வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

விழிகளின் அருகினில் வானம் - கதை திரி

Status
Not open for further replies.

vishudev

Moderator
அத்தியாயம் – 15

கோவிலிலிருந்து வெளியேறிய வெற்றியோ எங்கே விட்டால் ஓடிவிடுவாளோ என்று நினைத்து கொண்டு கைவிடாமல் பிடித்திருந்தவளை இழுத்து கொண்டு தனது போலீஸ் வாகனத்தின் அருகே செல்ல அதற்கு முன் மஹாலட்சுமி தனது கணவனை அழைத்து “என்னங்க அவன நம்ம வண்டியில முதல்ல ஏற சொல்லுங்க… கல்யாணமே காக்கி யூனிஃபார்மல் ஆகிடுச்சு. தாலி கட்டுறதுக்கு ஒரு நல்ல நேரம் பார்க்கல, நல்ல துணி எடுக்கல… நாலு பேர கூப்பிடாம எல்லாம் நடந்தாச்சு… இதுல கல்யாணம் ஆன உடனேயே அந்த போலீஸ் ஜீப்புல தான் முதல் முதல்ல ஏறணுமா??” என்று புலம்பினார்.

அவரின் கோபமே இப்பொழுது புலம்பலாக வந்து கொண்டிருக்கிறது என்று புரிந்து கொண்ட அவரது மகனும் ஒரு சிறு புன்னகையை வெளிப்படுத்தி “சேகர் வண்டிய எடுத்துட்டு வீட்டுக்கு வந்துடுங்க…” என்று கூறிவிட்டு தனது மனைவியை அழைத்து கொண்டு அவர்களது காரில் ஏறினேன்.

காரை அவனது தந்தை ஓட்ட அருகில் அவனது அன்னை பின்னே வெற்றியும் தர்ஷினியும் அமர்ந்திருந்தனர்.

தர்ஷினிக்கோ ஏதோ ஒரு சுழலில் சிக்கி கொண்ட உணர்வு. ஒரு இரண்டு மணி நேரத்தில் தன் வாழ்க்கையே தலைகீழாகி போன உணர்வு. இந்த திருமணம் தேவையா? இவர் யார் எதற்கு இந்த திருமணம். ஒரு வேளை தன்னுடைய கதையே கேட்டு பரிதாபத்தினால் இந்த திருமணத்தை செய்து கொண்டாரா? ஆனாலும் எதற்கு? ஏன்? இவருடைய பெற்றோரை பார்த்தால் நல்லவர்கள் போல் தெரிகின்றனரே. அப்படிப்பட்டவங்களுக்கு தன்னை மாதிரி ஒருத்தி எதற்கு மருமகளாக? பல கேள்விகள் அவளிடத்தில் ஆனால் அதற்கு பதில் கூற கூடியவனோ அமைதியாக அவளது அருகில் அமர்ந்து வந்தான்.

அவளது பார்வை அவனை தழுவியது. இவ்வளவு நேரம் அவளின் யோசனையான முகத்தையே பார்த்து கொண்டிருந்தவன் அவளின் பார்வை தன்னை தழுவியதும் என்ன எனும் விதமாக புருவத்தை உயர்த்தி கேட்டான்.

ராயனின் கேஸை பற்றி அவளிடம் விசாரிக்க வரும் பொழுது இருந்த அவனது பார்வைக்கும் தற்பொழுது அவன் பார்க்கும் பார்வைக்கும் உள்ள வித்யாசத்தை நொடியில் புரிந்து கொண்டவள், “ஒன்னுமில்லை…” என்று கூறிக்கொண்டு மறுபுறம் திரும்பி கொண்டாள்.

அவனோ சிரித்து கொண்டே அவளின் புறம் சரிந்து காதருகே தன் மூச்சு காற்று படும் தூரத்தில் சென்று, “உன்னோட எல்லா கேள்விகளுக்கும் பதில் போக போக உனக்கே புரியும்…” என்றவனை திரும்பி “நான் மனசுக்குள்ள நினைச்சது இவருக்கு எப்படி தெரிஞ்சுது…” எனும் விதமாக கண்களை அகல திறந்து அவனை பார்த்தாள்.

“உன்னோட ஒவ்வொரு பார்வைக்குமான அர்த்தம் நானறிவேன் ஸ்வீட்டி…” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக கூறினான்.

அவனின் பதிலில் அவளுடைய விழிகள் இன்னும் விரிந்தன.

இருவரின் மூச்சு காற்றும் மற்றொருவர் ஸ்பரிசிக்கும் தூரத்தில் இருக்க அவளின் விரிந்த அந்த விழிகளுக்குள் தன்னை தொலைத்து கொண்டிருந்தான் வெற்றி.

“ஏங்க முதல் வேலையா ஜோசியகாரன போய் பார்க்கனும். இன்னைக்கு நல்ல நாளா இல்லையானு தெரிஞ்சுக்கனும்…” என்ற அவனது அன்னையின் பேச்சில் சுதாகரித்து இருவரும் விலகினர்.

“மஹா அதான் கல்யாணம் முடிஞ்சுருச்சே… இனி எதுக்கு அதெல்லாம்…”

“அதுக்காக இப்படியே விட்டுட முடியுமா? அவனுக்கு தான் அறிவில்லை. முதல்லையே நம்மகிட்ட சொல்றதுக்கு என்னவாம்? யாரோ மாதிரி கல்யாணத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடி சொல்றான்” என்று அங்கலாய்த்தார்.

அவரின் கோபம் புரிந்து சமாதானப்படுத்தும் விதமாய், “அம்மா…” என்று இழுக்க…

“என்னங்க அவனை எங்கிட்ட பேச வேண்டாம்னு சொல்ல சொல்லுங்க… நாம என்ன லவ்வுக்கு எதிரியா? லவ் பண்றோம் கல்யாணம் பண்ணி வைங்கனு சொன்னா என்னவாம்?”

இதை கேட்ட தர்ஷினிக்கு தான் மேலும் அதிர்ச்சியாக இருந்தது. “என்னது லவ்வா??” என்று கண்கள் தெரிக்க வாயை பிளந்து கொண்டு பார்த்தவளின் பார்வையை கண்டு வெற்றியின் இதழ்கள் சற்று தாராளமாகவே விரிந்தது.

“சாரி மஹாலட்சுமி… நான் முதல்லயே சொல்லி இருக்கனும் தான்… தப்பு பண்ணிட்டேன். ஆனா உங்கிட்டயும் அப்பாகிட்டயும் முன்னமே சொல்லி இருந்தேனே. நான் என்ன செஞ்சாலும் அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும். என்னை நம்புங்கனு…” என்று தனது செய்கைக்கு நியாயம் வைத்தான்.

“அது ஏதோ எவனையாவது கொலை செய்ய போறான் அதுக்கு தான் அப்படி சொல்றானு நினைச்சேன். அன்னைக்கு மட்டும் இப்படினு தெரிஞ்சுருந்தா ஊரை அழைச்சு இந்த கல்யாணத்தை பண்ணி இருக்க மாட்டேனா?” என்று அப்பொழுதும் தனது மகனுக்கான பதிலை கணவனிடம் கூறிக்கொண்டிருந்தார்.

அவரோ இருவரின் சம்பாஷணைகளை கேட்ட படி அமைதியாக காரை ஓட்டி கொண்டிருந்தார்.

“அம்மா… என்னோட நிலைமை அப்படி… இவள தான் கல்யாணம் பண்ணுவேங்கறதுல உறுதியா இருந்தேன் ஆனா அதுக்கான நேரம் தான் எப்பனு தெரியாம இருந்தேன். ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க… நான் டைம் சொன்னா தானே உங்களால நல்ல நேரம் மண்டபம் எல்லாம் பார்க்க முடியும்?” என்றான் தாயிடம்.

“இங்க பாருங்க அவன் என்ன சொன்னாலும் நான் சமாதானம் ஆக மாட்டேனு அவங்கிட்ட சொல்லிடுங்க…” என்று அவர் சண்டை பிடிக்க அவரது மகனோ அவனை சமாதானப்படுத்த முயற்சி செய்து கொண்டே வர அவர்களது வீடும் வந்துவிட்டது.

கோபத்துடன் இறங்கிய மஹாலட்சுமியோ, “அவனை இங்கேயே இருக்க சொல்லுங்க… ஆரத்தி எடுத்துட்டு வர்ரேன்…” என்று வீட்டுக்குள் நுழைந்தார்.

அவர் ஆரத்தி தட்டுடன் வெளியே வரவும், “ரெண்டு பேரையும் ஜோடியா நிக்க சொல்லுங்க…”என்று தனது கணவனுக்கு உத்தரவிட அவரோ தனது மகனை பார்த்தார்.

அவனோ எங்கோ பார்த்து கொண்டு நின்றான்.

மஹாலட்சுமியோ அவனின் நின்றிருந்த கோலத்தை பார்த்து தனது கணவரை தீயாக முறைத்தார்.

தனது மனைவியின் வேல் விழி பார்வையில் வெற்றியை நோக்கி “வெற்றி… அம்மா சொல்றத செய்டா…” என்றார்.

“நீங்களா ஆரத்தி எடுக்கறீங்க? அவங்க தானே எடுக்கறாங்க… அப்ப அவங்கள எங்கிட்ட நேரடியா பேச சொல்லுங்க…” என்று அவனும் ஏட்டிக்கு போட்டியாக பேசினான்.

இருவருக்கும் இடையில் அவர் எப்படி முழித்து கொண்டிருந்தாரோ அதே மாதிரி தர்ஷினியும் இவர்களின் சண்டையை பார்த்து கொண்டு நின்றிருந்தாள்.

அவன் ஒருபக்கம் முறுக்கி கொண்டு நிற்க அவனுக்கு ஒரு சதவீதத்திலும் குறைந்தவள் தான் இல்லை என்று அவனது அன்னையும் முறுக்கி கொண்டு நின்றார். இருவரின் நிலையை கண்ட சீனிவாசனோ மானசீகமாக தலையில் அடித்து கொண்டு அங்கே பரிதாபமாக நின்றிருந்த மருமகளையும் கண்டார்.

“இங்க பாருங்க… வீட்டுக்கு வந்த மருமகளை இப்படி வெளியவே நிக்க வச்சு அம்மாவும் மகனும் சண்டை போட்டுட்டு நிப்பீங்களா??” என்று அவருக்கு கோபம் வந்து கத்த அப்பொழுது தான் இருவருக்குமே உரைத்தது.

உடனே வெற்றி அவளின் அருகே வந்து நிற்க அவனது அன்னையோ “அந்த ஷூவ கழட்டிட்டு வந்து நில்லுடா...” என்று கத்தினார்.

அவனும் சமத்தாக தனது தாயின் கட்டளையை நிறைவேற்றி விட்டு தர்ஷினியின் அருகே வந்து நின்று அவளது கைகளை இறுக்க பற்றி கொண்டான்.

இருவரும் சேர்ந்தே வலது காலை எடுத்து வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தனர்.

வீட்டிற்குள் நுழைந்த மருமகளை பூஜை அறைக்கு சென்று விளக்கேற்ற கூறினார். அவளும் அவரின் பேச்சை கேட்டு தவறாமல் செய்தாள்.

“உன் பெயரென்னமா?” என்று மஹா தர்ஷினியிடம் கேட்டார்.

அவள் பதில் கூறும் முன் முந்தி கொண்டு, “தேவதர்ஷினி… எனக்கு மட்டும் தேவா…” என்று காதலோடு கூறினான்.

அவனின் பதிலில் திகைத்து நின்றது என்னவோ தர்ஷினி தான்.

“ஏன் அவ பேசமாட்டாளா? அவளுக்கு நீ என்ன பின்னனியா பேசுற?” என்று அதற்கு எகிறிகொண்டு தனது மகனிடம் சண்டைக்கு நின்றார்.

“இங்க பாருங்க அவ ஒரு வாயில்லா பூச்சி… இந்த மிரட்டுற வேலை எல்லாம் அவகிட்ட வச்சுக்க வேணாம் சொல்லிட்டேன்.”

“இங்க பாரு உன் வேலை எவனாவது ஒருத்தன ஜெயில்ல போட்டு அடிக்கனும், இல்லையா என்கவுண்டர் அப்படிங்கற பேர்ல எவனாவது சுட வேண்டியது. அதுக்கும் எவனாவது சிக்கலைனா இந்த அரசியல்வாதிங்க அப்புறம் ஏதாவது பேரணி இதுக்கெல்லாம் பந்தோவஸ்து பண்ண வேண்டியது மட்டும் தான். இங்க எங்க ரெண்டு பேருக்கு இடையில நீ வந்தீனு வச்சுக்கோ அப்புறம் நல்லா இருக்காது சொல்லிட்டேன்.” என்று தனது மகனை மிரட்டி கொண்டிருக்க தர்ஷினிக்கோ அரசியல்வாதி என்ற சொல்லை கேட்டவுடன் இதயமே நடுங்கிற்று.

இவ்வளவு நேரம் ராயனையும் அவனது அண்ணனையும் மறந்து போயிருந்தவளுக்கு அவர்களது நினைவு வந்து அவளது உடலை நடுங்க செய்து கண்கள் கலங்கிற்று.

“சரி… சரி என்னமோ பண்ணுங்க… ஆனா என் பொண்டாட்டி கண்ணுல இருந்து மட்டும் கண்ணீர் வந்துச்சு அப்புறம் நானும் சும்மா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்…” என்று பேசி கொண்டிருந்தவனின் கைப்பேசி அழைத்தது.

கைப்பேசியை எடுத்து திரையில் தெரிந்த தியாகுவின் எண்ணை கண்டவனின் நெற்றி யோசனையில் சுருங்க, “சார்… சொல்லுங்க…” என்றான் இணைப்பை ஏற்படுத்தி.

அந்தப்பக்கம் தியாகுவோ “வெற்றி எங்க இருக்க? உடனே கிளம்பி ராயனை அட்மிட் பண்ணி இருக்கும் ஹாஸ்பிட்டலுக்கு வா…” என்றார் கட்டளையாக.

“நான் வீட்டுல இருக்கேன் சார்… ஏதாவது பிரச்சனையா?”

“ஆமா எவ்வளவு சீக்கிரம் வரமுடியுமோ அவ்வளவு விரைவா வா…” என்று கூறி வைத்து விட்டார்.

“என்ன பிரச்சனையா இருக்கும்?” என்று யோசனை செய்தவன் வெளியில் சேகர் தனது வண்டியுடன் வந்திருக்க “அம்மா… கொஞ்சம் வேலை இருக்கு… நான் நைட் வர்ர லேட் ஆனாலும் ஆகும்… பார்த்துக்கோங்க… வந்து எல்லா விசயமும் சொல்றேன்.” என்றவன் விழிகளால் தர்ஷினியை காட்டி வெளியே செல்ல போனான்.

“டேய்… பால் பழமாவது சாப்பிட்டு போ…” என்று அவனது அன்னை அழைக்க…

“இல்ல மா… ஒரு சின்ன பிரச்சனை… இதுக்கெல்லாம் நேரமில்லை…” என்றவன் தனது போலீஸ் வாகனத்தில் ஏறி சென்று விட்டான்.

“இவனுக்கு எப்ப பார்த்தாலும் இதே பொழப்பா போச்சு…” என்று புலம்பிக் கொண்டே அங்கே திருவிழாவில் காணாமல் போன குழந்தை போல் நின்று கொண்டிருந்த தர்ஷினியை கண்டு, “தர்ஷினி ஏன் உன் முகம் ஒரு மாதிரி வாடி போய் இருக்கு??? தலைவலிக்குதா?” என்று கேட்டார்.

“ஆமாம்…” என்று அவளும் சிறிது தயங்கி கொண்டே கூற…

“சாப்பிடறயா?? இல்ல காபி ஏதாவது எடுத்துட்டு வரட்டுமா?” என்று மஹாலட்சுமி கேட்டார்.

“இ… இல்ல… கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சரியா போய்டும்…” என்றாள் தயங்கி கொண்டே.

அங்கே இருந்த அறையை காட்டியவர் “போடா… கொஞ்ச நேரம் போய் தூங்கு…” என்று கூற அவளும் எப்பொழுதடா தனிமை கிடைக்கும் என்று நினைத்து கொண்டிருக்க சட்டென்று அந்த அறைக்குள் புகுந்து கதவை அடைத்து கொண்டாள்.

அவளின் நடவடிக்கைகளை பார்த்து கொண்டே இருந்த மகாலட்சுமியோ, “பொண்ணு ரொம்ப அழகா இருக்காங்க… ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு… ஆனா ஏங்க இந்த பொண்ணு ரொம்ப சோகமா இருக்குது? இந்த பொண்ணுக்கு ஏதோ பிரச்சனை இருக்குமோ… ஒரு வேளை நம்ம வெற்றிய இவளுக்கு பிடிக்கலையோ… ஆனா அவன் முகத்தில இன்னைக்கு இருந்த சந்தோஷத்துக்கு ஒரு அளவே இல்லை. ஆனா இந்த பொண்ணு… எனக்கென்னமோ பயமா இருக்குதுங்க…கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தவன் இப்ப தான் கல்யாணம் செஞ்சு இருக்கான். ஆனா இந்த பொண்ணு ரொம்ப சோகமா இருக்கா… ரெண்டு பேருக்குள்ள ஏதாவது பிரச்சனை வந்துடுமோ…” என்று தனது கணவரின் அருகே அமர்ந்து கொண்டே கேள்வி எழுப்பி கொண்டிருந்தார்.

“இங்க பாரு போலீஸ்காரனோட அம்மானு நிரூபிக்காத. அவன் தான் சொல்லிட்டு போனானே வந்து எல்லாம் சொல்றேனு… அப்புறம் என்ன? கொஞ்ச நேரம் அமைதியா இரு. அந்த பொண்ணோட முகத்தை பார்த்தாலே தெரியுது அமைதியான பொண்ணுனு. ஏதோ ஒரு கஷ்டத்துல தான் அந்த பொண்ணும் இருக்குது போல… நம்ம பையன் முகத்துல இருக்கற சந்தோஷத்தை பார்த்தாலே தெரியுது அவன் எப்படியும் அந்த பொண்ண மீட்டெடுத்து தன்னோட வாழ்க்கையை சந்தோஷமா வாழ்ந்துக்குவானு. அதனால ரொம்ப கவலைப்படாம போய் சாப்பாடு எடுத்து வை. கொஞ்ச நேரம் கழிச்சு அந்த பொண்ணையும் எழுப்பி ஏதாவது சாப்பிட வை.” என்றார்.

தனது மகனின் மேலிருந்த நம்பிக்கையில் அவரும் தனது கவலைகளை மறந்து சரியென்று கூறி கொண்டே எழுந்து சென்றார்
கருத்து திரி:
 

vishudev

Moderator


அத்தியாயம் - 16

தனது வீட்டிலிருந்து வெளியேறிய வெற்றியோ வெளியே அப்பொழுது தான் வந்திறங்கிய சேகரிடம் “சேகர் உடனே வண்டிய எடுங்க ராயன் அட்மிட் பண்ணி இருக்கற ஹாஸ்பிட்டலுக்கு போகனும்…” என்றான் அவசரமாக.

“ஏன் சார் ஏதேனும் பிரச்சனையா?”

“அப்படி தான் போல… கமிஷனர் போன் பண்ணி உடனே வர சொன்னார்.”

“ஒகே சார்…” என்றவன் வண்டியை மருத்துவமனை நோக்கி செலுத்தினான்.

“இப்ப ராயன பார்த்துக்கிற டாக்டர்ஸ்ல யார் ட்யூட்டில இருப்பாங்க சேகர்…”

“ஆனந்த் தான் சார் இருப்பார்.”

“ஒகே… சீக்கிரம் போ…”

வாகனத்தை அதி வேகத்தில் செலுத்திய சேகரோ அடுத்த பதினைந்து நிமிடத்தில் மருத்துவமனையை அடைந்திருந்தான்.

காரை நிறுத்தியதும் புயல் போல் உள்ளே நுழைந்தான் வெற்றி. அவனின் பின்னேயே சேகரும் உள்ளே செல்ல அங்கே ராயன் அனுமதிக்கப்பட்டிருந்த வளாகத்தில் கொஞ்சம் கூட்டமாக இருந்தது.

அவர்களை எல்லாம் விளக்கி தள்ளி விட்டு வெற்றியும் சேகரும் உள்ளே நுழைந்த பொழுது அவர்களின் இருவரின் கண்ணுக்கு தெரிந்தது என்னவோ கத்தியை ராதாகிருஷ்ணணின் கழுத்தில் வைத்து கொண்டு கத்தி கொண்டிருந்த ராயனை தான்.

கண்களில் பயத்துடன் அவனிடம் சமாதானம் பேச முயன்று கொண்டிருந்தனர் எதிரே நின்றிருந்த ஆனந்த் மற்றும் தியாகு. அத்தோடு ராயனுக்காக பிரத்யேகமாக கொண்டுவரப்பட்ட மருத்துவர்கள், ராதாகிருஷ்ணனின் உதவியாளர் மற்றும் அவரது பாதுகாவலர்கள் ஒரு சில காவலர்கள் என்று அனைவரும் அவனின் இந்த மிருகத்தனமான தோற்றத்தை கண்டு அஞ்சி நின்று கொண்டிருந்தனர்.

“ஆஹா… இதை தானே எதிர்பார்த்தேன்… இதா… ஆரம்பிச்சுட்டானல்ல… ராயனே நடத்து நடத்து… உன்னை மிருகமா மாத்தனும்னு தானே யாருக்கும் தெரியாம போதை மருந்து கொடுத்துட்டு இருந்தேன். உன்னை இந்த நிலைமல பார்க்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? இன்னைக்கு தான் என் வாழ்க்கையிலேயே ரொம்ப சந்தோஷமான நாள்.“ என்று மனதிற்குள் நினைத்து கொண்ட வெற்றியோ இதழ்களில் ஒரு மில்லி மீட்டர் அளவு புன்னகையை மட்டுமே சிந்தி கண்களில் சுவாரஸ்யம் மின்ன நடக்கும் நிகழ்வை பார்த்து கொண்டிருந்தான்.

அனைவரின் கவனமும் அங்கே இருக்க வெற்றியின் இந்த முகத்தை பார்ப்பதற்கு யாருமில்லை.

அன்று காலை வெற்றி அதிரடியாக ராயனின் வீட்டிற்குள் நுழைந்து தர்ஷினியை மீட்டு வந்த பின்பு ராயனுக்காக சிறப்பாக வெளிநாட்டிலிருந்து அழைக்கப்பட்ட மருத்துவர்கள் வந்து சேர்ந்து விட்டதாக கூற மறுநிமிடம் மருத்துவமனைக்கு கிளம்பினார் ராதாகிருஷ்ணன்.

அங்கே ஆனந்தும் அவனுடம் பணியாற்றிய மற்ற மருத்துவர்களும் வெற்றி கொடுத்திருந்த ஊசிகளை மட்டுமே அவனுக்கு அவ்வப்பொழுது கொடுத்து அமைதி படுத்தி வைத்திருந்தனர். ஆனால் மருத்துவமனைக்கும் அங்கிருந்த மருத்துவ குறிப்பேட்டிலும் அவனுக்கு மருத்துவம் பார்ப்பது போல பதிந்திருந்தனர்.

மருத்துவர்களுடன் வந்திருந்த அமைச்சரோ ராயனின் மருத்துவ பரிசோதனைகள் அடங்கிய கோப்பினை வாங்கி அவர்களிடம் கொடுக்க யாருக்குமே சந்தேகம் வராதபடி அந்த கோப்பினை தயார்படுத்தி வைத்திருந்ததால் அவர்களும் குற்றம் குறை ஏதும் கூறவில்லை. அது ஆனந்திற்கு பெரும் ஆறுதலாக இருந்தது.

ஆனாலும் வேறு சில மருந்துகளை பரிந்துரைத்து அதை கொடுக்கும் படி கூறிக்கொண்டிருந்தனர். இவர்கள் நின்று இதையெல்லாம் பேசி கொண்டிருந்தது ராயன் படுத்திருந்த அதே அறையில் தான்.

அப்பொழுது தான் போதையிலிருந்து சிறிது சிறிதாக நினைவிற்கு திரும்பிய ராயனின் செவியில் இவர்கள் பேசியது தெளிவாக விழுந்தது.

அவன் கண்விழித்த பார்த்த பொழுது அறையில் ஆறேழு பேர் பேசி கொண்டு நின்றிருக்க ராதாகிருஷ்ணனோ “எனக்கு என் ராயன் வேணும். அவன் இந்த போதை மயக்கத்திலிருந்து முழுசா வெளிவந்து என்னுடைய பழைய ராயனா வரணும். அதுக்கு என்னென்ன பண்ணனுமோ அதை பண்ணுங்க…” என்று பேசி கொண்டிருக்க ராயனோ அவரையே பார்த்து கொண்டிருந்தான்.

அதே சமயம் அவனின் புறம் திரும்பிய ராதாகிருஷ்ணனின் விழிகள் கண்டது என்னவோ கண்விழித்து அவரையே பார்த்து கொண்டிருந்தவனை தான்.

உடனே அருகில் சென்று “ராயா… ராயா… உனக்கு ஒன்னுமில்லைடா… எல்லாம் சரியாகிடும். சீக்கிரம் இந்த போதை பழக்கத்திலிருந்து வெளியே கொண்டு வந்து உன்னை பழைய மனுஷனா மாத்துறேன். அதுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. உன் மேல எந்த வழக்கும் இல்லாம உன்னை வெளிய கொண்டு வர வேண்டியது என் பொறுப்பு…” என்று உணர்ச்சி பெருக்கில் கூறிக்கொண்டிருக்க அவனோ இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான்.

“என்னடா? என்ன ஆச்சு… ஏன் இப்படி பார்க்குற?” என்றவர் திரும்பி மருத்துவர்களை பார்த்து “என் தம்பி குணமாகிட்டானா? அவன் அமைதியா நான் சொல்றதெல்லாம் கேட்டுட்டு இருக்கானே இதுக்கு என்ன அர்த்தம். டாக்டர் சீக்கிரம் வந்து அவனை செக் பண்ணுங்க…” என்று அவர்களை பார்த்து கூறிக்கொண்டிருக்கும் நொடியில் ராயன் அந்த நிகழ்வை நிகழ்த்தி இருந்தான்.

ராயன் அங்கே இருந்த மேசையில் வைத்திருந்த கத்தியை எடுத்து கொண்டு அதை அமைச்சரின் கழுத்தில் வைத்திருந்தான்.

தனக்கு போதை மருந்து கொடுக்க வேண்டாமென்று கூறியது இவன் தானே. இவன் பேச்சினை அனைவரும் கேட்டு கொண்டு தனக்கு எங்கே கொடுக்காமல் விட்டு விடுவார்களோ என்று எண்ணி ராதாகிருஷ்ணனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொண்டிருந்தான்.



“ஏய்… நான் கேட்டது எனக்கு கிடைக்கனும் இல்ல இவன கழுத்தை அறுத்து கொன்னுடுவேன்… டேய் டாக்டர்… இவன் பேச்சை கேட்டுட்டு எனக்கு வேற ஊசிய போட போறயா…” என்று எதிரே நின்றிருந்தவர்களை கதிகலங்க செய்து கொண்டிருந்தான் அந்த மனித அரக்கன்.

“ராயன் கொஞ்சம் சொன்னா கேளுங்க அவரை விடுங்க நான் உங்களுக்கு தேவையான ஊசி போடறேன்.” என்று ஆனந்த் கூற ராயனோ அவனை நம்பாத ஒரு பார்வை பார்த்தான்.

“இல்ல… நீ பொய் சொல்ற… நீங்க எல்லாம் இவனோட பேசி கொண்டிருந்ததை நான் கேட்டேன். யார் யாரையோ புதுசு புதுசா கூட்டிட்டு வந்து எனக்கு வேற என்னமோ செய்ய பார்க்குறீங்க…“

“இல்ல ராயன் நாங்க எதுவும் செய்ய மாட்டோம்… ப்ளீஸ் அவரை விட்டுடுங்க… அவர் உங்க அண்ணா… இந்த நாட்டோட அமைச்சர்…” என்று தியாகுவும் கெஞ்சி கொண்டிருந்தார்.

“என் அண்ணனா… இவனா… யாரா வேணா இருந்துட்டு போகட்டும் எனக்கு அதை பத்தி கவலை இல்லை… எனக்கு எப்படி இவன் அந்த ஊசி போட வேண்டாம்னு சொல்லலாம்.” என்று கூறியவனின் கைகளில் இருந்த கத்தியின் கூர்மை அமைச்சரின் கழுத்தை சற்றே பதம் பார்த்தது.

இவ்வளவு சம்பாஷணைகளையும் கழுத்தில் ராயன் அழுத்தியிருந்த கத்தியுடனேயே கேட்டு கொண்டிருந்த ராதா கிருஷ்ணனுக்கோ கண்களில் பயம் அப்பட்டமாக தெரிந்தது. அவர் எங்கே தான் வாய் திறந்து பேசி அதனால் கழுத்தில் ராயன் வைத்திருக்கும் கத்தியின் அழுத்தம் அதிகமாகி விடுமோ என்று பயத்தில் எச்சிலை விழுங்கவும் பயந்து இருந்தார்.

தியாகுவோ என்ன செய்வதென்று புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டிருக்க அவரின் கண்ணில் விழுந்தது என்னவோ வெற்றி தான்.

அவனை கண்டவுடன் ஏதாவது செய் எனும் விதமாக கட்டளை இருந்தது.

அவனோ அவரின் பார்வையின் அர்த்தம் புரிந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் நடப்பதை சுவாரஸ்யமாக பார்த்து கொண்டிருந்தான்.

ராயனுக்கு அவன் பிடித்து வைத்திருப்பது அண்ணன் என்பதோ அவர் அமைச்சர் என்பதோ அவனை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் மற்றும் அவரின் பாதுகாவலர்கள் இருக்கிறார்கள் என்பதோ எதுவுமே அவனது கருத்தில் பதியவில்லை. அவனுக்கு தேவை போதை போதை மட்டுமே.

“ராயன்… நாங்க வேணா அந்த டாக்டர்ஸ் எல்லாம் திருப்பி அனுப்பிடுறோம்… நீங்க முதல்ல அவர் கழுத்துல இருந்த கத்தியை எடுங்க… அவருக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுனா பெரிய பிரச்சனை ஆகிடும்…” என்று தியாகு அவனிடம் சமாதானம் பேச முயன்றார்.

“முடியாது… ஆமா நீ யாரு… நீ இவனுக்கு வேண்டியவனா? அதான் இவன காப்பாத்தனும்னு நினைக்குறயா?” என்று தியாகுவை பார்த்து கேள்வி கேட்க அவருக்கோ ஐயோடா… என்றிருந்தது. இவனுங்க கிட்டயெல்லாம் குப்பை கொட்டனும்னு எனக்கு தலையெழுத்து… என்று மனதிற்குள் திட்டி கொண்டே இதற்கெல்லாம் காரணமான வெற்றியை பார்த்தார்.

அவனும் சேகரும் அங்கே ஒதுங்கி நின்று தனக்கும் நடப்பவைகளுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை எனும் ரீதியில் நடப்பவைகளை சுவராஸ்யமாக பார்த்து கொண்டே தங்களுக்குள் பேசி கொண்டிருந்தனர்.

அதை பார்த்த தியாகுவிற்கோ எரிச்சல் அதிகமாகியது.

இந்த நேரத்துல இவன கூப்பிட்டு திட்டவும் முடியல என்று அவனை முறைத்து பார்த்து கொண்டே ராயனின் புறம் திரும்பினார்.

அதற்குள் மருத்துவர், அமைச்சரின் உதவியாளர், அவரின் பாதுகாவலர்கள் என அனைவரும் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருந்தனர்.

வெற்றியோ அருகே நின்று கொண்டிருந்த சேகரிடம் “இதென்ன சேகர் மெகா சீரியல் மாதிரி இழுத்துட்டே போறாங்க… சட்டுனு ஏதாவது நடந்தா பரவாயில்லையில்ல… அவனும் மிரட்டிட்டு இருக்கான் இவங்க என்னடானா பேச்சு வார்த்தை நடத்திட்டு இருக்காங்க… நல்லாவே இல்லையே… ச்ச… இப்படி எல்லாம் இங்க நடக்கும்னு தெரிஞ்சிருந்தா இப்படி அடிச்சு பிடிச்சு வந்திருக்க மாட்டேன். கல்யாணம் ஆன உடனே பொண்டாட்டி கூட பால் பழம் சாப்பிடாம வந்துட்டேன். வருத்தமா இருக்கு… எங்க அம்மா வேற எல்லா சாங்கியத்தையும் முடிச்சுட்டு போனு சொன்னாங்க… நான் தான் முக்கியமான வேலைனு வந்துட்டேன்…” என்று சோகமாக பேசி கொண்டிருந்தான்.

“சார்… நமக்கு நேர் எதிரே என்ன நடந்துட்டு இருக்கு? நீங்க என்னடானா பால் பழம் சாப்பிட முடியலையேனு பேசிட்டு இருக்கீங்க…”

“என் கவலை எனக்கு… உங்களுக்கு என்ன நீங்க எல்லாம் பால் பழம் சாப்பிட்டு எல்லா வேலையும் முடிச்சுட்டு தானே நிக்கறீங்க…”

“சார்… ஏன் சார்…” என்றவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனாலும் இருக்கும் இடம் கருதி தனது சிரிப்பை கட்டுப்படுத்தி கொண்டான்.

“பேசாம நாம போய் ஒரு டீ குடிச்சுட்டு வருவோமா?? நாம வர்ரதுக்குள்ளயாவது இவனுங்க எல்லாம் ஒரு முடிவுக்கு வர்ரானுங்களானு பார்க்கலாம்…” என்றான் வெற்றி ராயனையும் மற்றவர்களையும் பார்த்து கொண்டே.

“சார்… இப்ப தான் கமிஷனர் நம்மள பார்வயாளயே பஸ்பம் ஆக்குற மாதிரி பார்த்தார். இதுல நீங்க இப்படி சொன்னது அவருக்கு கேட்டா நம்மள அவர் துப்பாக்கி எடுத்து சுட்டுடுவார்…” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக அவன் கூறினான்.

“அவர விடுங்க சேகர்…” என்று கூற சேகர் தான் “சார்… கொஞ்ச நேரம் அமைதியா இருங்களேன்… ப்ளீஸ்… என்ன நடக்குதுனு தான் பார்க்கலாமே…” என்றான் கெஞ்சுதலாக.

“சரி… உங்களுக்காக பேசாமா இருக்கேன்…” என்றவன் பார்வை மீண்டும் அங்கே நடந்தவைகளை ஆராய்ந்தது.

“ராயன் அவர விடு… ப்ளீஸ்…” என்று ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கெஞ்சி கொண்டிருந்தார்.

“முடியாது… அவன விட மாட்டேன். இவ்வளவு நேரம் இவன் தானே எனக்கு போதை மருந்து தர கூடாதுனு சொன்னான். அதனால இவன நான் விடமாட்டேன்…”

“இங்க பாரு ராயன்… அதெல்லாம் ஒன்னுமில்ல… அவர் சும்மா சொன்னாரு… நான் உனக்கு எப்பவும் கொடுக்கற மருந்தையே தர்ரேன்… விடு அவர…” என்று ஆனந்த் கூறினான்.

“முடியாது… இவன் இருந்தா எனக்கு தான் இடைஞ்சல்…”

நல்ல மனநிலையில் இருப்பவர்களுக்கு சொல்லி புரிய வைக்கலாம். ஆனால் இவனோ போதைக்காக எந்த எல்லைக்கும் செல்வான் என்ற நிலைமைக்கு சென்று இருந்தான்.

ஏதாவது எக்கு தப்பாக பேசினால் கூட அமைச்சரின் உயிர் இருக்காது என்பதை நினைத்து கொண்டு கொஞ்சம் பொறுமையாக கையாண்டனர்.

“உனக்கு என்ன வேணும் சொல்லு… அவர விட்டுடு…” என்று தியாகு கெஞ்சவே ஆரம்பித்திருந்தார்.

“ராயன் விடு அவரை…” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அமைச்சரின் மெய்பாதுகாப்பாளர்கள் இருவர் ராயனின் பின்னே சென்று அவனின் இரு கைகளை பிடிக்கும் பொழுது பின்னே அவர்களின் அரவம் கேட்டு அவர்களின் புறம் திரும்பி “ஏய்…” என்று கத்தினான்.

“என்ன… எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்தறீங்களா??? இவன எங்கிட்ட இருந்து காப்பாத்திடுவீங்களா??” என்று மேலும் அவர்களை மிரட்டி கொண்டே ராதாகிருஷ்ணனின் கழுத்தில் வைத்திருந்த கத்தியை அழுத்தினான்.

அவன் அழுத்தியதால் ராதாகிருஷ்ணனின் கழுத்திலிருந்து சிறு கீறல் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

அதை கண்ட எல்லோர் மனதிலும் அச்சம் ஏற்பட்டது.

அங்கே அமைச்சரின் தலைமை பாதுகாவலனாக இருப்பவன் அவனின் அருகே சென்று அசந்த நேரம் அவனது கைகளை தட்டிவிட ராயனின் கைகளில் இருந்த கத்தி தூர சென்று விழுந்தது.

அதே நேரத்தில் ராதாகிருஷ்ணனை இழுத்து மறுபக்கமும் விட்டிருந்தான் அந்த கருப்பு சட்டை அணிந்த வீரன்.

அந்த பாதுகாவலர் இழுத்து விடப்பட்டதில் ராதாகிருஷ்ணனோ தடுமாறி நின்றவரை சுற்றி அவருடைய பாதுகாவலர்களும் போலீசாரும் நின்று கொண்டனர்.

தியாகுவோ “சார் உங்களுக்கு ஒன்னும் ஆகலையல்ல… ஆர் யூ ஆல் ரைட்…” என்று அவரின் கழுத்தில் இருந்த காயத்தினை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

கழுத்தில் ஏற்பட்ட காயத்தினால் பேச முடியாமல் போக தலையை மட்டும் ஆட்டினார் ராதாகிருஷ்ணன்.

அதே சமயம் தன்னிடம் அகப்பட்டிருந்தவனை காப்பாற்றியவர்களை பார்த்து பெரும் கோபம் கொண்ட ராயனோ சட்டென்று அங்கே பாதுகாவலரின் கைகளில் இருந்த துப்பாக்கியினை பறித்து எடுத்து அவர்களை நோக்கி காட்டினான்.

இதை சுற்றும் இருந்த யாரும் எதிர்பார்த்திராததால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

“என்னங்கடா எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்தறீங்களா? அவனை எப்படி காப்பாத்தறீங்கனு நானும் பார்க்கறேன்…” என்றவன் எதிரில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியில் இருந்த அந்த ட்ரிக்கரை அழுத்த முயன்றான்.

அடுத்த நிமிடம் அங்கே இருந்த பாதுகாவலரின் துப்பாக்கியில் இருந்த விரைந்த தோட்டாக்கள் ராயனின் உடம்பை துளையிட்டு குருதியை வெளியேற்றியது.

சில நொடிகளுக்குள் நடந்த அந்த நிகழ்வில் அனைவரும் ஸ்தம்பித்து நின்றனர்.

முதலில் சுதாகரித்தது என்னவோ அமைச்சர் தான்…

“ஏய் என்ன வேலை பண்ணி வச்சுருக்கீங்க?? எதுக்கு இப்ப அவனை சுட்டீங்க?? அவன் என் தம்பி…” என்று அவர்களை திட்டி கொண்டே ராயனின் உயிரற்ற உடலின் அருகே சென்றார்.

அங்கிருந்த பாதுகாவலருக்கோ என்ன சொல்வதென்று கூற இயலவில்லை.

“சார்… அவர் கையில் வச்சிருந்த ட்ரிக்கரை அழுத்த போனார். அதான் சுட வேண்டியதா போச்சு… சப்போஸ் எங்களுக்கு முன்னாடி அவர் அதை பண்ணி இருந்தா இப்ப நீங்க எங்க கூட இருந்திருக்க முடியாது.” என்று தங்கள் செயல் நன்மைக்கே எனும் விதமாக அப்பாதுகாவலர்களின் தலைமை பொறுப்பில் இருப்பவன் கூறினான்.

“மண்ணாங்கட்டி… என்னவா இருந்தாலும் அவன் என்னோட தம்பி டா… உங்களுக்கு எல்லாம் என்ன தெரியும்?” என்று கத்திக்கொண்டே கூறியவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

அங்கிருந்த அனைவருக்கும் என்ன கூறுவதென்று தெரியவில்லை. தியாகுவிற்கு ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தது. ஆனாலும் இன்னும் என்னென்ன எல்லாம் நடக்குமோ என்று மனதிற்குள் ஒரு அலைக்கழிப்பும் இருந்தது.

அவ்விடத்தில் மிகுந்த மகிழ்ச்சியும் மனதிற்குள் குத்தாட்டம் போட்டு கொண்டிருந்த ஒரே ஜீவன் வெற்றி மட்டும் தான்.

ராயனின் உயிரற்ற உடலை பெறுவதற்கு என்னென்ன வேலைகள் ஆகுமோ அதை எல்லாம் நிறைவேற்றி அவ்விடம் விட்டு நகர்ந்தார் ராதாகிருஷ்ணன்.

அங்கே இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த அந்த காட்சிகளை கொண்டு அமைச்சரின் தற்காப்புக்காகவே சுட்டனர் என ராயனின் இறப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

எல்லா வேலைகளையும் முடித்து விட்டு வெற்றி மற்றும் அனைவரும் வீடு திரும்பவே அதிகாலை ஆகிவிட்டது.
கருத்து திரி:
 

vishudev

Moderator
அத்தியாயம் - 17

மகிழ்ச்சியுடன் அதிகாலை வீடு திரும்பியவனை வரவேற்றது என்னவோ அவனது அன்னை தந்தை தான்.

மகனின் களைத்து போன முகத்தை கண்டவர் உடனே அவனுக்கு தேநீர் கொண்டு வந்து கொடுத்தார்.

“தேங்க்ஸ் மா…” என்றவன் தேநீரை அருந்தினான்.

“என்னடா ஏதோ பெரிய பிரச்சனையாமே? நியூஸ்பேப்பர், சேனல் எல்லாத்துலயும் அந்த அமைச்சரோட தம்பிய பத்தி தான் ஒரே பேச்ச இருக்கு…” என்றார் அன்றைய செய்திதாளை படித்த படி…

வெற்றியோ அன்னை கொடுத்த தேநீரை அருந்தி கொண்டே தந்தைக்கு பதிலளிக்காமல் கண்களால் அவ்வீட்டினை அலாசினான்.

“டேய்… நான் என்ன கேட்கறேன்… நீ என்ன பதிலே சொல்லாம இருக்க?” என்று அவனை நிமிர்ந்து பார்க்க அவனின் பார்வை நினைவு எல்லாம் இங்கே இல்லை என்பதை உணர்ந்தவர் அவனின் தோளில் கை வைத்து உலுக்கினார்.

ஏதோ வேறு ஒரு உலகத்தில் இருந்து எழுபவன் போல எழுந்தவன் “ஹா… என்னப்பா?? ஏதாவது சொன்னீங்களா?” என்று கேட்டான்.

“நான் ஒன்னுமே சொல்லல… உன் பொண்டாட்டி கீழ் ரூம்ல படுத்து இருக்கா…” என்று கூறினார்.

தனது தலையை பிடறிமுடியை அழுந்த கோதியவன் அசடு வழிய சிரித்தான்.

“டேய் வெக்கப்படுறேனு ஏதாவது ஒரு மாதிரி சிரிக்காத சகிக்கல…” என்று கூறிக்கொண்டே சமையலறையில் இருந்து வெளியேறினார் அவனது அன்னை மஹாலட்சுமி.

அவருக்கு ஒரு முறைப்பை மட்டுமே பதிலாக கொடுத்தவன் அடுத்த நிமிடம் அருந்தி கொண்டிருந்த தேநீர் கோப்பையை அங்கே இருந்த மேசையில் வைத்து விட்டு எழுந்து தர்ஷினி இருந்த அறைக்கு சென்றான்.

அதற்குள் பதறிய மஹாலட்சுமியோ “டேய் அங்க எங்க போற? உன் ரூமுக்கு போ… தாலி கட்டினதே நல்ல நேரமா என்னனு தெரியல இன்னும் மத்ததுக்கு எல்லாம் நல்ல நேரம் பார்க்கனும்…” என்று கத்தினார்.

அவரின் அலறலில் திரும்பியவன் “அம்மா… நான் ஒன்னும் அவ மேல பாய்ஞ்சட மாட்டேன்… சரியா? ஒரு அஞ்சு நிமிசம் அப்புறம் என் ரூமுக்கு போய்டறேன்...” என்றவன் அறைக்குள் புகுந்தான்.

அறைக்குள் நுழைந்தவுடன் வெற்றியின் பார்வைகள் அங்கே இருந்த மெத்தையை பார்வையிட்டது. ஆனால் அவள் இருப்பதற்கான அறிகுறி எங்கும் இல்லை. “இவ எங்க போனா? இந்த ரூம்ல தானே இருக்கறானு அம்மா சொன்னாங்க…” என்றவனின் பார்வை அறை முழுவதும் அலாச தர்ஷினியோ கட்டிலின் கீழே வெறும் நிலத்தில் இரு கைகளையும் தலைக்கு வைத்து கொண்டு கால்களை குறுக்கி கொண்டு படுத்திருந்தாள்.

“இவள… எதுக்கு இப்படி வெறும் தரையில படுத்துருக்கா???” என்று திட்டி கொண்டே அவளை இருகைகளாலும் ஏந்தியவன் அங்கே இருந்த மெத்தையில் படுக்க வைத்தான்.

அவளது முகத்தை உற்று பார்க்க அதிலே கண்ணீர் வழிந்த தடங்கள் இருந்தன. கண்ணீரின் ஈரப்பதம் கூட ஆங்காங்கே காயாமல் இருந்தது. “நைட் ஃபுல்லா அழுதுட்டே இருந்து இப்ப தான் தூங்க ஆரம்பிச்சுருப்பா போலயே…” என்று மனதிற்குள் நினைத்து கொண்டவன் அவளது முகத்தை இருகைகளால் பற்றி நெற்றியில் தனது இதழ் பதித்து அவளது கன்னங்களில் இருந்த ஈரத்தை தனது இதழ்களாலயே துடைத்தான்.

“எதுக்குடி இந்த அழுகை? உனக்கு நான் இருக்கேன்டி… என்ன கவலை உனக்கு? போதும்டி நீ பட்ட கஷ்டம் எல்லாம்… இனி உன் வாழ்க்கையில சந்தோஷம் மட்டுமே எஞ்சி இருக்கனும்… அந்த சந்தோஷத்தை நான் கொடுப்பேன்… என்னை நம்புடி…” என்றவனின் பார்வை அவளது இதழ்களில் பதிந்தது. அடுத்த நிமிடமே அவளது இதழ்களில் பட்டும் படாமல் தனது இதழை ஒத்தி எடுத்தான்.

மீண்டும் அவனது பார்வை மூடி இருந்த அவளது விழிகளிலே தேங்கி நிற்க அடுத்த நிமிடம் அவனது பார்வையோ மறுபடியும் அவளது இதழ்களின் சுவை அறிய முற்பட்டு அவளது இதழ்களை மொய்த்தது.

“டேய்... தூங்கிட்டு இருக்கற பொண்ணுகிட்ட இப்படி பண்றது எல்லாம் சரியில்லை… நீ ஒரு போலீஸ்காரன் அதை நியாபகம் வச்சுக்கோ…” என்று அவனது மனசாட்சி எச்சரிக்கை செய்தது.

“நான் போலீஸ்காரன் தான் அதுக்காக என் பொண்டாட்டி தானே அவ… அவகிட்ட இப்படி நடந்துக்காம வேற யார்கிட்ட நான் இப்படி நடந்துக்கறதாம். என்ன தான் அவ என் காதலியா இருந்தாலும் நான் தாலி கட்டின பின்னாடி தான் அவ மேல உரிமை எடுத்து இருக்கேன். அதுக்கு முன்னாடி என்னோட பார்வை கூட அவ மேல தவறா விழுந்தது கிடையாது. சோ நீ அடங்கு…” என்று தனது மனசாட்சிக்கு கொட்டு வைத்தான்.

“நீ சொல்றது எல்லாம் சரி தான். ஆனா நேத்து ஒரே நாளுல அவளுக்கு அத்தனை அதிர்ச்சி கொடுத்துட்டு நீ போய்ட்ட… ஆனா அதுக்கெல்லாம் அவ எப்படி ரியாக்ட் பண்ணுவானு நினைச்சயா? உனக்கு தேவையான விசயத்தை நீ நடத்திகிட்ட… ஆனா அந்த பொண்ணோட மனநிலைமை எப்படி இருக்கும்னு இன்னும் நீ யோசிக்கவே இல்லை… நீ அப்படி ஒரு காரியம் பண்ணினதுக்கே அவகிட்ட எப்படி ரியாக்ஷன் இருக்கும்னு தெரியல… அதுக்குள்ள உனக்கு ரொமான்ஸ் வேற கேட்குதா?? பொறுத்திருந்து பார் மகனே…” என்று மறுபடியும் அவனது மனசாட்சி அவனது குற்றத்தை எடுத்து கூற முற்பட்டது.

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். இப்படியே நீ பேசிகிட்டு இருக்கற வேலையை விட்டுட்டு நீ உன் வேலைய பாரு…” என்றவன் அவளது முகத்தையே பார்த்து கொண்டிருந்தான்.

அவனது இந்த ரசிப்பை தடை செய்யவே “டேய் வெற்றி… வெற்றி…” என்று கூறிக்கொண்டே அவனது அன்னை அந்த அறையின் உள்ளே நுழைந்தார்.

“ம்ப்ச்… இப்ப எதுக்கு ஹை டெசிபல்ல கத்திட்டு இருக்கீங்க?? அவ தான் தூங்கறாளல்ல…” என்று அவனது அன்னையை முறைத்து கொண்டே கேட்டான்.

“அதான் அவ தூங்கறானு தெரியுதல்ல அப்புறம் எதுக்கு நீ இங்க நிக்கற? வெளிய வா முதல்ல…” என்று அவனை கை பிடித்து கொண்டு வெளியேற்றினார்.

“அம்மா… சரி சரி நான் என் ரூமுக்கு போறேன்.” என்றவன் மாடிப்படியேற போக மறுபடியும் திரும்பி அவனது அன்னை அருகே சென்றான்.

“அம்மா… ஏதோ நேத்து ஒரு அவசரத்துல தாலிகட்டி கூட்டிட்டு வந்துட்டேன். அவளுக்கு மாத்து துணி கூட இருக்காதுனு நினைக்குறேன். ப்ளீஸ் அவளுக்கு ஏதாவது…” என்று இழுத்தான்.

அவனை முறைப்பாக பார்த்தவர் “இந்த எண்ணம் எல்லாம் நேத்து எங்க போயிருந்துச்சு உனக்கு… தாலி கட்டிட்டு கூட்டி வந்து விட்ட உடனே கிளம்புனவன் இப்ப தான் வர்ற…” என்று திட்டினார்.

“சாரி மா… கொஞ்சம் வேலை அங்க போன பின்னாடி ஏதும் யோசிக்கவே தோணல… உங்களுக்கு தெரியாத என்னோட வேலைய பத்தி…” என்று அவரிடம் செல்லம் கொஞ்சாடினான்.

“நான் பொறுத்துக்குவேன் சரி… ஆனா அந்த பொண்ணு… அவள பத்தி யோசிச்சு பார்த்தயா? புது இடம்… நாங்க எல்லாம் புது மனுஷங்க… எப்படி எங்க கூட பழகுவா?? அதெல்லாம் நினைச்சு பார்த்தயா? நீ போன பின்னாடி ரூமுக்குள்ள போனவ நைட் சாப்பிட போய் கூப்பிட்டா கூட வரமாட்டேனு சொல்லிட்டா… அப்புறம் வலுக்கட்டாயமா நான் கூட்டிட்டு வந்து சாப்பிட வச்சு அனுப்பினேன். நேத்து ஃபுல்லா ரூமுக்குள்ள தான் இருந்தா… பாவம் டா… எதையோ பறி கொடுத்த மாதிரியே இருக்கா…” என்று ஒரு தாயாய் அவளுக்காக பேசினார்.

அன்னையின் பேச்சில் அவளின் நிலைமையை உணர்ந்தவர் “ஆமாம்மா… வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்பட்டுட்டா… இனிமேலாவது அவ சந்தோஷத்தை அனுபவிக்கனும்… ப்ளீஸ் அவ ஒதுங்கி போனா கூட நீங்க அவள தனியா விடாம நம்ம ஃபேமிலில அவள ஒருத்தியா கொண்டு வந்து இந்த வீட்டு மருமகளா ஆக்கணும்… அது உங்க கைல தான் இருக்கு…”என்றான்.

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்… ஆமா அந்த பொண்ணுக்கு பிடிச்சு தானே இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சா… இல்ல நீ கட்டாயப்படுத்தினயா?” என்று தனது மகனிடம் முந்தைய நாள் இருந்து தன் மனதினை அறித்து கொண்டிருந்த கேள்வியினை கேட்டார்.

“அம்மா… மருந்து கசக்கும் தான். குழந்தைகளுக்கு அந்த கசப்பு மருந்து பிடிக்கலைங்கறதுக்காக நாம அந்த மருந்தை கொடுக்காம இருக்க முடியுமா சொல்லுங்க… அது போல தான் அவ வாழ்க்கையும்… அது சரியாகனும் அதுக்கு நான் தான் மருந்து…”

“அவ வாழ்க்கை நல்லா இருக்கனும் அப்படிங்கறதுக்காக உன் வாழ்க்கைய பணயமா வைக்கனுமா…” என்று ஏதோ ஒரு பதில் அவனிடம் வேண்டுமென்பதற்காக அவனை கூர்மையாக பார்த்து கொண்டே வினவினார்.

“அம்மா… என் வாழ்க்கையில முதலும் கடைசியுமா வரனும்னு நினைச்ச பொண்ணு அவ… அப்படி பட்டவ என் வாழ்க்கையில வந்தா நான் சந்தோஷம் தான் படுவேன். இப்ப நீங்க கேட்ட கேள்விக்கு பதில் தெரிஞ்சுருச்சா…”

“ம்… புரியுது வெற்றி அவள இந்த வீட்டோட மருமகளா இந்த வீட்டு பொண்ணா நான் மாத்திடுவேன். ஆனா உன் பொண்டாட்டியா அவ மாறனும்னா அது உன் கைல தான் இருக்கு…”

“அம்மா… அதை பத்தி நீங்க கவலைப்படாதீங்க.. அத நான் பார்த்துக்குறேன்.”

அவரின் அன்னை பாசம் உந்த அவன் அருகே சென்று அவன் தலையை தடவி கொடுத்தவர் “என் பையன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்…” என்றார்.

அவரது கைகளை பிடித்தவன் உள்ளங்கையில் அழுந்த முத்தமிட்டு “ரொம்ப தேங்க்ஸ் மா…” என்றவன் குதூகலத்துடனேயே மாடியில் இருந்த அவனது அறைக்கு சென்றான்.

அவனை பார்த்து ஒரு பெருமூச்சு மட்டுமே விட்டு கொண்டு அவனது அன்னையும் நகர்ந்தார்.

காலை உணவை மஹாலட்சுமியே சமைத்து முடிக்க மிகவும் தாமதமாகவே எழுந்தாள் தர்ஷினி.

எழுந்தவளுக்கு சிறிது நேரம் தான் எங்கே இருக்கின்றோம் என்பதே புலப்படவில்லை. அதன் பின்னேயே நேற்றைய நிகழ்வுகள் ஒவ்வொன்றாக கண் முன்னே தோன்ற யாரை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் அமர்ந்திருந்தாள். ஏதோ ஒரு வனத்திள் தனித்து விடப்பட்டிருப்பதை போல் உணர்ந்தாள். இனி அடுத்து தன் வாழ்வில் என்ன?? என்று அவள் யோசித்து கொண்டிருக்கும் பொழுதே அவளது அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார் மஹாலட்சுமி.

அங்கே ஜன்னலில் தொங்கி கொண்டிருந்த திரை சீலைகளை ஒதுங்க விட்டபடியே “என்னமா கண்ணெல்லாம் சிவந்திருக்கு… நைட் நல்லா தூங்கலயா?? முதல் முதலா புது இடத்துல படுத்தா சட்டுனு தூக்கமே வராது… சரி சரி இங்கே மேசை மேல உனக்கு புது துணி எல்லாம் வச்சுருக்கேன். சீக்கிரம் போய் குளிச்சுட்டு வா… இன்னும் யாரும் சாப்பிடல… உனக்காக தான் வெய்ட் பண்றோம்…” என்று வேகமாக கூறிக்கொண்டே வெளியேறினார்.

“என்ன இது? இவங்க இப்படி பேசிட்டு இருக்காங்க… இதுக்கு ஏதாவது ஒரு முடிவு பண்ணனும்… முதல்ல அவர் கிட்ட போய் பேசணும்…” என்று நினைத்து கொண்டே குளியலைறைக்குள் நுழைந்தாள்.

அவள் குளித்து முடித்து வெளியே வரவும் “வாம்மா… நல்லா தூங்கனயா? உனக்காக தான் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்… சேர்ந்து சாப்பிட…” என்று கூறிக் கொண்டே சாப்பிடும் மேசையின் அருகே சென்றார்.

அவளுக்கோ தனக்காக வயதானவர்கள் சாப்பிடாமல் காத்திருந்தார்களா? வெகுநேரம் எப்படி தூங்கிவிட்டேன். என்று மனதிற்குள் ஒரு குற்றஉணர்வுடன் அவரின் கேள்விக்கு பதில் கூறாமல் தயங்கி சென்றாள்.

அதே சமயம் தான் சமைத்த உணவுகளை மேசையில் அடுக்கி கொண்டே “தர்ஷினி இன்னைக்கு ஒகே… ஆனா நாளைல இருந்து இந்த வீட்டுல விளக்கு நீ தான் ஏத்தனும் அதுக்கேத்த மாதிரி எழுந்திரு…” என்று கூறினார்.

“சா… சாரி… மேடம்… புது இடம்னால தூங்கறதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு…” என்று திக்கு திணறி கூறினாள்.

அவளின் பேச்சில் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.

“என்னது மேடம்மா???” என்று முகத்தை சுழித்து கொண்டே கூறினார் மஹாலட்சுமி.

“ஆ… ஆமா மேடம் தானே நீங்க…”

“ஆமா நான் யாரு?”

“நீ… நீங்க சாரோட அம்மா…”

“சாரா??? அது யாரு??”

வெ… வெற்றிவேல் சார்…”

“என்னது வெற்றிவேல் சாரா உனக்கு…” என்று கேட்க அவளோ ஆமாம் எனும் விதமாக தலையாட்டினாள்.

“அது சரி...” என்று சலித்து கொண்டவர் அவளை அருகே வரும்படி அழைத்தார்.

அவள் செல்ல அவளது கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறை எடுத்து “இது என்னனு தெரியாம இருக்க நீ ஒன்னும் சின்ன பொண்ணு கிடையாது. அதே சமயம் இதை கட்டினவங்க உனக்கு என்ன உறவுன்னு தெரியாம இருக்காது. அப்படிதானே…” என்றார்.

அவளோ ஆம் எனும் விதமாக தலையாட்டினாள் மறுபடியும்.

“ம்… எல்லாம் தெரிஞ்சும் இப்ப எதுக்கு அவன சார்னும் என்னைய மேடம்னு கூப்பிடற?”

“அது இல்ல…” என்று இழுத்தாள்.

“இங்க பாரு தர்ஷினி… இந்த தாலி உன் கழுத்துல ஏறதுக்கு முன்னாடி நீ யாருனு எனக்கு தெரியாது? எந்த ஒரு சூழ்நிலையில வெற்றி உன்னைய கல்யாணம் செஞ்சுகிட்டானும் எனக்கு தெரியாது. ஆனா எந்த ஒரு நிமிஷத்துல இருந்து இதை உன் கழுத்துல என் பையன் கட்டினானோ அப்பவே அவனுக்கு நீ மனைவி… எங்களுக்கு மருமகள்… இந்த வீட்ட எனக்கு அடுத்து ஆள போறதும் நீதான். அதைய நல்லா மனசுல ஏத்தி வச்சுக்கோ… அவ்வளவு தான் சொல்லுவேன். இனி எதுலயும் நீ ஒதுங்கி நிற்க கூடாது. இந்த வீட்டு மருமகளுக்கு என்ன பொறுப்பு கடமை எல்லாம் இருக்கோ அது எல்லாம் நீ தான் செய்யனும்… புரியுதா?” என்று அழுத்தம் திருத்தமாக கூறினார்.

அதை கேட்டவளோ அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

இவ்வளவு நேரம் அமைதியாக அனைத்தையும் கேட்ட சீனிவாசனோ “ஏய் மஹா… எதுக்கு இப்படி ஏதோ ஸ்டிர்க்ட் ஆன டீச்சர் மாதிரி அந்த பொண்ணுக்கு இப்படி க்ளாஸ் எடுத்துட்டு இருக்க? பாவம் அங்க பாரு எப்படி அதிர்ச்சியாகி நிற்குறானு…” என்றார்.

அவளின் பக்கம் திரும்பிய மஹாலட்சுமியோ அவளை உலுக்கினாள்.

ஏதோ கனவுலகத்திலிருந்து வெளியே வந்தவள் போல் “ஹா… சொல்லுங்க மே… மேடம்…” என்றாள்.

“என்னது மறுபடியும் மேடமா… ஒழுங்க அத்தைனு கூப்பிடு… ம்…” என்று மிரட்டினார்.

“அ… அது… எப்படி…” என்று திணற…

“கூப்பிடு…” என்று மஹாலட்சுமியும் விடுவதாக இல்லை.

“அ… அத்தை…” என்று கூறினாள்.

“நான் அத்தைனா இவர் யாரு உனக்கு?”

அவளோ திருதிருவென்று முழித்து கொண்டே “மாமா…” என்றாள்.

“ம்… எங்க ரெண்டு பேரையும் இனிமே அத்தை மாமானு தான் கூப்பிடணும்…”

அதற்கும் தலையை ஆட்டினாள்.

“தலையை தலையை ஆட்டாம சரிங்க அத்தைனு சொல்லு…”

“சரிங்க அத்தை…” என்றாள்.

“சரி… இப்ப போய் வெற்றிய சாப்பிட கூட்டிட்டு வா…”

“நானா…” என்றாள் கண்களை அகல விரித்து கொண்டு தன் நெஞ்சில் கைவைத்தபடி.

அவள் கூறிய விதம் இருவருக்குமே சிரிப்பை வரவழைக்க ஆனாலும் அவளுக்கு தெரியாமல் அடக்கி கொண்டனர்.

“ஆமா… நீ தான்… நீ தான் இனி அவனுக்கு எல்லாம் பண்ணனும்… இதுவரைக்கும் நான் எல்லாம் வளர்த்தி ஆளாக்கியாச்சு… அவனுக்குனு நீ வந்துட்டயல்ல… இனி நீ தான் எல்லா வேலையும் செய்யனும்…” என்றவர் தனது கணவனுக்கு தட்டில் இட்லியை வைத்து சட்னி ஊற்றினார்.

அவளோ “எப்படி… எப்படி அவரை போய் நான் அழைப்பேன்…” என்று மனதிற்குள் நினைத்து கொண்டே அடிமேல் அடி எடுத்து வைத்து நகர்ந்தாள்.

என்ன தான் கைகள் தன் கணவனுக்கு உணவளித்தாலும் மஹாவின் ஓரவிழி பார்வை தர்ஷினியிடம் சென்று வந்தது.

“என்ன இந்த பொண்ணு இப்படி இருக்கா? எப்படி வெற்றி இவ கூட குடும்பம் நடத்தி சந்தோஷமா இருக்க போறான்… எல்லா விசயத்திலையும் வெற்றியவே கொண்டாடிட்டு இருக்கறவன் திருமண வாழ்க்கையில சறுக்கிடுவானோ என்று ஒரு சராசரி தாயாக கலக்கம் கொண்டார்.
 

vishudev

Moderator
அத்தியாயம் – 18

மனதினுள் ஒரு தயக்கம்… அவனை அழைக்க செல்வோமா வேண்டாமா என்று அவளது கால்கள் தயக்கத்துடன் முன்னே அடி எடுத்து வைக்கவும் பின்னே நகர்வதுமாக இருக்க முகத்தில் யோசனை குடி கொண்டு இருந்தது.

அவளை இதற்கு கூட வேதனை கொள்ள விட மாட்டேன் எனும் விதமாக மாடியிலிருந்து இறங்கி வந்தான் வெற்றி.

அதிகாலை வந்தவன் சிறிது நேரம் தூங்கி எழுந்து கையில்லா பனியனுடனும், முட்டி வரை இருந்த ஷார்ட்ஷும் அணிந்த படி வந்தான்.

இதுவரை காக்கி உடையில் மட்டுமே பார்த்தவனை இன்று இவ்வாறு பார்த்ததும் அவள் வெட்கி தலை குனிந்தாள்.

நிமிடத்தில் அவளின் அருகே வந்தவன் குனிந்த தலை நிமிராமல் நின்றவளை பார்த்து அவளது காதருகே சென்று அவளுக்கும் தனக்கும் மட்டும் கேட்கும் விதமாய் “கீழ என்ன தொலைச்சுட்ட? சொன்னா நானும் உன் கூட சேர்ந்து தேடுறேன்…” என்றான்.

தற்பொழுது தான் குளித்து விட்டு வந்ததினால் அவனது உடலில் இருந்த குளுமை அவளையும் சிறிது குளிர செய்யும் தூரத்தில் நின்றான். அவனது உடலில் அடித்திருந்த அந்த வாசனை திரவியத்தின் வாசனை அவளது நுரையீரல் வரை உள்ளே சென்றது.

அதில் திடுக்கிட்டு ஒரடி பின்னே சென்று நின்றாள். அவள் பின்னே சென்றதால் தங்களுக்குள் இடையேயிருந்த இடைவெளியை சுட்டி காட்டியவன் அதை குறைத்து மேலும் நெருங்கி நின்றான்.

மேலும் பின்னே செல்ல சென்றவளை இடையில் கை வைத்து நிறுத்தியவன் “இங்க பாரு நான் பக்கத்துல வர வர நீ பின்னாடி போனேனா அப்புறம் அம்மா அப்பா யார் இருக்கறாங்கனு பார்க்க மாட்டேன். அப்படியே கடிச்சு வச்சுடுவேன் அதுவும் உதட்டு மேல…” என்று மிரட்டினான்.

அவனது இந்த மிரட்டல் பேச்சில் அவனை விழி விரித்து பார்த்தாள் பேதையவள்.

“என்ன செய்ய மாட்டேனு நினைச்சுகிட்டயா?? இதுக்கு முன்னாடி என்னை போலீஸ்காரனா மட்டும் தான் பார்த்துருக்கற… அதனால் தான் கொஞ்சம் கண்ணியமா நடந்துகிட்டேன். ஆனா இப்ப நீ பார்க்கற வெற்றி போலீஸ் இல்ல… உன்னோட புருஷன் புரிஞ்சுதா? அதனால நான் கிட்ட வந்தா இந்த தள்ளி போற பழக்கம் எல்லாம் வச்சுக்காத…”

அவள் மேலும் மேலும் அச்சத்தில் விழிவிரித்து நிற்க “இப்படி பார்த்து வைக்காதடி… அப்புறம் என்னென்னமோ பண்ண தோணுது…” என்றவன் எப்படியும் தன் பேச்சில் தற்போதைக்கு தெளிய மாட்டாள் என்பதை புரிந்து கொண்டவன் அவளை கைபிடித்து அழைத்து சென்றான்.

“ம்மா… அப்பா… சாப்பிட்டீங்களா??” என்று கூறிக்கொண்டே அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

“இதோ சாப்பிட்டுகிட்டே இருக்கோம்டா…” என்று அவனது அன்னை கூறினார்.

“அம்மாடி தர்ஷினி அவனுக்கு எடுத்து வச்சுட்டு நீயும் உட்கார்ந்து சாப்பிடு…” என்று கூற அப்பொழுது தான் மயக்கத்திலிருந்து தெளிந்தவள் போல் “ம்… சரி...” என்று தலையாட்டினாள்.

வெற்றி அமர அவனுக்கு உணவை தட்டில் வைத்தவளை இழுத்து அருகே இருந்த இருக்கயை இழுத்து கைபிடித்து அமர வைத்து அவளுக்கு உணவினை பறிமாறி விட்டு சாப்பிடு என்று கூறினான்.

ஏதும் பேசாமல் அமர்ந்து உணவினை உண்டவளுக்கு ஏனோ தொண்டையில் இறங்க மறுத்தது அந்த உணவு.

ஏனோ இது மூன்றாமவர் வீடு என்று தான் தோன்றியது. யாருடனும் அவளால் ஒன்ற முடியவில்லை. அதனாலோ இல்லை அவன் அருகில் இருந்ததாலோ அவளுக்கு உணவு உண்ண முடியவில்லை. இரு இட்லிகளை வைத்து கொண்டு தட்டில் அளந்து கொண்டிருந்தவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி “என்ன ரெண்டு இட்லி கூட உன்னால சாப்பிட முடியலையா?” என்றான்.

“அது… அது… இல்ல சார்… போதும்… எனக்கு பசிக்கல…” என்று திக்கி திணறி கூறினாள்.

“என்னது சாரா?” என்று நெஞ்சில் கைவைத்து கொண்டவனை பார்த்து சிரித்தனர் இருவரும்.

அவர்களை கண்டு முறைத்து பார்த்தவனை “டேய் அப்பவே என்னைய மேடம்னும் உன்னைய சார்னும் தான் கூப்பிட்டா இப்ப தான் அவளை கொஞ்சம் மிரட்டி என்னைய மேடம்னு கூப்பிட கூடாதுனு சொல்லி இருக்கேன். நீ தனியா அவள மிரட்டிக்கோ…” என்று மஹாலட்சுமி கூறி விட்டு எழுந்து சமையலறை சென்றார்.

அவனது தந்தையும் எழுந்து சென்று விட அவர்கள் இருவர் மட்டுமே தனித்து விடப்பட்டிருந்தனர் அந்த இடத்தில்.

அவனது அருகாமையில் அவளுக்கோ நெருப்பின் மேல் நின்ற உணர்வு. ஏனோ தர்ஷினிக்கு அவனை கணவனாக ஏற்றுக்கொள்ளவும் நினைக்கவும் முடியவில்லை. அதனாலயே இவ்விதமாக உணர்ந்தாள்.

வெற்றியோ ஏதும் பேசாமல் சாப்பிட்டுவிட்டு எழுந்தான்.

அதே சமயம் வெற்றியிடம் வந்த அவனது அன்னை தந்தை வெளியே சென்று விட்டு வருவதாக கூறினர். மஹாலட்சுமியோ மதியம் தர்ஷினியை சமைக்க சொல்லவும் மறக்கவில்லை. அவளை இந்த வீட்டில் உனக்கான உரிமை என்ன என்பதை தெளிவாக்க வேண்டும் என்பதன் முதல் படியே அவளை சமையல் செய்யுமாறு கூறிவிட்டு சென்றார்.

அவர்களின் கார் அந்த வீட்டை விட்டு வெளியே சென்றதும் மெதுவாக வரவேற்பறையை எட்டி பார்த்தாள். வெற்றி இருப்பதற்கான அறிகுறி எதும் இல்லை என்பதை உணர்ந்தவள் “அப்பாடா… கிளம்பிட்டாங்க போல…” என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

அவளது நிம்மதியின் ஆயுள் மிகவும் குறைவு என்பதற்கேற்ப அடுத்த நிமிடம் அவளின் முன்பு வந்து நின்றான் வெற்றி.

திடீரென்று வந்து நின்றதால் பயந்தவளோ நெஞ்சில் கைவைத்து கொண்டாள்.

அவளின் பயத்தினை கண்டவன் “என்ன பார்த்தா எப்படி தெரியுது? நான் என்ன புலியா இல்ல சிங்கமா?” என்றான் கோபத்துடனேயே.

“நீ… நீங்க வேலைக்கு போய்டீங்கனு நினைச்சேன். திடீர்னு முன்னாடி நிற்கவும் பயந்துட்டேன்.” என்றாள்.

“உன் கூட கொஞ்சம் பேசனும்… வா…” என்றவன் வரவேற்பறைக்கு சென்று அங்கே அமர்ந்தான்.

அவளும் மனதிற்குள் ஏதோ முடிவெடுத்தவளாய் அவன் பின்னேயே சென்றாள்.

“உட்கார்…” என்று தனக்கெதிரே இருந்த இருக்கையை காட்ட அவளும் அமர்ந்தாள்.

அமர்ந்திருந்த அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் பேச ஆரம்பிக்கும் முன்னே அவள் பேச தொடங்கினாள்.

“முதல்ல… நா... நான் உங்ககூட கொஞ்சம் பேசணும்…”

“சரி சொல்லு… என்ன விசயம்…”

“நீங்க இப்ப பண்ணிட்டு இருக்கறது எல்லாமே நாடகம் தானே. எனக்கு தெரியும் என்னை அந்த நரகத்திலிருந்து காப்பாத்தறதுக்காக தான் நீங்க இப்படி நாடகம் ஆடி இருக்கீங்க… ஆனாலும் இந்த தாலி எல்லாம் கொஞ்சம் ஓவர்… அதுவும் உங்க அப்பா, அம்மா முன்னாடி வேற கட்டி இருக்கீங்க அவங்களுக்கு இதெல்லாம் நாடகம்னு தெரியும் பொழுது மனசு ரொம்ப கஷ்டமா இருக்குமல்ல… ஏன் இப்படி செஞ்சீங்க சார். என்னை காக்க எத்தனையோ வழி இருக்கும் பொழுது எதுக்கு இப்படி நடந்துகிட்டீங்க… அதுவும் இந்த விசயம் எல்லாம் ராயனுக்கு தெரியும் பொழுது அவன் எப்படி நடந்துக்குவானே தெரியல… அவன் எல்லாம் மனுஷனே இல்ல சார்… மிருகம்… என்னைய எங்க வீட்டுக்கு அனுப்பி வச்சுடறீங்களா… ப்ளீஸ்…” என்று தனது மனதில் இருந்த அனைத்தையும் சொல்லி முடித்து விட்டு பதிலுக்காக அவனது முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள்.

அவனோ சிறு சலனமும் இன்றி அனைத்தையும் கேட்டவன் “எல்லாம் பேசி முடிச்சுட்டயா?” என்றான்.

“ம்…” என்றாள்.

அடுத்த நிமிடம் எழுந்து வந்து அவள் முன்னே குனிந்தான். அவளோ அமர்ந்திருந்த இருக்கையின் பின்னே நகர்ந்து அமர்ந்தாள்.

அவளது கழுத்தினில் இருந்த அந்த மஞ்சள் கயிறை எடுத்து அவளின் முன்னே காட்டி “இது தாலி. இத சும்மா விளையாட்டுக்கு கட்ட நான் ஒன்னும் சின்ன பையன் இல்ல… உண்மை தான் உன்னை காப்பாத்த எத்தனையோ வழி இருந்தும் எதுக்கு உனக்கு தாலி கட்டினேன் தெரியுமா? நீ எனக்கு வேணும் அப்படீங்கறதுக்காக மட்டும் தான். உன்ன கல்யாணம் பண்ணனும்ங்கறதுக்காக தான் பெரிய ரிஸ்க் எல்லாம் எடுத்துருக்கேன். அது தெரியுமா உனக்கு… இது ஒன்னும் பொய் கல்யாணமோ இல்ல உன்னை காப்பாத்தறதுக்காகவோ நான் பண்ணினது இல்லை… அத முதல்ல தெளிவா புரிஞ்சுக்கோ… நான் தான் உன் புருஷன். இது தான் உன் வீடு. என் அம்மா அப்பா உனக்கு மாமியார் மாமனார். இது எல்லாம் உண்மை. இதுல எந்த வித மாற்றமும் இல்லை.”

“இன்னும் பழசையே நினைச்சுகிட்டு அந்த ரூம்ல அடைஞ்சு கிடக்கறத விட்டுட்டு என் அப்பா அம்மாவுக்கு நல்ல மருமகளாவும் எனக்கு நல்ல பொண்டாட்டியாவும் எப்படி இருக்கனும்னு பழகிக்கோ… புரிஞ்சுதா… அப்புறம் இனி இந்த சார் மோர் மேடம்னு கூப்பிடறது எல்லாம் விட்டுட்டு ஒழுங்கா மாமி, மாமானு கூப்பிடு. அதே மாதிரி புருஷன உங்க பாஷையில எப்படி கூப்பிடுவாங்க … ம்… அது என்னவோ சொல்லுவாங்களே…” என்று யோசித்தவன் “ஹாங்… ஏன்னா… இப்படி தானே சொல்லுவாங்க… ஒழுங்கா அப்படி கூப்பிடு… இல்லை நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது.” என்றான்.

இவ்வளவு நேரம் அவன் தந்த விளக்கத்தில் பெண்ணவள் அதிர்ச்சிக்கு உள்ளானாள். ம்றுபடியும் கண்களே தெரித்து வெளியே விழும் அளவிற்கு கண்டவளை “அடிக்கடி இப்படி முட்டகண்ண விரிக்காதேனு சொல்லி இருக்கேனா இல்லையா… இப்படியே நீ முழிச்சுட்டு இருந்தேனா அப்புறம் நடக்குற சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன்…” என்றான்.

இவ்வளவு நேரம் போலீஸ் தோரணையில் பேசியவன் அடுத்த நிமிடம் குழைந்து பேசவும் அதிர்ச்சியிலிருந்து வெளிவந்து அமைதியாக நின்றாள்.

அப்புறம் என்ன சொன்ன “ராயனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னா…” என்றவன் சிரித்து கொண்டே “ஓ... உனக்கு இன்னும் நடந்தது தெரியாதல்ல…” என்றவன் அவள் முன்னே அன்றைய நாளிதழை எடுத்து காட்டினான்.

அதை பார்த்தவளின் இதழ்கள் தானாக முணுமுணுத்தது.

“ராயன் இறந்துட்டானா?”

“ஆமா. இந்நேரம் அவனது உடம்பே எரிஞ்சு சாம்பலாகி இருக்கும். செத்தவனுக்கு பயப்படாம முதல்ல உன் புருஷனுக்கு போய் ஒரு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வா… உனக்கு விளக்கம் சொல்லியே என் தொண்டை தண்ணி வத்தி தாகம் எடுக்க ஆரம்பிச்சுருச்சு…” என்றான்.

ஏனோ இன்னும் அவன் கூறியதை அவளால் ஒப்புகொள்ள இயலவில்லை. தன்னை நரகத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறான். ஆனாலும் இந்த கணவன் மனைவி என்பதை ஏற்றுகொள்ள அவள் தயங்கி தான் நின்றாள்.

வெற்றியின் பார்வை முழுவதும் அவள் மேலயே இருக்க அவளோ சாவி கொடுத்த பொம்மை போல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

சிறிது நேரத்தில் அவனுக்கு ஜூஸ் கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள்.

அவளது முகத்தை பார்த்து கொண்டே அதை வாங்கியவன் பருகினான்.

இன்னமும் அவள் முகம் தெளிவடையாததை கண்டு “இன்னும் உனக்கு ஏதாவது விளக்கம் சொல்லனுமா… ஏன் இப்படி இருக்க…” என்றான்.

அவன் கேட்பதற்காகவே காத்திருப்பவள் போல மறுபடியும் வாயை திறந்து பேசலானாள்.

“நீங்க எனக்கு செஞ்சது ரொம்ப பெரிய உதவி. இதை என் உயிர் போகுற நிமிஷம் வரை மறக்க மாட்டேன். ஆனா நீங்க என்னோட கணவன் நான் உங்களோட மனைவி அப்படிங்கறத என்னால கண்டிப்பா ஏத்துக்க முடியாது. இந்த வீட்டுல எல்லா வேலையும் செய்யுவேன். உங்களுக்கு தேவையானதும் செஞ்சு கொடுப்பேன். எல்லாத்தலையுமே ஒரு நன்றி உணர்வு இருக்கும். உங்களுக்கு நான் செய்யுற எல்லாமே ஒரு கடமையா தான் செய்வேன். அவ்வளவு தான் அதுக்கு மேல எங்கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்காதீங்க…” என்றவள் எழுந்து உள்ளே செல்ல முனைந்தாள்.

ஒரு நிமிடம் தயங்கி நின்று “முடிஞ்ச வரைக்கும் என்னை எவ்வளவு சீக்கிரம் விவாகரத்து செய்ய முடியுமோ செஞ்சுட்டு உங்களுக்குனு ஒரு நல்ல வாழ்க்கைய நீங்க வாழ ஆரம்பிங்க… உங்கள பெத்தவங்க ரொம்ப எதிர்பார்ப்போட இருக்காங்க… அவங்கள ரொம்ப நாள் ஏமாத்த எனக்கு கஷ்டமா இருக்கு… உங்க வாழ்க்கை நல்லா இருக்கனும்னு அவங்கள மாதிரியே நானும் விரும்பறேன்…” என்றவள் விருவிருவென்று அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றுவிட்டாள்.

செல்லும் அவளின் முதுகையே வெறித்து பார்த்தவன் இவளை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்ற தீவிர யோசனையில் ஆழ்ந்தான். தன் மனதில் அவளுக்கான இடம் என்ன என்பதை அவளிடம் சொல்லிவிடலாமா என்று நினைத்தான். ஆனால் காதலை சொல்வதற்கு பதிலாக செயல்களால் உணர வைக்க வேண்டும் என்று நினைத்து அமைதி காத்தான்.

தர்ஷினியோ சமையலறையில் வேலையை பார்க்க வெற்றியோ தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்தவன் நினைவு முழுவதும் தர்ஷினியை சுற்றியே இருந்தது.

வெளியே சென்றிருந்த அவனது அன்னை தந்தை இருவரும் சில மணி நேரம் கழித்து உள்ளே நுழைய அமைதியாய் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தவனை பார்த்து இருவரும் விழிகளால் சைகை செய்து கொண்டிருந்தனர்.

தர்ஷினிக்கும் வெற்றிக்கும் இடையே ஏதோ ஒரு பிரச்சனை. எப்படியும் தனது மகன் அவளிடம் பேசி புரிய வைத்திருப்பான். மனம் விட்டு பேசினால் இருவரும் சரியாகிவிடுவர் என்று நினைத்து கொண்டு தான் அவர்களுக்கு தனிமை வழங்கி இருவரும் வெளியே சென்றது. ஆனால் இங்கோ தனித்து அமர்ந்திருந்த சிந்தனை மிகுந்த மகனின் முகத்தை கண்டே ஒன்றும் சரியாகவில்லை என்பதை புரிந்து கொண்ட பெற்றவர்கள் இருவருக்கும் வருத்தமே மேலோங்கியது. என்ன பிரச்சனை என்பதை அறியாமலேயே இவர்களின் பிணக்கை எவ்வாறு தீர்ப்பது என்று மஹாலட்சுமி சிந்தனை செய்து கொண்டிருந்தார்.

“வெற்றி… நாங்க ரெண்டு பேரும் இப்ப ஜோசியகாரரை தான் பார்த்துட்டு வர்றோம்… கல்யாணம் தான் ஏதோ அவசர கதியில ஆகிடுச்சு… மத்ததுக்கெல்லாம் நல்ல நேரம் பார்க்க வேண்டாமா அதுக்கு தான் போயிருந்தோம்… ஆனா போனதும் நல்லதா போச்சு… ரெண்டு பேருக்கும் பொருத்தம் நல்லா இருக்கு. அதோட கல்யாணம் ஆன நேரமும் நல்ல நேரம் தானாம்…” என்றார் மஹாலட்சுமி.

தன் சிந்தனை களைந்து இவ்வளவு நேரம் அன்னை கூறியதை கேட்டு கொண்டிருந்த வெற்றியோ “இதுக்கு எதுக்கு ஜோசியகாரனை பார்க்க போனீங்க?? எங்கிட்ட கேட்டிருந்தா நானே சொல்லியிருப்பேனே… வாழ்க்கையிலே ஒரே ஒரு தடவை தாலி கட்ட போறேன் அது நல்ல நேரமா இருக்க வேண்டாமா… அதுவும் இல்லாம பின்னாடி உங்களுக்கு தெரிஞ்சு ரொம்ப ஃபீல் பண்ணனீங்கனா என்ன பண்றது அதான் முன்னெச்சரிக்கையா எல்லாம் பார்த்துட்டேன்…” என்றான்.

“அடப்பாவி… நீ கேடினு தெரியும் ஆனா இவ்வளவு கேடினு தெரியாதுடா…” என்று அவனது தந்தை அவனை கிண்டல் செய்தார்.

மஹாலட்சுயோ அவன் கூறியதை கேட்டு கோபம் கொண்டு “ஏன்டா நல்ல நேரம் பார்த்து கல்யாணம் பண்ண எல்லாம் தெரிஞ்சுருக்கு… ஒரே ஒரு வார்த்தை எங்கிட்ட முன்னாடியே சொல்லனும்னு தெரியலை அப்படிதானே…” என்று இருநாட்களாக மறைந்திருந்த கோபத்தை வெளிப்படுத்தினார்.

“அச்சோ…” என்று மானசீகமாக தலையிலடித்து கொண்டவன் “தூங்கிட்டு இருந்த சிங்கத்தை எழுப்பி விட்டுட்டோமோ… ஏற்கனவே மலை ஏறினவங்கள இறக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். மறுபடியுமா?” என்று மனதிற்குள் அவனையே திட்டி கொண்டவன் பாவமாக முகத்தை வைத்து கொண்டு தனது தந்தையை உதவிக்கு அழைத்தான்.

அவரோ “இதெல்லாம் உனக்கு தேவையா? நீயே உளறி கொட்டி வாங்கிக் கட்டிகிட்டியே மகனே… நானெல்லாம் துணைக்கு வருவேனு கொஞ்சம் கூட நினைக்காதே…” என்று மனதிற்குள் கூறிக்கொண்டே அவனிடம் தலையாட்டினார்.

“அம்மா… நான் தான் சொன்னேனே… முதல்லயே சொல்ற நிலைமைல நான் இல்லைனு…” என்று மறுபடியும் அவரை சமாதானப்படுத்தும் விதமாக கூறினான்.

என்னென்னவோ கூறியும் அவர் சமாதானம் ஆகாததை தொடர்ந்து அவர்களை இழுத்து கொண்டு அறைக்கு சென்றவன் அவளை கண்ட நாள் முதல் இப்பொழுது வரை நடந்ததை கூற முனைந்தான் வெற்றி.
 

vishudev

Moderator




அத்தியாயம் – 19

தர்ஷினியை முதன் முதலில் எங்கு பார்த்தேன் என்பதில் இருந்து தொடங்கி அவள் ராயனை திருமணம் செய்தது அதன் பின்பு தான் அவளை மறுபடியும் கண்டு திருமணம் செய்தது என்று அனைத்தையும் கூறி முடித்திருந்தான்.

அதை கேட்ட பெற்றவர்கள் இருவரும் இடிந்து போய் அமர்ந்திருந்தனர். அவர்கள் நினைத்ததற்கு எதிர்பதமாக அல்லவா வெற்றி தற்பொழுது கூறியது.

காதலித்தவர்கள் ஏதோ ஒரு பிரச்சனையில் பிரிந்து சென்று பல வருடங்கள் கழித்து மறுபடியும் இணைந்துள்ளனர் என்று நினைத்திருக்க அவளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருக்கிறது என்ற செய்தி அதிர்ச்சியையும் ஒரு வித ஆற்றாமையையும் அளித்தது.

ஒரு பெண்ணாய் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண்ணிற்கு வாழ்க்கை கொடுத்தது மகிழ்ச்சியே என்றாலும் ஒரு தாயாய் மஹாலட்சுமியால் இந்த திருமணத்தை ஏற்று கொள்ளவே முடியவில்லை. அவர் ஒரு விதத்தில் அமைதியாய் இருந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் என்றால் அவனின் தந்தையோ பொறுக்க முடியாமல் அதை கேட்டு விட்டார்.

“நீ அந்த பொண்ண லவ் பண்ண சரி… அதுக்காக எப்படி அவன் புருஷன் உயிரோட இருக்கும் பொழுதே நீ அவளோட தாலிய கழட்டி கூட்டிட்டு வந்து இப்படி ரெண்டாவதா கல்யாணம் பண்ணலாம் இதெல்லாம் தப்பில்லையா வெற்றி. இதுக்கும் அந்த பொண்ணுக்கு நீ அவள லவ் பண்ணுனதே தெரியல… அப்புறம் எப்படி??? அந்த பொண்ணு உன்னை பத்தி என்ன நினைச்சிருக்கும்? இந்த கல்யாணத்த எப்படி எங்கனால ஏத்துக்க முடியும் சொல்லு?” என்று இழுத்தார்.

“அப்பா… அவன் கூட அவளுக்கு நடந்த கல்யாணம் கட்டாயத்துனால தான் நடந்திருக்கு. சப்போஷ் அது அவளுக்கு பிடிச்சுருந்து மனம் ஒத்து போய் வாழ்ந்திருந்தானா கண்டிப்பா அவளை நான் தொந்தரவு பண்ணி இருக்க மாட்டேன். ஆனா அவ அங்க அப்படி இல்லபா… ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கா… மனசளவுல ரொம்ப உடைஞ்சு போய் இருந்தா. ஒரு பக்கம் ராயன் அவளுக்கு பிரச்சனைனா இன்னொரு பக்கம் அந்த அமைச்சர் ராதாகிருஷ்ணணோட மனைவிக்கு இவள கண்டாலே பிடிக்காது. அதோட அவன் பையனோட பார்வையும் இவ மேல தப்பா விழுந்துச்சு… இப்படி அவ கஷ்டப்படும் போது நான் எப்படி அந்த நரகத்துல இவள விட முடியும். அவ சின்ன பொண்ணுபா… அவ எப்படி இருப்பா தெரியுமா பா… ஒரு பட்டாம்பூச்சி மாதிரி எந்த கவலையும் இல்லாம சுத்திட்டு இருந்தவ பா… எனக்கு அவகிட்ட புடிச்சதே அந்த குறும்பும் அவ முகத்துல இருக்கற அந்த வாடாத சிரிப்பும் தான். ஆனா இப்ப அந்த ரெண்டையுமே பறிகொடுத்துட்டு நிக்குறாபா… என்னால அவள அப்படி பார்க்க முடியல. பழையபடி அவ மாறனும் அதுக்கு நான் என்னவேனா பண்ணுவேன். அதுவுமில்லால என் காதல் வெற்றியடைய இது ஒரு வாய்ப்பா நான் பயன்படுத்திகிட்டேன். அந்த ராயன் ஒன்னும் இப்ப உயிரோட இல்லையே. இப்ப என்ன பிரச்சனை…” என்று தனது தரப்பு நியாயத்தை அவர்களின் முன்பு எடுத்து வைத்தான்.

இதை கேட்டவர்களுக்கு அவனின் ஆசையும், காதலும் புரிந்தது. ஆனால் ஏனோ ஒரு தாய் தந்தையரால் இப்படி ஒரு பெண்ணை மருமகளாக ஏற்க அவர்கள் தயங்கினார்கள்.

இவ்வளவு விளக்கம் கொடுத்தும் அவர்களின் முகத்தில் இருந்த ஒரு தெளிவின்மைய பார்த்தவன், அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த இருக்கையின் கீழ் அவர்களின் காலடியில் அமர்ந்தவன் இருவரின் கைகளை பிடித்து கொண்டே “உங்களோட நிலைமை எனக்கு புரியுது. ஆனா அவள கொஞ்சம் நினைச்சு பாருங்கமா… இந்த மாதிரி துன்பம் எல்லாம் அவ அனுபவிக்கனும்னு விதி போலமா… இதுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம் சொல்லுங்க? அவளா ஒன்னும் தேடி போகலை இந்த வாழ்க்கைக்கு. ஒரு மருமகளா பார்க்காம அவள ஒரு சகமனுஷியாவோ அல்லது உங்க பொண்ணாவோ பாருங்க அப்ப அவளுக்கு நான் செஞ்சது நல்லதுன்னு புரியும். உங்க பொண்ணு இப்படி ஒரு நிலைமைல இருந்து அவளுக்கு ஒரு நல்லவன் இப்படி அமைஞ்சா சந்தோஷப்பட மாட்டீங்களா அதே அந்த நல்லவனா நான் இருந்து அந்த பொண்ணா வேற ஒருத்தங்களோட மகளா இருந்தா மட்டும் எதுக்கு இவ்வளவு கஷ்டப்படுறீங்க… இன்னொன்னும் சொல்லிடறேன் மா நான் ஒன்னும் அவளோட கஷ்டத்தை பார்த்து அவளுக்கு பரிதாபப்பட்டு வாழ்க்கை கொடுக்கல… உண்மைய சொல்ல போனா உங்க பையன் இந்த ஜென்மத்துல பிரம்மச்சாரியாவே இருக்கறத தடுத்து அவ தான் உங்க பிள்ளைக்கு வாழ்க்கை பிச்சை போட்டு இருக்கா…” என்று கூறி சிரித்தவன், “அவள நான் ரொம்ப லவ் பண்றேன் மா… அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு தெரிஞ்ச பின்னாடியும் என்னால அவள மறக்க முடியல… இன்னொரு பெண்ணை என்னோட வாழ்க்கை துணையா என்னால ஏத்துக்க முடியாம தான் கல்யாணத்தை தள்ளி போட்டுட்டே வந்தேன்…” என்று மேலும் விளக்கம் கொடுத்தவனை அவர்கள் பார்த்து கொண்டே இருந்தார்கள்.

எப்பொழுது அவன் திருமணம் செய்து கொண்டானோ அப்பொழுதே அவனின் மனதில் அவள் எவ்வளவு வேரூன்றி இருக்கின்றாள் என்பதை அறியாதவர்களா இந்த பெற்றவர்கள்.

அவனின் தலைகோதிய அவனது அன்னை “வெற்றி… நீ அவள எந்த அளவுக்கு லவ் பண்றேனு எனக்கு தெரியாம இல்ல. என்ன தான் நீ இவ்வளவு விளக்கம் கொடுத்து இருந்தாலும் என் மகனோட வாழ்க்கை தான் முக்கியம்னு ஒரு தாயாய் முதல்ல நினைக்க தோணுதே நான் என்ன பண்ண? என் பையனுக்கு என்ன குறை? எதுக்கு இப்படி ஒருத்தினு தான் என் மனசுல முதல்ல எண்ணமே வருது. இது எல்லா அம்மாக்களுக்குமான இயல்பு. ஆனா உன்னோட காதல் உன் வாழ்க்கை எல்லாமே அவள் தான்னு நீ சொல்லும் போது உன்னோட ஆசைக்கு முன்னாடி நாங்க என்னைக்குமே தடைகல்லா இருக்க மாட்டோம் டா… ஆனா அவள மனசு மாத்தி உன்னை ஏத்துக்க வைக்கனும் அது உன் கைல தான் இருக்கு…” என்றார்.

“ம்… தேங்க்ஸ் மா… என்னை புரிஞ்சுகிட்டதுக்கு… கண்டிப்பா அவள நான் மாத்தி காட்டுறேன் மா…” என்றான் சிரித்தபடி அவரது கைகளில் முத்தமிட்டு கொண்டே.

“ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை வெற்றி. பார்த்தா ரொம்ப அழுத்தமானவளா இருக்கா…” என்று அவனது அன்னை கூற…

“ம்… அழுத்தம் இல்லமா… அவளுக்கு ஒரு குற்ற உணர்ச்சி என்னை மாதிரி ஒருத்தி இவ்வளவு நல்லவங்களுக்கு மருமகளாவோ உங்களுக்கு மனைவியாவோ வேண்டாம்னு நினைக்குறா… அவ்வளவு தான்.’ என்றான் பெருமூச்சு விட்டபடி.

“சரி… அது எல்லாம் எனக்கு தெரியாது. நீ தான் அவள சரிபண்ணனும் அது உன் கைல தான் இருக்கு…” என்றார்.

“அப்பா… நீங்க என்ன ஒன்னுமே பேசாமல் இருக்கீங்க???”

“அதான் வீட்டு மஹாராணியே சரினு சொல்லிட்டாளே அப்புறம் என்ன? அவளோட முடிவு தான் என் முடிவும்…” என்றார் சிரித்து கொண்டே…

“எப்படியோ… ரெண்டு பேரும் என்னை புரிஞ்சுகிட்டு என்னோட காதலுக்கும் வாழ்க்கைக்கும் பச்சை கொடி காட்டீடீங்க… ரொம்ப தேங்க்ஸ் மா…” என்றவன் எழுந்து நின்றான்.

“டேய்… எங்கள பார்த்தா எப்படி தெரியுது வில்லன் மாதிரியா?” என்று அவனது காதை திருகி கொண்டே அவனது அன்னை கேட்டார்.

“ஆமா… அப்புறம்… நான் அவள பத்தி எல்லாம் சொன்ன பின்னாடி ஏதோ வேண்டாதவளா தானே பார்த்தீங்க… ம்மா… வலிக்குது… காதை விடுங்க முதல்ல…” என்று கூறினான்.

“ஒரு அம்மாவா கேட்ட உடனே கோவம் வர தான் செய்யும்… அதுக்கு நாங்க என்னவோ வில்லன் மாதிரி பேசறது எல்லாம் ஓவர் தெரியுமா? எருமை மாடு மாதிரி இருக்கறவனுங்களை எல்லாம் அடி வெளுக்குற உனக்கு நான் காதை திருகினா வலிக்குதா?”

“ம்மா… அவனுங்க எல்லாம் எங்கிட்ட அடி வாங்குறானுங்க… நான் யார்கிட்டயும் அடி வாங்கினது இல்லையே…”

“இனி பொண்டாட்டி கையால அடிவாங்க வாழ்த்துக்கள் டா மவனே…” என்று இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அவனது தந்தை கூறினார்.

அதை கேட்டு சிரித்த வெற்றியோ “ரொம்ப அனுபவம் போல… ஆனா என் முன்னாடி அம்மா உங்கள அடிச்சது இல்லையே…” என்றான்.

“அது நாலு சுவத்துக்குள்ள நடக்கற விசயம் உனக்கு தெரியாது…” என்றார்.

“என்னப்பா ஏதோ அவார்ட் வாங்கின மாதிரி பெருமையா சொல்லிட்டு இருக்கீங்க??”

“அப்புறம்… பொண்டாட்டிகிட்ட அடி வாங்காதவங்க வாழ்க்கை இல்லாம் முழுமை அடையாது டா…”

“ஆமா… ஆமா… ரொம்ப தான்… நானெல்லாம் யார் தெரியுமா?? இந்த வெற்றி மேல கை வைக்க முடியுமா அவனால..” என்று அவனும் சிரித்து கொண்டே கூற அவர்கள் இருவரையும் முறைத்து பார்த்து கொண்டிருந்தார் மஹாலட்சுமி.

“அப்பா… அம்மா உங்கள பாசமா பார்க்கறத பார்த்தா நீங்க பெருமையா நினைக்கற விசயம் இப்ப நடக்கும் போல… நான் போறேன்… என் பொண்டாட்டி என்ன பண்றானு தெரியல… பார்த்துட்டு வர்ரேன்…” என்றவன் அங்கிருந்து வெளியேறினான்.

மஹாவோ அவரது கணவன் அருகில் சென்று “நான் என்னமோ உங்கள அடிச்சு கொடுமை படுத்தின மாதிரி அவங்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க?” என்றார் இடுப்பில் கைகளை வைத்து கொண்டு மூச்சுகளை இழுத்து இழுத்து விட்டபடி.

“ஏன் நீ என்ன அடிச்சதே இல்லையா மஹா… அன்னைக்கு ஒரு நாள் என்னைய அடிச்சயல்ல…”

“அன்னைக்கு ஏதோ தெரியா தனமா கைபட்டுடுச்சு… அதுக்காக இப்படியா சொல்லிட்டு இருப்பீங்க... இருங்க இன்னைக்கு உண்மையான அடினா என்னனு உங்களுக்கு காட்டுறேன்…” என்றவர் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்து கொண்டே கைகளில் அருகே அழகிற்காக வைக்கப்பட்டிருந்த பூஜாடியை எடுத்து அவரை நோக்கி வீசினார்.

“ஐயோ மஹா… நோ வெப்பன்ஸ்… மீ பாவம்… அப்புறம் உன் தாலிக்கு உத்திரவாதம் இல்லாம போய்டும்…” என்று கீழே குனிந்து அந்த பூஜாடியிலிருந்து தப்பிக்க அது சுவற்றில் மோதி சிதறியது.

இவர்களின் காதல் இப்படி இருக்க அறையை விட்டு வெளியே வந்த வெற்றியின் விழிகளோ தன்னவள் எங்கே என்று தேடினான்.

அவளோ வெற்றியின் பெற்றோர்கள் வந்ததையோ இவ்வளவு நேரம் அவர்களுக்குள் நடந்த உரையாடலையோ ஏதுமே அறியாமல் சமையல் செய்கிறேன் என்று சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தாள்.

அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் இருப்பாளோ என்று அறையை திறந்து பார்த்தவன் வெறுமையாய் இருந்தது. தோட்டத்தில் இருப்பாளோ என்று வெளியே செல்ல எத்தனித்தவனை சமையலறையிலிருந்து சத்தம் கேட்கவும் சமையலறைக்கு சென்றான்.

அங்கேயோ அவள் தீவிரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தாள். சமையலுக்கு தேவையான பொருட்கள் வைத்திருக்கும் பாத்திரங்களை ஒவ்வொன்றாக திறந்து பார்த்து கொண்டிருந்தாள்.

இரண்டு கைகளிலும் பருப்புகள் நிறைந்த இரண்டு டப்பாக்களை வைத்திகொண்டு நின்றிருந்தவள், “ரெண்டுமே மஞ்சள் கலரா இருக்கு??? ஆனா இதுல எந்த பருப்ப போட்டு சாம்பார் வைப்பாங்கனு தெரியலையே? இப்ப என்ன பண்றது? சமையல் பண்ணுனு மட்டும் சொல்லிட்டு போனாங்களே ஆனா எனக்கு சமைக்க தெரியுமானு ஒரு வார்த்தை கேட்டாங்களா??? என்ன பண்றது இப்ப… “ என்று தனக்கு தானே பேசி கொண்டு நின்றிருந்தாள்.

அவளின் அருகே வந்தவன் காதருகே குனிந்து “அப்ப உனக்கு சமைக்க தெரியாதா?” என்றான்.

“அதான் எனக்கு தெரியாதுனு சொல்றேனல்ல…” என்றவள் ஒரு கணம் நிறுத்தி தன்னிடம் யார் இந்த கேள்வியை கேட்டது என்று நினைத்து கொண்டே திரும்பி பார்க்க அவளுக்கு வெகு அருகில் புன்னகையுடன் நின்றிருந்தான் அவளின் அவன்.

அவனை மிக நெருக்கத்தில் பார்த்தவளுக்கு திக்கென்று ஆகி கைகளிலிருந்த இரண்டு டப்பாக்களையும் கீழே போட பார்க்க அதற்குள் சுதாகரித்த வெற்றியோ “ஏய்… கீழ போட்டுடாதே…” என்று கூறிக்கொண்டே அவளிடம் இருந்து வாங்கி அங்கே அருகே இருந்த சமையல் மேடையில் வைத்தான்.

அவளோ உடனே தலையை குனிந்து கொண்டாள். அவளின் அந்த தோற்றத்தை பார்த்து கொண்டிருந்தவனோ “சோ… உனக்கு சமைக்க தெரியாது… அப்படி தானே…” என்றான்.

ஆம் என்பதற்கு அறிகுறியாக தலையை மட்டும் ஆட்டினாள்.

“அதை அம்மாகிட்ட சொல்லி இருக்க வேண்டியது தானே… எதுக்கு அவங்க சொல்லும் போது அமைதியா இருந்த??” என்றான்.

அவளோ ஏதும் பேசாமல் அமைதியாக நின்றாள்.

“இப்படி பேசாம இருந்தா என்ன அர்த்தம்…” என்றான் குரலில் ஒருவித கடுமையோடு…

“அது… அது… எப்படி அவங்க கிட்ட சொல்றதுனு ஒரு தயக்கம்…”

“அது சரி… உனக்கு சொல்ல தயக்கமா இருக்குதுனு சொல்லி எங்களை எல்லாம் உன்னோட சமையலுக்கு சோதனை எலியாக சொல்றியா?? நான் கூட கொஞ்சம் ஸ்டராங்க் பாடி… தப்பிச்சுடுவேன். ஆனா அம்மா அப்பா வயசானவங்க அவங்களை எல்லாம் கொஞ்சம் நினைச்சு பார்த்தயா???” என்றான்.

அவன் கூறியதோ ஏதோ கேலி பேசும் விதமாக தான் ஆனால் அவளுக்கோ மனதிற்குள் ஒரு குற்ற உணர்வு. தான் சமைத்து அதை அவர்கள் உண்டு ஏதாவது உடம்புக்கு கேடு வந்துவிடுமோ என்று பயந்தாள்.

“ம… மன்னிச்சுடுங்க சார்… இனி இந்த மாதிரி ஏதும் பண்ண மாட்டேன்…” என்றாள் ஒரு வித கரகரப்பான குரலில்.

அவனின் குரலை வைத்தே அழப்போகின்றாள் என்பதை அறிந்து கொண்டவன் “ஏய்… அழாத… நான் சும்மா கிண்டலுக்கு தான் சொன்னேன்… எதுக்கு இப்படி பயப்படுற? இந்த வீட்டுல எதா இருந்தாலும் தயங்காம பேசு. உனக்கு என்ன வேணும்னாலும் தயங்காம கேளு… யாரும் ஏதும் சொல்ல மாட்டாங்க… இங்க நாங்க எல்லாம் சிங்கம் புலி கிடையாது. எங்களை பார்த்து பயப்படறதுக்கு… புரிஞ்சுதா… நீ வேணா இந்த வீட்ட விட்டு ஒதுங்கி நிற்கலாம் ஆனா இங்க யாரும் உன்னை வேத்து ஆளா நினைச்சு ஒதுக்கி வைக்க மாட்டாங்க. நீ இல்லைனு சொன்னாலும் இந்த வீட்டோட மருமக. திருமதி.தேவதர்ஷினி வெற்றிவேல் தான். இதை யார் நினைச்சாலும் மாற்ற முடியாது… அதை நல்லா உன் மனசுலையும் மூளையிலும் ஏத்திக்கோ…” என்றவன், “இப்ப நான் சமைக்கிறேன். எனக்கு ஹெல்ப் பண்ணு…” என்றான்.

அவளோ அவன் பேச்சிலிருந்து “இவன் என்னை விடமாட்டானா? அப்படி என்ன என்னிடம் இருக்குதுனு இப்படி நான் தான் இவன் மனைவினு இப்படி அழுத்தி சொல்றான். என் மேல பரிதாபமும் இல்லைனு சொல்றான். அப்ப இவன் என்னை காதலிக்கறானா?? அது எப்படி இன்னொருத்தர் மனைவிய காதலிக்கறான்… அப்ப இவன் ராவணனா??” இப்படி அவள் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் ஆனால் இதற்கு பதில் அவனின்றி வேறொருவரும் பதிலளிக்க இயலாதே… என்ற சிந்தனையில் இருந்தவளை கலைத்தது என்னவோ வெற்றியின் குரல்கள் தான்.

“ஏற்கனவே ரொம்ப லேட் ஆகிடுச்சு… கனவு காணாம வந்து எனக்கு ஹெல்ப் பண்ணு… இங்கிருக்கற இந்த காய்கறி எல்லாம் கொஞ்சம் வெட்டு கொடு… சிம்பிளா வெஜிடபிள் பிரியாணி செய்யலாம். ஒரே வேலையா போய்டும்…” என்றான்.

“ஆமா உனக்கு காய்கறியாவது வெட்ட தெரியுமா?” என்று அவளை கேலி செய்தான்.

“எனக்கு சமைக்க தான் தெரியாது. காய்கறி கூடவா கட் பண்ண தெரியாம இருப்பேன்…” என்றாள் ரோஷமாக.

“அது சரி… இங்கே பீன்ஸ் கட் பண்ணி காட்டு பார்க்கலாம்…”

அவளோ பீன்ஸை எடுத்து பொறியல் செய்வதற்கு போல் சிறிது சிறிதாக வெட்டி கொண்டிருந்தாள்.

“ஏய்… ஏய் நிறுத்து என்ன இப்படி கட் பண்ற?”

“இப்படி தானே கட் பண்ணுவாங்க…”

“இப்படி பொரியலுக்கு தான் கட் பண்ணுவாங்க… பிரியாணிக்கு இல்லை…” என்றவன் “தள்ளு… நான் இன்னைக்கு செய்யறேன் நீ பாரு…” என்றவன் மடமடவென்று காய்கறிகளை வெட்டினான்.

பத்து நிமிடங்களுக்குள் தாளிக்க தேவையான அனைத்து காய்கறி வெங்காயம் தக்காளி எல்லாவற்றையும் அறிந்து வைத்தான்.

அடுத்து அடுப்பில் குக்கரை வைத்து அனைத்தையும் போட்டு வதக்கி மசாலா பொடிகள் தேவையான அளவு தண்ணீர் என்று அனைத்தையும் போட்டு இறுதியில் அரிசியை போட்டு குக்கரை மூடி வைத்தான்.

அவனின் வேலைகளை அருகே இருந்து பார்த்தவளுக்கு என்ன இவ்வளவு சீக்கிரம் எல்லா வேலையையும் முடிச்சுட்டார்.

அவளை திரும்பி பார்த்தவன் “ஏய் என்ன எப்ப பார்த்தாலும் எதையாவது யோசிச்சிட்டே தான் இருப்பயா?” என்றான்.

“இல்ல… எனக்கு ஒரு டவுட்…”

“என்ன…” என்று கேட்டு கொண்டே அங்கே சமையலறையை ஒதுங்க வைத்து கொண்டிருந்தான்.

“நீங்க போலீஸா? இல்ல சமையல்காரரா??” என்று கேட்டுவிட்டாள்.

அவள் கேட்ட கேள்வியில் திரும்பி பார்த்து முறைத்தவன் “என்ன நக்கலா???” என்றான்.

“இல்ல… இவ்வளவு சீக்கிரம் சமைச்சுட்டீங்களே??? அதுவும் இல்லாம எல்லா வேலையிலும் ஒரு நேர்த்தி இருந்துச்சு…”

“சமையல் அப்படிங்கறது ஒரு கலை. அது படிச்சா தான் வரும் அப்படினு இல்லை. அந்த சமையல் மேல ஒரு பிடித்தம் இருந்தாலே போதும் தன்னாலே கத்துக்கலாம்… ஒரு விசயம் ரொம்ப பிடிச்சுருந்தா அதுல நேர்த்தியும் தானா வந்துடும்…” என்றான்.

அதற்குள் குக்கரில் இருந்து சத்தம் வந்தவுடன் இறக்கி வைத்தவன் சமையலறையிலிருந்து வெளியேறினான்.

“சமைக்க தான் செய்யல... பாத்திரங்களையாவது கழுவுவோம்…” என்றவள் அங்கே பார்க்க அதை அனைத்தையும் அவனே செய்து வைத்திருந்தான்.

அதைக் கண்டவளோ “இதையும் செய்துட்டாங்களா??” என்று பெருமூச்சு விட்டபடி “இனி என்ன செய்யறது…” என்றபடி சமையலறையை விட்டு வெளியே வந்தவள் தோட்டத்தினை நோக்கி சென்றாள்.
கருத்து திரி:
 
Status
Not open for further replies.
Top