வணக்கம் நண்பர்களே,நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் pmtamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

NT❤️ - கதை திரி(onhold)

Status
Not open for further replies.
நேசம் திறவாயோ...❤️ - கதை திரி

ஹாய் நட்பூக்களே...

எல்லாரும் எப்படி இருக்கீங்க... ஒரு புது நாவலோடு வந்தாச்சு. ராவணன் நாவலுக்கு கொடுத்த ஆதரவை இக்கதைக்கும் கொடுப்பிங்கன்னு நம்புறேன் டியர்ஸ்...😍

நேசம் மறுக்கப்பட்ட இரு நெஞ்சங்கள் இணைந்தால் அங்கு நேசம் திறக்குமா என்பதே கதைக்கரு...

அதாவது மறுமணம் கான்செப்ட்.

கதைக்கான அத்தியாயங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை ஆகிய ஐந்து நாட்கள் பதிவிடப்படும்.

நன்றி

-சரண்யாகீதா❤️


 
Last edited:
நேசம் - 01

சுட்டெரிக்கும் வெய்யோனும், மலைகளின் பின்னே மெது மெதுவாக தஞ்சம் அடைந்துக் கொண்டிருக்க.. அந்தி சாயும் மாலை பொழுதினில், கும்பகோணத்தில் இருந்து சிறிது தொலைவினில் அமைந்துள்ள உத்தமதாணி கிராமத்தில் உள்ள இரண்டு அடுக்கு மாடி வீட்டின் உள்ளே கிராம ஜனங்கள் அனைவரும் கூடி இருந்தனர்.

வீட்டின் நடுக் கூடத்தில் மாலைகள் எல்லாம் சாற்றப்பட்டு துணியால் மூடியிருந்த சடலத்தின் முன் அமர்ந்திருந்தார் ஐம்பது வயது தோற்றம் கொண்ட சுந்தரியம்மாள். தன் மகனின் உயிரற்ற சடலம் முன் அமர்ந்து அவர் அழுகின்ற அழுகை சத்தம் அந்த வீட்டிற்கு வெளியே கேட்கும் அளவிற்கு ஒலித்துக் கொண்டிருந்தது.

"அய்யோ ராசா எங்களை இப்படி நட்டாத்துல விட்டுட்டு போயிட்டியே இனி நாங்க என்னயா பண்ணுவோம் அந்த எடுபட்ட சிருக்கியை கட்டுன நாளில் இருந்தே உளக்கு நேரம் சரியில்லாமல் போச்சே... இப்போ அவ பெட்டி படுக்கையை தூக்கிட்டு ஆத்தா வீட்டுக்கு போனானு பின்னாடியே போனியே. வந்தா அவளோடு சேர்ந்து வருவேன் சொன்னவன் இப்படி பொனமா வந்திருக்கியே. என் ராசா" என்று அடித்துக் கொண்டு கதறி அழுதார் சுந்தரி.

இவரின் கூப்பாடு அந்த வீடு எங்கும் ஒலித்துக் கொண்டிருக்க, சரியாக அப்போது அந்த வீட்டின் முன்பு ஒரு வாடகை கார் வந்து நிற்க, அதில் இருந்து இறுகிய முகத்தோடு இறங்கினாள் பாரதி. அவளோடு அவள் குடும்பத்தினாரும் உள் நுழைந்தனர்.

பாரதி… முப்பது வயது இளம்பாவை. எப்போதும் பொலிவுடன் இருக்கும் முகம் இன்று சோர்ந்து காணப்பட, கண்களின் கீழ் கருவளையம் சூழ்ந்திருக்க, கனத்த இதயத்தோடு தன் மகன் யுவனை கரங்களில் ஏந்தியபடி உள் நுழைந்தாள் அவள்.

அவளை கண்டதும் அகங்காரமாக மாறிய சுந்திரி, தன் கூந்தலை அள்ளி முடிந்தவாரு, அவளை நெருங்கியவர். "அடியேய் சிறுக்கி இப்போ எதுக்குடி இங்கன வந்திருக்க, அதுதான் பொட்டியை தூக்கிட்டு ஆத்தா வீட்டுக்கு போனியே... பொறவு எதுக்குடி இந்த வீட்டு படியில் கால் வைக்கிற உன்னை கூட்டிட்டு வர போய் தான்டி என் பையன் இப்படி அல்பாய்சுல போயிட்டான். உன்னை கல்யாணம் பண்ணும் போதே வேண்டாம். வேண்டாம்னு தலைபாடா அடிச்சுக்கிட்டேன் என் பேச்சை கேட்டானா” என்று அழுகையோடு கத்தியவரை அங்கிருந்த பெருசுகள் எல்லாம் சேர்ந்து அடக்கியது.

'ஏம்மா சுந்தரி, கொஞ்சம் அமைதியா இரு அந்த புள்ளயே புருஷனை இழந்திட்டு குழந்தையோடு வந்து நிக்குது. அதை போய் நோகடிச்சிட்டு இருக்க' என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டு இருக்க, பாரதியின் முகமோ தன் கணவன் அமுதன் முகத்தையே வெறித்து இருந்தது.

அவன் இறந்ததை நினைத்து அவனுக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட அவள் விழிகளில் இருந்து வெளிவரவில்லை. இதில் இவர்களின் திருமணம் காதல் திருமணம் வேறு! அனைவரும் அவளின் இறுகிய முகத்தை கண்டு பதறியவர்கள்.

"ஏம்மா பாரதி அழுகை வந்தா அழுதிடுமா. இப்படி அழுகையை அடக்கி வைச்சிட்டு இருக்காத” என்று அத்தை முறையில் இருக்கும் ஒருவர் சொல்ல, யார் என்ன சொல்லியும் அவளின் முகத்தில் சிறு மாற்றம் இல்லை. தன் கணவன் உடலையே தான் வெறித்து பார்த்திருந்தாள். இன்று காலை தன்னை சந்தித்த பின் வீடு திரும்பும் போது நடந்த விபத்து அதில் சம்பவ இடத்திலேயே உயர் துறந்துவிட்டான்.

விபத்து அறிந்து மருத்துவமனை சென்று உடல் கைப்பற்றவே நண்பகல் ஆகிவிட்டது. அதன் பின் சொந்தம் பந்தம் எல்லாருக்கும் செய்தி பரவிட, பதறியபடி வந்தனர் உற்றார் உறவினர். பாரதிக்கும் தகவல் தெரிவிக்க பட அவள் வீட்டினரிடம் காணப்பட்ட துடிப்பு கூட அவளிடம் இல்லை.

இப்போதும் ஏதோ கடமைக்கே என கணவனின் பூத உடல் அருகே வீற்றிருக்க, அவர்களின் நான்கு வயது மகன் யுவனோ அந்த கூட்டத்தை எல்லாம் கண்டு மருண்டு விழித்தபடி அன்னையின் அருகில் ஒட்டிக் கொண்டு அமர்ந்து இருந்தான். தந்தை முகத்தை கண்டவனுக்கும் கூட அழுகை வரவில்லை. பின்னே அவரின் முகம் தான் அவனுக்கு அவ்வளவு பரிட்சையமாக இல்லையே. பின்பு எப்படி தன் தந்தை இறந்துவிட்டார் என்பதை அறியும் அந்த பிஞ்சு.


அனைத்து சடங்குகளும் முடிந்துவிட, ஆளுக்கொரு மூளையில் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தனர் வீட்டினர் அனைவரும். பாரதி வீட்டினருக்கோ என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அப்போது தான் ஹோட்டலில் இருந்து அனைவருக்கும் உணவு வாங்கி வந்தான் மனோகரன். அமுதனின் சகோதரன் அவனை விட ஒரு வயது இளையவன்.

அனைவரிடமும் உணவு பொட்டலத்தை நீட்டியவன் விழிகள் படிந்தது என்னவோ பாரதியின் மீது தான். பாரதி அவனுக்கு அண்ணி மட்டுமல்ல கல்லூரி தோழியும் கூட. கல்லூரி படித்த காலகட்டத்தில் தன் தம்பியை காண வருவதாக சொல்லி அவளிடம் பழக ஆரம்பித்தான் அமுதன். கண்ணியமான பேச்சில் அவன் மீது காதல் வயப்பட்டவள் வீட்டினரிடம் போராடி திருமணம் செய்து கொண்டாள். நன்றாக சென்ற அவர்களின் காதல் வாழ்வு யார் கண்பட்டதோ தெரியவில்லை வேறு ஒரு பெண்ணை நாடினான் அமுதன்.

இப்போதும் கூட பாரதிக்கு புரியாதது தன் மீது நேசம் வைத்துவிட்டு வேறு ஒருவளோடு எப்படி என்பது தான். ஆனால் அவளுக்கு யார் சொல்வது மனித மனம் குரங்கை போல் என்று அதனால் தான் என்னவோ அவளின் கணவன் அமுதன், நேசித்தவளை துறந்து வேறொருவளோடு உறவாடினானனோ என்னவோ!

அமைதியாக வீற்றிருந்த பாரதியை கண்ட மனோக்கு தான் அவளிடம் ஏதோ வித்தியாசம் இருப்பதாகவே தோன்றியது. அதுவும் அல்லாது கணவன் மீது உயிரையே வைத்திருந்தவள், இன்று அவன் இறப்பிற்கு அழுகையை வெளியிடவில்லை என்றாலும் அவளின் முத்தத்தில் வேதனையின் சாயல் கூட இல்லாது இருப்பதை கண்டு குழம்பி தான் போனான்.

அதனோடே உணவு பொட்டலத்தை அவளிடம் கொடுக்க, பால் குடித்து விட்டு உறங்கும் மகனை பக்கத்தில் இருக்கும் படுக்கையில் படுக்க வைத்தவள், பொட்டலத்தை பிரித்து வேக வேகமாக உண்ண ஆரம்பித்துவிட்டாள். இவளின் செய்கை அனைவருக்கும் வித்தியாசமாக இருந்தது என்றால், சுந்திரிக்கோ கோபத்தை கொடுத்தது.

“ஏய் பாரதி என்னடி என் புள்ளயை காவு வாங்கிட்டு நீ நிம்மதியா திங்குறீயா” என்றிட அவரை ஒரு பார்வை பார்த்தவள், மீண்டும் உணவில் கவனம் பதிக்க,

“அடியேய் உன்னை தானே கேட்குறேன் வாயை தொறடி” என்று அதட்டிட, அவளோ சாப்பிடும் உணவை நன்றாக மென்று முழுங்கி விட்டு அவரை பார்த்தபடி, “இப்போ என்ன உங்களுக்கு வேனும் உங்க மகன் வண்டியில் போய் அடிப்பட்டு செத்ததுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது எனக்கு பசிக்குது நான் சாப்பிடுறேன்” என்றவள் அதற்கு மேல் எதுவும் பேசாது முழுதாக உண்டு முடித்தவள், கை கழுவியவாரு தன் மகன் அருகில் அமர்ந்து கொண்டாள்.

இன்னும் ஏதேதோ திட்டிக் கொண்டிருந்த தன் தாயை கண்ட மனோ,”ம்மா அமைதியா இரு” என்று அதட்டியவனுக்கும் கூட தன் தோழியின் செய்கை பிடிக்கவில்லை. பாரதியின் பெற்றோர்க்கு தான் என்ன செய்து என்றே தெரியாது கையை பிசைந்தபடி இருக்க,

"மாமா, அத்தை நீங்க அந்த அறையில் தங்கிக்கோங்க. நாளைக்கு கிளம்பலாம் இப்போ பொழுது போகிடுச்சு” என்றிட “இல்லை தம்பி நாங்க இங்க கூடத்திலே தங்கிக்கிறோம்" என்றதும் அறையில் இருந்து மெத்தையை எடுத்து வந்து போட்டவன் பின் பாரதியை காண,

அவளோ நான் இங்கிருந்து நகருவேனா என்ற ரீதியில் கண் மூடி சுவற்றில் முட்டு கொடுத்து தலை சாய்த்து இருந்ததை கண்டு பிறகு பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தபடி தன் அறைக்குள் புகுந்து கொண்டான் மனோ. இதை எல்லாம் கண்ட சுந்தரி தான், “என் பையனை சாவடிச்சவளுக்கு எல்லாம் ஊழியம் செஞ்சிட்டு இருக்கிங்க” என்று மீண்டும் வாயை திறக்க, அவரின் கணவன் வெங்கடாஜலம் முறைப்பில் முனங்கியபடி அறைக்குள் நுழைந்து கொண்டார்.

விழி மூடியிருந்த பாரதியின் விழிகளோ இப்போது நிற்காது கண்ணீரை பொழிந்தது. அவள் மனமோ கணவனை விட்டு விலகி வந்த காரணத்தையே அசைப்போட்டபடி இருந்தது.


•••••••••••••••

ஒரு வாரத்திற்கு முன்…

“ஹலோ, நான் பாரதி பேசுறேன். நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க. நாளைக்கு நம்ம கல்யாண நாள் நீங்க வரீங்க தானே” என்று ஆவலுடன் கேட்க,

மறுமுனையிலோ, "சாரி ரதிமா உனக்கே தெரியும் எனக்கு இங்கே ஆபிஸில் தலைக்கு மேலே வேலை இருக்குடா என்னால் வரமுடியாது" என்று சோகமாக ஒலித்த தன் கணவனின் குரல் அவளையும் கவலை அடைய செய்திட,

"பரவாயில்லைங்க உங்களுக்கு வேலை முடிஞ்சதும் சீக்கிரம் வந்திடுங்க” என்றபடி அழைப்பேசியை துண்டித்தவளுக்கு, ஓர் யோசனை. ‘ஏன் அவரு தான் வரனுமா. இந்த முறை நாம போகலாமே எப்படியும் அங்க சென்னை வீட்டு அட்ரஸ் தெரியும், அப்புறம் என்ன கவலை’ என்று மனதிலே முடிவெடுத்துக் கொண்டவள் அறியவில்லை. அதன் பின் அவள் வாழ்வே மாறப் போகிறது என்று.

அடுத்த நாளே பிறந்தகம் செல்வதாக சொல்லியவள், தன் மகனோடு வந்து இறங்கியது என்னவோ சென்னைக்கு தான். பல ஆசை கனவுகள் சுமந்து கொண்டு அவனை காண சென்றவள், தங்கள் திருமண நாள் பரிசாக தன் கணவனுக்கு வாங்கிய மோதிரத்தை ரசித்தபடி ஆட்டோவில் வந்து இறங்கினாள் பாரதி.

அவன் பிளாட்டின் முன் வந்து நின்றவள் காலிங் பெல்லை அழுத்த, உள்ளே இருந்து எந்தவொரு சத்தமும் இல்லாது போக, ‘ஒருவேளை வேலைக்கு போய் இருக்காரா’ என்று யோசிக்க,

‘இல்லையே ஆபிஸ் போன் செஞ்சு கேட்டதுக்கு இன்னைக்கு அவரு லீவனு சொன்னாங்களே' என்று யோசித்தபடி இருக்க, அதற்குள் யுவன் கதவை லேசாக தள்ள, அதுவோ தானாக திறந்துக் கொண்டது.

‘அச்சோ கதவை பூட்டாமால் போயிட்டாரோ’ என்று யோசித்தபடி இருக்க, வீட்டினுள் இருந்து வந்த சத்தம் அவளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது என்றால், தன் கணவனின் குரல் அவளை பூமிக்குள் புதைய செய்தது.

‘இல்லை... அப்படி இருக்கக்கூடாது’ என்று மனம் பதை பதைக்க, லேசாக மூடியிருந்த மற்றொரு கதவை திறக்க, அங்கே தன் கணவனை காணக் கூடாது நிலையில் கண்டதும் குமட்டிக் கொண்டு வர, தன் மகனின் கரம் பிடித்து வெளியே அழைத்து வந்தவள், டிரெயின் பிடித்து, எப்படி வீட்டை அடைந்தாள் என்றே அவள் அறியாத ஒன்று.

இரண்டு நாட்கள் பித்து பிடித்தவள் போன்று இருந்தவளுக்கு தான் இருக்கும் கணவனின் அறை கூட உடலை கூச் செய்தது. ‘ஏன் தன்னுடைய வாழ்வு இப்படி தடம் மாறிப்போனது. அவனை காதலித்து திருமணம் செய்ததை தவிர வேறென்ன நான் செய்தேன். எங்கே எனது தவறு இருக்கிறது. அவனுக்காக நான் நேசித்த வேலையையும் சேர்த்து விட்டேனே. எல்லாம் அவனுக்காக தானே. அப்போது அவன் மீது நான் கொண்ட தேசத்திற்கு மதிப்பு என்ன’ என்று மனதுக்குள்ளே அரற்றிக் கொண்டு இருந்தவள் பின் மனதில் தீர்க்கமான முடிவெடுத்து தன் கணவனின் வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

இரண்டு நாள் கழித்து வீட்டிற்கு வந்தவன், தன் மனைவி துணி மடித்து கொண்டு இருப்பதை கண்டு, ரதிம்மா என்று பின்னிருந்து அணைத்தான் அமுதன். அவன் அணைப்பில் அறுவருத்து போனவள், அவன் கையை உதறி அவனை நேருக்கு நேராக பார்த்தாள் பாரதி.

"என்ன ரதிமா, கல்யாண நாளுக்கு உன்னை பார்க்க வரலேனு கோபமா, செம வேலைடா" என்று உருகி குலைந்தவனை கண்டு கொன்று விடும் ஆத்திரம் பொங்க, அதனை உள்ளுக்குள்ளே மறைத்தவள்,

"ஆமா ஆமா ரொம்ப வேலை தான் என்று நக்கல் செய்ய, அவள் பேச்சின் மாற்றம் உணர்ந்தவன், “என்னமா உடம்பு எதுவும் சரியில்லையா” என்று அக்கரையாக அவள் நெற்றியில் கை வைத்திட,
அவன் கரத்தை தட்டி விட்டவளுக்கு மனதில் இருந்த கோபம் அனைத்தும் எரிமலையாக வெடித்தது.

“ஏன் டா உனக்கு கொஞ்சம் கூட மனசு உறுத்தலயா இரண்டு நாள் முன்னாடி வேற ஒரு பெண்ணோடு கொஞ்சி குலாவிட்டு இப்போ ஒன்னுமே தெரியாத மாதிரி கட்டிபிடிக்கிற எனக்கு அப்படியே உடம்பெல்லாம் கம்பளிபூச்சு ஊருற மாதிரி இருக்குது” என்று முகம் சுளித்தவளை கண்டு முதலில் புரியாது விழித்தவன் பின் அவளின் பேச்சில் பதற்றம் அடைந்தவன், அவளை நெருங்க முயற்சிக்க அவளோ அவனிடம் இருந்து விலகினாள்.

அமுதனோ பதற்றமாக, “நான் போய் உன்னை ஏமாத்துவேனா ரதிமா உனக்கு யாரோ என்னை பற்றி தப்பா சொல்லி இருக்காங்க ரதிமா” என்று தவிப்பாக சொன்னவனை கண்டு வெறுமையாக சிரித்தவள், “என்னது யாரோ சொன்னாங்களா. நானே என் கண்ணால் பார்த்தேன் டா. ஆசை ஆசையா உன்னை பார்க்க வந்தேன் ஆனா நீ வேறு ஒருத்திக் கூட” என்று சொல்ல வந்தவளின் குரல் கமறியது.

அவள் பேசியதை கேட்டவனோ, “ர...ரதி மா இல்லைடா அது ஆபிஸ் பற்றி தான் பேசிட்டு இருந்தோம்” என்று மென்று முழுங்கிட அவனையே எரிக்கும் பார்வை பார்த்தவள்,

“ஓ படுக்கையில் தான் நீங்க ஆபிஸ் விஷயம் டிஸ்கஸ் செய்விங்களோ உன்னை நம்பினேன் பாரு எனக்கு நல்ல பரிசை கொடுத்திட்ட… அன்னைக்கு இருந்த என் மனநிலையில் உன்னை அப்படியே விட்டுட்டு வந்திட்டேன் இல்லைனா சட்டையை பிடிச்சு அன்னைக்கே உன்னை நாறடிச்சு இருப்பேன்” என்றவள் பின் தன்னை சமன்படுத்திக கொண்டு நிதானமாக அவனை பார்த்தவள்,

“எப்போ உன் மேல நான் வைச்ச நம்பிக்கையை நீ குழித்தோண்டி புதைச்சிட்டயோ இனி உன்னோடு என்னால் வாழ முடியாது” என்றவள் அவனின் அதிர்ந்த முகம் கண்டு திருப்தி அடைந்தபடி,

“என்னடா பொம்பிளைனா கில்லு கிரைனு நினைச்சிட்டியா நீ என்னை செஞ்சாலும் உன்னோடே இருக்கிறதுக்கு… நான் பாரதி டா என்னை பற்றி உனக்கு நல்லா தெரியும்… உன் மேல வைச்ச காதலுக்காக நான் நேசிச்ச வேலையை விட்டுட்டு வந்தவள் நான். ஆனா எப்போ அந்த தகுதியை நீ இழந்தயோ என்னால் உன்னோடு சேர்ந்து வாழ முடியாது நாம பிரிஞ்சிடலாம். டைவர்ஸ் பத்திரம் உன் வீட்டை தேடி வரும்” என்றவள் வெளியே விளையாடிக் கொண்டிருக்கும் மகனின் கரம் பிடித்து இழுத்து சென்றுக் கொண்டிருக்க, “ரதி ரதி” என்றவனின் குரல் காற்றில் கலந்து போனது.


••••••••••••••

அவன் செய்த துரோகத்தை நினைத்தவளுக்கு கோபம் ஏற கண்களிலும் நில்லாமல் கண்ணீர் வழிந்தது. ஆனால் அது அவன் இறப்பை நினைத்து அல்ல அவனை காதலித்ததை நினைத்து தான். அவன் மீது கொஞ்சம் நஞ்சம் புதைந்திருந்த நேசமும் அவன் தன்னை சந்திக்க வந்த போது பேசிய வார்த்தையில் முற்றிலும் நொருங்கி போக, அவளின் நேசம் கானல் நீராய் காணாமல் தான் போனது.

தன்னுடைய நெஞ்சத்தை ஈட்டியாய் துளைத்த அவனின் வார்த்தைகளை வேண்டுமென்றே புறந்தள்ளி அந்த நினைவை மறுத்தவள், விழி திறந்திட… அவளுக்கு காட்சியில் விழுந்தது அவர்களின் படுக்கை அறை, அதை கண்டதும் சூன்யமான தன் வாழ்வு நினைத்து கசந்த முறுவலை வெளியிட்டவளுக்கோ தூக்கம் தொலைதூரம் பறந்து போனது. ஒரு நெஞ்சம் இவ்வாறு துக்கத்தில் தவிக்கிறது என்றால் மற்றொரு நெஞ்சமோ ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தது.

"ஹேப்பி இன்று முதல் ஹேப்பி... என் பொண்டாட்டி கிட்டே இருந்து டிவோர்ஸ் கிடைச்சிடுச்சு. இன்று முதல் ஹேப்பி” என்று பாடியபடியே அரை பாட்டில் சரக்கை காலி செய்திருந்தான் அவன். அவனே நம் கதையின் நாயகன் இளமாறன்.

நேசம் இழந்த இரு நெஞ்சங்கள் இணைந்தால் அங்கே நேசம் திறக்குமா... அல்ல நேசம் மறைக்கபடுமா என்பதை அறிய காலத்தோடும் அவர்கள் வாழ்வோடும் பயணிப்போம்…

தொடரும்…
 
Last edited:

நேசம் திறவாயோ - 01 பதிவு செய்து விட்டேன்... உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து நான்...

 
நேசம் - (02)


வானெங்கும் இருளரசன் தன் ஆதிகத்தை செலுத்தி கொண்டிருக்க, அந்த இரவின் நிசப்தத்தை கலைத்தபடி ஒலித்துக் கொண்டிருந்தது அவன் குரல்.


“ஹேப்பி இன்று முதல் ஹேப்பி… என் பொண்டாட்டி கிட்டே இருந்து டிவோர்ஸ் கிடைச்சிடுச்சு, இன்று முதல் ஹேப்பி” என்று பாடியபடியே அரை பாட்டில் சரக்கை காலி செய்திருந்தான் அவன். அவனே நம் கதையின் நாயகன் இளமாறன்.


கிணற்று திட்டின் மேலே ஏறிக் கொண்டு குடித்துவிட்டு ஆடிக் கொண்டு இருந்தவனை கீழ் இறக்க போராடி கொண்டிருந்தார் ராசமணி. இளமாறனின் தாய் மாமன்.


“ஏலே எடுப்பட்ட பயலே… இறங்கி தொலைலே, என் உசுரை வாங்கிறதுக்கே சென்னை பட்டணுத்துல இருந்து இங்க வந்து இருக்கியாடா நீ” என்று கத்தியபடியே அவனை கீழ் இறக்க பாடுபட்டு கெண்டிருந்தார் ராசு. அவர் சொல்லியதும் கீழ் இறங்க நம் இளமாறன் என்ன சொல் பேச்சு கேட்பவனா.


அவரோ கீழ் இறங்க சொல்ல, இவனோ இரண்டு பக்கமும் ஆடியபடியே அவர் கேட்பதற்கு சம்மந்தமே இல்லாமல், “போ மாமா அவ தான் என்னை புரிஞ்சுக்காமா விட்டுட்டு போயிட்டா… ஆனா நீ கூட என்னை திட்டுற தானே” என்று புலம்பியவனை கண்டு தலையில் அடித்துக் கொண்டவன்,


“நீதானலே அவளுக்கு விவகாரத்து கொடுத்த… இப்போ அவ விட்டுட்டு போயிட்டானு புலம்புற” என்று ராசமணி அதட்டிட, அதை கேட்டதும் தன் தலையை சொறிந்தபடி 'அட ஆமா நான் தான் டிவோர்ஸ் கொடுத்தேன்’ என்று நெற்றியை நீவியபடி தீவிரமாக யோசித்தான் மாறன்.


அதை கண்டதும் உள்ளுக்குள்ளே அரண்டவர்… ‘அய்யோ மறுபடியும் என்னத்த யோசிக்கிறானு தெரியலையே’ என்று ராசு நினைத்து கொண்டிருக்க, அவர் நினைத்தது சரி எனும் விதமாக அடுத்த புலம்பலை ஆரம்பித்தான் இளமாறன்.


"நான் தான் மாமா டிவோர்ஸ் கொடுத்தேன். ஆனா அவ தானே கேட்டா… என்னை புரிஞ்சுக்கவே இல்லை மாமா… அவங்க ஆத்தா பேச்சை கேட்டுட்டு, இப்படி என்னை தனியா புலம்பா விட்டுடாளே மாமா… ஒரு வருஷம் வாழ்க்கை ஒன்னுமே இல்லாமல் போச்சு”


“அவ மேல தப்பை வைச்சிக்கிட்டு என்கிட்ட வந்து விவாகரத்து கேட்குற மாமா‌… அதனால தான் சரி போடினு விவாகரத்து செஞ்சிட்டு வந்துட்டேன்… இந்த இளமாறனை யாரும் கட்டுபடுத்த முடியாது” என்றவன் மீண்டும்,


“அவ ஏன் மாமா இப்படி செஞ்சா என்னால தாங்க முடியலயே… இருந்தாலும் அவ எனக்கு வேணாம் மாமா” என்று ஒற்றை கால் தூக்கியபடி நடராஜர் போஸ் கொடுத்தபடி புலம்பியவனின் பேச்சு, 'ம்மாஆஆ’ என்ற சத்ததோடு நின்று போனது.


வேறொன்றும் இல்லை ‘தொப்புகடீர்’ என்று மாறன் கிணற்றில் விழுந்து இருந்தான்.


“அட கிரகம் பிடிச்சவனே கிணத்துல விழுந்து தொலைச்சிட்டானா” என்று நொந்தபடி தானும் கிணற்றில் குதித்த ராசமணி, அவனின் முடியை பிடித்து இழுத்தபடி மேல் கொண்டு வந்தார்.


பேச்சு மூச்சு இல்லாது மயங்கி கொண்டு இருப்பவனின் கண்ணத்தில் வலிக்கும் படியாக தட்டிட, இறுமியபடியே விழி திறந்தவனுக்கு அனைத்தும் மங்கலாக தெரிய, எல்லோரும் கேட்கும் அதே வசனத்தை ‘அதாவது நான் எங்கே இருக்கேன்’என்பதையே குழறலாக கேட்டான்.


அதை கேட்டு ஏகப் கடுப்பாகிய ராசுவோ, அவன் முதுகில் மத்தளம் வாசித்தபடி,


“ஹான் எமலோகத்துல இருக்கிற மூதேவி எழுந்து தொலைடா எருமை” என்றிட, மீண்டும் கண் முடினான் மாறன். அதில் நொந்து போனவர், அவன் கண்ணத்தில் இரண்டடி வைத்திட மீண்டும் லேசாக விழி திறந்தவன்.


“ஹேப்பி இன்று முதல் ஹேப்பி… என் பொண்டாட்டி கிட்டே இருந்து டிவோர்ஸ் கிடைச்சிடுச்சு… ஹேப்பி” என்று பாடியபடியே தூங்கி விட,


“தடிமாடு எவ்ளோ புத்தி சொன்னாலும் உரைக்காது” என்று திட்டியபடியே அங்கு தோட்டத்து வீட்டில் இருந்த தன் மற்றொரு சட்டையை எடுத்து அவனுக்கு உடை மாற்றி விட்டவர் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தார்.


கறுமை நிறம் என்றாலும் களையான முகம்... அதுவும் அவனின் குறும்பு பேச்சு அனைவரையும் வசியம் செய்துவிடும். அவன் மீது கொள்ளை பாசம் ராசுவுக்கு. அவனை பார்க்கும் போதே தெரிந்தது எதையோ அவன் முனுமுனுத்து கொண்டிருக்கிறான் என்று… இன்னும் ஏதேதோ அவன் உளறிக் கொண்டு இருக்க, அதற்கு மேல் அவன் முகத்தில் படிந்திருந்த வேதனையை காண சகியாது கண்மூடிக் கொண்டார் ராசமணி.


பகலவனின் செந்நிற கதிர்வீச்சு சுள்ளென்று அவன் முகத்தில் பட முகத்தை சுருக்கியபடியே எழுந்தான் இளமாறன். நேற்று அடித்த சரக்கு தன் வேலையை காட்ட, தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தவன் முன்பு எலுமிச்சை சாரை நீட்ட, அதனை வாங்கி பருகிய பின்பே கொஞ்சம் தெளிந்தது போன்று இருந்தது. அப்போது தான் இது எந்த இடம் என்பது போன்று சுற்றி முற்றி பார்த்தான் மாறன்.


தென்னை கீற்றால் செய்யப்பட்ட கொட்டகை, அதன் உள்ளே சில பாத்திரங்கள் மற்றும் மாமனின் சட்டை துணிகள் என இருப்பதை கண்டவன், புரிந்துக் கொண்டான் தான் இப்போது இருப்பது தோட்டத்து வீட்டில் என்று. 'நல்ல வேளை குடிச்சிட்டு வீட்டுக்கு போகல இல்லைனா அதுக்கும் இந்த ஆத்தா புலம்பி தள்ளி இருக்கும்’ என்று நினைத்தபடி இருக்க அங்கு வந்து சேர்ந்தார் ராசமணி.


அவன் யோசனையை கண்டு, “என்ன மருமவனே சரக்கு எப்படி இருந்துச்சு சும்மா நச்சுனு இருந்துச்சா” என்று கேட்ட மாமனை காண இயலாது தலையை குனிந்திருந்தான் இளமாறன். அதை கண்ட ராசமணிக்கும் வருத்தம் மேலோங்க, “மாறா உனக்கு நடந்ததை மறக்கிறது ரொம்ப கஷ்டம் தான் ஆனா இப்படி தேவையே இல்லாத குடிபழக்கத்தை பழகிக்காத” என்று அழுத்தமாக சொல்ல தலையை மேலும் கீழுமாக ஆட்டினான் இளமாறன்.


“என்னலே அதிசயமா சொன்னவுடனே தலையை ஆட்டுற… எப்போவும் இந்த இளமாறன் சொல் பேச்சு கேட்கமாட்டானு வசனம் பேசுவ… இப்போ என்ன…” என்றிட, அதை கேட்டதும் வருத்த முறவல் ஒன்றை உதிர்த்தவன்,


"என்ன செய்றது மாமா நீங்க வேண்டாம் சொல்லியும் அவளை திருமணம் செஞ்சுக்கிட்டேன் இல்லை... அதுதான் இப்போ கஷ்டபடுறேன் போல” என்றவனை கண்டு கலங்கியவர், 'எல்லாம் சரியாகும் டா. நீ பழையபடி கலகலப்பா இரு” என்றிட,


அதை கேட்ட மாறனோ “என்ன மாமா சொன்னிங்க, கல்ப்பா அடிக்கனுமா இனிமே வாரத்துக்கு ரெண்டு நாள் எப்படி கல்ப்பா அடிக்குறேனு மட்டும் பாருங்க” என்று முகத்தை தீவிரமாக வைத்தபடி கேட்டாலும், அவன் கண்கள் குறும்பு சிரிப்பை ஏந்தியபடி இருந்தது.


அதை கண்டவரோ அவன் முதுகில் ஒரு அடியை போட்டபடியே, “இப்படி மறுபடியும் கல்ப்பா அடிக்கிறேனு பேசிட்டு திரிஞ்ச அப்புறம் கலப்பையில் பூட்டி ஏர் ஓட்டுற மாதிரி உன்னை ஓட்டிறுவேன் பார்த்துக்க” என்றதும் முகத்தை அப்பாவியாக வைத்தவன்…


“பச் என்ன மாமா என்னை பற்றி தெரிஞ்சும் நீங்க இப்படி சொல்லலாமா… இந்த இளமாறன் சொல்லு பேச்சு கேட்க மாட்டானு தெரியாதா உங்களுக்கு” என்று கலகலவென சிரித்தவனை வாஞ்சையோடு பார்த்திருந்தார் ராசமணி.


•••••••••••••


காலை பொழுது புலர்ந்தது. இன்னும் துக்க வீடு துயர வீடாகவே காட்சி அளித்து கொண்டிருந்தது. வீட்டினர் அனைவரும் ஒவ்வொரு சிந்தனையில் மூழ்கி இருக்க, அதை கலைக்கவே பேச்சு எடுத்தனர் பாரதியின் பெற்றோர்கள்.


“அப்போ நாங்க கிளம்புறோம் சம்பந்தி” என்று கிளம்ப எண்ண… அவர்களோடு பாரதியும் கிளம்ப முயன்றாள்.


அதை கண்டதும் கோபம் பெற்ற சுந்தரியோ, “இந்தாடி நீ கிளம்புறதுனா கிளம்பு… என் பேரனை எங்க கிட்ட விட்டுட்டு போ” என்ற தன் மாமியாரை ஓர் பார்வை பார்த்தவள்,


“இந்த வீட்டுக்கும் எனக்கும் இருக்கிற உறவே முறிஞ்சு போச்சு. அப்படி இருக்கும் போது என் பையனை எதுக்கு நான் உங்ககிட்ட கொடுக்கனும். உங்களுக்கு பார்க்க ஆசையா இருந்தா எங்க வீட்டுக்கு வந்து நீங்க பார்த்திட்டு போங்க. என் பையன் என்னோடு தான் இருப்பான்” என்றவள் தன் பெற்றோரிடம் திரும்பி…


“மா நீங்க யுவனை கூட்டிட்டு அப்பாவோடு போய் காரில் உட்காரு. நான் என்னுடைய சர்ட்டிபிகேட்ஸ் மட்டும் எடுத்திட்டு வரேன்” என்றபடி இறுதி முறையாக அவர்கள் படுக்கை அறைக்குள் நுழைந்தவள், அலமாரியில் இருக்கும் தனது சர்ட்டிபிகேட்ஸ் எடுத்துக் கொண்டு இருக்க, பாரதி என்று அழைத்தவிட்டு கதவை தட்டியபடி வெளியில் நின்றிருந்தான் மனோ.


அதை கண்டு விரக்தியாக சிரித்துக் கொண்டவள், "சொல்லுங்க” என்றபடி அலமாரியை தேடி தனக்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு வெளியில் கிளம்ப எத்தனிக்க, அவனின் பேச்சு அவளை நிறுத்தியது.


“என்ன பாரதி யாரோ மாதிரி பேசுற” என்றிட, "ச்சே அப்படி எல்லாம் இல்லை" என்று நகர்ந்தவளை மறித்தவன், "ஆமா உனக்கும் அண்ணாக்கும் என்ன சண்டை… ஏன் அன்னைக்கு வீட்டை விட்டு போன” என்றிட, “அப்படி எல்லாம் எதுவும் இல்லை… ஒரு சின்ன கோபம் அவ்வளவு தான்” என்று வெளியில் சொன்னவள் உள்ளுக்குள்ளே புழுவாக துடித்தாள்.


"சரி நான் கிளம்புறேன்” என்றபடி தன் மாமியார் ஏச்சு பேச்சுகளை காதில் வாங்காமல் தன் பெற்றோரோடு பிறந்தகம் கிளம்பிட தயாராகினாள் பாரதி.


காரின் ஜன்னல் மீது தலை சாய்த்தபடி மடியில் அமர்ந்து இருந்த மகனின் தலையை கோதியவாரே அமைதியாக இருந்தவளுக்கு, மனோ பேசியதாலோ என்னவோ நினைக்க கூடாது என்று உருப்போட்டு கொண்டிருந்த கணவனின் கடைசி சந்திப்பு அவளையும் மீறி நினைவுலகத்தில் பயணித்தது.


••••••••••••


புகுந்த வீட்டை விட்டு வந்து மூன்று நாள் ஆகிவிட்டது. ஆனால் வீட்டில் உள்ளோரிடம் தன் பிரச்சினையை பற்றி வாய் திறக்கவில்லை பாரதி. இது தான் உருவாக்கிய உறவு எனும் போது மற்றவர்களிடம் சொல்ல அவள் மனம் விழையவில்லை. ஒருவேளை யாரும் தன்னை இளக்காரமாகவோ அல்ல பாவமாகவோ பார்த்து விடக் கூடாது என்று நினைத்தாளோ என்னவோ!


மனம் சுழல் காற்றாய் சுழன்று கொண்டிருக்க, இப்போது தனது வாழ்க்கை தன் மகன் மட்டுமே என்பதில் தீர்க்கமாக இருந்தாள். தான் ஏற்கனவே பணியாற்றிய அலுவலகத்திலே மீண்டும் வேலைக்கு செல்வோமா என்று சிந்தித்தபடி இருக்க, அவள் சிந்தனையை கலைக்கவென வந்தான் அவள் கணவன் அமுதன்.


“ரதிம்மா ஐ மிஸ் யூ டா” என்றபடி வந்து அணைத்தவனை தள்ளி விட்டவள் கண்களாலே எறித்துக் கொண்டு இருந்தாள்.


“ப்ச் என்னமா இப்படி முறைச்சு பார்க்குற... ஏதோ தெரியாம தப்பு செஞ்சிட்டேன்... இந்த ஒரு முறை விடேன்… உன் மேல நான் எவ்வளவு காதல் வைச்சிருக்கேன்னு உனக்கு தெரியும் தானே” என்று உருக்குமாக குலைந்திட, அவனின் உறுத்தல் இல்லாத பேச்சில் இவள் தான் திகைத்து போனவள் நொடியிலும் தன்னை‌ மீட்டும் கொண்டாள்.


“காதல் மம்... அந்த பாழப்போன காதல் தானே என்ன இப்போ இங்க வந்து நிறுத்தி இருக்கு…” என்றிட,

அதனை கேட்டவனோ இதற்கு மேல் கெஞ்ச முடியாது என்றபடி தன் சுயத்தை காட்ட ஆரம்பித்தான்.


“ப்ச் பாரதி… இப்படி முட்டாள் மாதிரி பேசிட்டு இருக்காதடி… நானும் போன போகுதுனு பார்த்தா ரொம்ப பேசுற” என்று பல்லை கடித்து கொண்டு பேச, அவனை கண்டு துளியும் அவளுக்கு பயம் ஏற்படவில்லை மாறாக கோபம் தான் பலமடங்கு ஏறியது.


“ஆமா டா நான் முட்டாள் தான்... நீ சொன்னேனு வேலையை விட்டேன்… என் இலட்சியத்தை விட்டேன்… வருஷத்துக்கு ஒரு முறை வீட்டுக்கு வந்திட்டு வேலை வேலைனு சொன்னியே எல்லாம் நம்பி தொலைச்சேன் பாரு நான் ஒரு முட்டாள் தான். இப்போ தானே புரியுது நீ என்னை வேலை பார்த்திட்டு இருந்திருக்கிறனு… பெத்த புள்ளைக்கு கூட உன் முகம் நியபகம் இல்லைடா இதிலே நீ எப்படி நடந்து இருக்க அப்படினு உனக்கு புரியல” என்று பொங்கியவளை கண்டு, ஆத்திரம் அடைய வார்த்தை விட்டான் அமுதன்.


“என்னடி ரொம்ப தான் பத்தினி மாதிரி பேசிட்டு இருக்க… அதுதான் நான் இல்லாமல் என் தம்பியோடு கூத்தடிச்சவ தானே… அப்புறம் என்ன துள்ளுற… நீங்க பேசி சிரிக்கிறது எல்லாம் எனக்கு தெரியாதாக்கும்” என்றவன் அவளை வார்த்தைகளால் கொன்று கொண்டு இருக்க இறுகிய சிலையாக நின்றுவிட்டாள் பாரதி.


அவள் செவியிலோ, ‘என் தம்பியோடு கூத்தடிச்சவ தானே’ என்று வார்த்தைகளே ரீங்காரம் இட்டுக் கொண்டு இருந்தது. அவன் சென்றது கூட தெரியாது திக்பிரம்மையில் இருந்தவளை கலைத்தது என்னவோ கணவனின் இறப்பு செய்தி தான்.


ஏனோ அதை கேட்டும் கூட அவனுக்காக சிறு துடிப்பு கூட அவளிடம் ஏற்படவில்லை. அவன் தான் வெறுமென செல்லவில்லையே அவள் நேசத்தை கொன்று விட்டு அல்லவா சென்றிருந்தான். கிட்டத்தட்ட ஐந்து வருட காதல் கோட்டை நொடியில் அவள் கண் முன்னே சரிந்து விழுந்தது.


•••••••••••••


வண்டியின் ஹாரன் சத்தத்தில் உயிர்ப்பு பெற்றவளுக்கு இன்னும் நெஞ்சம் ஆறவில்லை. மீண்டும் சுய அலசலில் தான் ஈடுபட்டு இருந்தது அவளின் மனம். என்னை கண்டு எப்படி அவனால் அந்த வார்த்தையை சொல்ல முடிந்தது அதுவும் அவன் தம்பியோடு சேர்த்து.


அண்ணி என்பவள் அன்னைக்கு சமமானவள் அல்லவா. அவை எல்லாம் அவனுக்கு தெரியாதா... ச்சே இப்படி பட்டவனை போய் காதலித்த தன்னையே வெறுத்து போனாள்…


பல யோசனைகள் மனதை அழுத்தி கொண்டிருக்க, “ம்மா நான் போய் விளையாடட்டுமா" என்று கேட்ட மகனின் பேச்சு சத்தத்திலே வீடு வந்ததை உணர்ந்தவள் காரில் இருந்து தன் மகனோடு இறங்க, யுவனும் விளையாடும் சிறுவர்களை கண்டு விளையாட சென்றுவிட்டான். அவளின் பெற்றோரும் எதுவும் சொல்லாது உள் நுழைந்துவிட

பாரதியும் தன் அறைக்குள் சென்று முடங்கி கொண்டாள்.


ஏனோ மனமெல்லாம் ஓர் வலி!! அவன் மீது தவறை சுமந்து கொண்டு என்னை குற்றம் சொல்கிறானே… அதை நினைக்கையிலே இவன் மட்டுமா இவ்வாறு உள்ளான்… இவனை போன்று பல பேர் மனைவிகளிடம் நல்லவனாக வேடம் தானே போடுகிறார்கள் என்ன இவன் அகப்பட்டு கொண்டான்... அவர்கள் அகப்படவில்லை… இப்படி பட்ட மனிதர்கள் இருக்கும் இந்த சமூதாயத்தை நினைத்து அவளால் வேதனை கொள்ள தான் முடிந்தது!


தவறு இளைத்தவன் ஆணாகவே இருந்தாலும் அவன் பழி சுமத்துவது பெண் மீது தானே! காலங்கள் மாறினும் மாற்றங்கள் நிகழாதோ?


•••••••••••••


தோட்டத்து வீட்டில் இருந்து வீட்டை நோக்கி நடைப் போட்டனர் மாமனும் மருமகனும். இவர்கள் வரவுக்காகவே காத்திருந்தது போல் சுருங்கிய கண்ணத்தோடு, கண்களில் பரிதவிப்போடும் இவர்களை நோக்கி அடியெடுத்து வைத்தார் நம் இளமாறனின் தாயும், ராசமணியின் அக்காவும் ஆகிய பேச்சுகனி.


“ஏலே மாறா நேத்து பொழுது போன பிறகு தான் வூட்டுக்கே வந்த இதுல இருட்டுன பிறகு எங்கலே போய் தொலைஞ்ச… ஆமா மருமக புள்ளை எப்போ வீட்டுக்கு வராலாம்… எதாச்சும் விசேஷம் இருக்காடா… கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகப்போகுது, ஒரு புழு பூச்சியை கூட காணோம்” என்று ஆங்கலய்த்தவரை கண்டு இறுகி போய் நின்றான் இளமாறன்.


“ஏன்டா நான் இவ்ளோ கேட்குறேன் வாயை தொறக்குறானா பாரு… டேய் ராசு நீ சொல்லு டா… மருமக புள்ள எப்போ வரா… உனக்கு எதுனா விவரம் தெரியுமா இல்லைனா போனை போடு நான் பேசிக்கிறேன்” என்றிட, அதற்கு மேல் கோபத்தை அடக்க இயலாது அங்கிருந்த பானையை தூக்கி உடைத்தான் மாறன்.


“இப்போ எதுக்கு சும்மா நொய் நொய்யுனு என் உசுரை வாங்கிட்டு இருக்க… உன் மருமக எங்கனு தானே கேட்ட, அவளுக்கும் எனக்கும் எல்லாம் முடிஞ்சு போச்சு… என்ன அப்படியே திகைச்சு போய் இருக்க, இரண்டு பேருக்கும் விவாகரத்து ஆகிடுச்சு... இனி நான் இங்கன தான் இருக்க போறேன்… போதுமா இல்லை வேற எதாச்சும் தெரியனுமா” என்றவன் விறுவிறுவென்று வெளியே சென்று விட, திகைத்து போய் நின்றிருந்த அக்காவை பாவமாக பார்த்தான் ராசமணி.


வெளியில் வந்தவனுக்கோ நெஞ்சம் எல்லாம் அவள் நினைவே. விழி மூடினாலும் அவன் மனையாள் தேவிப்பிரியாவின் முகம். அவனையும் மீறி அவன் வாழ்க்கை நிகழ்வுகள் கண்முன்னே காட்சி படமாக விரிந்தது.


நினையாதே மனமே என்றாலும் நினைவெல்லாம் அவள் தானே!

இது நேசமா என்றால் அல்லவே! அவள் மேல் கொண்ட கோபம்! அவள் மேல் கொண்ட வெறுப்பு! வாழ்வை வாழ்ந்தும் வாழாமல் திணறிக் கொண்டிருக்கிறான் அவன்!


தொடரும்…
 
ஹாய் டியர்ஸ்,

நேசம் திறவாயோ - (02) பதிவு செய்துவிட்டேன். உங்கள் கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க டியர்ஸ்... அடுத்த யூடி மாறன் பிளாஷ்பேக் வந்திடும். பிளாஷ்பேக் ரொம்ப இழுக்காது.

நன்றி
சரண்யாகீதா

Touch below 👇

Thread 'நேசம் திறவாயோ❤️ - கருத்து திரி'

https://pmtamilnovels.com/index.php?threads/நேசம்-திறவாயோ❤️-கருத்து-திரி.814/
 
Last edited:

நேசம் -03


எங்கும் அவள்! எதிலும் அவள்! விழி மூடியும் அவள் பிம்பமே! விழி திறப்பினும் அவள் பிம்பமே! இது அவள் மேல் கொண்ட நேசமல்ல.. அவள் மீது கொண்ட உணர்வு! அவள் மீது கொண்ட கோபம்… அவள் மீது கொண்ட அற்றாமை... நினைக்க விரும்பவில்லை என்றாலும் கண்முன்னே காட்சி படமாக விரிந்தது அவன் வாழ்ந்தும் வாழாத வாழ்க்கை.


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள ஓர் கிராமம் தான் அத்தியூர். அதாவது கும்பகோணத்தில் இருந்து சிறு தொலைவில் இருக்கும் உத்தமதாணி கிராமத்திற்கு அருகில் இருக்கும் கிராமம். இந்த கிராமத்து மக்களின் வருவாயே விவசாயம் சார்ந்து தான் உள்ளது. அதிலும் நெல், கோதுமை. வாழை, கரும்பு என் பல விதமாக பயிர்கள் பயிரிடப்படுகிறது. இத்தைகைய கிரமத்தில் பிறந்தவன் தான் இளமாறன்.


இந்த கிராமத்தில் பெரிய தலைக்கட்டு குடும்பம் தான் வீரய்யன் - ஜெயலட்சுமி தம்பதியர்கள். இவர்களின் முதல் குமரன் தான் சுயம்புலிங்கம். அடுத்து இளையவள் பேச்சுகனி. மாறனின் அன்னை. அதன் பின் பல வருடங்கள் இடைவெளியில் பிறந்தவர் தான் ராசமணி.. வீட்டின் கடைக்குட்டி.


திருமணத்திற்கு பின் ஒரு விபத்தில் பெற்றவர்களோடு கணவனையும் சேர்ந்து இழக்க பதினைந்து வயது மகனோடு தனித்து நின்றார் பேச்சுகனி. இருப்பினும் அண்ணனின் வீட்டில் கையேந்தவில்லை அந்த கிராமத்து பெண்மணி. தனது கணவனுக்கு சொந்தமான தோட்டம் துறவுகளே ஏக்கர் கணக்கில் இருக்க அதை வைத்தே தங்களின் வாழ்க்கையை நடத்திக் கொண்டனர்.


ஆனால் அண்ணன் மீது கொல்லை பாசம். அதுவும் தம்பி ராசு மீது உயிரையே வைத்திருந்தார். கணவன் இன்றி தனித்து வாழ்ந்தவரோடே அக்காவிற்கு பாதுக்காப்பாக தங்கிக் கொண்டான், ராசமணி. அப்போது அவருக்கு இருபத்தி இரண்டு வயது.


அதனால் தான் என்னவோ. தன்னை விட ஏழு வயது பெரியவராக இருப்பினும் அவரை தந்தை ஸ்தானத்தில் வைத்துள்ளான் மாறன். ராசுவும் அதற்கு ஏற்ற மாதிரி தோழனாகவும் கண்டிக்க வேண்டிய இடத்தில் தகப்பனாகவும் மாறி விடுவார்.


தேவிப்பிரியா, தரகர் மூலம் பெரிய மாமன் சுயம்புலிங்கம் கொண்டு வந்த வரன். ஒரு வகையில் தூரத்து சொந்தம் என்பதால் பேச்சுகனிக்கும் பிடித்துவிட்டது. மாறனிடம் புகைப்படத்தை காட்ட பார்த்ததுமே, பெண் பிடித்துவிட்டது என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் அவளின் அமைதியான முகம் அவனை ஈர்த்தது என்பதே உண்மை. மறுப்பு சொல்ல எதுவும் இல்லாததால் அவனும் சம்மதித்து விட்டான்.


அதன் பின் துரிதமாக திருமண பேச்செல்லாம் முடிந்து விட, திருமணம் நாளை எனும் போது அதற்கு முந்தின நாள் நிச்சியதார்த்தம் வைத்திருந்தனர். நலங்கு எல்லாம் முடிந்து விட அப்போது தான் வாயை திறந்தார் மணமகளின் அன்னை பொன்னம்மா.


“ஏன் சம்மந்தி உங்க அண்ணன் வூடு தான் நல்லா தாராளமா இருக்கே.. பொறவு எதுக்கு இந்த மாதிரி வூட்டுல இருக்கிங்க” என்று பழைய காலத்து மச்சு வீடு போன்று தோற்றம் கொண்ட வீட்டை சுற்றி பார்த்தபடியே கேட்க, அவர் அருகிலே அமர்ந்திருந்த பிரியாவும் தாய் சொல்வதை கேட்டபடி அமைதியாக அமர்ந்து இருந்தாள்.


திருமண வேலையில் கவனமாக இருந்த பேச்சுகனி அவர் பேச்சின் சாராம்சம் புரியாது. "அதுதான் சம்மந்தி நீங்களே சொல்லியாச்சு, அது அண்ணா வூடுனு. பொறவு எதுக்கு அங்க போய் தங்கிட்டு, இதோ இங்கிருந்து இரண்டு எட்டு எடுத்து வைச்சா, வூடு வரப்போகுது. பொறவு என்ன”, என்றபடி மற்ற வேலைகளை கவனிக்க சென்றுவிட்டார்.


ஏனோ அந்த பேச்சுகளை கேட்ட ராசுவுக்கோ, இந்த திருமணம் சரியாக வருமா என்றபடியே சிந்தித்துக் கொண்டிருந்தார்.


“மாமா என்னாச்சு... ஏதோ சிந்தனையில் மிதக்குறாப்புல இருக்கு" என்று கேட்ட மாறனை பார்த்தவர்,


"ஏன் மருமவனே கண்ணால பொண்ணு பார்த்தா அவ்ளோ சூதானமா இருக்கிறாப்புல தெரியலையே.. ஆத்தா பேச்சை கேட்டு மண்டை மண்டை ஆட்டிட்டு இருக்கிற மாதிரி தெரியுது... இது சரியா வருமா" என்றிட,


"இதுல என்ன மாமா இருக்கு. என்னை மாதிரி அப்பா இல்லாமல் வளர்ந்த புள்ள மாமா அது... அதுனால் ஆத்தா மேல பாசம் வைச்சு இருக்கும்... அவ்ளோ தான்" என்று இலுகுவாக சொல்லியவனின் முகம் கல்யாண களையில் ஜொலித்துக் கொண்டிருக்க அதற்கு மேல் எதுவும் சொல்லாது ராசுவும் அமைதியாகி விட்டார்.


அடுத்த நாள் பிரம்ம முகூர்த்தில் நல்லபடியாக திருமணம் முடிந்து இதோ தம்பதியர் சகிதமாய் மணமகன் இல்லம் வந்தாயிற்று. நேற்றைய இரவு திருமணத்தை நினைத்து ஒரு சுகமான நினைவிலேயே மிதந்து கொண்டிருக்க, அதன் விளைவு தற்போது கண் சொக்கியது இளமாறனுக்கு இருந்தும் விழிகள் அவன் மனையாளை தான் தேடியது.


இவள் தான் தன் மனைவி என்று உறுதியான பின் அவள் மீது ஒரு பிடித்தம். அந்த பிடித்தமே ஏதோ ஓர் உணர்வாக மாற, அந்த பெயர் தெரியா உணர்வோடே அவளை பார்வையால் ரசித்து கொண்டு இருந்தான் இளமாறன்.


இவன் நேசம் வைத்தால் போதுமா அவளும் அல்லவா நேசம் வைக்க வேண்டும். நெடு நெடுவென கறுமை நிறத்தில், இருந்தவனை கண்டவளுக்கு துளியும் அவன் மீது நேசம் வரவில்லை... ஏன் பாசம் கூட வரவில்லை. கருமை கண்ணணாக இருந்தாலும் அவனின் மாய சிரிப்பு அனைவரையும் ரசிக்க தூண்டுவதாக தான் இருக்கும். ஆனாலும் அவன் மனைவியை ஈர்க்க வில்லை போலும்!!


ஆம் அவனின் தோற்றமே அவளுக்கு ஒரு பிடித்தமின்மையை கொடுத்தது. எப்போதும் அன்னையின் பேச்சை மறுக்காதவள் இதற்கும் தன் மறுப்பை தெரிவிக்கவில்லை. தலையாட்டி பொம்மையாக அவனை மணந்து கொண்டு இதோ அவனின் மனைவியாக வலம் வந்து கொண்டு இருந்தாள்.


பதற்றத்தோட வந்த ராசுவோ, "மாறா. ஏதோ களத்து மேட்டுல பிரச்சனை போல... நான் போய் ஓரெட்டு பார்த்திட்டு வந்திடுறேன்" என்று பேசியபடி கிளம்ப, “இரு மாமா. அவனுங்களை பேசி சமாளிக்க கஷ்டம் நானும் வரேன்" என்று அன்னை மறுக்க மறுக்க அவரோடு சென்றுவிட்டவன். வெகு நேரம் ஆகியும் வராது இருந்தவன் வந்தது என்னவோ நேரம் தாழ்ந்து தான்.


அவனை கண்ட பேச்சுகனி தான், “எய்யா மாறா... இன்னைக்கு சடங்கு வைச்சிருந்தா, நீ என்ன இம்புட்டு நேரம் கழிச்சு வந்திருக்க... மருமக, புள்ள எம்புட்டு நேரமா தான் காத்துக்கிட்டு கிடக்கும்” என்று அதட்டிட, கண்களோ அலைபாய்ந்தது மனைவி முகத்தை பார்க்க, அவளும் இவனை தான் பார்த்து கொண்டு இருந்தாள். அவளின் சுருங்கிய முகத்தை கண்டு வருந்தியவன்,


"கொஞ்ச கூலி கொடுக்கிறதுல கணக்கு பிரச்சினை ஆகிடுச்சு… அது சரி செஞ்சிட்டு வர இம்புட்டு நேரம் ஆகிடுச்சு மா…" என்று மனைவி மீது பார்வை பதித்தவாரே கூறிக் கொண்டு இருக்க… அமைதியாக இருக்காது வாயை திறந்தார் பிரியாவின் அன்னை பொன்னம்மா.


"ஏன் மாப்பிள்ளை… ஏதோ பெரிய படிப்பு படிச்சுபுட்டு சென்னை பட்டணத்துல, பெரிய உத்யோகத்துல இருக்கிறதா சொன்னாங்க. ஆனா நீங்க சேத்துல எல்லாம் வேலை செஞ்சிட்டு வந்திருக்கிங்க" என்று முகம் சுளிக்க, மாறனுக்கோ கோபம் பொங்கியது. இருந்தும் சூழ்நிலை கருதி அமைதியானவன்,


"ஏன் அத்தையாரே அதில் என்ன தப்பு இருக்கு. நம்ம வயல் நாம தானே வேலை பார்க்கனும், எங்களை மாதிரி இருக்கிறவங்க சேத்துல கால் வைக்கலனா நீங்க சோத்துல கை வைக்க முடியுமா" என்று புன்னகை முகத்தோடு கேட்க, பொன்னம்மாள் முகம் விழுந்துவிட்டது. பிரியாவோ தனக்கு தாலி கட்டிய கணவனை தான் வித்தியாசமாக பார்த்து கொண்டு இருந்தாள்.


முகமெல்லாம் வேர்வை சொட்டி, சட்டை கொஞ்சம் கசங்கியபடி மாறியிருக்க, வெள்ளை வேட்டியிலும் கொஞ்சம் சேறு படிந்து கரையாக மாறியிருந்தது. அவனை காண காண உள்ளுக்குள் ஆற்றமை தான் பெறுகியது. மாறனோ தான் கால தாமதமாக வந்ததால் தான் அவளின் முகம் இவ்வாறு உள்ளது என நினைத்தபடி அறைக்குள் நுழைந்து கொண்டான். சடங்கும் தள்ளி வைக்கப்பட, அதில் கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந்தாள் தேவிப்பிரியா.


சடங்கு இல்லை என்றாகி விட, அதற்கு பிறகென்ன தனி தனி அறை தான். இதில் தாமதமாக வந்த தன்னையே நொந்து கொண்டவன், தேவியின் தரிசனத்திற்கு காத்திருக்க ஆரம்பித்தான் மாறன். ஆனால் அடுத்த நாள் விடியல் அவ்வளவு நன்றாக இருக்காது என்று அறியாது மெத்தையில் புரண்டபடியே உறங்கி போனான்.


காலை வேளை… அசதியில் உறங்கி கொண்டு இருந்தவனை எழுப்பினாள் தேவிப்பிரியா. மனைவியை கண்டு புன்னகை புரிந்திட அவள் இதழ்களும் புன்னகையில் விரிந்தது. தான் புன்னகை செய்தால் மற்றவரையும் புன்னகை செய்ய தூண்டும் விதமான புன்னகை தான் மாறனின் புன்னகை. அதன் பிரதிபலிப்பே அவளிடம் தோன்றிய புன்னகை!!


தன்னை சுத்தபடுத்தி கொண்டு வந்தவன் உணவு சாப்பிட அமர, அவனின் பார்வையோ மனைவி மீதே படிந்திருந்தது. மகனின் புன்னகை இதழும்… மலர்ந்த முகமும் பேச்சுகனி முகத்திலும் சந்தோஷத்தை கொடுத்தது. அவை எல்லாம் இன்னும் சிறிது நேரத்தில் மறைய போகிறது என்று அறியாது கேசரி செய்ய ஆரம்பித்தார் பேச்சுகனி.


நெடுநரேம் தூங்கி எழுந்த பின்பே வெளியே வந்தார் பொன்னம்மா. மாறன் சாப்பிடுவதை கண்டவரோ, அவன் எதிரில் அமர்ந்தபடி, "மாப்பிளை எப்போ சென்னை பட்டணத்துக்கு போக போறோம்” என்று ஆவலுடன் கேட்க, உணவை எடுத்த கரமோ அப்படியே அந்தரத்தில் நின்றது.


“என்ன அத்தையாரே நான் எப்போ சொன்னேன், சென்னைக்கு போறேனு. இனி இங்கன தான் நம்ம சோலி, நம்மளுடையதே கடை, தோப்பு துறவு எல்லாம் இருக்கும் போது அங்கன என்ன வேலை… அதுதான் அங்கே இறக்குற வேலையை விட்டுவிட்டு வந்திரலாம்னு இருக்கேன்” என்றிட அவனின் பேச்சில் இவர் தான் சிலையாக உறைந்து போனார்.


"என்ன மாப்பிள்ளை விளையாடுறிகளா… நீங்க சென்னை பட்டணுத்துல வேலை பார்க்கிறதால தான் உங்களுக்கு என் பொண்ணை கொடுத்தேன். இங்கன எல்லாம் சரிப்பட்டு வராது. அதுவும் கண்ணாலம் ஆகாத உங்க மாமன் இங்க இருக்கும் போது என் பொன்னு எப்படி இந்த வூட்டுல தங்குவா” என்று அங்கலாய்க்க, அடுத்த நொடி "கொஞ்சம் வாயை மூடுறீங்களா" என்று அவனின் கர்ஜனை சத்தத்தில் அனைவரும் கூடிவிட்டனர்.


"அடி ஆத்தி இப்போ எதுக்கு இப்படி கத்துறீக. இல்லாததையா நான் சொல்லிட்டேன். ஏன் மாப்பிள்ளை உங்க மாமனுக்கு கண்ணலாம் ஏற்பாடு செய்து அது நின்னு போயிடுச்சாமே… அதுனால் தான் இன்னும் கண்ணாலம் பண்ணாம ஒத்தையா இருக்காரா” என்றும் வேறு சந்தேகம் கேட்டு வைக்க, கோபத்தில் கண்கள் சிவந்து விட்டாது மாறனுக்கு


அதை கண்டதும் பேச்சை மாற்ற விரும்பியவராக, “என்ன மாப்பிள்ளை இப்போ எதுக்கு இந்த கோபம்... ஏற்கனவே உங்க ஆத்தா கிட்ட இதை பற்றி பேசிட்டேனே” என்று நொடித்துக் கொள்ள, இப்போது அவனின் பார்வை கூர்மையாய் படிந்தது அன்னையின் மீது.


“ம்மா இங்கன என்ன தான் நடக்குது. உன்கிட்ட நான் முன்னமே சொல்லி இருக்கேன் தான். நான் படிச்ச எம்.பி.ஏ படிப்பு நம்ம கடை எல்லாம் கவனிச்சுக்க தான். கண்ணாலம் முடிய, வேலை செஞ்சிட்டு பொறவு நம்ம கிராமத்துக்கு வந்து இங்கேயே வேலை பார்க்கிறது தான் என் ஆசைனு உனக்கு தெரியாதா" என்று கோபமாக கேட்டவனை கண்டு அவருக்கும் பதற்றம் தொற்றிக் கொள்ள,


"இல்ல ராசா. பொன்னு போட்டோ பார்த்ததும் ரொம்ப ஆர்வமா பார்த்தியா... அது தான் கண்ணாலம் முடிஞ்சதும் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன். அதுவும் இல்லாமல் சம்மந்தி அம்மாவும் மக கூட இருக்க ஆசைபட்டாக அதுதான் சென்னை பட்டணுத்துல நீ வேலை பார்த்தா, வசதியா இருக்கும்னு விட்டுட்டேன் ராசா” என்று கையை பிசைந்தபடி சொல்ல... மாறனால் எதவும் பேச இயலவில்லை. அப்படியே சோர்ந்து போய் அமர்ந்து விட்டான்.


அமர்ந்தபடியே மனையாள் முகம் பார்க்க, அவளோ எதுவும் பேசாது அவள் அன்னை பின் இருக்க, எரிச்சலாக தோன்றியது. எந்த அமைதி அவன் பிடித்தது என்று நினைத்தானோ அதுவே இன்று அவனுக்கு பிடிக்காது போக…


அதன் பின் எதுவும் பேசாது கண்ணை இறுக மூடிக் கொண்டவன், “இங்கிருந்தால் இவர் எதாவது திரும்ப திரும்ப பிரச்சினை செய்வாரோ” என்று பொன்னம்மாள் பற்றி சிந்தனையில் இருந்தான்.


அதுவும் அன்றி தன் மாமனை பற்றி திரும்பவும் பேசினால் தன்னால் கட்டுபடுத்த முடியுமா என்று நினைத்து கொண்டவனுக்கு ஒரே ஆறுதல் தன் மாமன் இங்கு இல்லை இவர் பேசியதை கேட்க நேரவில்லை என்பது தான்.


நெடு நேரம் யோசித்தவன் பின் ஒரு முடிவு எடுத்தவனாக, அடுத்த இரண்டு நாளிலே தன் மனையாள் மற்றும் அவள் அன்னையோடு சென்னை கிளம்பினான். இனி எல்லாம் நன்றாக நடக்கும் என நினைத்து!‌ ஆனால் அதன் பின் நடந்த நிகழ்வுகள் அவன் சுயத்தை இழக்க செய்தது என்று சொன்னால் மிகையாகாது!


துளி துளியாய் விழுந்த மழை தூரலில் நினைவு கலைந்தவன்… வாழ்க்கையின் கசந்த பக்கங்களை நினைக்க விரும்பாது தளர்ந்த நடையோடு வீட்டை நோக்கி சென்றான் இளமாறன். இப்போது அவன் மனதில் மனைவியை நினைத்து வலி இருப்பினும், ஏதோ புதைக்குழியில் இருந்து மீண்டுக் கொண்டதாகவே நினைக்க தோன்றியது.


••••••••••


அத்தியூர்!


பாரதி வீடு!!


“பாரதி மா… அப்பா உனக்கிட்ட ஒரு விஷயம் கேட்கனும் மறைக்காமல் சொல்லனும்" என்று கேட்ட தந்தை சிவசாமியை பார்த்தவளுக்கு, அவர் என்ன கேட்க வருகிறார் என்று புரிந்து போனது.


"கேளுங்க ப்பா சொல்றேன்” என்றிட, "ஏன் கண்ணு மாப்பிள்ளை கூட கோச்சிக்கிட்டு தான் இங்கன வந்துட்டியா... என்ன பிரச்சினை டா" என்று கேட்க,


"ஆமா ப்பா சண்டை போட்டு தான் வந்தேன். ஆனா அந்த பிரச்சினை சொல்ல எனக்கு விருப்பம் இல்லை" என்றிட, அதை கேட்டதும் விறு விறு வென்று வந்து தன் மகளை அடித்தார் ஜோதி.


"ஏன்டி கழுதை என்ன பிரச்சினை இருந்தாலும் புகுந்த வீட்டுலே இருந்து பிரச்சனையை தீர்க்கனும்னு தெரியாதாடி. நான் உங்க அப்பாரு கூட எவ்ளோ சண்டை போட்டு இருப்பேன்.. ஆனா நானா இந்த வீட்டு படியை தாண்டி இருப்பேனா. ஆனா நீ என்ன செஞ்சு தொலைச்சு இருக்க... உன்னை இங்க பார்க்க வந்து அவருக்கு விபத்து ஆகிப்போச்சு. இனி உன் வாழ்க்கை என்னடி ஆகும்” என்று சொல்லியபடியே அடித்தார்.


அவர் அடிகளை எல்லாம் வாங்கி கொண்டவளோ அமைதியாக நிற்க, "ஏன்டி எதாச்சும் சொல்லி தொலையேன்... இப்படி கல்லு மாதிரி நிக்கற” என்று மீண்டும் இரண்டு அடி போட்டார்… அவரின் பேச்சை கேட்டபடி இருந்தவளோ,


“அந்த வீட்டுல இருந்து சண்டை போட அவன் என் அப்பா மாதிரி இல்லையே மா” என்றவள் வார்த்தையில் ஆயிரம் அர்த்தம் பொதிந்து இருக்க இறுகி போய் நின்றாள் பாரதி.


இரவு என்று ஒன்று வந்தால் தானே. பகல் என்று ஒன்று வரும். அ
துப் போன்று தான் துன்பம் என்று ஒன்று வந்தால் தானே... இன்பத்தை சுவைக்க முடியும். இன்பமும் துன்பமும் கலந்து வருவது தான் வாழ்க்கையின் நியதி!


தொடரும்…
 
ஹாய் டியர்ஸ்,

நேசம் திறவாயோ - (03) பதிவு செய்து விட்டேன். படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க டியர்ஸ்...

நன்றி!
சரண்யாகீதா

 
நேசம் - (04)




தன் மகள் உதிர்த்த வார்த்தைகளை கேட்ட பின்னர் ஜோதியால் அவளை அடிக்க இயலவில்லை. ஏனோ அவள் கூறிய, "அந்த வீட்டுல இருந்தே சண்டை போட அவன் என் அப்பா மாதிரி இல்லையே மா” என்ற வார்த்தைகள் அவருக்கு பல கற்பனைகள் உருவாக்கிட, பதறியபடியே "என்னடி சொல்ற புரியுர மாதிரி சொல்லு" என்று படபடப்புடன் பேசியவரை கண்டவள், "ப்ச்… அதெல்லாம் ஒன்னும் இல்லை விடுமா…" என்று ஏதேதோ சமாளித்தாள் பாரதி.


ஏனோ அவளுக்கு இதை பெற்றவர்களிடம் சொல்ல தோன்றவில்லை. அவனின் மீது வைத்திருந்த மரியாதை காற்றில் பறந்துவிடும் என்பதற்காக அல்ல.. அதை சொன்னால் அவர்களின் நெஞ்சம் இதனை தாங்வே இயலாது என்பதால் தான் தன்னுடைய கஷ்டம் தன்னோடே போகட்டும் என்று நினைத்து கொண்டாள்.


இன்னும் முகம் தெளியாத தாயை பார்த்தவள், 'ம்மா அதெல்லாம் ஒன்னும் இல்லை. நீ கவலைப்படாத… ஆமா அண்ணா அண்ணி இன்னும் கிளம்பலையா” என்றிட, அதை கேட்டதும் நொடித்துக் கொண்டவர்.


“இப்போ தான் உங்க அண்ணங்காரன் போன் பண்ணான்... கிளம்பிட்டாங்களாம்… இருந்தாலும் இந்த பாலன் இப்படி மாறி போக கூடாதுடி. தங்கச்சி புருஷன் இறந்து போயிட்டானே... கூட இருக்கலாம்னு ஒரு அக்கரை இருக்கா. மாமியார் வீட்டுல போய் பொண்டாட்டியோடு உட்கார்ந்து கிட்டான். இதுல அவன் பையனை பார்த்துக்க அஞ்சலியை வேற கூட்டிட்டு போயிட்டான்" என்று புலம்பிய படியே சமைக்க சென்றுவிட்டார்.


அவர் பேசியதை கேட்டும் எதுவும் பேசாது தன் மகன் யுவனை தந்தையிடம் விட்டவள், அம்மாவிற்கு உதவி செய்ய சமையல் அறைக்கு சென்றாள் பாரதி. தன் மகளின் வாழ்வு இப்படி முடிந்து விட்டதே என்ற மனச்சோர்வில் சாய்ந்து உட்காரும் நாற்காலியில் அமர்ந்தபடி தன் பேரன் யுவகாரத்திக் விளையாடுவதை பார்த்து கொண்டு இருந்தார் சிவசாமி.


சிவசாமி சாதாரண லாரி டிரைவர். அவரின் மனைவி ஜோதி இல்லத்தரசி. இவர்களின் குடும்பம் நடுத்திர வர்கத்தை சேர்ந்தது தான். முன்பு போல் இப்போது சரியாக பார்வை தெரிய இயலாததால் வீட்டில் தான் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறார். அதன் விளைவு குடும்ப சுமை அனைத்தும் விழுந்தது என்னவோ மூத்தவன் பாலகுமரன் மீது தான்.


நடுப்பிள்ளை பாரதிக்கு தான் அவளின் விருப்பப்படி அமுதனோடு திருமணம் செய்துவிட இப்போது கணவன் இழந்து தனித்து நிற்கிறாள். வீட்டின் கடைக்குட்டி அஞ்சலி பாரதியை விட இரண்டு வயது சிறியவள்… திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டு இருக்கின்றனர் இன்னும் எதுவும் தகைந்து வரவில்லை.


மதிய உணவை சமைத்து தாயும் மகளும் வெளிவர, சரியாக காரில் வந்து இறங்கினான் பாலகுமரன். அவனின் மனைவி சுஜாதா. மகன் முகிலன். முகிலனை பார்த்து கொள்வதற்காக அவர்களோடு சென்ற அஞ்சலியும்.


முந்தானையை விசிறியவாரே உள்ளே நுழைந்த சுஜாதா கூடத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தபடி, "அத்தை ஒரு கப்பு காபி தரிங்களா.. ரொம்ப டையர்டா இருக்கு" என்றிட, அன்னையை தடுத்த பாரதி தானே காபி போட்டு எடுத்து வந்து அவரிடம் தர அவளை பார்த்தபடியே காபியை குடித்தவள்,


“என்ன பாரதி இப்படி ஆகிப்போச்சு, நாங்களும் வர முயற்சி செஞ்சோம். ஆனா அங்க அம்மாவுக்கு வேற உடம்பு சரியில்லையா அதுதான் வர முடியல” என்று பரிதாபமாக பேசியபடி அறைக்குள் நுழைந்ததுக் கொண்டாள் சுஜாதா


அண்ணன் பாலகுமரனோ, "ஏன் பாரதி அப்படி என்ன அவசரம்னு உன் புருஷனை விட்டு இங்க வந்து இருந்த. இப்போ பாரு உன்னை பார்க்க வந்தே அவருக்கு ஆக்சிடன்ட் ஆகிப்போச்சு” என்று அதட்டிட, அவளுக்கோ கண்களில் நீர்

நிறைந்து விட்டது.


அதை கண்ட அஞ்சலியோ “ஏன் அண்ணா அக்கரையா பேசலானா கூட பரவாயில்ல... இப்போ எதுக்கு குத்தி காட்டுற மாதிரி பேசுற” என்றவளை முறைத்தவன், அறைக்குள் நுழைந்து கொள்ள, ‘அப்படியே பொஞ்சாதி போன பின்னாடியே போயிடனும்’ என்று முனுமுனுத்துக் கொண்டாள் அஞ்சலி.


பின் அக்காவின் புறம் திரும்பியவள், "அக்கா நீ எதுவும் கண்டுக்காத. ஆனாலும் எப்படி சுயநலமா இந்த அண்ணன் மாறி போனங்கனு தெரியல அக்கா. எல்லாம் இந்த அண்ணி செய்யுற வேலை, அண்ணியோட அம்மா அதுதான் அந்த தாய்கிழவி குத்துக்கல்லாட்டும் நல்லா தான் இருக்கு. இதுல அவங்கவங்களுக்கு உடம்பு சரியில்லனு போய் அங்கே டேராவா போட்டுட்டு... என்னையும் சேர்த்து கூட்டிட்டு போயிட்டு.. என்னை இதை செய்… அதை செய்னு உயிரை வாங்கிறது. அம்மாக்காக தான் வாயை மூடிட்டு இருக்கேன்" என்று பெறிந்துவிட்டு சென்று விட்டாள் அஞ்சலி.


தன் சின்ன மகள் பேசுவதை கேட்ட ஜோதியோ "ஏன் பாரதி… இந்த சின்ன கழுதை சொல்றதும் சரியா தான் இருக்கு. எதாவது ஒரு பிரச்சினை வந்தா போதும் உங்க அண்ணனை கூட்டிட்டு பொறந்த வூட்டுக்கு போயிடுற உங்க அண்ணி. என்ன தான் காரணம் சொல்லட்டும் நீ புருஷனை இழந்து தனியா தவிக்கும் போது கூட நிக்கல பார்த்தியா மனசு தாங்கவே இல்லடி” என்று புலம்பியபடியே தாயும் சென்றுவிட்டார்.


ஏனோ இதையெல்லாம் பார்க்க மனம் வெறுத்து போனது போல் இருந்தது. எந்த வித கவலையும் இல்லாது தன் தந்தையோடு சிரித்து பேசிக் கொண்டு இருக்கும் யுவனை பார்த்தபடியே நின்று இருந்தாள் பாரதி. ஏனோ அவனாவது மகிழ்வாக இருக்கிறானே என்று நிம்மதி அடைந்தது அந்த தாயுள்ளம். ஆனால் அவள் அறிந்திட வில்லையே. இன்னும் அவள் சந்திக்க வேண்டியவை எவ்வளவோ இருக்கிறது என்று.


செதுக்க செதுக்க தான் கல்லும் சிற்பமாகும். பிரச்சினையை கடக்க கடக்க தான் வாழ்க்கை அனுபவமும் அறிந்திட இயலும்!!


••••••••••••••



மழை பொழிந்து, ஆங்காங்கு குட்டை போன்று நீர் தேங்கிக் கொண்டிருக்க, தன்னை மறைத்திருந்த மேகத்திடம் இருந்து மெது மெதுவாக வெளி வந்துக் கொண்டு இருந்தான் கதிரவன். அந்த மாலை பொழுதினில், நீண்ட நேரம் தோட்டத்து வீட்டிலே இருந்துவிட்டு தற்போது தான் வீட்டை நோக்கி நடை போட்டு கொண்டு இருந்தான் இளமாறன்.


தெரு முனையை அடையும் போதே, தன் வீட்டில் இருந்து வரும் சத்தம் செவியை கிழிக்க, இல்லத்திற்கு யார் வந்திருப்பார்கள் என்பதை அறிந்தபடி வீட்டினுள் நுழைய, அவனின் மூத்த மாமன் சுயம்புலிங்கத்தின் கட்டை குரல் அவனை வரவேற்றது.


“இந்தா பேச்சுகனி நீ கொஞ்சம் மூக்கை சிந்தாம இரு… அவன் வரட்டும் என்னனு கேட்குறேன்… கல்யாணம் என்ன பொம்மை விளையாட்டுனு நினைச்சிட்டானா… அவன் இஷ்டத்துக்கும் அறுத்துவுட்டு வர… அதுவும் வூட்டுல ஒரு வார்த்தை கேட்கனும்னு தோனுச்சா… வேலைக்கு போறாரு இல்லை. அது தான் பெரிய மனுஷன் ஆகிட்டாரு போல. வரட்டும் இன்னைக்கு” என்று மீசையை திருகியபடி, பேசிக் கொண்டு இருந்தார். அதை கேட்டு இன்னும் அழுகையை கூட்டியபடி பேச்சுகனி இருக்க, ராசுவோ எதுவும் பேசாது முகம் இறுகியபடி நின்று இருந்தார்.


வீட்டின கூடத்தில் நுழைந்தவன் தன் மாமனை கண்டு, “சௌகியமா பெரிய மாமா" என்றபடி கேட்டவனை உறுத்து விழித்தவர், மழையில் நினைந்து வந்து இருந்தவனை பார்த்து "உள்ள போய் உடுப்பு மாத்திட்டு வா கண்ணு.." என்றிட தலையை ஆட்டியபடி உடையை மாற்றி விட்டு வர, அவனுக்கு பாலில் மஞ்சள் போட்டு எடுத்து வந்து அவனிடம் நீட்டினார் பேச்சுகனி.


அவன் குடிக்கும் வரை பொறுமை காத்தவர், “என்ன தம்பி. ரொம்ப பெரிய வேலை எல்லாம் செஞ்சிட்டு வந்திருக்கிங்க போல” என்றவருக்கு எந்தவொரு பதிலும் சொல்லாது இருக்க…


"மாறா மாமா கேட்குறாக இல்லை பதிலை சொல்லு” என்று அதட்டிய தாயை முறைத்து பார்த்தவன், "உன்னால் கேட்க முடியலனு இந்த வீரபாண்டியை வைச்சு கேட்க வைக்குற இல்லை அவரும் அவரு மீசையும்... அதை வேற நிமஷத்துக்கு ஒரு முறை முறுக்கிட்டு இருக்கிறது" என்று முனங்கியபடி அமைதியாக இருந்தான் மாறன்.


அவன் அமைதியை கண்டு ‘அவ்வளவு நல்லவனா நீ’ என்று கேட்க தோன்றும், ஆனால் உண்மை அதுவல்லவே!! அவனின் பதினெட்டாம் வயதில் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு சினிமா பார்த்துவிட்டு வந்தவனை என்னவென்று விசாரிக்க இளம்ரத்தம் அல்லவா, “நீங்க கேட்டா நான் சொல்லுமா" என்று அலட்சியமாக பேசியவனை பெல்ட் எடுத்து விளாசியவர்,


“இங்க பாரு மாறா இந்த வயசுல காலேஜூ மட்டம் போடுறது வயசு துடுக்கு தான். அதை தப்புன்னு சொல்லல. ஆனா இந்த மாதிரி மரியாதை இல்லாம பேசுன தொலைச்சிருவேன் பார்த்துக்க. அப்புறம் அடிக்கடி மட்டம் போடுறது தெரிஞ்சது…" என்று நிறுத்தியவர் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல, அன்றிலிருந்து கல்லூரியை மட்டம் போடுவதை நிறுத்திவிட்டான். அதன் பின் பெரிய மாமன் என்றால் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை தான்.


"என்ன தம்பி என்ன சிந்தனையில் இருக்கீக.. உங்கக்கிட்ட தானே பேசிட்டு இருக்கேன்' என்று ஏதோ சிந்தனையில் இருந்த மாறனை பார்த்து குரலை உயர்த்த, நினைவுலகில் இருந்து மீண்டவன்...


“இங்க பாருங்க மாமா. எதையும் நானா ஆரம்பிக்கல. ஏற்கனவே எங்களுக்குள்ள பிரச்சினை போயிட்டு இருந்தது உங்களுக்கு தெரியும் தானே மாமா… இப்போ அவளா வந்து கேட்டா… அதுவும் அவங்க ஆத்தா பேச்சை கேட்டுட்டு” என்றவன் முகம் வேதனையில் கசங்கியது.


பின் தன் குரலை செருமியபடி தன்னை சரிசெய்து கொண்டவன் “இதுக்கு மேலேயும் இந்த உறவை பிடிச்சு வைக்கிறதுல எந்த பிரோயஜனமும் இல்லை... நம்பிக்கை இல்லாத உறவை அதுக்கு மேல தக்க வைக்க எனக்கு விருப்பமும் இல்லை” என்றவன் அமைதியாகி விட, தடதடவென்று வீட்டின் உள் நுழைந்தார் காஞ்சனா. சுயம்புலிங்கத்தின் மனைவி.


“என்ன மதனி… நம்ம மாறன் அந்த புள்ளையா விவகாரத்து செஞ்சிட்டு வந்திட்டுனா... அடி ஆத்தி இதுக்கு தான் சென்னையில் போய் தனி குடும்பம் நடத்துற மாதிரி நடிச்சானா… கோவக்காரனா இருந்தா அந்த பொன்னும் என்ன தான் பண்ணும்... நல்ல வேளை என் பொன்னு தப்பிச்சா. இல்லை உங்க அண்ணன் பேச்சை கேட்டு அவளை இங்க கட்டி கொடுத்திருந்தேன் அவ நிலைமை என்ன ஆகி இருக்குமோ. இப்போவே நெஞ்சு அடிச்சுக்குது" என்றவரை கண்டு அதட்டினார் சுயம்புலிங்கம்.


"இந்தாடி இப்போ எதுக்கு நீ இங்கன வந்திருக்க.. ஆமா உனக்கு யாரு இந்த விஷயத்தை சொன்னது” என்றிட, "உங்க தங்கச்சி கூப்பாடு போடுறது தான் தெரு முனை வரைக்கும் கேட்குதே. இதுல ஒருத்தரு வந்து சொல்லனமாக்கும்" என்று நொடித்துக் கொண்டபடி வெளியில் சென்றுவிட்டார் காஞ்சனா. அவர் சென்றதும் மழை அடித்து ஓய்ந்தது போன்று இருந்தது.


"சரி மாறா இப்போ என்ன செய்யலாம்னு இருக்க” என்றவரை கண்டவன், “கொஞ்ச நாள் ஆற போடலாம் மாமா. அப்புறம் பார்த்துப்போம்” என்றதும் துண்டை தோளில் போட்டபடி சென்றவரின் பார்வை ராசுவை முறைத்தபடி இருக்க, அவரும் தன் அண்ணனை முறைத்து விட்டு பின் பார்வையை வெளியே பதித்தவாரு இருக்க, சுயம்புலிங்கமும் வெளியே சென்றுவிட்டார்.


“டேய் மாறா…” என்று மீண்டும் ஏதோ பேச வந்த தாயை முறைத்தவன், "இங்க பாரு ஆத்தா உன் பேச்சை கொஞ்சம் குறைச்சிக்கோ இல்லைனு வைச்சுக்கோ அம்புட்டு தான்” என்றவனை முறைத்தவர் அடுப்பங்கரைக்குள் சென்றுவிட்டார். தன் அக்கா செல்வதை பார்த்தா ராசுவோ ‘ஏன்டா’ என்ற ரீதியில் பார்க்க,


“நீ அமைதியா இரு மாமா. இப்படி எல்லாம் பேசலனு வைச்சிக்க ஊர் முழுக்க தண்டோரா போட்டுட்டு திரியும். அதை கேட்குற பெருசுகளும் சும்மா இருக்குமா... ஒன்னுத்துக்கு நாலா சொல்ல, இது இங்க வந்த மூக்கை சிந்திட்டு உடம்பு முடியுமா படுத்துக்கும் இது தேவையா" என்றவனின் பேச்சு சரியாக பட ராசவும் வேறெதுவும் சொல்லவில்லை.


"ஏன்டா மாறா இந்த வாய் துடுக்கு எல்லாம் நல்லா தான் இருக்கு… உன் பெரிய மாமன் பொஞ்சாதி சொன்ன மாதிரி நீ உன் கோவத்தை குறைச்சுக்க” என்றிட இரண்டு கரத்தையும் தலையின் பின் கோர்த்து கொண்டு, லேசாக சாய்ந்தவாரு நெட்டி முறித்து, தன் மாமனை பார்த்தபடி "இந்த இளமாறன் சொல்லு பேச்சு கேட்க மாட்டான் தெரியாதா மாமா என்று கண் சிமிட்டினான்…


“டேய் மாறா இதுக்கே நீ நல்லா யாருக்கிட்டேயோ வாங்க போற” என்று ராசுவின் வார்த்தைகளை தூசி போல் தட்டி விட்டவன்,


“ஏன் மாமா அக்னி படத்துல வர கார்த்திக் மாதிரி நீ முறைக்கிறதும் உங்க அண்ணன் பிரபு மாதிரி முறைக்கிறதும்... அட அட ஏதோ நடந்திருக்கு ஆனா என்னனு சொல்ல மாட்டேங்கிற கண்டுபிடிக்கிறேன்" என்று நம்பியார் போன்று கை பிசைந்தவனை கண்டு லேசாக சிரித்தார் ராசமணி… அந்த சிரிப்பின் பின் இருக்கும் வலி என்னவோ!!


ஒரு மாதம் எப்படி கடந்தது என்றே தெரியவில்லை. அவளின் நினைவு எழக் கூடாது என்பதற்காகவே கும்பகோணத்தில் இருக்கும் கடையை மேற் பார்வையிட சென்றுவிட்டு, பின் வயல் வரப்புகளை எல்லாம் பார்த்தபடி தன்னை எப்போதும் எதாவது ஒரு வேலையில் ஈடுபடுத்திக் கொண்டு இருந்தான் மாறன்.


அன்று சோர்வாக சீக்கிரமே இல்லம் வந்து சேர்ந்தவன்… தளர்வாய் நாற்காலியில் அமர, அவன் கண்களில் பட்டது குப்பை தொட்டி அருகில் தூக்கி எறியப்பட்டிருந்த பத்திரிக்கை. ஏதோ உந்த அதை கையில் எடுத்தவன் கண்டது என்னவோ அந்த முகப்பு பக்கத்தில் புன்னகை முகமாக இருக்கும் தேவிப்பிரியாவின் முகத்தை தான். அப்படியே சிலையாக உறைந்து விட்டவன் கண்கள் செந்தணலாக சிவக்க, அந்த பத்திரிக்கையே வெறித்து பார்த்தான் இளமாறன்.


விவகாரத்து செய்ததோடு அவள் மீது கொண்ட நேசத்தையும் ரத்து செய்துவிடுவானா? அல்ல அவளிடமே காதலை யாசித்து நிற்பானா?


தொடரும்…
 
Status
Not open for further replies.
Top