ஹாய் டோலீஸ்…
கடல்ல சேரும் ஆறு…
இந்தா வந்துட்டேன் அஸ்திரம் பதினாறு…
எல்லாரும் டீ ஆத்துறாங்கனு ஒரு ஆசையில நானும் உள்ள நுழைஞ்சிட்டேன். ஏதாவது குறை இருந்தா இதமா சொல்லுங்க, பிடிக்கலைனா கதையைவே தூக்கிட்டு ஓடுருறேன்… கொஞ்சம் பயந்து வருது…
எதுவா இருந்தாலும் பார்த்து பதமா சொல்லுங்க… மீ பாவம்…
கதை தலைப்பு இருக்க நெட்டு எல்லாம் காலி பண்ணி கிரியேட் பண்ண வீடியோவ கடைசி வரை பார்த்து தெரிந்து கொள்ளும்படி அன்புடன் சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். (எவனாவது அடிச்சு விட்டு போன இரத்தம் கக்கி சாவான்).
சிறு துளி இப்போது….
பெரு வெள்ளம் எப்போதோ…
"இளம் விளம்பர பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான அருணன் சம்ரித்தின் அந்தரங்க லீலைகள். மூன்று குழந்தைகளுக்கு தாயான பெண்ணுடன் தகாத உறவு" என்று அலங்கோலமான பல புகைப்படங்கள் அன்றைய உள்ளூர் முதல் ஆங்கில நாளிதழ்களின் முகப்பு பக்கத்தை கொட்டை எழுத்துக்களில் நிறைத்திருக்க,
சமூக வலை தளங்கள், ஊடகங்கள் என எல்லாவற்றிலும் அவன் தான் அன்றைய காரசாரமான விவாதமாக போய் கொண்டிருந்தான்.
இது போதாதென்று தெரிந்தவன், தெரியாதவன், நொந்தவன், வெந்தவன் எல்லாம் போன் போட்டு "சம்பவம் பண்ணா இப்படி தான் ஊர் உலகத்துக்கு தெரிய மாதிரி பண்றதா? பெரிய இடத்தில இருக்கிற ஆளுங்க பொண்ணு மேல கை வைக்கிறது தப்பில்ல தான். இருந்தாலும் மூனு பிள்ளை பெத்த பொம்பளைய போய்???" என்று ஆபாச கேள்விகள் கேலிகளாக செவியை நாரடிக்க, எதையும் மறுத்து பேசும் நிலையில் அவன் இல்லையே.
அந்த படங்கள் யாவும் பொய்யுமல்ல, அது இல்லையென்று அவன் மறுக்கவும் இல்லை. அதை நினைக்கையில் தன் மீதே வெறுப்பு தான் வந்தது.
கண்களில் சிவப்பேறி நின்றவன் கரங்களே பூவுடலின் குளுமையை உணர்ந்த ஸ்பரிசம் இப்போதும் விரல்களில் உறைந்து இருக்க, "ச்ச…" என்று அந்த உணர்வை விரட்ட போராடியவன் கண்களை மூடிய இமை பொழுதில் கூட ஆடை கலைந்த அரைகுறை பெண்ணுடல் தான் அவன் மனக் கண்ணில் நிறைந்து நின்றது.
பட்டென்று கண்களை திறந்தவன் "ஆ ஆ ஆ…" என்று தலையை பிடித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தான்.
நடு ஹாலில் கோபத்தின் உச்சியில் அமர்ந்திருந்தவன் கைகளில் இருந்த செல்போனோ அவன் கையின் அழுத்தம் தாங்காது நெருங்கிக் கொண்டிருக்க, இதயத்தில் எரிமலையே வெடித்தது.
எப்படி இப்படி ஒரு நிகழ்வு நடந்தது? இப்போது வரை அவனால் யூகிக்க முடியவில்லை. மாற்றான் மனைவி என்று தெரிந்தும் கை வைத்திருக்கிறான். நினைக்கையிலே அருவருப்பாக இருந்தது.
ஊராரின் கேள்விகளுக்கு முடங்கி போகும் ஆள் அல்ல தான் அவன். 'எவனுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல' என்று கிலோ திமிரும், டன் கொழுப்பும் உடலின் ஒவ்வொரு இஞ்சிலும் கொட்டி கிடக்கும் ஆணவக்காரன் வாயடைத்து நிற்பதற்கு காரணம் தன்னவள் மீது கொண்டிருக்கும் காதல் தான்.
மனமும் சரி, உடலும் சரி என் ருக்ஷாவிடம் மட்டும் தான் மயங்கும் என்று ஆணவம் கொண்டவன் மயக்கம் கொண்டானோ மாயோள் மீது. ஆண் உடல் ஆட்டம் கண்டு போனதோ உரிமையில்லா பெண் தீண்டலில்.
இன்னும் இன்னும் இதயம் வலித்தது. 'நடந்தவைகளை அழிக்கும் சக்தி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ' என்று புத்தாக்க யுக்தனின் மூளை யோசித்துக் கொண்டிருக்க, அவன் முன் ஒரு பத்திரிக்கையை விசிறி எறிந்தார் அவன் தந்தை தாமோதரன்.
"என்ன அருண் இதெல்லாம்? கல்யாணம் பண்ண சொன்னா துரைக்கு வலிக்குது, இதுக்கெல்லாம் மட்டும் இனிக்குதோ?" என்று வார்த்தைகளை கடித்து துப்பிய தந்தையை கண்களை இடுக்கி தீயாய் முறைத்து வைத்தான்.
"என் புள்ளை எந்த தப்பும் பண்ணியிருக்க மாட்டான். அந்த சிறுக்கி தான் பணத்துக்கு திட்டம் போட்டு மாட்டி விட்டிருக்கா. நீ இருக்க உயரமும், வசதி வாய்ப்பும் இந்த மாதிரி கழிசடைகள் கண்ண உருத்த தான் செய்யும். அதுக்கு தான் சொல்றேன் இனியும் தள்ளி போடாம கல்யாணம் பண்ணிக்கோ யா" என்று கிடைத்த கேப்பில் மகனுக்கு திருமண விருந்து வைக்க அவன் அன்னை தூண்டில் போட முயன்றார்.
இது தான் தங்களுக்கான வாய்ப்பு என்று கோசலையும் தன் மகளை இழுத்து கொண்டு அவர்கள் பேச்சினுள் நுழைந்தவர், "மருமகன் சம்மதம்னு ஒரு பார்வை பார்த்தா போதும். இந்த நிமிஷமே என் பொண்ணு அவருக்கு கழுத்த நீட்டுவா" என்று சொன்னவரை தீர்க்கமான பார்வை பார்த்த சம்ரித்.
"ஹ்ம்ம் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று சொல்ல, அனைவர் முகத்திலும் ஆனந்த தாண்டவம் இருவரை தவிர.
சம்மதம் சொல்லிவிட்டு வேகமாக வெளியேறியவன், வாசலில் காத்திருந்த பத்திரிக்கையாளர்களை கடந்து அலுவலகத்துக்குள் வர,
"சார்… சார்… உங்களுக்கும் அந்த லேடிக்கும் தகாத உறவு இருக்கிறதா சொல்றது உண்மையா? உங்க பதில் என்ன?" என்ற கேள்விகளுக்கு 'ஆமானு சொன்னா என்ன பண்ணுவ? மூடிட்டு போ' என்பது போல் திமிராக ஒரு பார்வை பார்த்து, கையை வாய் அருகே வைத்து சைகை செய்து விட்டு, வேக எட்டுக்களுடன் உள்ளே நுழைய மீண்டும் போன் அடித்தது.
நடந்துக் கொண்டே போனை ஏற்று "ஹலோ" என்க,
"சாம் உங்களுக்கு புதுசு புடிக்காது பூஜை போட்டது தான் பிடிக்கும்னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா அன்னைக்கு நான் அசிங்க பட்டு இருக்க மாட்டேன்ல. உங்களை ஆன்டி ஹீரோனு அன்னைக்கு அவ சொன்னது புரியல… இப்போ புரியுது" மார்டன் மடோனாவின் குரல் எள்ளல், கேலி என்று எல்லாம் கலந்து ஒலிக்க, கோபத்தில் போனை வீசி எறிந்தவன் "ராதிகா" என்று தான் கத்தி அழைத்திருந்தான் அவன் அசிஸ்டன்ட் ராதிகாவை.
எப்போதும் அவன் குரலுக்கு ஓடி வந்து நிற்கும் அவள் தான் இன்று இல்லையே. அது கூட அவன் கோபத்தை மட்டுப்படுத்த முடியாது அவன் திண்டாட காரணமாக அமைய, திரும்பும் பக்கம் எல்லாம் அவனை துரத்தியது முந்தைய நாள் நிகழ்வு.
ஆணவனுக்கே அந்த நிலை என்றால் அதை தாங்கி நிற்கும் பெண்ணின் நிலை?
விதியோ? சதியோ? மானம் கெட்டு ஒடுங்கி நின்றாள் தளிரவள்.