுது அந்த வீட்டில் தான் ராஜ்ஜியம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறான விஷயம் அல்ல தான்.​

புகுந்த வீட்டில் அவர்கள் சென்று ராஜ்யம் செய்வது போல் பிறந்த வீட்டில் முன்பிருந்தது போல் அதே செல்வாக்குடன் ராஜியம் செய்ய வேண்டும் என்று பல பெண்கள் எதிர்பார்ப்பது தான் என்னவோ?​

அவர்கள் மட்டும் புகுந்த வீட்டில் யார் தொல்லையும் இல்லாது சந்தோஷமாக தங்களது இஷ்டத்திற்கு இருக்க வேண்டும் அதுவே தங்கள் வீட்டிற்கு அண்ணன் மனைவியோ தங்கை மனைவியோ வந்தால் தங்கள் சொல் பேச்சு மட்டும் கேட்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதெல்லாம் எப்படி சொல்வது??​

அவற்றையெல்லாம் எந்த வகையில் சேர்த்துக் கொள்வது?​

அதன் பிறகு விருந்தும் நல்லபடியாக நடந்து முடிக்க, சிந்தியா வீட்டினர்கள் அவளிடம் சொல்லி முடித்து விட்டு கிளம்ப ஏனோ முன்பு போல் இந்த முறை அவளுக்கு கண்ணீர் வடிக்க தோன்றவில்லை.​

கணவன் பக்கத்தில் இருந்ததால் அவளுக்கு அதுவே பெரும் ஆறுதலாக தோன்ற தன் பிறந்த வீட்டினரை புன்னகையுடன் அனுப்பி வைக்க சிந்தியா வீட்டில் இருந்த அனைவருக்கும் அதுவே பெரும் மன நிம்மதியை கொடுத்தது.​

அவர்கள் அந்த பக்கம் சென்றதும் பரிமளம் "டேய் சுரேஷ் உங்க அக்காவை கொண்டு போய் அவங்க வீட்ல விட்டுட்டு வா உங்க மாமா நேத்து வர சொன்னாரு ஆனா அவ தான் இன்னைக்கு விருந்துக்கு சமைக்க ஆள் வேணும்னு போகாம இருந்துட்டா அவங்க புருஷன் தனியா போனா ஏதாவது சொல்லுவாங்க நீ சொல்லி விட்டுட்டு வா.."என்றார்.​

"என்னம்மா இது? இந்த புள்ள சிந்தியா விட்டு பக்கத்துலதான் இருக்கு அவங்க வீட்ல இருக்க எல்லாரும் இப்பதானே போனாங்க இந்த புள்ளையும் போக வேண்டியது தானே?"​

"எனக்கு தெரியும்டா பொண்டாட்டி வந்த உடனே மாறிட்ட பாத்தியா அப்படியே? உன் பொண்டாட்டி உனக்கு சொல்லி கொடுத்தாளா? உனக்கு இப்படியெல்லாம் பேச தெரியாது!"என்று சேலையை வரிந்து கட்டிக்கொண்டு பரிமளம் வர, சிந்தியா புன்னகைக்கு அர்ப்ப ஆயுள் தான் போல.​

அவர் வெடுக்கென கேட்டதும் அவள் கண்களில் தன்னால் கண்ணீர் வந்து விட்டது.​

"மனுஷன் பிராணனை வாங்காதீங்க அம்மா பொண்டாட்டி பேச்சை கேட்டு நடக்கிற அளவுக்கு எனக்கு சுய புத்தி இன்னும் கெட்டு போகல வாய மூடுங்க இப்ப என்ன கொண்டு போய் விட்டுட்டு வரணும்னு அம்புட்டு தானே போய் தொலைகிறேன் ஒப்பாரி வச்சு ஊரை கூட்டாதீங்க.."என்று எரிச்சலோடு சொல்லிவிட்டு,தங்கையை அழைத்துக் கொண்டு தன் பைக்கில் சென்று விட்டான்.​

செல்லும்பொழுது வாசல் அருகில் நின்று கொண்டிருந்த மனைவியிடம் சொல்லிவிட்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட தோன்றாது செல்ல, ஏற்கனவே ரணம் அடைந்து போயிருந்த சிந்தியா மனம் தன் கணவனின் ஆறுதல் வார்த்தைகளுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்க, அவனோ அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்காது சென்று விட மேலும் மேலும் மனதளவில் மிகவும் காயப்பட்டு போனாள்.​

"அம்மாடி மருமகளே அப்படியே நின்னுகிட்டு இருந்தா என்ன அர்த்தம்? நம்ம வீட்டு வேலையை நாமதான் பாக்கணும் இதுக்காக வெளியில் இருந்து வேலையாள் ஒருத்தியை கூட்டிக்கிட்டு வர முடியுமா? உங்க சொந்த பந்தம் வந்து தின்னுட்டு போனதை நம்ம தான் சுத்தப்படுத்தணும் வேலையை பார்க்கலாம் வா.."என்று அழைக்க, மனம் காயப்பட்டு போயிருந்தவள் அவர் அழைக்கவும் மறுக்கவும் முடியாது அவரோடு வேலை பார்க்க சென்றாள்.​

"இங்க பாருமா விருந்துக்கு சமைத்து இடுப்பு ரொம்ப வலிக்குது இந்த பாத்திரம் எல்லாத்தையும் கழுவி வச்சுடு.. பிரியா நீ வீட்டைக் கூட்டி நல்லா கழுவி விடு ரொம்ப அசிங்கமா இருக்கு பாரு.. அம்மாடி மருமகளே பாத்திரம் எல்லாத்தையும் கழுவி முடிச்சிட்டு உன் துணி எல்லாத்தையும் துவைத்து காய போடு.."என்றவர் வெளியில் கதை அடிக்க சென்று விட்டார்.​

அவர்களது இந்த புது அவதாரத்தில் திகைத்து நின்று கொண்டிருந்தாள் புது மருமகள்.​

ஒவ்வொரு வீட்டிற்கும் வரும் பெண்கள் தங்கள் கனவுகளையும் ஆசைகளையும் சுமந்து கொண்டு தங்கள் புகுந்த வீட்டில் எப்படி எல்லாம் வாழலாம் என்று தான் வருகிறார்கள்..​

ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் ஏன் தான் திருமணம் செய்தோம் என்ற நொந்து போகும் பல பெண்கள் இன்னும் இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது தான் நம்மால் மறுக்க முடியாத உண்மை.​

சிந்தியா மட்டும் அதற்கு விதிவிலக்காக இருப்பாளா?​

 


அத்தியாயம் 4:



"அப்புறம் என்ன என் ஆசை பொண்டாட்டி உன் முகம் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு?"என்றபடி சுரேஷ் சந்தோஷமாக மனைவி பக்கத்தில் வந்தமர, அவனை மனம் முழுவதும் நிறைந்த சந்தோஷத்துடன் நிமிர்ந்து பார்த்த சிந்தியா "ஆமாம் மாமா ரொம்ப சந்தோசமா இருக்கேன் நாளைக்கு அம்மா வீட்டுல விருந்து எல்லாரையும் பார்க்க போறேன் அத நெனச்சா ரொம்ப சந்தோசமா இருக்கு.."என்றவள் கண்கள் சந்தோஷத்தில் மின்னியது.



அவளுக்கு இருந்த சந்தோஷத்தில் சுரேஷின் முக மாற்றத்தை கவனிக்க தவறி விட்டாள்.



"உங்க அம்மா வீட்டுக்கு போறதுல ரொம்ப சந்தோசமா இருக்கிற மாதிரி தெரியுது! ஏன் எங்க வீடு உனக்கு புடிக்கலையா?எங்க அம்மா அடிக்கடி வேலை சொல்லிக்கிட்டு இருக்கும்போது நான் உனக்கு சப்போட்டா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறத நினைத்து பிடிக்கலையா!"


"ஐயோ அப்படியெல்லாம் இல்லைங்க ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க!! நான் அப்படி எல்லாம் கொஞ்சம் கூட யோசித்து பார்க்கவே இல்லை.. இது என்ன நம்ம வீடு தானே நம்ம வீட்டு வேலையை நான் தானே பாக்கணும் எனக்கு கல்யாணம் ஆகி வெறும் நாலு நாள் தானே ஆயிருக்கு இதுவரைக்கும் அப்பா அம்மா என் தம்பி தங்கச்சி எல்லாரையும் விட்டு எந்த இடத்துக்கும் நான் தனியா போனதில்லை இப்ப நம்ம வீட்ல தான் முதன்முதலா அவங்க எல்லாரையும் பிரிஞ்சு தனியா வந்திருக்கேன் அதான் மனசு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு இப்ப மறுபடியும் என்னோட வீட்டுக்கு அதாவது எங்க அம்மா வீட்டுக்கு போக போறேனா அதை நினைச்சு தான் சந்தோஷமா இருந்தேன் மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை!"என்றாள் பதட்டமாக.



"சரி என்னமோ நீ சொல்ற ரைட் விடு அதை பத்தி அப்புறம் பேசிக்கலாம்.. இப்ப நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் அதுக்காகத்தான் வந்தேன்.."



"சொல்லுங்க மாமா என்ன விஷயம்?"



"நான் இன்னும் ரெண்டு மாசத்துல திரும்ப ஊருக்கு கிளம்பனும் அதுக்குள்ள நீ பிரக்னண்டாகணும் அதுக்கு.."என்றவன் அடுத்த வார்த்தைகளை பேசாமல் அவளுக்குள் புதைந்து போக, சிந்தியா முதலில் தயங்கினாலும் பின் கணவன் கொடுத்த உந்துதலில் அவளும் அவனோடு ஐக்கியமாகி விட்டாள்.



"அம்மாடி மருமகளே காலையில் தானே குளிச்சிட்டு போன! இப்ப மறுபடியும் வந்து குளிக்கிற!"என்று விஷயம் இன்னது என தெரிந்தும் மருமகளிடம் கேள்வி கேட்கும் பரிமளத்தை அருவருடன் பார்த்தாள் பிரியா.



"இது ஒன்னும் உங்க அப்பா வீடு இல்ல உன் இஷ்டத்துக்கு அடிக்கடி வந்து குளித்துவிட்டு போவதற்கு! அடிக்கடி மோட்டர் போட்டா கரண்ட் பில் எவ்வளவு வரும்னு தெரியுமா? பார்த்து கொஞ்சம் சூதனமா நடந்துக்கோ.."என்றவர் முகத்தை தோள்பட்டையில் இடித்துக் கொண்டு செல்ல, அந்த இடத்திலேயே தான் இறந்து விடமாட்டோமோ! என்ற அளவிற்கு கூசி போய்விட்டாள் சிந்தியா.



"அண்ணி அம்மா எப்பவுமே அப்படித்தான் எப்ப யார்கிட்ட என்ன பேசணும் தெரியாம இப்படித்தான் பேசிகிட்டு இருப்பாங்க இதெல்லாம் நினைச்சு கவலைப்படாதீங்க அவங்களே போகப் போக கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவாங்க.. அவங்க அவங்களுக்கா அறிவு வேணும் அதெல்லாம் யார்கிட்டயும் சொல்லி வர வைக்க முடியாது நீங்க போய் குளிங்க.."என்ற பிரியா அவள் முகத்தை பார்க்க சங்கடபட்டுக்கொண்டு சென்று விட்டாள்.



'இவங்களால எப்படி இப்படி எல்லாம் பேச முடியுது?நானா போனேன் அவங்க பையன் மேலயும் தப்பு இருக்குதானே இவர்களும் இத்தனை குழந்தை பெத்தவங்கதானே இதுவே இவங்க பொண்ணா இருந்தா இப்படி ஒரு கேள்வி கேப்பாங்களா!'என்று மனதுக்குள் அழுது கரைந்தபடி குளித்து முடித்துவிட்டு வந்தாள்.



"அத்தை நாங்க போயிட்டு வர்றோம்.."



"பத்திரமா பார்த்து போயிட்டு வாங்க மருமகளே என் பிள்ளை பத்திரம் அப்புறம் உன்கிட்ட சங்கீதா சொல்ல சொன்னா அவளுக்கு ஏதோ நாளைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குதாம் அதனால விருந்துக்கு வர முடியாது.. உங்க அம்மா கிட்ட சொன்னதுக்கு அவங்களும் இன்னைக்கு வர சொல்லி இருக்காங்க.. நாத்தனார் சீர் எல்லாம் ஒழுங்கா செய்யணும் அதையாவது உங்க வீட்ல ஒழுங்கா செய்ய சொல்லு.."என்று சொன்னவர் கையில் மகளுக்கு பிடித்தமான பலகாரங்கள் வீற்றிருக்க, அதை மகனிடம் கொடுத்தார்.


"இப்ப எதுக்கு ம்மா தேவையில்லாம இதெல்லாம் கொடுத்துக்கிட்டு இருக்கீங்க இதையெல்லாம் யாரு சுமந்துகிட்டு போறது?"



"வாய மூடு சுரேஷ் உன் தங்கச்சிக்கு இது கூட செய்யலன்னா எப்படி சொல்லு? புதுசா வாங்கிட்டு வந்த செல்போன் ஹேண்ட் பேக் அது இதுன்னு எல்லாத்தையும் உன் பொண்டாட்டியிடம் தூக்கி கொடுத்துட்ட! என் பொண்ணு நாளைக்கு அண்ணன் எதுவும் கொடுக்கல்லன்னு கோச்சிக்க கூடாது இல்லையா உனக்காக தான் தரேன்.. கொண்டு போய் குடு கண்ணா.."என்று ஆளை பார்த்து காய் நகர்த்த, அவர் சொன்னது சரியாக வேலை செய்தது.


"சரி இங்க பாருங்க இதுதான் முதல் தடவை இனிமே இந்த மாதிரி ஏதாவது குடுத்தா நான் கொண்டு போய் கொடுக்க மாட்டேன்.."



"கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரம் கூட ஆகல அதுக்குள்ள இப்படி எல்லாம் பேசுறப்போ.."என்றவர் அவர்கள் இருவரையும் வழி அனுப்பி வைத்தார்.



நேற்று முழுவதும் தன் தாய் வீட்டிற்கு போகப் போகிறோம் என்று சந்தோசமாக இருந்த சிந்தியா மனம் முழுவதும் மீண்டும் இந்த வீட்டிற்கு வராமல் தன் தாய் வீட்டிலேயே இருக்கக் கூடாதா? என்று ஏங்க ஆரம்பித்து விட்டது.



"இங்க பாருங்க அவங்க வந்துட்டாங்க.."என்று சிந்தியாவின் ஒன்றுவிட்ட பெரியப்பா சொல்ல, இவர்களுக்காக காத்திருந்த அவள் தாய் தந்தை அனைவரும் ஓடி வந்தார்கள்.



திருமணம் முடிந்து கணவனோடு வரும் மகளுக்கு வீட்டில் ராஜ உபசரிப்பு தான்.




அவற்றை எல்லாம் காணும் பொழுது சிந்தியா கண்களை கரித்துக் கொண்டு வந்தது.



எதையும் வெளியில் காட்டிக் கொள்ளக் கூடாது என்று தன் கண்ணீரை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டவள் "அம்மா இங்க பாருங்க உங்களுக்கு பிடிச்ச எல்லாம் நான் வாங்கிட்டு வந்து இருக்கேன்.."என்று கணவன் அவளுக்கு கொடுத்த வெளிநாட்டுப் பொருட்களுடன் அம்மா வீட்டிற்கு வரும்போது சில பொருட்களையும் வாங்கி வந்து கொடுக்க, தன் பெண் பெரிய பெண்ணாகி விட்டதை உணர்ந்து சீதா கண்கள் சந்தோஷத்தில் கலங்கியது.



அதன் பிறகு சங்கீதா அவள் கணவன் கண்ணன் இருவரும் வர, அவர்களுக்கும் அவர்கள் வீட்டில் நாத்தனார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.



"மாப்பிள்ளை சாப்பாடில் ஏதாவது குறை இருந்தா தயவு செய்து கோச்சுக்காதீங்க.. உங்களுக்கு இந்த சாப்பாடு எல்லாம் பிடிக்குமான்னு கூட எனக்கு தெரியலை! நீங்க சொன்னீங்கன்னா அடுத்தடுத்து நாங்க அதுக்கு தகுந்த மாதிரி சமைப்போம் இதுவும் இனிமே உங்க வீடு மாதிரி தான் அதனால எந்த விதமான தயக்கமும் இல்லாம நீங்க உங்க இஷ்டத்துக்கு எப்படி இருப்பீங்களோ அப்படியே இருக்கலாம்.."எனவும் அவரை பார்த்து புன்னகை புரிந்தான் சுரேஷ்.



அவன் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சிந்து மனம் 'வீட்டுக்கு வந்த மருமகனுக்கு எவ்வளவு கவனிப்பு? இவ்வளவுக்கும் அவங்க விருப்பப்பட்டா மாமியார் வீட்டுக்கு வரலாம் இல்லன்னா வராம கூட இருக்கலாம் ஆனா தன் சொந்த பந்தம் அத்தனையும் விட்டுட்டு ஆசை எல்லாம் தியாகம் பண்ணிட்டு புகுந்த வீட்டுக்கு வர்ற மருமகளுக்கு அந்த வீட்டில் ஏன் ஒரு மருமகனுக்கு இருக்கும் மரியாதை கிடைக்காமல் போகுது.. அப்ப அவங்க பொண்ணு சந்தோஷமா வாழனும்னா மருமகனை சந்தோசமாக கவனித்துக் கொள்வார்கள் அதுவே மகன் சந்தோஷமா வாழனும்னா மருமகளை நல்ல பார்த்துகிட்டா என்ன பண்ணுது! இன்னும் எத்தனை காலத்துக்கு தான் இதெல்லாம் நான் தாங்க போறேன்..'என்று மனதுக்குள் ஓய்ந்து போனாள்.



"இந்தாம்மா இதுல நாத்தனார் வீட்டு பலகாரம் இருக்கு.."என்று சீதா சங்கீதா அவள் கணவனுக்கு எடுத்த சீலை வேட்டி சட்டையுடன் சில்வர் சம்பட்டத்தில் பலகாரங்கள் வைத்துக் கொடுக்க, அதை வாங்காமல் அவர்களை பார்த்த சங்கீதா "இல்ல அத்தை இது உங்ககிட்டயே இருக்கட்டும் நாளைக்கு அம்மா வரும்போது அவங்க கிட்ட கொடுத்து விடுங்க.. நான் இப்ப என் நாத்தனார் வீடு பால் காய்ச்சுறாங்க அதுக்கு கிளம்பனும் அங்க முடிச்சிட்டு அப்படியே நான் எங்க அம்மா வீட்டுக்கு தான் போறேன் நான் அங்க வாங்கிக்கிறேன்.."எனவும் கள்ளம் கபடம் இல்லாத சீதா அதை உண்மை என்று நம்பி "சரிம்மா நீ அவங்ககிட்டயே வாங்கிக்கோ.."என்று அதை உள்ளே கொண்டு போய் வைக்க, கண்ணன் அவள் எதற்காக அப்படி சொல்கிறாள் என்பதை உணர்ந்து முறைத்து பார்த்தான்.



கணவன் மனைவி இருவரும் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் விடைபெற்று கொண்டு வெளியில் வர,"நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லை சங்கீதா.. உங்க அம்மாவை பத்தி தெரிஞ்சும் நீ இப்படி பண்றது எனக்கு கொஞ்சம் கூட சரியா படலை.."



"எல்லாம் எனக்கு தெரியும் நீங்க உங்க வேலைய பாருங்க உங்க தங்கச்சி வீட்டுக்கு நாளைக்கு போகணுமா இல்லை வேண்டாமா?"என்று கோபமாக கேட்க,'நீ எல்லாம் என்ன சொன்னாலும் திருந்தவே மாட்ட பட்டு திருந்து..' என்று மனதுக்குள் நினைத்தபடி கண்ணன் அமைதியாக விட்டான்.



மறுநாள் சிந்தியா வீட்டில் விருந்து அமோகமாக முடிய அவர்களை அப்பொழுதே கையோடு அழைத்துக் கொண்டு அவள் புகுந்த வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள்.



சிந்தியா மனம் தாய் வீட்டிலேயே இருக்க எண்ண பெண்கள் நினைத்து விட்டால் அப்படி எல்லாம் செய்ய முடியுமா?



"ஏய் எனக்கு உடம்பு கொஞ்சம் டயர்டா இருக்கு நான் போய் தூங்குறேன் நீ போய் எங்க அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணு இல்லாட்டி அது தேவை இல்லாமல் ஏதாவது சத்தம் போடும்.."என்ற சுரேஷ் ஓய்வெடுப்பதற்காக சென்று விட, அவனையே பார்த்தபடி நின்று கொண்டிருந்த சிந்தியா "உங்களோடு தானே நானும் வந்தேன் எனக்கும் டயர்டா இருக்காதா?"என்று எதிர் கேள்வி கேட்க, நல்ல வேளையாக அது சுரேஷின் காதில் விழவில்லை.



அந்த கேள்வி அவன் காதுக்குள் விழுவதற்கு முன்பாக அவன் உறக்கத்தை தழுவினான்.



பின் வேறு வழி இல்லாத சிந்தியா தன் உடைகளை மாற்றிக் கொண்டு வெளியில் வர,"அம்மாடி மருமகளே இங்க வா கொஞ்சம் போகலாம்.."என்று அழைக்க, சிந்தியா மனம் தன்னால் பயத்தில் படபடக்க ஆரம்பித்தது.



"இங்க பாருமா எங்க வீட்டு வழக்கப்படி நாத்தனார் விருந்து வைக்கும் போது அவர்களுக்கு பித்தளை சர்வத்தில் கணக்கே இல்லாம பலகாரம் வச்சிக் கொடுப்போம்..சேலை சட்டையெல்லாம் 2000க்கு குறையாமல் எடுக்க மாட்டோம் உங்க அம்மா ஏதோ கடனுக்கு கொடுத்திருக்கிறது மாதிரி என் பிள்ளைக்கு அதுவும் என் ரெண்டு பிள்ளைக்கும் கொடுத்து வச்சிருக்கு.. உங்க அம்மா கிட்ட சொல்லி ரெண்டு பேருக்கும் பித்தளை சர்வம் வாங்கி அதுல மறுபடியும் பலகாரம் வைத்து கொடுக்க சொல்லு.."என்று கோபமாக சொல்ல, அவரை எதிர்த்து பேச முடியாமல் தலையாட்டி விட்டு மௌனியாக வந்து விட்டாள்.



"உன்னால இந்த வீட்ல எக்காரணம் கொண்டும் பிரச்சனை வந்ததா இருக்க கூடாது பாப்பா எப்பவுமே நீ அமைதியா தான் இருக்கணும் உங்க அப்பா அம்மா நாங்க ரெண்டு பேரும் பேசினா எப்படி அமைதியா பொறுத்துக்கிட்டு போவியோ அதே மாதிரி உங்க மாமா மாமியார் ரெண்டு பேரும் பேசும் போது அமைதியா போயிடு.. எவ்வளவு பொறுமையா இருக்கியோ அவ்வளவுக்கு நல்லது தேவை இல்லாமல் யார்கிட்டயும் எதுவும் பேசக்கூடாது பாத்துக்க.."என்று நேற்று தான் சீதா அவளுக்கு ஆயிரம் அறிவுரைகள் சொல்லியிருந்தார்.



அம்மா அப்பா பேச்சை மீறி பழக்கம் வராத சிந்தியா எதுவும் சொல்ல முடியாது அவர்களின் இஷ்டத்திற்கு ஆட்டி வைக்கும் பொம்மையாக மாற்றப்பட்டாள்.



நாட்களும் அப்படியே உருண்டு ஓட திருமணம் முடிந்து 15 நாட்கள் கடந்து சென்று இருந்தது.



"அண்ணி என் பிள்ளையை கொஞ்சம் பார்த்துக்கோங்க நான் ஹாஸ்பிடல் வரைக்கும் போயிட்டு வரேன்.."என்று தன் மகளை அவளிடம் ஒப்படைத்து விட்டு தாயை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு செல்ல, நாள் முழுவதும் மன கஷ்டத்தில் திரிந்து கொண்டிருந்த சிந்தியாவுக்கு அந்த குழந்தையின் அருகாமை நல்ல மனமாற்றத்தை கொடுத்தது.



"ஏய் வீட்ல பத்திரமா இரு வெளியில போயிட்டு வரேன்.."என்ற சுரேஷ் அவள் பதிலுக்கு காத்திருக்காமல், வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட கடந்த ஒரு வார காலமாக அவன் இப்படி செல்வதால் அவளும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எல்லாம் எளிதாக பழகி விட்டது.



மருத்துவமனையில் பரிசோதனை முடித்துவிட்டு பிரியா பரிமளம் இருவரும் திரும்பி வர, பிரியா கண்களோ தன் தாயை சந்தேகமாக ஏறிட்டது.



"எதுக்குடி இப்படி பாக்குற?"



"இல்ல நீ என் அம்மா தானா?"



"அதுல உனக்கு என்ன சந்தேகம்?"



"முன்னாடி எல்லாம் வார்த்தைக்கு வார்த்தை என்னை ஏதாவது சொல்லி திட்டிக்கிட்டே இருப்பீங்க இப்ப எதுவும் சொல்லாம அமைதியா இருக்கீங்களே அதான்!"



"ஆயிரம் தான் இருந்தாலும் நீ நான் பெத்த பிள்ளைடி எப்படி உன்னை வீட்டுக்கு வந்த மருமகள் முன்னாடி விட்டுக் கொடுக்க முடியும்! நான் உன்னை தப்பா பேசுவதை பார்த்தால் நாளைக்கு வீட்டுக்கு வந்த மருமக உன்னை எப்படி நாத்தனார்னு மதிப்பா.. நாளைக்கு அப்புறம் அவளும் உன்னை கேவலமா பேசுவா நான் பெத்த பிள்ளையை நான் திட்டலாம் வேற யாராவது திட்டும்போது பாத்துக்கிட்டு அமைதியா போவேனா?"என்றதும் தன் தாயின் புதிய பரிணாமத்தில் திகைத்து விட்டாள் பிரியா.



தன் தாய் தன்மீது இத்தனை அன்பு வைத்திருப்பாரா என்று ஆச்சரியம் கொண்டாள்.


"என்ன மன்னிச்சிடுங்க அம்மா உங்க நல்ல மனசு தெரியாம எத்தனையோ நாள் உன்னை நானே தப்பா நினைச்சு இருக்கேன்.. அதெல்லாம் நினைச்சா எனக்கு இப்ப ரொம்ப அசிங்கமா இருக்கு..என்னோட அம்மா எப்பவுமே எனக்கு நல்லது மட்டும் தான் நினைப்பீங்க.."என்று அவர் தோளில் தன் தலையை சாய்த்துக் கொள்ள, அவள் தலையை மென்மையாக வருந்தி விட்டார் பரிமளம்.



பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்ததால் அவர் தலையை பரிவுடன் வருடி கொடுக்க அப்படியே உறங்கி விட்டாள் பிரியா.



'நீ சொன்னது எவ்வளவு சரியா போச்சு சங்கீதா! நான் மட்டும் கொஞ்சம் அசந்து போய் இருந்தா இவளும் வீட்டுக்கு வந்த மருமகளும் ஒன்று சேர்ந்து என்னை அடித்து துரத்தி இருப்பாங்க.. எப்படியோ உன் புண்ணியத்தில் இவளை என்னோட வழிக்கு கொண்டு வந்துட்டேன்.. அந்த மருமக பொண்ணு இனிமே இருக்குற இடத்துல மட்டும் தான் இருக்கணும்..'என்று மனதுக்குள் வன்மமாக நினைத்துக் கொண்டார்.



"சிந்து இந்தா இந்த ரெண்டு தேங்காயை துருவி சட்னி அரைச்சுட்டு எல்லாருக்கும் தோசை ஊத்தி கொடு.. விக்கிற விலைவாசிக்கு காஸ் எல்லாம் வாங்க முடியாது அடுப்பு பத்த வை.."என்ற பரிமளம் அவளுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொடுத்துவிட்டு தன் மகளையும் அழைத்துக் கொண்டு வெளியில் சென்றார்.



உள்ளே அமர்ந்து மொபைல் போனை நோண்டிக் கொண்டிருந்த கணவனிடம் கோபமாக வந்தாள் சிந்தியா.



"என்னங்க இது?உங்களுக்கு மனைவியா இந்த வீட்டுக்கு மருமகளா வாழறதுக்கு தானே இங்க வந்து இருக்கேன் ஆனா உங்க அம்மா பண்றது எல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கல..உங்க அம்மா அவங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்காங்க எதுக்கு தேவையில்லாமல் இப்படி எல்லாம் என்கிட்ட பண்றாங்க.. வீட்ல இத்தனை பேர் இருக்கும் போது இத்தனை பேருக்கும் அடுப்பு பத்த வச்சு நான் எப்ப தோசை ஊத்தி நீங்க எல்லாரும் சாப்பிட்டு அதுக்கு அப்புறம் பால் காய்ச்சி கொடுத்து எல்லா பாத்திரத்தையும் கழுவி போட்டு படுத்து தூங்குறதுக்கு..நான் கேட்டா உங்க அம்மா என்னை ஏதாவது சொல்வாங்க நீங்க தானே எனக்கு ஏதாவது கேட்கணும் ஏன் இப்படி அமைதியா இருக்கீங்க?"



"என்னடி வீட்டுக்குள்ள வந்து இன்னும் முழுசா ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள வீட்டை இரண்டு துண்டா பிரிக்க பிளான் போட்டியா!எங்க அம்மா என்ன சொல்றாங்களோ அதை மட்டும் கேளு பெரியவங்க சொல்றது நல்லதுக்கு தான் சொல்றாங்க.. அவங்க சொல்றதுல என்ன தப்பு? வீட்ல ஒவ்வொரு ரூபாய் சம்பாதிக்க நான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் தெரியுமா வேலைக்கு போய் நீயும் கஷ்டப்பட்டால் தான் உழைப்போட அருமை தெரியும் வீட்டுல உட்கார்ந்து திங்கிறதுக்கு அப்படித்தான் வலிக்கும் இந்த வேலை கூட செய்ய முடியலன்னா அப்புறம் உன்னால என்ன செய்ய முடியும்?"என்றவன் கேள்வியில் விக்கித்துப் போய்விட்டாள் பெண்ணவள்.

 
அத்தியாயம் 5:


"நீங்களா இப்படி எல்லாம் பேசுறீங்க?"


"சும்மா நொய்யி நொய்யின்னு பேசி உயிரை எடுக்காமல் போ போய் வேலையை பாரு.."என்ற சுரேஷ் ஃபோனை எடுத்துக் கொண்டு தன் அறைக்கு சென்று விட, அமைதியாக அடுப்படிக்கு வந்து விட்டாள் சிந்தியா.


பரிமளம் சொன்னது போலவே அனைத்து வேலைகளையும் செய்து முடித்துவிட்டு அதன் பிறகு வந்து படுக்க, அவள் மீது தன் கைகளை தூக்கி போட்டான் சுரேஷ்.


அவன் முகத்தை பார்த்தவள் தன் மீதான அவன் எதிர்பார்ப்பை பொய்யாக விரும்பாமல் அவன் இஷ்டப்படி வளைந்து கொடுக்க, அவனும் தன் இஷ்டத்துக்கு அவளை வளைத்து தனக்கான காரியத்தை நிறைவேற்ற ஆரம்பித்தான்.


விடியற்காலையில் எழுந்து குளிப்பதே அவளுக்கு பெரும் போராட்டமாக தான் இருந்தது.


அவள் வீட்டில் தலைக்கு ஊத்தி கொண்டால் கூட அதிகாலை எழுந்து குளிக்க மாட்டாள்.


இதற்காக அவள் தாய் சீதா எத்தனையோ தடவை அவளைத் திட்டி விடியற்காலையில் எழுந்து குளிக்கும் படி சொன்னாலும் "இவ்வளவு விடியற்காலையில் எந்திரிச்சு குளிச்சிட்டு எங்க போகப்போறேன் போங்கம்மா உங்களுக்கு வேற வேலை பொழப்பே இல்ல ஏதாவது என்னை சொல்லிக்கிட்டே இருக்கணும்.."என்று தன் தாயிடம் சண்டை போட்டது எல்லாம் அவள் கண் முன் வந்து போக அவள் இதழ்களில் ஒரு இகழ்ச்சி புன்னகை தன்னைத் தானே நினைத்து.


பிறந்த வீட்டின் அருமை ஒவ்வொரு பெண்ணுக்கும் புகுந்த வீட்டில் கஷ்டங்களை அனுபவிக்கும் போது தான் தெரியும்.


பழைய கதையை நினைத்துக் கொண்டிருந்தால் இப்போது ஆகும் வேலைகளை பார்க்க முடியுமா?


அவன் எப்பொழுதும் எழுந்து கொள்வது காலையில் 8:00 மணி அல்லது 9 மணி தான்.


வீட்டில் காலையில் வேலைக்கு செல்வது அவர் தந்தை பழனி மட்டும் தான்.


வீட்டிலும் பெரிதாக எந்த வேலைகளும் இருக்காது அவர்கள் வீட்டில் ஒன்றுக்கு மூன்று வேளை சமைத்து பழக்கம்.


புகுந்த வீட்டில் ஏதாவது ஒரு நேரம் மட்டும்தான் அதுவும் பெரும்பாலும் மாலை நேரங்களில் மட்டும் தான் இருக்கும்.


இப்படி இருக்க இத்தனை மணிக்கு எழுந்து குளித்து தான் என்ன செய்யப் போகிறோம்? என்ற கோபத்துடனே உடையை மாற்றிக் கொண்டு வெளியில் வந்தாள்.


அங்கு ஹாலில் தான் உறங்கிக் கொண்டிருந்தாள் பிரியா. அவளது குழந்தையும் அம்மாவின் கை வளைவில் அசந்தபடி உறங்கிக் கொண்டிருக்க, அவள் மாமியாரோ குறட்டை விட்டபடி அவர்களுக்கு எதிர்ப்பக்கம் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.


அவர் பெண் மட்டும் அவர் வீட்டில் அவர் விருப்பத்துக்கு எப்படி எல்லாம் உறங்கி அவர் இஷ்டம் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


இதுவே தான் இப்படி ஒரு செயலை செய்திருந்தால் இவர் சும்மா விட்டி இருப்பாரா?


ஒரு பெருமூச்சுடன் குளிப்பதற்கு சென்றாள்.


நன்றாக குளிர்ந்த நீர் அவள் மனதில் எரிந்து கொண்டிருந்த உணர்வுகளை அடக்குவதற்கு பெரும் உதவியாக இருந்தது.


அவசரமாக ஒரு குளியலை போட்டுவிட்டு தலையை துவட்டிக் கொண்டு அங்கு ஹாலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்க முடியாது தன் அறைக்கு வந்தவள் பார்வை கணவன் மீது மட்டுமே.


எரிச்சலோடு காலையில் குளித்து முடித்துவிட்டு தன் அறைக்கு வந்தவள் அங்கு நன்றாக உறங்கிக்கொண்டிருந்த கணவனை பார்த்ததும், சற்று கோபம் கூட வந்தது.





இதற்கு முன்பிருந்த மனநிலை இருந்திருந்தால் நிச்சயம் கணவனை ரசித்து பார்த்து இருப்பாள்.


இப்போதெல்லாம் அவன் முகத்தை பார்க்க பார்க்க அவளுக்குள் ஒரு ஏமாற்றம்.




என்ன செய்வது அனைத்தும் முடிந்து விட்டதல்லவா! இனிமேல் என்ன செய்தாலும் திருப்பி கிடைக்கப் போவதில்லை என்ற எண்ணத்துடன் சோம்பலாக நெற்றியில் பொட்டை வைத்துக் கொண்டு வெளியில் வந்தவள் சாணியை கரைத்து விட்டு வாசலைக் கூட்டி கோலம் போட்டு முடித்தாள்.


ஆறு மணிக்குள் வேலையெல்லாம் முடிந்திருக்க, தன் அறைக்குள் சென்று செய்வதற்கு வேலை எதுவும் இல்லாமல் அமர்ந்திருந்தாள்.


அவள் மாமியார் ஆறரை மணிக்கு எழுந்திருக்க, நாத்தனார் பிரியா கர்ப்பமாக இருந்ததால் 8 மணிக்கு மேல் தான்.


மாமியார் எழுந்ததும் தன் அறையை விட்டு வெளியில் வந்தவள் "ஏதாவது வேலை இருக்குதா அத்தை சொல்லுங்க சும்மாதான் இருக்கேன் செய்கிறேன்.."என்றதும் அவளை ஏற இறக்க பார்த்தார் பரிமளம்.


அவர் பார்வை இன்னது என புரியாமல் அவள் குழம்பி நிற்க,"ஏம்மா உனக்கு எல்லாம் கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? உன்னோட நாத்தனார் அவளோட புருஷனை விட்டுட்டு வந்து இப்ப மாசமா தனியா இருக்கா தானே!!இப்படி காலையில் நீ டெய்லியும் எந்திரிச்சு குளிச்சிட்டு வர்றத பார்க்கும்போது அவ மனசு கஷ்டப்படாதா! இப்பதானே உனக்கும் அவனுக்கும் கல்யாணம் ஆயிருக்கு கொஞ்ச நாளைக்கு ரெண்டு பேரும் உங்க உணர்வுகளை கட்டுப்படுத்திக்கிட்டு தனித்தனியாக இருக்க கூடாதா என்ன? இதெல்லாம் நான் சொல்லி தான்உனக்கு தெரியனுமா? உன்னோட நாத்தனார் கஷ்டத்தை அனுபவிக்கும் போது உன்னால மட்டும் எப்படி சந்தோஷமா இருக்க முடியுது.."என்று கோபமாக திட்டி விட்டு செல்ல, சத்தியமாக அவரது இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை சிந்தியாவுக்கு.


'உங்களால் எப்படி இப்படி எல்லாம் பேச முடியுது உங்க பொண்ணு இப்ப நிறை மாசமா இருக்காங்க அவங்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கு எங்களுக்கு அப்படியா? உங்க பையன் வேற ஊருக்கு போறதுக்குள்ள குழந்தை வேணும்னு சொல்லி இருக்காரு நீங்க சொன்னத கேட்டு அவரை விட்டு விலகிப் போகட்டுமா?இல்ல அவர் சொன்னது மாதிரி அவர் கூட சேர்ந்து அவர் ஊருக்கு போறதுக்குள்ள எனக்கு ஒரு குழந்தையை உருவாக்கிறது தான் சரியா! கடவுளே இந்த கேள்விக்கெல்லாம் எனக்கு என்ன பதில் என்னால் எதையும் யோசிக்க முடியல..' தலையைப் பிடித்துக் கொண்டு அதே இடத்தில் அமர்ந்தவள் எல்லாவற்றிற்கும் குறை கண்டுபிடித்து கொண்டிருக்கும் தன் மாமியாரிடம் எப்படி தான் வாழ்க்கை முழுவதும் இருக்கப் போகிறோம் என்ற பயம் அவள் மனதை பெரிதாக ஆக்கிரமித்துக் கொண்டது.


"குட் மார்னிங் சிந்தியா என்ன பண்றீங்க?"


"குட் மார்னிங் அண்ணி சும்மா தான் உட்கார்ந்து இருக்கேன்.. நம்ம வீட்ல அப்படி என்ன வேலை இருக்க போகுது?உங்க அண்ணனும் இன்னும் தூங்கிக்கிட்டு இருக்கார் அவர் எந்திரிச்சதுக்கு அப்புறம் தான் சாப்பிடணும்.."என்றவளுக்கு பசியில் வயிறு அடைத்தது.


"ஏய் ப்ரியா மணி ஒன்பது ஆகப்போகுது இன்னும் சாப்பிடாம எதுக்கு சும்மா உக்காந்திருக்க?"என்று அவளை சத்தம் போட்டபடி பரிமளம் உள்ள வர, அவரைக் கண்டு மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றாள் சிந்தியா.


"இல்லம்மா இப்ப தானே எந்திரிச்சு பல்லு விலக்கிட்டு வரேன்..இன்னும் அண்ணியும் கூட சாப்பிடாம இருக்காங்க அண்ணா அண்ணி நான் பாப்பா எல்லாரும் ஒண்ணா சாப்பிடுறோம்.."


"லூசு அவங்க புதுசா கல்யாணமான தம்பதிங்க அவ புருஷன் சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் அவ சாப்பிடணும்.. நீ அப்படியா வயித்து புள்ள தாச்சி வேற நேரத்துக்கு சாப்பிட்டா தானே பிள்ளையை நல்லபடியாக பெற்று எடுக்கலாம்! ஏம்மா மருமகளே சிந்து இதெல்லாம் உனக்கு தெரியாதா?உன்னோட அண்ணி இப்ப மாசமா இருக்கும்போது அவளை நேரத்துக்கு சாப்பிட வச்சு பக்கத்துல இருந்து கவனித்துக் கொள்வது உன்னோட பொறுப்பு தானே.. மருமக நீ வீட்ல இருக்க தைரியத்தில் தானே நான் வெளியில போயி என் புருஷனுக்கு உதவியா இருக்கேன்..உனக்கு கல்யாணம் பண்ணி ஒரு மாசம் ஆச்சு என்னமோ இன்னும் புது பொண்ணு மாதிரி அப்படியே உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம்.."என்று ஜாடை மாடையாக திட்டி விட்டு உள்ளே செல்ல, சாட்டையால் அடித்தது போல் இருந்தது சிந்தியாவிற்கு.


"அம்மா சொல்றாங்கன்னு கோச்சுக்காதீங்க என் மேல் இருக்க அக்கறையில தான் இதெல்லாம் சொல்றாங்க!"என்று தாய்க்கு பரிந்து பேசிய பிரியா அவர் ஊற்றி வைத்திருந்த இட்லியை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பிக்க இங்கு பசியில் சிந்தியா சுருண்டு விட்டாள்.


அவளது வீட்டைப் பொறுத்தவரை பணம் இல்லை என்றாலும் மூன்று வேளை உணவுகள் இல்லை நான்கு வேலையும் உணவுகள் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.


அதிலும் சிந்தியா பசி தாங்க மாட்டாள் என்பதாலேயே எந்த நேரமும் சாதமும் இல்லை என்றால் தின்பண்டங்களும் இருக்கும்.


பிறந்த வீட்டில் பெண்களுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளையும் புகுந்த வீட்டில் எதிர்பார்க்க முடியுமா?


அவளுக்கோ காலையில் டீ குடிக்கும் பழக்கம் சுத்தமாக இல்லை.


அவள் கணவன் எழுந்து கொள்வது எட்டு மணி அல்லது ஒன்பது மணிக்கு தான்.


அதிலும் காலையில் எழுந்தவுடன் அவன் அம்மா டீக்கடையில் இருந்து வாங்கி வரும் டீயையும் ஒரு பாக்கெட் பிஸ்கட்டையும் நனைத்து தின்பவனுக்கு
பசி எங்கு எடுக்க?


அனேகமாக அவன் சாப்பிடும் நேரம் காலையில் 11 முதல் 12.


இவள் வீட்டில் சாப்பிடும் நேரம் காலை 8 முதல் 9.


இத்தனை நாட்கள் சற்று பொறுமையாக இருந்தவளுக்கு பிரியா சாப்பிடவும் அந்த சாப்பாட்டின் மனம் அவள் பசியை இன்னும் அதிகமாக தூண்டி விட, பசி தாங்க முடியாமல் போக எழுந்து தங்கள் அறைக்குள் வந்தாள்.


அங்கு போர்வையை இழுத்துப் போர்த்தியபடி உறங்கிக் கொண்டிருந்த கணவனை பார்க்க பார்க்க எரிச்சலாக வந்தது.


திருமணமான ஒரு வாரத்தில் அவளது மாமியார் "இங்க பாருமா இந்த வீட்ல புருஷன் சாப்பிட்டதுக்கு அப்புறம் பொண்டாட்டி சாப்பிடுவது வழக்கம் அதுவும் உன் புருஷன் மிஞ்சிப்போனா இன்னும் ஒரு ரெண்டு மாசம் இல்லை மூணு மாசம் மட்டும் தான் இங்கே இருக்க போறான்..அவனுக்கு நேரத்துக்கு சாப்பாடு வயிற்றில் சுத்தமா இறங்காது நீ சாப்பிடாம அவனுக்காக காத்துக்கிட்டு இருந்தா தான் அவனும் உனக்காக சாப்பிட வேண்டும் என்று வருவான்..ஒரு மூணு மாசம் மட்டும் அவன் சாப்பிட்டதுக்கு அப்புறம் நீ சாப்பிடு அதுக்கு அப்புறம் அவன் ஊருக்கு போன பிறகு நீ உன் இஷ்டத்துக்கு இருக்கலாம் எப்ப வேணாலும் சாப்பிடு நான் கேட்க மாட்டேன்.."என்று அவனை வைத்து கொண்டு தான் சொன்னார்.


அந்த வீட்டில் அவளுக்கு இந்த ஒரு வாரம் நிம்மதியாக இருந்தது உணவு ஒன்று மட்டும் தான்.


இப்போது அதுவும் இல்லை.


அவன் அம்மா சொன்னதுக்கு சுரேஷ் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தது வேறு அவளுக்கு வயிற்றில் புளியை கரைத்தது.


"சரிங்க அத்தை நீங்க சொன்ன மாதிரியே செய்றேன்.."என்று வாய் அவருக்கு பதில் சொன்னாலும் பார்வை மொத்தமும் கணவனிடம் மட்டும் தான்.


அவன் எழுந்து அறைக்குள் செல்லவும் அவனை பின் தொடர்ந்து பூனைக்குட்டி போல் உள்ளே வந்தவள் "என்னங்க அத்தை சொல்றது மாதிரி நீங்க சாப்பிட்டதுக்கு அப்புறம் நான் சாப்பிடுறேன் என்னால சுத்தமா பசி தாங்க முடியாது.. நீங்க காலையில எட்டு மணிக்கு எந்திரிக்காமல் கொஞ்சம் சீக்கிரம் எந்திரிங்க அப்பத்தான் காலையில் டீ குடிச்சிட்டு ஒன்பது மணிக்கு சாப்பிட உங்களால முடியும்! எனக்காக இதை நீங்க செய்வீங்க தானே!!"என்று அவனிடம் செல்லம் கொஞ்ச, அவள் கைகளை தட்டிவிட்டான் சுரேஷ்.


"இந்த செல்லம் கொஞ்சும் வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத சிந்து எனக்கு எப்ப எதை செய்ய தோணுமோ அதை அப்பத்தான் செய்வேன் உன் இஷ்டத்துக்கு எல்லாம் என்னால எதையும் செஞ்சுகிட்டு இருக்க முடியாது! உன்னால பசி தாங்க முடியாதுன்னு உனக்கு நல்லாவே தெரியும் அப்புறமா எங்க அம்மா சொல்லும் போது எதுக்கு எல்லாத்துக்கும் அமைதியா சரின்னு சொல்லிட்டு இப்ப வந்து என்கிட்ட பேசுற என்னால எல்லாம் முடியாது..உன்னோட பிரச்சினை எல்லாத்தையும் நீ தான் சால்வ் பண்ணனும் என்னிடம் கொண்டு வந்து திணிக்கிற வேலை எல்லாம் வைக்காத.."என்று மூஞ்சியில் அடித்தார் போல் சொல்லிவிட்டு செல்ல, அதன் பிறகு அவனிடம் எங்கு பேச?


திருமணமான ஒரு வாரத்தில் அவன் இப்படி தன்னிடம் கோபப்படுவான் என்று எதிர்பார்க்காத சிந்தியா அவன் செயலில் இன்னும் அதிகமாக அதிர்ந்து போனாள்.


பழையதை எல்லாம் யோசித்துக் கொண்டிருந்த சிந்தியா இதற்கு மேலும் பசி தாங்க முடியாது என்று கணவனை எழுப்ப ஆரம்பித்தாள்.


"என்னங்க எந்திரிங்க மணி என்ன ஆச்சு பாருங்க? இன்னும் தூங்கிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம் முதல்ல எந்திரிங்க.."


"இப்ச்"என்று சலித்தபடி அவன் அடுத்த பக்கம் படுத்து உறங்க,சிந்தியா கோபம் பசியில் எல்லையை கடந்து விட்டது.


"உங்களுக்கு எவ்வளவு நேரம் தூங்கினாலும் தூக்கம் பத்தாது தயவு செஞ்சு எந்திரிங்க எனக்கு பசியில உயிரே போய்டும் போல இருக்கு.."என்று அவனை விடாமல் எழுப்பி குளியலறை வரை கொண்டு வந்து விட, அவள் செயலில் மிகவும் கோபம் கொண்ட சுரேஷ் அதை அவளிடம் அப்போது காட்டாமல் அமைதியாகிவிட்டான்.


அவனும் குளித்து முடித்துவிட்டு உள்ளே வர 'சீக்கிரம் சீக்கிரம்'என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு சிந்தியா பார்வையால் அவனிடம் அதை உணர்த்த, அவளை ஒரு நக்கல் பார்வை பார்த்த சுரேஷ் உடை மாற்றிக் கொண்டு வந்து உண்பதற்கு அமர அவனை ஆச்சரியமாக பார்த்தபடி உணவு எடுத்து வைத்தாள்.


அவளை நிமிர்ந்து பார்த்தபடி சாப்பிட்டு முடித்த சுரேஷ் பரிமளம் அங்கு வர "அம்மா இன்னைக்கு உங்களுக்கு எனக்கு தங்கச்சிக்கு மூணு பேருக்கு மட்டும் சாப்பாடு செஞ்சா போதும்.."எனவும் அவனை குழப்பமாக பரிமளம் பார்க்க, பசியில் இருந்த சிந்தியா அவனை புரியாமல் பார்த்தாள்.


"ஏண்டா அப்படி சொல்ற உன் பொண்டாட்டி பாவம் அந்த புள்ள சாப்பிட வேண்டாமா?"


"இல்லம்மா இன்னைக்கு என் பொண்டாட்டி விரதம் இருக்கிறாள் அவள் புருஷன் ஆயுள் நல்லா கெட்டியா இருக்கணும்னு விரதம் இருக்கப் போறதா நேத்து நைட்டு என்கிட்ட சொல்லிட்டாள்..இப்பதான் எழுந்து வரவும் அவளை பார்த்தவுடன் அவள் சொன்னது ஞாபகம் வந்துச்சு அவளே சொன்னா உங்க மனசு கஷ்டப்படும்னு என்கிட்ட சொல்லி சொல்ல சொன்னா.."என்றதும் பரிமளமும் ஒரு கைப்பிடி அரிசி மிச்சம் என்று நினைத்துக் கொண்டு சந்தோஷமாக சென்றுவிட்டார்.


இங்கு பசியில் துடித்துக் கொண்டிருந்த சிந்தியா கணவனை அதிர்ச்சியாக பார்க்க அவளைப் பார்த்து இரு கண்களையும் சிமிட்டியபடி எழுந்து கொண்டான்.


"என் தூக்கத்தை கெடுக்க கூடாதுன்னு உன்கிட்ட எத்தனையோ தடவை நான் சொல்லிட்டேன்..எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு புத்தி வராது உனக்கு எல்லாம் பட்டா தான் புத்தி வரும் நான் சொன்னா சொன்னது மாதிரி இருக்கணும் இல்லாட்டி இப்படித்தான் தேவையில்லாத தண்டனை எல்லாம் அனுபவிக்க வேண்டும் இது நீயே உனக்கு இழுத்து விட்டது நல்லா அனுபவி.. உனக்கு பசிக்குதுன்னு தானே என் தூக்கத்தை கெடுத்து என்னை எழுப்பி விட்ட இப்ப நல்லா அனுபவி.."என்றவன் வயிறு புடைக்க உண்டு விட்டு மீண்டும் விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பிக்க, செயலற்ற சித்திரம் போல் அமர்ந்து விட்டாள் சிந்தியா.


அன்று ஒரு பெண் விரதம் இருக்கிறாள் என்று கூட யோசிக்காத பரிமளம் கோழிக்கறி, மீன் என்று வாங்கி சமைத்து வைத்திருக்க, காலையில் சாப்பிடாமல் மயக்கத்தில் இருந்த சிந்தியா, மதியம் சுவையாக தயாராகி இருந்த உணவுகளை பார்க்கும் பொழுது சாப்பிட வேண்டும் என்று ஆசை அதிகரித்தாலும் அதை சாப்பிட முடியாத தனது நிலையை எண்ணி கண்ணீர் வடித்தபடி அமர்ந்திருந்தாள்.


மதியம் பரிமளம் சமைத்து வைத்திருந்த உணவுகளை ஒரு கை பார்த்த சுரேஷ் தன் நண்பர்களை பார்க்கப் போவதாக சொல்லி விட்டு வெளியில் சென்று விட, அவனையே வெறுத்து பார்த்தபடி அமர்ந்து இருந்த சிந்தியா அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் முடங்கி விட்டாள்.


"தள்ளிப் போங்க இப்ப மட்டும் ஏன் பக்கத்துல வர்றீங்க போங்க!"


"ஏய் உனக்கு என்ன அவ்வளவு திமிரா? உன்னை எதுக்கு எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க இப்படி ரெண்டு பேரும் தனித்தனியாக நீ ஒரு பக்கம் நான் ஒரு பக்கம் படுக்குறதுக்கு தானா!"


"இதை மட்டும் நல்ல வக்கனையா பேசுறீங்க உங்க கிட்ட நான் அப்படி என்ன கேட்டேன் பசிக்குதுன்னு வந்து உங்களை எழுப்பி விட்டது தப்பா? உங்க பசிக்கு நீங்க சாப்பிடும்போது என்னோட பசிக்கு நான் சாப்பிட நினைப்பது தப்பா?கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம இன்னைக்கு முழுக்க என்னை பட்டினி போட்டு வயிறு வலியில துடிக்க வச்சிட்டீங்க தானே!"


"கட்டின புருஷனுக்காக விரதம் இருப்பது உனக்கு அவ்வளவு வேதனையா இருக்கா?"


"நான் எப்ப அப்படி சொன்னேன் எதுக்கு தேவையில்லாமல் பேச்சை திசை திருப்பறீங்க!"


"இப்ப வாய மூடிக்கிட்டு அமைதியா பக்கத்துல வர முடியுமா முடியாதா?"என்றவன் அவனுக்கு என்ன வேண்டுமோ அதில் மட்டும் உறுதியாக இருக்க, அவனை வெறுப்புடன் பார்த்த சிந்தியா திருப்பி படுக்க அவளையே சில நிமிடங்கள் பார்த்து இருந்த சுரேஷ் அதன் பிறகு அவளை சட்டை செய்யாமல் அப்படியே உறங்கி விட்டான்.
 
அத்தியாயம் ஆறு:


ஆழ்ந்த உறக்கத்திலிருந்த சுரேஷ் தன் மீது ஏதோ ஒன்று ஊர்வது போல் இருக்க அதை தட்டி விட்டபடி, மற்றைய பக்கம் படுத்து உறங்க மீண்டும் அவன் மீது ஏதோ ஒன்று ஊர்வது போல் இருந்தது.



அதில் தன் தூக்கம் கலைந்தவனாக எரிச்சலோடு கண்களை திறந்து பார்க்க, அவன் மனைவி தான் தன் கைகளை கொண்டு அவன் மார்பில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.



அவள் கைகளை தட்டி விட்டவன் கோபத்தோடு நிமிர்ந்து அவளை பார்க்க அவனையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.


"பிடிக்கலையா"என்றவளின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக படித்திருந்த சுரேஷ் தன்னையே ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்த மனைவியை கண்டு அதற்கு மேலும் சோதிக்காமல் அவள் விரும்பியது போலவே அவளுடன் சங்கமிக்க மன நிறைவோடு அமைதியாக அவன் மார்பில் அவள் தலை வைத்து உறங்க, அவள் தலையை தன்னிடமிருந்து பிரித்து தலையணையில் வைத்தவன் அப்படியே உறங்கி விட்டான்.



அவன் செயலில் எப்போதும் போல் அவனை வெறுப்புடன் பார்த்தபடி கோபமாக திருப்பி படுத்துக்கொண்டவள் கைகள் அருகில் இருந்த சுவரை குத்தியது.



"அம்மாடி மருமகளே என் பையன் வெளிநாட்டில மாசம் கை நிறைய எவ்வளவு சம்பாதிக்கிறான் தெரியுமா? உங்க வீட்ல ஏதோ ஒண்ணுத்துக்கும் வக்கில்லை என்றாலும் ஒன்னு கூட போடாம இப்படி சும்மாவா அனுப்பி விடுவாங்க?"என்று பரிமளம் குத்தலாக கேட்க, அவரை நிமிர்ந்து பார்த்தவள் தன் குடும்பத்தை நித்தம் நித்தம் அவர் குத்தி காட்டுவது போல் பேசியதை கேட்டு எப்போதும் போல் அவள் கண்கள் கண்ணீர் வடிக்க தயாராகின.



"இப்போ உன்கிட்ட என்ன கேட்டுப்புட்டேன்னு இப்படி ஒப்பாரி வச்சு கிட்டு இருக்க! நானும் தான் ரெண்டு பொம்பள பிள்ளையை பெத்து நல்லா அது ரெண்டையும் படிக்க வச்சு ஆளுக்கு 15 பவுன் நகை போட்டு சீர்வரிசையில் ஒன்னு கூட மிச்சம் வைக்காமல் அத்தனையும் செஞ்சு என் மகளை கட்டிக் கொடுத்தேன்.. உங்க அம்மாவுக்கு பொம்பள புள்ள மட்டும் பெத்துக்க தெரிஞ்சது அதை கட்டிக் கொடுக்க சீர்வரிசை சேர்த்து வைக்க தெரியாதா? பொம்பள புள்ள பெத்துக்கிட்டா கடனுடன் வாங்கியாவது கல்யாணம் பண்ணி வைக்கணும்.. இல்லன்னா பொம்பள புள்ள பெத்துக்கவே கூடாது.. அடுத்த தடவை உங்க அம்மா வீட்டுக்கு போகும் போது சும்மா இருக்காம உங்க வீட்ல ஏதாவது கேட்டு வாங்கிட்டு வா என் மகன் சம்பாதிக்கிற சம்பாத்தியத்துக்கு நீ அவன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் அவன்கிட்ட இருந்து சுருட்டாம உன் வீட்ல இருந்தும் கொஞ்சம் சுருட்ட பாரு.."என்றவர் எழுந்து சென்றுவிட, அவர் சொன்னதைக் கேட்டு இதழ் பிரிக்காமல் சிரித்துக் கொண்டிருந்த பிரியா அவள் சாப்பிட்ட தட்டையும் அவள் குழந்தை சாப்பிட்ட தட்டையும் அவளிடம் கொண்டு வந்து போட்டுவிட்டு கைகளை கழுவியவள் தண்ணீரை சிந்தியா முகத்தில் படும்படி தெளித்து விட்டு செல்ல அந்த வீட்டில் சம்பளம் இல்லாத வேலைக்காரியாக தன்னை மாற்றிய அனைவரையும் உணர்வுகள் இல்லாமல் பார்த்தாள் பெண்ணவள்.



'கருமம் என் வீட்ல எப்படி எல்லாம் வளர்ந்தேன் இந்த வீட்ல வந்து இவங்களுக்கு எல்லாம் எடுபுடி வேலை செய்ய வேண்டி இருக்கு எல்லாம் என் தலையெழுத்து.. இந்த விஷயம் மட்டும் வீட்டில் அம்மா அப்பாவுக்கு தெரிஞ்சா அவங்க மனசு எவ்வளவு வேதனை படும் அவங்களுக்காக அமைதியா போக வேண்டியதுதான் என்னோட கஷ்டம் என்னோட மட்டும் போகட்டும் அவங்க சந்தோஷமா இருக்கட்டும்..' என்று வேதனையாக மனதுக்குள் நினைத்துக் கொண்ட சிந்தியா அடுத்தடுத்த வேலைகளை கடமையாக செய்து முடித்தாள்.



அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு கணவனிடம் சிறிது நேரம் சிரித்து பேசலாம் என்று அவனிடம் வர, அவனோ அவளை சிறிதும் கணக்கில் கொள்ளாமல் தன் மொபைல் போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்தான்.



"நாள் முழுக்க எப்ப பார்த்தாலும் அந்த போனை மட்டும் தான் நோண்டிக்கிட்டே இருப்பீங்களா? கொஞ்ச நேரம் கூட என் கூட சிரிச்சு பேசணும் நாலு இடத்துக்கு கூட்டிட்டு போகணும் ஆசையா ஏதாவது வாங்கி வந்து தரணும்னு உங்களுக்கு இப்படி எதுவுமே தோணாதா?"என்று கடுப்பாக கேட்க, அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் போனில் பார்வையை பதித்தான் சுரேஷ்.



கோபத்தில் அவன் கைகளில் இருந்த மொபைல் போனை அவள் பிடுங்கி விட,"ஏய் போனை குடு போய் ஏதாவது வேலை இருந்தா பாரு என்ன உன் கூட உட்கார்ந்து பேச சொல்ற? உன் கூட உட்கார்ந்து பேச என்னிடம் என்ன இருக்கிறது!"என்று கேள்வி கேட்க, அவன் கேள்வியில் அவள் வெளிப்படையாக தலையில் அடித்துக் கொண்டாள்.



"சத்தியமா உங்கள வச்சு நான் எப்படி தான் காலம் தள்ள போறேன்?கட்டின பொண்டாட்டி கிட்ட பேச என்ன இருக்குன்னு கேட்கிற ஒரே ஆம்பள உலகத்துல நீங்க மட்டும் தான்.. என்கிட்ட பேச ஒண்ணுமே இருக்காதா கட்டின பொண்டாட்டி கிட்ட பேச ஒன்னுமே இல்லன்னு உலகத்திலேயே சொன்ன முதல் ஆம்பள நீங்க மட்டும் தான்.."



"ஏய் டென்ஷன் பண்ணாம போனை குடு போய் ஏதாவது வேலை இருந்தா பாரு இல்லன்னா போய் படுத்து தூங்கு.."



"அதெல்லாம் முடியாது போனை தர மாட்டேன் என்கூட கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசுங்க.."என்றவள் போன் வைத்திருந்த கைகளை தனக்கு பின்னால் கட்டிக் கொள்ள, அவளை விதண்டாவாதமாக பார்த்துக் கொண்டிருந்த சுரேஷ் அப்படியே படுத்து உறங்க ஆரம்பிக்க சிந்தியா என்ன செய்வதென்றே தெரியாது அப்படியே அவன் பக்கத்தில் தொய்ந்து அமர்ந்து விட்டாள்.



"அம்மா மருமகளே உள்ள என்ன பண்ணிக்கிட்டு இருக்க?"என்ற பரிமளம் கல்யாணமான புது தம்பதிகள் தனியாக இருக்கிறார்கள் என்ற எந்தவிதமான கூச்சமும் இல்லாமல் அவர்கள் அறைக்குள் வந்தவர் மகன் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு அவன் தலையை மென்மையாக வருடி விட்டார்.



"அவன் தான் தூங்கிக்கிட்டு இருக்கானே அப்புறம் எதுக்கு அவன் பக்கத்தில் உட்கார்ந்து இருக்க? எழுந்து வா மாவரைக்கும் வேலை இருக்குது அவன் தான் தூங்கிக்கிட்டு இருக்கான் நீ என்ன பண்ண போற?"



"நானும் கொஞ்ச நேரம் அவர் கூட படுத்து தூங்கி எந்திரிச்சு அப்புறம் வரேன்!"



"நல்லா இருக்குது ஆத்தா குடும்பத்துக்கு வந்த மகராசி குடும்பத்தை கவனிக்காமல் படுத்து தூங்குறேன்னு சொன்னா குடும்பம் விளங்கிடும்.."என்று எள்ளலாக சொன்னபடி பரிமளம் மருமகளை முறைத்து பார்த்தபடி வெளியில் செல்ல, அவர் சொன்னதைக் கேட்டு சிந்தியாவுக்கு கோபம் வந்த போதிலும் அதை கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருந்தவள் உறங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த கணவன் முகத்தை பார்க்க வெறுப்பாக வர 'இவன் முகத்தை பார்க்கறதுக்கு பதிலா போய் அந்த வேலையை பார்த்தாலாவது ஒரு வேலை முடியும்.. எனக்குன்னு வந்து சேர்ந்து இருக்கான் வீணா போனவன்..'என்று கணவனை மனதுக்குள் திட்டிக் கொண்டு வெளியில் பரிமளம் சொன்னது போல் மாவு அரைக்க ஆரம்பித்தாள்.



"அத்தை நைட்டு என்ன சமைக்கட்டும்?"என்று பரிமளத்திடம் பவ்யமாக கேட்க, அவரோ இவளை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை.



அவர் அமைதியாக இருக்கவும் அவளுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.


"அதை உங்ககிட்ட தான் கேட்டுகிட்டு இருக்கேன் நைட் என்ன சாப்பாடு செய்ய வேண்டும்?"


"ஏம்மா அவ தான் கேட்டுகிட்டு இருக்கால்ல பதில் சொல்லாமல் ஏன் அமைதியா இருக்க!"என்றபடி சுரேஷ் வர, மகனைப் பார்த்த பரிமளம் கண்களில் தன்னால் கண்ணீர் வந்தது.



"உன் பொண்டாட்டி நான் வேலை சொல்ல கொஞ்சம் கூட மதிக்காம நான் தூங்கி எந்திரிச்சு வந்து வேலை பார்க்கிறேன் அப்படித்தான் என் இஷ்டத்துக்கு இருப்பேன் உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணுங்கன்னு என்கிட்ட வந்து சவால் விட்டுட்டு போறா..இன்னைக்கு புருஷன் காரன் நீ பக்கத்துல இருக்கும்போது இப்படி எல்லாம் என்கிட்ட வந்து பேசுற இவ நாளைக்கு நீ விட்டுட்டு போனதுக்கு அப்புறம் என்னை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல மாட்டாள்னு என்ன நிச்சயம்?அதான் பா உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் நானும் என் புருஷனாலும் தொந்தரவா இருக்காம என் மகளை கூட்டிட்டு வேற வீட்டுக்கு போறோம் நீயும் உன் பொண்டாட்டியும் சந்தோஷமா இருங்க.. வெளிநாட்டில போய் நீ கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணம் எல்லாத்தையும் உன் பொண்டாட்டிக்கு அனுப்பி வை அவ அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி வைக்கட்டும் அப்படியே சந்தோசமா இருங்க உன்னை பெத்ததுக்கு நாங்க கடைசில நடுத்தெருவுல நிக்கிறோம்.."என்று போலியாய் கண்ணீர் வடிக்க, சிந்தியா அவரது நடிப்பில் அசந்து போய்விட்டாள்.



அவர் சொன்னதைக் கேட்டு மிகவும் கோபமடைந்த சுரேஷ் "ஏண்டி உனக்கு வீட்டு வேலை பாக்குறதுக்கு அம்புட்டு உடம்பு நோகுதா?எங்க அப்பா அம்மாவை விரட்டிட்டு உன்னை மட்டும் வச்சு குடும்பம் பண்ணுவேன்னு கனவுல கூட நினைக்காத.."என்றவன் கோபமாக கத்தி விட்டு உள்ளே செல்ல, மாமியார் நாத்தனார் முன்னிலையில் தனக்கு ஆதரவாக பேசி அவர்கள் முன்னிலையில் உனக்கு எப்போதும் நான் இருக்கிறேன் என்று சொல்ல வேண்டிய கணவன் அவர்களுக்கு முன்பாக தன்னை அசிங்கப்படுத்தி விட்டு செல்ல அசிங்கத்தில் தலையை குனிந்து கொண்ட சிந்தியா யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை இரவு உணவும் உண்ணவில்லை.



அன்றும் சுரேஷ் அவள் பக்கத்தில் வர எந்தவிதமான மறுப்பும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.



"அத்தை நாங்க போயிட்டு வர்றோம்.."என்று சிந்தியா மனம் முழுவதும் மகிழ்ச்சியுடன் தன் மாமியாரிடம் சொல்ல, அவளை நிமிர்ந்து பார்க்காத பரிமளம் ஒரு பையைக் கொண்டு வந்து மகனிடம் கொடுத்தார்.



"இந்தாடா உன் தங்கச்சி ஆசையாக கேட்ட பலகாரம் எல்லாம் இதுல செஞ்சு வெச்சிருக்கேன்.. புள்ள அப்படியே ஒரு சேலை ஒன்னு ரெண்டாயிரத்துல் கேட்டா அப்படியே வாங்கி கொடுத்துட்டு வந்துரு.."



"ஆமா உன் மகளுக்கு ரூ.200,300 சேலை எல்லாம் ஆகாது இரண்டாயிரம் மூவாயிரம் அதுல தான் மேடம் கட்டுவாங்க.."என்று தாயிடம் முணுமுணுத்து விட்டு எரிச்சலோடு மனைவியை அழைத்துக்கொண்டு தன் தங்கை வீட்டுக்கு விருந்துக்கு சென்றான்.



சங்கீதா வீட்டு பக்கத்தில் தான் சிந்தியா வீடும் இருக்கிறது என்பதால் ஒரு வாரம் அம்மா வீட்டில் தங்கி வருகிறேன் என்று அனுமதி கேட்டு தான் வந்திருந்தாள்.



சங்கீதா வீட்டிற்கு வரவும் உரிமையோடு சுரேஷ் அவள் வீட்டிற்கு சென்று அனைவரிடமும் பழக அவள் குடும்பத்தினர் சிந்துவுக்கும் பரிட்சையம் என்பதால் அவளிடமும் நன்றாக பழகினார்கள்.




கண்ணன் தான் சுரேஷை கண்டதும் எப்போதும் போல் பார்த்தும் பார்க்காது கடந்து செல்ல சுரேஷும் தன் தங்கை கணவனை கண்டு கொள்ளவில்லை.


"அண்ணா சிந்து இரண்டு பேரும் வந்து உட்காருங்க விருந்து சாப்பிடலாம்.."என்று இருவரையும் அழைத்த சங்கீதா இருவருக்கும் உணவு எடுத்து வைக்க அதை எல்லாம் மனதுக்குள் அதிருப்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சிந்தியா.



விருந்திலேயே முதல் விருந்து மாமன் விருந்து அடுத்த படியான இரண்டாவது விருந்து நாத்தனார் விருந்து.


நிச்சயம் சங்கீதா தங்களுக்காக பார்த்து பார்த்து சமைத்து இருப்பாள் என்று ஆசையாக வந்திருந்த சிந்தியா அவள் சமைத்து இருந்ததை பார்த்து உள்ளுக்குள் பொங்கிய ஆசை அத்தனையும் பாலில் தெளித்த தண்ணீர் போல் அடங்கி போனது.


மீன் குழம்பும் மீன் வருவல் ஒரு முட்டைகோஸ் தொட்டுக்கையும் மட்டும் இருந்தது.



அதை நன்றாக ரசித்து சாப்பிட்ட சுரேஷ் "எப்பவும் போல உன் கைப்பக்குவம் சூப்பரா இருக்கு சங்கீதா..இவளுக்கும் இந்த மாதிரி நல்லா சமைக்க கத்துக் கொடு வீட்ல வைக்கிற சாப்பாடு எதுவுமே வாய்க்கு விளங்கல.."என்று மனைவியை மட்டம் தட்ட, அனைவரும் இருந்ததால் அவனை எதுவும் சொல்ல முடியாது அமைதியாகிவிட்டாள்.



பின் இருவரும் சாப்பிட்டு முடித்த பிறகு கண்ணன் சங்கீதா இருவரும் ஒன்றாக சேர்ந்து அவர்களுக்கு எடுத்து வைத்த உடையை கொடுத்தார்கள்.



அதை கைகளில் வாங்கிக் கொண்ட சிந்து எப்போது தன் தாய் வீட்டுக்குப் போவோம் என்று ஆவலாக காத்துக் கொண்டிருந்தவள் அவர்கள் வீட்டில் விருந்து நிறைவடைய "சரிங்க அண்ணி அப்ப நாங்க ரெண்டு பேரும் எங்க அம்மா வீட்டுக்கு போறோம் உங்க அண்ணன் வேற வரும்போது சாயங்காலம் வீட்டுக்கு திரும்பி போகணும்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க..இவ்வளவு தூரம் வந்துட்டு அம்மா வீட்டுக்கு வராம போனால் நல்லா இருக்காது உங்களுக்கு தான் தெரியுமே நம்ம கிராமத்துல இருக்க எல்லாரும் ஏதாவது சொல்லுவாங்க அதனால நாங்க ரெண்டு பேரும் அம்மா வீட்டுக்கு போறோம் இவர் கொஞ்ச நேரம் அங்கு இருந்துட்டு அப்படியே கிளம்பட்டும்.."என்று சிந்தியா சொல்ல அவளை கோபமாக முறைத்து பார்த்தாள் சங்கீதா.



"ஏம்பா எங்க அண்ணன் ரொம்ப வருஷம் கழிச்சு இன்னைக்கு தான் எங்க வீட்டுக்கு வந்திருக்கான் செத்த நேரம் அவன் என் கூட இருக்கணும்னு உனக்கு தோணதா? இன்னும் கொஞ்ச நாள்ல அவன் ஊருக்கு கிளம்பிடுவான் அதுக்கப்புறம் அவனை மறுபடியும் எப்ப பாப்பேன்னு எனக்கே தெரியாது..அண்ணன் கிளம்பும்போது உங்க வீட்ல வந்து தலையை காட்டிட்டு அப்படியே போவான் நீ உங்க வீட்டுக்கு போறதுன்னா போ.."என்று கோபமாக சொல்லிவிட,முதன்முதலாக தன் பிறந்த வீட்டுக்கு கணவன் இல்லாமல் தனியாக சென்றால் தன் வீட்டில் உள்ளவர்கள் தன்னைக் கேள்வி கேட்டு குடைந்து எடுத்து விடுவார்கள் என்று விருப்பமே இல்லை என்றாலும் அங்கேயே அமர்ந்து விட்டாள் சிந்தியா.



"ஏய் சங்கீதா உனக்கே நீ பேசுறது அபத்தமா இல்ல! முதன்முதல புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் ஒண்ணா போகாம தனித்தனியா போனா பாக்குறதுக்கு அது நல்லாவா இருக்கும்?? உங்க அண்ணனை அந்த பொண்ணு கூட அனுப்பிவிடு கொஞ்ச நேரம் இருந்துட்டு அப்புறம் என்ன நம்ம வீட்டுக்கு வரட்டும் உங்க வீட்ல போய் உங்க அண்ணன் என்ன பண்ண போறான் இங்கே இருக்க சொல்லு நைட்டு இருந்துட்டு நாளைக்கு சாயங்காலம் போகலாம்.."என்று கண்ணன் சொன்னதை கேட்டு, சந்தோஷத்தில் பூரித்து விட்டாள் சங்கீதா.



"டேய் அண்ணா என் வீட்டுக்காரர் என்ன சொன்னார்ன்னு கேட்டியா? அவர் சொல்றது மாதிரி நீ வீட்டில் போய் என்ன பண்ண போற இங்கேயே இரு நாளைக்கு சாயங்காலம் போகலாம் நான் அம்மா கிட்ட சொல்றேன்..நீ உன் பொண்டாட்டி வீட்டுக்கு போறதுன்னா போயிட்டு வா போயிட்டு சீக்கிரம் வந்துடு நான் உனக்கு பிடிச்ச பலகாரம் எல்லாத்தையும் செய்ய போறேன்.."என்று தன் வீட்டில் தன் அண்ணனுக்கு பிடித்தவற்றையெல்லாம் பார்த்து பார்த்து செய்வதற்கு ஓடிவிட்டாள் சங்கீதா.
 
Last edited:
Status
Not open for further replies.
Top