பயணம் 2
பாரமாக கனத்த இமைகளை பிரிக்க முடியாமல் கஷ்டப்பட்டு விழி திறந்த ஸ்மிருத்தாவிற்கு தான் தன் ஆய்வகம் இல்லாமல் வேறொரு இடத்தில் கட்டிலில் படுத்திருப்பது கருத்தில் பட்டது.
கடைசியாக பஷீர் துப்பாக்கியிலிருந்து பாய்ந்து வந்த தோட்டா ஒன்று தன் இதயத்தை உரசிச் செல்லும் முன் ஓடி வந்த அண்ணனும், ஆய்வகத்தில் தோன்றிய வெளிச்சம் மட்டுமே ஸ்மிருத்தாவிற்கு நினைவிருந்தது.
எவ்வளவு யோசித்தும் அதன் பின் நடந்த எதுவும் அவள் நினைவில் இல்லை. மெதுவாக எழுந்து தான் இருக்கும் அறையை நோட்டமிட்டவளுக்கு வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை.
அதே சமயம் அந்த அறை சாதாரணமானதாகவும் தோன்றவில்லை. தன்னை காக்க வந்த பிரபஞ்சன் நிலை என்ன ஆனதோ என்ற பயம் தோன்ற வேகமாக அறையின் கதவை திறக்க கை வைத்தவளுக்கு அது வெளிப்புறம் பூட்டப்பட்டிருப்பதில் சிறிது பதட்டம் தோன்றியது.
தான் கடத்தப்பட்டிருக்கின்றோமோ என்ற அச்சத்தில் சன்னல் கதவை திறந்து பார்த்தவளுக்கு அருகிலேயே வீடுகளும் அதில் மக்கள் நடமாட்டமும் இருப்பது தெரிய, தன்னை கடத்தியிருக்க கூடும் என்ற சந்தேகம் மெல்ல மறைந்தது.
குடியிருப்புக்களுக்கு நடுவே கடத்திய யாரையும் அடைத்து வைத்திருக்க மாட்டார்கள் என்று அவள் மூளை கூற, அதன் பிறகே பொறுமையாக தன்னை சுற்றி இருக்கும் பொருட்கள் அனைத்தையும், தான் இருக்கும் இடத்தையும் ஆராய்ந்து பார்க்க ஆரம்பித்தாள்.
தன்னை சுற்றியிருக்கும் பொருட்கள் எல்லாம் பழக்கப்பட்டது போல தோன்றினாலும் அனைத்தும் வித்தியாசமாக இருப்பது போல தோன்றியது.
குளிரூட்டி இல்லாமலேயே அறை குளுமைாக இருப்பதை கவனித்தவளுக்கு தன்னை சுற்றி ஏதோ மர்மம் இருப்பது போல தோன்றியது.
ஸ்மிருத்தா தன் சிந்தனையில் இருக்கும் போதே அறை கதவு திறந்துக் கொள்ள, அழுத்தமான காலடி ஓசையுடன் உள்ளே வந்தான் இசையரசன்.
முதல் பார்வையிலே ஆளுமை நிறைந்த அவனின் தோற்றத்தில் ஒரு நொடி தடுமாறிய ஸ்மிருத்தா, தன் தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு 'நீ யார்? என்பது போல கேள்வியாக பார்க்க, அதை சரியாக புரிந்துக் கொண்டவன்
"ஹாய் ஸ்மிருத்தா. ஐ எம் இசையரசன்... உன்ன மாதிரி நானும் ஒரு சயின்டிஸ்ட். எனக்கு உன்னோட உதவி தேவைப்படுது. அதனால இங்க வர வைச்சேன்." என்று நிதானமாக கூற, எதற்காக என்று கேள்வி தோன்றிய போதிலும், அதை தவிர்த்து,
"அப்போ என்னோட அண்ணன்..." என்று தமயனை நினைத்து ஸ்மிருத்தா பதற்றமாக கேட்டாள்.
"உன் அண்ணன் உதவி எனக்கு தேவையில்லை. ஆனாலும் அவன நினைச்சு நீ கவலைப்பட்டு எனக்கு உதவி செய்ய மறுத்திட்டா என்ன பண்ண. அதனால அவனையும் வர வைச்சாச்சு." என்று இசையரசன் கூறிய பிறகே ஸ்மிருத்தாவிற்கு நிம்மதியாக இருந்தது.
"நீ தயாராகி வந்தா உன் அண்ணன பாக்க போகலாம். அப்படியே உன்ன எதுக்காக இங்க வர வைத்தேன்னு சொல்றேன்." என்று கூறி, அறையின் மறுபக்கம் இருந்த கதவில் கை வைக்க அது திறந்துக் கொண்டது.
கதவில் சில வினாடிகள் செலவிட்டு திரும்பிய இசையரசன் ஸ்மிருத்தாவின் கைகளை பற்றி அதில் வைக்க அவள் கைரேகை பதிவு செய்யப்பட்டது.
"இனி நீ உனக்கு தேவைபட்ட இடத்தில உன் கைரேகையை பயன்படுத்தலாம்." என கூறி தன் கையிலிருந்த பையை அவளிடம் தந்து விட்டு ஸ்மிருத்தாவை பொருள் விளங்கா பார்வை பார்த்து விட்டு வெளியேறினான்.
இசையரசன் வெளியேறியதும் அவன் தந்த பையை திறந்து பார்த்தவளுக்கு எரிச்சலும் கோபமும் ஒரே நேரத்தில் வந்தது. அவளுக்கு தேவையான உடையுடன் உள்ளாடைகளும் இருந்ததே அவள் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் காரணம்.
'இவனிடம் யார் இதையெல்லாம் கேட்டா.' என்று மனதுக்குள்ளே வறுத்து தாளித்தவள் அறிந்திருக்க வாய்பில்லை ஆணவனின் மனதின் நிலையை.
ஸ்மிருத்தாவின் உடை கிழிந்திருப்பதை பார்த்தவன் இன்றைய நிலையில் அவளுக்கு தனது உதவி சங்கடத்தை தர கூடும் என்றாலும் யாரையும் அழைக்க முடியாத நிலையில் அவனே அவளுக்கான உடையை தேர்வு செய்து வாங்கியிருந்தான்.
நீண்ட நாட்களாக படிப்பு,வேலை, ஆராய்ச்சி என தன் கடமை தவறாது, பெண்களை தன்னிடம் அண்ட விடாமல் இருந்தவன், ஸ்மிருத்தாவிற்கான துணியை எடுத்து வைக்கும் போது வருடங்கள் கழிந்த பின்னும் அவன் இளமை உணர்வு தான் இன்னும் புத்துணர்வுடன் இருப்பதை உணர்த்தியது.
இசையரசன் அறையை விட்டு வெளியே வந்த பிறகும் ஸ்மிருத்தா தன் முன்னே இருப்பது போல தோன்றிய மாய தோற்றத்தை என்ன முயன்றும் விரட்ட முடியவில்லை.
"என்ன பொண்ணுடா இவ..." என்று வழக்கம் போல ஸ்மிருத்தாவை பற்றி நினைத்தவன் மனது அவனை கேளாமலே அவள் புறம் சற்று சாய்ந்தது.
முதல் முறை பார்க்கும் போது அவள் மீது தோன்றிய பிரம்மிப்பு இன்றும் அப்படியே இருக்க, அதையும் தாண்டி வேறாக மாறுவதை உணர்ந்து தடுக்க மனதின்றி அந்த உணர்வை ரசிக்க முடிவு செய்தான்.
அவனின் ரசனைக்கு நடுவே தான் செய்து முடிக்க வேண்டிய வேலை நினைவுக்கு வர தலையை கோதி தன்னை சமன் செய்தவன், முயன்று அவளை பற்றி நினைப்பதை ஒதுக்கி வைத்து அடுத்து செய்ய வேண்டியதை திட்டமிட ஆரம்பித்தான்.
இசையரசன் காட்டிய கதவை திறந்து பார்த்தவளுக்கு அது குளியல் அறையுடன் கூடிய வெறுமையான பெரிய அறையாக மட்டும் தான் தெரிந்தது.
'பாத் ரூம்க்கு எதுக்கு செக்யூரிட்டி லக்.' என்று கேள்வி கேட்டுக் கொண்டே கண்ணாடியில் தனது உருவத்தை பார்த்த பின்னே தோள்பட்டை பக்கம் தன் உடை கிழிந்திருந்து தெரிந்தது.
கிழிந்த உடையுடன் அந்நிய ஆடவன் முன் நின்றுக் கொண்டிருந்த தன் நிலையை நிந்தித்துக் கொண்ட ஸ்மிருத்தா, இசையரசன் கொடுத்த உடையை போட மனதில்லை என்றாலும் வேறு வழியின்றி தயாராகி வெளியே வந்தாள்.
அவன் கொடுத்த உடை தனக்கு கச்சிதமாக பொருந்தியிருப்பதை பார்த்தவளுக்கு மீண்டும் கோபம் பெருக்கெடுத்தது.
"ச்சீ... முதல் வீட்டுக்கு போனதும் இத கழட்டி குப்பையில போடணும்." என கூறிக் கொண்டே வெளியே வந்தவள் அறியாதது அவளின் அனைத்தும் அறிந்தவன் அவன் என்று.
ஸ்மிருத்தா வருவதற்காகவே காத்திருந்த இசையரசன் முன்னே நடக்க, அவனை மனதுக்குள் திட்டியபடி பின் தொடர்ந்தாள். பெண்ணவள் மெல்ல பேசினாலும் அவள் உதட்டசைவை கடை கண்ணால் கண்டவன் கண்டுக் கொள்ளாத பாவனையுடன் நடந்தான்.
தாங்கள் இருந்த அறையை விட்டு வெளியே வந்த பிறகு தான் ஸ்மிருத்தாவிற்கு அவள் இருந்த இடத்தின் விச்சித்திர நிலை கண்ணில் பட்டது.
ஒன்று போல காட்சியளித்த வீடுகளை பார்த்தவளுக்கு மலைப்பாக இருந்தது. வடிவம், நிறம் என அனைத்தும் ஒரே மாதிரியாக பத்து பத்து வீடுகளாக ஏறத்தாழ இருபது வரிசை இருந்தது. சீரான இடைவெளியில் இருந்த வீடுகளுக்கு சுற்று சுவர் என்பது இல்லை.
சூரிய ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்க கூடிய அமைப்பு அனைத்து வீடுகளிலும் பொருத்தப்பட்டிருப்பதை கண்டவளுக்கு, இந்த குடியிருப்பு வாசிகளை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
ஒவ்வொரு வீட்டின் பின்புறமும் காய்கறி மற்றும் பூந்தோட்டமும், முன்புறம் நிழல் தரும் மரங்களுமென பசுமையான சூழலில் அமைந்திருந்தது.
பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும் அனைத்தும் தான் இருந்த வீட்டை போல நவீன வசதிகளை கொண்டது என்று புரிந்தது. அதே நேரம் இயற்கைக்கு தீங்கு விளைவிக்கும் எதுவும் இல்லா வகையில் அனைத்தும் இருந்தது.
பத்து நிமிடங்களுக்கு மேலாக நடந்த ஸ்மிருத்தாவிற்கு கால் வலிப்பது போல இருந்தது. இவ்வளவு வசதியான குடியிருப்பில் வாகனமின்றி நடப்பது அவளுக்கு வியப்பாக இருந்தது.
"மிஸ்டர் இசையரசன் இன்னும் எவ்வளவு தூரம் இப்படி நடந்து போகணும்? உங்க கிட்ட கார், பைக் எதுவும் இ்ல்லையா?" என்று இசையரசன் வேகத்திற்கு ஈடுகொடுத்து நடந்ததில் மூச்சு வாங்க பேசியவளை பொருள் விளங்கா பார்வை பார்த்தவன், தனது வேகத்தை குறைத்துக் கொண்டான்.
"அவசியம் இல்லாத போது இங்க பெரும்பாலும் எல்லாரும் நடந்து தான் போவோம்." என்று கூற, அதன் பிறகே ஸ்மிருத்தா சாலையில் நடந்து வருபவர்களை கவனித்தாள்.
அனைத்து வீடும் பார்ப்பதற்கு வசதியாக இருந்தாலும் யாரும் வாகனத்தை பயன்படுத்தியதாக தெரியவில்லை. பெரும்பாலும் அனைவரும் நடந்து தான் சென்றனர்.
"ஏன் வசதி இருந்தும் யூஸ் பண்ணாம இருக்காங்க?" என்று முணுமுணுக்க, அது தெளிவாகவே இசையரசன் காதில் விழுந்தது.
"ஆடம்பர பொருளை அத்தியாவசியமா மாத்தினதால தான் இந்த உலகம் பாதிக்கப்படுது." என்று பதிலுக்கு இசையரசனும் முணுமுணுத்தான்.
மேலும் சில நிமிடங்களுக்கு பின் இருவரும் அடுக்கு மாடி கட்டிடத்தின் முன் வந்து நிற்க, பெயர் பலகையை பார்த்ததால் மட்டுமே அது அரசு மருத்துவமணை என்பது ஸ்மிருத்தாவிற்கு நன்கு புரிந்தது.
பளிங்கு போல மினுமினுங்கும் கட்டிடம் அரசு மருத்துவமனையாக இருக்குமா என்ற ஐயம் தோன்றினாலும், அண்ணனின் நினைவில் அதை விரட்டினாள்.
"பிரபாவுக்கு என்னாச்சு?" என்று கலங்கி போய் கேட்க,
"பயப்பட ஒன்னுமில்ல, புல்லட் லைட்டா உன் ப்ரதர் ஷோல்டர உரசினதுல கொஞ்சம் ப்ளட் லாஸ் அண்ட் டைம் ட்ராவல் ஒத்துக்கல. சோ அப்சர்வேஷன்ல இருக்கிறான்." என்று இசையரன் கூறினான்.
தன்னை காக்க தூப்பாக்கி குண்டு காயத்தை தாங்கிய தன் அண்ணனை பார்க்க வேண்டும் என்ற அவசரத்தில் இசையரசன் கூறியதை ஸ்மிருத்தா சரியாக கவனிக்கவில்லை.
கட்டிலில் மயக்கத்தில் இருந்த அண்ணனை கண்டதும் இது நாள் வரை அவன் மீது கொண்ட கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அவன் கையை தன் கைகளுக்குள் கோர்த்து வைத்து கண்ணீர் வடித்தாள்.
"இங்க பாரு ஸ்மிருத்தா உன் அண்ணனுக்கு ஒன்னுமில்ல. சாதாரண மயக்கம் தான். இன்னும் கொஞ்ச நேரத்தில நார்மல் ஆகிடுவான்." என்று கூற, அதன் பிறகே மருத்துவமணை தோற்றத்தை கவனித்தாள்.
அனைத்தும் நேர்த்தியாகவும், அதே சமயம் அழகாகவும் இருக்க, இப்படி ஒரு அரசு மருத்துவமனையை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
சுத்தம், அழகு, பணியாளர் நடந்துக் கொள்ளும் விதம் என அனைத்தும் தனியார் மருத்துவமனையை விட பல படி மேலே இருந்தது.
"நான் பார்த்த மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல விட இது பல மடங்கு பெட்டரா இருக்கு. இது உண்மையாவே கவர்மென்ட் ஹாஸ்பிடல் தானா?" என்று தனது சந்தேகத்தை ஸ்மிருத்தா இசையரசனிடம் கேட்க, அவனும் ஆம் என்று தலையசைத்தான்.
"கவர்மென்ட் ஹாஸ்பிடல் கூட நல்லா இருந்தா மருத்துவம் எப்பவும் வியாபாரமா மாறாது." என கூறியவன், அவள் கேள்விக்கு முழுமையாக பதிலளிக்காமல் "நீ இங்கயே இரு நான் கொஞ்ச நேரத்தில வரேன்." என கூறிவிட்டு நகர, ஸ்மிருத்தா அண்ணன் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.
வெள்ளை உடையணிந்து செவிலியர் ஒருவர் பிரபஞ்சன் நரம்பில் மருந்து ஒன்றை செலுத்த அவனிடம் சிறு முனங்கலுடன் அசைவு காணப்பட்டது.
அண்ணனிடம் அசைவு தெரியவும் ஸ்மிருத்தா அருகில் வர அவளை பார்த்து எழ முயன்ற பிரபஞ்சன் கையின் வலியில் முடியாமல் மீண்டும் படுக்கையில் சாய்ந்தான்.
"உனக்கு ஒன்னுமில்லையே?" என்று பிரபஞ்சன் மெல்லிய குரலில் தங்கையை நலம் விசாரிக்க,
"நான் நல்லா இருக்கேன்." என்று ஸ்மிருத்தா பதிலளிக்கும் போதே வேகமாக இசையரசன் அவ்விடம் வந்தான்.
"நம்மள கண்டு பிடிச்சிட்டாங்க, நாம சீக்கிரம் இங்க இருந்து போகணும்." என அவரப்படுத்த, பஷீர் தங்களை பின் தொடர்வதாக நினைத்து இரட்டையர் பதட்டமடைந்தனர்.
மருந்தின் மயக்கம் முழுமையாக தெளியாததில் இன்னும் சரியாக எழுந்து அமர முடியாத பிரபஞ்சனை சக்கர நாற்காலியில் அமர்த்தி இசையரசன் தள்ளிக்கொண்டு வர ஸ்மிருத்தாவும் அவனை பின் தொடர்ந்தாள்.
மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த வாகனத்தை பார்த்ததும் அண்ணன், தங்கை இருவரது விழிகளும் அப்பட்டமான அதிர்ச்சியை காட்டியது.
'சக்கரமே இல்லாம் சோப்பு டப்பா மாதிரி இருக்கிற இது காரு தானா! இந்த காரை எங்க வாங்கியிருப்பான். இவனும் சயின்டிஸ்ட்டுன்னு சொன்னானே ஒரு வேளை இவனே கண்டு பிடிச்சதா இருக்குமோ!' என்று ஸ்மிருத்தா யோசிக்கும் வேளையிலே பிரபஞ்சனை காரில் அமர வைத்து இருக்கைப் பட்டையையும் அணிவித்திருந்தான்.
அண்ணன் அருகில் அமரலாம் என்றால் அந்த இருக்கையோ மிகப்பெரிய பெட்டியை தன் மடியில் வைத்திருந்தது. வேறு வழியின்றி ஸ்மிருத்தா இசையரசனுடன் முன்னே அமர வேண்டியதாகியது.
தரையிலிருந்து ஒரு அடி உயரம் எழுந்து புவி ஈர்ப்பு விசையை மீறி பறக்க ஆரம்பித்த வாகனம் இரட்டையர்களுக்கு வியப்பை தந்தது. ஆனாலும் இசையரசன் விஞ்ஞானி என்பதே மேலும் கேள்வி கேட்காமல் அவன் கண்டுபிடிப்பு என்ற முடிவிற்கு வர வைத்தது.
அவர்கள் புறப்பட்ட சில நிமிடங்களிலே மருந்தின் தாக்கத்தில் பிரபஞ்சன் மீண்டும் உறக்கத்திற்குச் செல்ல, அண்ணனுடன் பேச முடியாமல் செல்லும் பாதையில் கவனத்தை திருப்பினாள்.
ஆரம்பத்தில் சாதாரணமாக தெரிந்த பாதையின் தோற்றம் மாறி மாயலோகம் போல காட்சியளித்தது.
பாதையின் காட்சி மாறியதை கவனித்தவளுக்கு, அதுவரை தரையில் சென்றுக் கொண்டிருந்த வாகனம் சற்று உயர்ந்து பல அடி உயரத்தில் பறக்க ஆரம்பித்ததை கூட தாமதமாகவே உணர்ந்தாள்.
தான் உணர்ந்ததை கிரகிக்கும் முன்பே அவள் பார்த்த பசுமையான தரையிலிருந்து பல அடி உயரத்தில் இயற்கையை பாதிக்காத வகையில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் எல்லாம் ஸ்மிருத்தாவின் கற்பனையில் கூட வந்ததில்லை.
கடலில் மிதக்கும் குட்டி குட்டி தீவுகளாக அமைக்கப்ட்டிருக்கும் குடியிருப்புகளும், அவற்றை பாதுகாக்கும் கண்ணாடி கவசங்களும், சாதாரணமாக பறந்து திரியும் சிறிய வகை வானூர்திகளும் திறந்த விழிகளை சிமிட்ட கூட விடவில்லை.
அவள் கண்கள் பார்க்கும் யாவும் 'மார்வல் மூவி பாக்குறத நிறுத்தணும் அதான் நமக்கு இப்படி கனவு வருது.' என்று ஸ்மிருத்தாவை மனதுக்குள் புலம்ப வைத்தது.
"நீ பார்க்கும் எதுவும் கனவு இல்ல. நிஜம் தான்." என்று இசையரசன் கூற, அவனை நம்பாமல் பார்த்த ஸ்மிருத்தா
"அப்போ இது என்ன இடம்." என்று குழப்பத்தில் ஸ்மிருத்தா கேட்டாள்.
"சென்னை..." என்று உடனடியாக இசையரசனிடமிருந்து வந்தது பதில்.
"கொஞ்ச நேரம் நான் மயக்கமா இருந்தா நீங்க சொல்றத எல்லாம் நம்புவேனா. ஒழுங்க கொண்டு போய் என் வீட்டுல விடு. என் டேட் அந்த பஷீர டீல் பண்ணிக்குவார். உங்க உதவிக்கு ரெம்ப நன்றி." என்று கூறிய ஸ்மிருத்தாவை ஓர விழியால் பார்த்தவன்
"நான் ஹாஸ்பிட்டல்ல பேசினத நீ சரியா கவனிக்கலன்னு நினைக்கிறேன். இது சென்னை தான். ஆனா உன்னோட காலம் இல்ல.
டைம் ட்ராவல் பண்ணி உங்க ரெண்டு பேரையும் 2523க்கு கூட்டிட்டு வந்திருக்கேன்." என்று கூற, ஸ்மிருத்தா சத்தமாக சிரிக்க ஆரம்பித்தாள்.
"இங்க பாருங்க இசை... எங்கள டாக்டர் பஷீர் கிட்ட இருந்து காப்பத்தினதுக்காக நீங்க சொல்ற எல்லாத்தையும் நம்ப முடியாது.
டைம் ட்ராவல் எல்லாம் கதைக்கு வேணா ஒத்து வரும் பட் நிஜ லைப்ல..." என்று கூறி தனது கட்டை விரலை கீழ் நோக்கி சரித்து நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தினாள்.
"உன்னோட க்ருவல் ரிடியூஸ்மென்ட் கூட யாரும் இது வர செய்யாத ஒன்னு. அதுவும் மனித மூளையில மெசினின் செட் பண்ணி கன்ரோல் பண்றது யோசிச்சு கூட பாத்திருக்க மாட்டாங்க. அதுக்காக அது பொய்யின்னு சொல்ல முடியுமா?" என்று அவள் செய்த, எதிர்காலத்தில் செய்ய திட்டமிட்ட ஆராய்ச்சி பற்றி கூறினான்.
"இது எப்படி உனக்கு தெரியும். என் அண்ணனுக்கே இத பத்தி முழுசா தெரியாது." என்று தான் யாரிடமும் கூறாது மறைத்து வைத்ததை பற்றி இசையரசன் பேசியதில் சற்று பயந்து பேசினாள்.
"எனக்கு மட்டுமில்ல இந்த உலகத்துக்கே உன் ஆராய்ச்சி பத்தி தெரியும்." என்று கூறி தன் காரில் சில பொத்தானை அழுத்த, அவள் முன் சிறு திரை தெரிந்தது.
"இதுல சயின்டிஸ்ட் ஸ்மிருத்தான்னு உன் பேரை டைப் பண்ணு." என்று இசையரசன் கூற, மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல அவன் கூறியதை செய்தாள்.
ஸ்மிருத்தா என்ற பெயருக்கு இணையம் வழங்கிய தகவலில் அவள் இரு கண்களும் தெறித்து வெளியே விழும் அளவுக்கு விரிந்தது.
ஸ்மிருத்தா என்ற பெயரின் கீழே அவளின் இளமைகாலம் தொடங்கி, அவள் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் அதற்கு கிடைத்த விருதுகள் என பட்டியல் நீண்டுக் கொண்டே செல்ல அதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஏனெனில் அதில் சில அவள் மனதின் எண்ணங்கள். அதை எதிர்காலத்தில் தகுந்த சமயத்தில் செயல்படுத்த காத்திருந்தாள்.
"இந்த காலத்தில நீ எல்லாரும் புகழ்ந்து பேச கூடிய ஒரு சயின்டிஸ்ட்." என்று கூறிய இசையரசனை பார்த்தவள் தன்னை நிலைப்படு்த்திக் கொண்டாள்.
"எதுக்காக என்ன அழைச்சிட்டு வந்தீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்று கேள்வி கேட்க,
"நீ கண்டுபிடிச்ச நல்லது கெட்டதா மாறாம தடுக்க." என்று இசையரசன் கூறினான்.
"வாட் யூ மீன்..." என்று புரியாமல் கேட்டவளிடம்,
"நல்லது நடக்க நீ உருவாக்கிய பார்முலாவை வைச்சு கெட்டதை உருவாக்க இந்த ஐநூறு வருசத்தில பல முயற்சி நடந்தது. ஆனா எதுவும் வெற்றியடையல. கடைசியா நீ கண்டு பிடிச்ச கருவி முழுசா முடிக்கும் முன்ன நீ..." என்று சிறிது இடைவெளி விட்டவன் "அது எனக்கு இப்போ வேணும்." என்று கேட்ட குரலில் சற்று கட்டளை வெளிப்பட்டதோ என ஸ்மிருத்தா யோசிக்கும் முன் தொடர்ந்து பேசினான்.
"இப்போ நாம உன்னோட லேப்-க்கு தான் போறோம்." என்று இசையரசன் கூறியது தனக்கு முன் இருந்த கட்டிடம் இது உண்மை தான் என்ற சந்தேகத்தை உருவாக்கியது.
ஸ்மிருத்தா தனது ஆராய்ச்சியின் ஆரம்ப காலகட்டத்தில் இருப்பதால் ஆய்வுக் கூடத்திற்கு பெரிதாக எதையும் செய்திருக்கவில்லை.
அதிகபட்டசம் நாற்பது பேர் வேலை செய்யும் அளவிலே அவள் ஆய்வுகூடம் இருந்தது. அதுவே அவள் தேவைக்கு அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது அவள் கண் முன் இருந்ததோ ஆயிரக்கணக்கானவர்கள் பரபரப்பாக வேலை செய்யும் பரந்து விரிந்த இடம்.
அதன் தோற்றத்தை கண்டு திகைத்து 'அப்பாவோட மொத்த சொத்த வித்தா கூட நம்ம இத உருவாக்கியிக்க முடியாது.' என ஸ்மிருத்தா நினைத்தாள்.
"உன் லேப் அரசாங்க கட்டுப்பாடு இல்லாத சுதந்திர அமைப்பா தான் இன்னைக்கு வரை இருக்கு. இதுல நீ உருவாக்கினது கொஞ்சம் தான். உனக்கு அப்புறம் இத பாத்துக்க ஆரம்பிச்சவங்க செய்த மாற்றங்கள் தான் இது எல்லாம்.
உன் க்ரூவல்டி மெஷின் பர்மிஷன் கொடுத்தா மட்டும் தான் ஒருத்தர் உன் குட்னஸ் லேபை பொறுப்பேத்து வழி நடத்த முடியும்." என்று இசையரசன் விளக்கம் கொடுத்தான்.
சிறு விதையாக தான் இட்ட உழைப்பு மிகப்பெரிய விருட்சமாக வளர்ந்து நிற்பதை பார்த்தவளின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் கிடைக்கவில்லை.
"இப்போ இத யார் நிர்வாகம் செய்றாங்க. நான் பார்க்கலாமா?" என்று ஆர்வம் மேலோங்க கேட்ட ஸ்மிருத்தாவை இசையரசன் சிறு புன்னகையுடன் பார்த்தானே தவிர பதிலளிக்கவில்லை.
தன் கேள்விக்கு தலையை சரித்து, முத்து பற்கள் தெரியும்படி லேசாக இதழ் பிரித்து சிரித்தவனின் ஆளுமை நிறைந்த அழகில் தன் கேள்விக்கான பதில் வராததை கூட உணராமல் ஸ்மிருத்தாவின் இதயம் தாளம் தப்பி துடிக்க ஆரம்பித்தது.
தனது காரிலிருந்து இறங்கிய இசையரசனை தொடர்ந்து இறங்கிய ஸ்மிருத்தா தன் கனவின் பிரம்மாண்ட வெற்றியை அவள் கண்ணால் பார்த்தாள்.
பிரபஞ்சன் அப்போது தான் விழித்திருக்க அவனையும் அழைத்துக் கொண்டு உள்ளே நடந்தான். செல்லும் வழியில் அண்ணனிடம் சுருக்கமாக நடந்ததை கூற, அவனுக்கும் தங்கை கூறியதை நம்புவதை தவிர வேறு வழியில்லாது உடன் சென்றான்.
ஓர் இடத்தில் அசையாது நின்ற இசையரசனின் பார்வை சென்ற திசையில் தங்கள் கவனத்தை செலுத்திய இரட்டையர்கள் இருவரும் ஸ்மிருத்தாவின் உருவ சிலையை கண்டு வியந்து நின்றனர்.
நீல நிற பளிங்கு கல்லால் செய்யப்பட்ட அந்த உருவ சிலையின் மீது சில நொடிகள் பார்வையை நிலைக்க விட்ட இசையரசன் "இந்த பக்கம் வாங்க." என்று கூறி அழைத்துச் சென்றது ஸ்மிருத்தாவின் பழைய ஆய்வுக்கூடத்திற்கு தான்.
காலங்கள் பல கடந்த பின்னும் ஸ்மிருத்தாவின் தனிப்பட்ட ஆய்வகத்தின் அமைப்பு மட்டும் மாற்றப்படாமல் அப்படியே இருந்தது. அனைத்தையும் தொட்டு தடவி பார்த்த ஸ்மிருத்தா இசையரசனிடம்
"இப்பாே சொல்லுங்க... எதுக்காக என்ன எதிர்காலத்துக்கு கூட்டிட்டு வந்தீங்கன்னு." என்று காரணம் கேட்க, எப்படி கூறுவது என தயங்கி, பின் ஒரு முடிவுடன்
"குட்னஸ் லேப் சீஇஓ-வ கொல்லணும்." என்று அழுத்தமான குரலில் ஸ்மிருத்தாவிடம் தான் கூற வேண்டியதை கூறி முடித்தான்.
அதுவரை சிறு மையலுடன் இசையரசனை பார்த்த ஸ்மிருத்தாவின் கண்களில் கனல் கூடியது.
"நோ..." என்று ஒற்றை வார்த்தையில் தன் ஒட்டு மொத்த வெறுப்புடன் மறுப்பை தெரிவித்தவள் நகரும் முன் லேசர் ஔி கதிரால் உருவான சிறையில் இருந்தாள். சக்கர நாற்காலில் இருந்து நகர நினைத்த அண்ணனை தடுத்து நிறுத்தியவள்
"இது ஓல்டேஜ் அதிகமான லேசர். டச் பண்ணா நம்ம கை துண்டாகிடும்." என்று கூறியவள் அசையாது நிற்க பிரபஞ்சனும் தங்கையை நெருங்க முடியாது இருந்தான்.
"நான் சொன்னத செய்தா இன்னைக்கே நீ உன் இடத்துக்கு போயிடலாம்." என்று கூறியவனை வெறுப்புடன் பார்த்த ஸ்மிருத்தா
"நெவர்..." என்று கூற, அவளுக்கு பதிலளிக்கும் முன் இசையரசன் கை கட்டியிருந்த பொருள் நிறம் மாற, அனைத்தையும் மறந்தவனாக அங்கிருந்து விரைந்துச் சென்றான்.
செல்லும் அவனையே பார்த்த ஸ்மிருத்தாவிற்கு மனதின் ஒரு ஓரம் வலிப்பது போல இருந்தது.
இளமை காலம் தொடங்கும் முன்பே ஆராய்ச்சியை ஆரம்பித்தவளுக்கு, யாரிடமும் ஈர்ப்பு தோன்றவில்லை என்பதை விட, யாரையும் கவனித்து பார்ப்பதற்கு நேரம் இருந்ததில்லை என்று கூறலாம்.
ஆராய்ச்சி மட்டுமே உலகம் என்றிருந்த ஸ்மிருத்தாவிற்கு பார்த்த சில நிமிடங்களிலே யாரிடமும் தோன்றாத ஈர்ப்பு இசையரசனிடம் தோன்றியது. அந்த ஈர்ப்பு தோன்றிய சில நிமிடத்திலே கருகியதை அவள் இளகிய மனம் ஏற்க மறுத்தது.