மணம் 1:-
அந்த ஏகாந்த இரவில் அந்த மருத்துவமனை மட்டும் நிசப்தம் தொலைத்து பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது.
பின்னே ஒரு பெண் தற்கொலைக்கு முயற்சி செய்து இருக்க, அவளை பிழைக்க வைக்கும் முயற்சியில் இருந்தனர் மருத்துவர்கள்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து உள்ளே போவதும் வெளிய வருவதுமாக இருந்தனர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்.
அந்த அறையின் வெளியே எதிர்புறம் சுவற்றின் ஓரத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்து இருந்தார் மத்திய வயது பெண்மணி.
அவரது கண்களோ அந்த அறையின் வாயிலில் வருவதும் போவதுமாக இருக்கும் மருத்துவர்களையே வெறித்தது.
மனமோ உள்ளே இருப்பவளை சாடியது. 'எவ்வளவு தைரியம் தற்கொலை செய்ய துணிந்து இருக்கிறாள். பாதகத்தி ஒரு வார்த்தை என்னிடத்தில் சொல்லி இருந்தால் என்ன.' நினைத்து, நினைத்து மருகியது அந்த தாயுள்ளம்.
அதே நேரம் மடியில் இருந்த பேரன் அசைய, கைகள் தன் போக்கில் தட்டிக் கொடுத்தது. ஒரு வேளை அவன் விழித்து விட்டால், உள்ளே இருக்கும் அன்னையை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்வான் சமாளிப்பது கடினமான காரியம்.
அப்போது அங்கே வந்தான் பாலன். "அம்மா அன்பு எப்படி இருக்கிறாள் " கேட்ட மகனை ஏற இறங்க பார்த்த அமுதா
"இதுவரைக்கும் உயிரோட தான் இருக்கிறா" வார்த்தைகளில் கோபத்தை தேக்கி வெறுப்பை உமிழ்ந்தார்.
"என்னம்மா இப்படி சொல்லுறிங்க" சலிப்பாக கேட்டவனை பார்த்து,
"புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்தது ஒருத்திய தற்கொலைக்கு தூண்டிருக்கிங்கடா" ஏறத்தாழ கத்தினார் அவர்.
அவரது சத்தத்தில் மடியில் இருந்த மூன்று வயது குழந்தை விழித்து விட்டது.
மீண்டும் தட்டி கொடுத்து தூங்க வைக்க முயற்சி செய்து பார்க்க, நன்கு விழித்து விட்டான்.
"அம்மா வேணும் பாட்டி" இதழ் பிதுக்கி அழ தயாரானான் குழந்தை.
"கண்ணா அம்மா இப்போ வந்துருவாடா, டாக்டர் ஊசி போட்டுட்டு அம்மாவ அனுப்பி விட்டுருவாங்க மா. அழாதே டா" சொன்னவர் கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஒட, அதை பார்த்து விட்டு பாலன் கண்ணனை வாங்க கை நீட்டினான்.
அவனை தீயாக விழித்தவர், "போ போய் உன் பொண்டாட்டிக்கு சேவை செய். நீ இங்க வந்த நேரத்தில உன்ன காணாமல் தேட போறா" நக்கலும் கோபமுமாக சொன்னார்.
சொல்லி வைத்தார் போல அந்நேரத்தில் பாலனின் மனைவி ரம்யா அழைக்க, அவனுக்கு ஒரு மாதிரி ஆனது.
ஆயினும் அடுத்த நொடியே அழைப்பை ஏற்று காதில் வைக்க, இங்கு எரிமலையென தகித்தது தாயுள்ளம்.
அவரது மனமோ 'ஒரு பொண்ண தற்கொலைக்கு தூண்டிவிட்டு இவ்வளவு இயல்பாக இருக்க முடியுமா' நினைத்து, நினைத்து ஆதங்கப்பட்டது.
அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ, "நான் வரேன்" முனுமுனுத்து விட்டு சென்றான் பாலன்.
"எப்படி இருந்தவன் இப்படி மாறிட்டான்" முனுமுனுத்தவரின் நெஞ்சில் சுருக்கென வலி தைத்தது.
தன்னையே பார்த்துக் கொண்டிருந்த பேரனை தோளில் போட்டு தட்டிக் கொடுத்தவர், "அம்மா வந்துருவாங்கடா கண்ணா தூங்கு சாமி." சமாதானம் செய்தபடி மீண்டும் அவனைத் தூங்க வைக்கலானார்.
தோளில் தொங்கியவாறு தூங்கியவனை மடியில் கிடத்தியவர், நாற்காலியில் சாய்ந்த அமர்ந்து தங்களின் நிலையை என்னை நொந்து கொண்டார்.
கணவன் இருந்தவரை இயல்பாக, நன்றாக போன அவரது வாழ்வு அவர் இறந்த இந்த இரண்டு ஆண்டுகளில் தலைகீழாய் மாறிப்போனது. பெயருக்கு உயிர் வாழ்கிறார் அவ்வளவே.
அந்த நேரத்தில் அங்கு வந்த செவிலியர், "நீங்க தானே அந்த தற்கொலை கேஸோட அம்மா, உங்களை டாக்டர் கூப்பிட்டார்." சொல்லவே, பேரனை துக்கி கொண்டு மருத்துவரின் அறையை நோக்கி சென்றார்.
அவரை மருத்துவரின் அறையில் விட்டு விட்டு வெளியேறினார் செவிலி.
உள்ளே நுழைந்தவரை பார்த்து நீங்க என்று கேட்டபடி புருவம் சுருக்கினார் மருத்துவர்.
"நான் அமுதா, தற்... தற்கொலை" என்று சொல்ல வந்தவர் நிறுத்தி "அவளோட அம்மா" என்றார்.
"ஓ அம்மா உங்க மகள் எலி மருந்து சாப்பிட்டுருக்காங்க. அதுவும் நிறைய. நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணிட்டு இருக்கோம் இன்னும் நினைவு திரும்பல. அபய கட்டத்தில தான் இருக்காங்க. எதுவுமே நாற்பதெட்டு மணிநேரம் கழித்து தான் சொல்ல முடியும்."
அமுதாவோ பீறிட்டு வந்த அழுகையை அடக்கியபடி "எப்படி யாச்சும் காப்பாற்றி கொடுத்துருங்க டாக்டர் " கையெடுத்து கும்பிட்டார்.
"நாங்க முடிஞ்ச வரை எல்லாமே செய்துட்டு தான் இருக்கோம் மா. அவங்க சாப்பிட்ட விஷம் வீரியமானது." என்றவர் அமுதாவை அனுப்பி வைத்தார்.
"பாவம் எம்புள்ள எவளோ கஷ்டம் பொறந்ததுல இருந்து. மகனை பத்தின நினைப்ப கூட இல்லாம இப்படி பண்ணிட்டாலே பாவி மக. முருகா எம் மகள காப்பாற்றி கொடுய்யா" ஆதங்கமும் பரிதவிப்புமாக வேண்டுதல் வைத்தார் அமுதா.
மறுநாள் விடியலில் கூட உள்ளிருந்தவள் கண் விழிக்கவில்லை. ஒரு வேளை இந்த உலகை பார்க்க விருப்பமின்றி இருக்கிறாளோ.
மருத்துவர்களும் ஏதேதோ செய்து போராடினார்கள் அவளை பிழைக்க வைக்கும் பொருட்டு.
நாடி துடிப்பு மிக மெல்லியதாய் இருப்பதும் சில நேரங்களில் இன்னும் குறைவதும் என சன்டிதனம் செய்து கொண்டிருந்தது அவளது உடல்.
சதா அன்னையை தேடும் பேரனை சமாளிக்க முடியாமல் தின்டாடி கேட்கும் விளையாட்டு பொருள் வாங்கி தந்து கையில் வைத்துக் கொண்டு, அதே நேரத்தில் மகளை பற்றிய நல்லதொரு தகவல் வாராத என அமர்ந்திருந்தார்.
இவ்வாறு இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் கண் விழித்தாள் அவள், அன்பழகி.
மெல்ல கண் விழித்த அன்பழகி சுற்றி நோட்டம் விட, தான் பிழைத்து விட்டது புரிந்தது.
'ஏன் காப்பாற்றினார்கள் அப்படியே விட்டுருக்க வேண்டியது தானே' ஒரு மனம் நினைக்க, இன்னொரு மனமோ 'உன் மகனை பற்றி நினைப்பில்லையா' இடித்து கூற, ஒரு நொடி உடல் இறுகி, தளர்ந்து அழுகை வந்தது அவளுக்கு.
'நீயெல்லாம் ஒரு நல்ல தாயா' அசந்தர்பமாக காதில் ரீங்காரமிட்ட அந்த குரல் கொடுத்த அதிர்வலைகளை தாளாமல், அலறினாள் அன்பழகி.
அன்பின் சத்தத்தில் தூங்கி கொண்டிருந்த செவிலி பதறி விழித்தெழுந்து மருத்துவரை அழைக்க சென்றார்.
மருத்துவர் வந்தவர் அன்பழகியை பரிசோதனை செய்து விட்டு உள்ளுறுப்புகள் கொஞ்சம் பழுதடைந்து இருப்பதாகவும், கண்டிப்பாக ஒரு பத்து நாட்கள் மருத்துவ மனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் என்றார்.
அவர் சொல்லிவிட்டு செல்ல அவருடனே உள்ளே வந்த அமுதா மகளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேறி மீண்டும் அதே இடத்தில் அமர்ந்து கொண்டார்.
இந்த இரண்டு தினங்களில் அவர் முற்றிலும் ஓய்ந்து விட்டார். மகளது இந்த செயல், பிழைப்பாளா மாட்டாள் என்ற தவிப்பு, பேரனின் தேடல் தாயை குறித்து அது தந்த கோபம், பெற்ற மகனின் புறக்கணிப்பு, ஏன்னவென்றும் கேட்காத அலட்சியம் என அனைத்தும் அவரை பற்றற்ற நிலையில் நிறுத்தி உள்ளது என்பதே உண்மை.
தாயின் பார்வையில் உள்ள கேள்வியில் பரிதவிப்பில், கோபத்தில், பாசத்தில், அன்பழகிக்கு குற்ற உணர்ச்சியே அதிகம் இருந்தது.
நான்கைந்து நாட்கள் சென்றிருக்க அமுதா மகளிடம் எதுவும் பேசாமல் இருந்தார்.
ஆனால் மகளின் தேவையறிந்து கண்ணுக்குள் வைத்து பார்த்து கொண்டார்.
வேறுவழியின்றி பேரனை கூடவே வைத்து கொண்டாலும் தாயை அதிகம் தொந்தரவு செய்ய விடாமல் பார்த்துக் கொண்டார். குழந்தையும் அன்னையின் அருகில் அமைதியாக இருந்தான்.
ஒரு கட்டத்தில் பொறுக்காமல் அமுதாவின் கைப்பற்றிய அன்பழகி, "அம்மா என்கிட்ட பேசுங்கமா" விசும்பினாள்.
அவளது அழுகை அவரை பாதிக்கவில்லை போலும், "பெத்த அம்மாவா இருந்தா உனக்கு என்ன பிரச்சனைன்னாலும் சொல்லிருப்ப, நான் வளர்த்தவ தானே" அன்பழகியின் செயல் அவரை அவ்வாறு பேச வைத்தது.
அமுதாவின் பேச்சில் திடுக்கிட்டு பார்த்த அன்பு, "அம்மா" உதடுகள் நடுங்க அழைத்தாள்.
"சும்மா பேருக்கு அப்படி கூப்பிட வேண்டாம் அன்பு" என்றார் இன்னும் ஒரு படி மேலே சென்று.
துக்கம் தாங்காமல் முகத்தை மூடி அழ ஆரம்பித்து விட்டாள் அன்பழகி.
"ஏய் பாப்பா அழதாம்மா. அம்மா சொல்லுறேன்னில்ல " அமுதா அரவணைத்து கொண்டார்.
"அம்மா இங்க ரொம்ப வலிக்குது மா. அதான் வாழ பிடிக்காமல்..." ஆரம்பித்தவள் முடிக்க முடியாமல் போக மீண்டும் அழுதாள்.
"என்னை பத்தி யோசிக்க வேண்டாம். உன் மகனை பத்தின நினைப்பு கூட இல்லையா உனக்கு" அமுதா அவளது தவறை உணர்த்த,
அனால் அவளோ "அது தான் நீங்க இருக்கீங்கல்ல என்ன வளர்த்த மாதிரி எம் மகனையும் வளர்க்க மாட்டிங்களாம்மா" கேட்டு வைக்க
அதில் அதிர்ச்சி அடைந்த அமுதாவோ "என்ன பேச்சு பேசுற கூறு கெட்டதனமா. அம்மா பிள்ளையை வளக்குறதுக்கும் பாட்டி பேரன் வளர்க்கறதுக்கு வித்தியாசம் இல்ல. இது தான் நீ படிச்ச படிப்பா. அறிவிருந்தா இப்படி பண்ணுவியா, இல்லை இப்படி தான் கேட்பியா" கடுமையாக திட்டவே செய்தார்.
அவரது கேள்வியில் ஏற்கனவே குற்ற உணர்வில் தவித்து இருந்தவள் இன்னுமே உள்ளுக்குள் ஒடுங்கிப் போனாள்.
கண்ணனுக்கு எதுவும் புரியாத போதும் எங்கே தாய் விலகினால் போய்விடுவளோ என்றென்னி தன்னை விட்டு இம்மியும் அசையாமல் இருப்பதை கண்டு அவனது பயம் புரிந்தே இருந்தது அன்பழகிக்கு.
அன்பழகிக்கு மாத்திரை, மருந்துகள் பரிசோதனைகள், நீர் சத்துக்கு ட்ரிப்ஸ் என்று ஏற்றினார்கள்.
அவளுக்கு பாதி நேரம் ஓய்விலும், உறக்கத்திலும் கழிந்தாலும் விழித்திருக்கும் நேரம் எல்லாம் மகனிடம் நிறைய கதை பேசி இன்னும் அவனை இயல்பாகி அரவணைத்துக் கொண்டாள் பெண்.
மகளும் பேரனும் உறங்கவே வெளியில் காற்றோட்டமாக அமர்ந்திருந்த அமுதாவின் மனமோ 'அப்போ நாம நெனச்சது சரிதான் இவ புருஷனால தற்கொலை முயற்சி பண்றானா அது கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு முன்னரே செஞ்சிருக்கணும்.
ஆனா இப்போது இந்த முடிவு எடுத்து இருக்கான்னா அதுக்கு பாலனும் அவன் மனைவி ரம்யாவும் தான் காரணமா இருக்கணும்." சரியாக கனித்தவரின் மனம் 'அதனால்தான் நம்ம கிட்ட ஒன்னும் சொல்லாம மழுப்புற' என்றும் கூறியது.
தலை வலிப்பது போல இருக்க மருத்துவமனைக்கு கேண்டினிற்கு சென்று தேநீர் பருகினார் அமுதா.
அப்போது அங்கிருந்த நாளிதழில் பள்ளி ஒன்றின் வாக் இன் இன்டர்வியூ விளம்பரம் கண்ணில் பட்டது.
மாண்டீசோரி கல்வி கற்ற ஆசிரியர் தேவை என்று இருக்க, அவருக்கு மனதில் அன்பழகியின் முகம் தான் தோன்றியது.
உடனடியாக ஆன்லைனில் தனக்கு தெரிந்த அவளது தகுதிகளை அந்த விண்ணப்ப படிவத்தில் நிரப்பி விட்டு ஆன்லைனில் அனுப்பி வைத்தார்.
அதற்கு பதிலாக ஒரு வாரத்தில் நேர்கானலுக்கு வரச் சொல்லி அழைப்பு வந்தது மின்னஞ்சலில்.
அமுதாவும் ஒரு பட்டதாரி ஓரளவிற்கு இப்போது இருக்கும் ஆன்ட்ராய்டு அலைபேசி வகையின் பயன்பாடு நன்றாகவே தெரியும் அவருக்கு. ஆதலால் அன்பழகியின் விவரங்களை அவளுக்கு தெரியாமல் அவரால் அனுப்ப முடிந்தது.
அந்த மின்னஞ்சலுக்கு பதிலாக இவரும் வருகிறேன் என்றே அனுப்பினார் அன்பழகியின் சார்பில்.
தன் மகனுக்கு அழைத்து அன்பழகியின் கணவன் வீட்டிற்கு சென்று அவளது கல்வி சான்றிதழ்களை எடுத்து வர அனுப்பினார்.
பாலனுக்கு பிடிக்காவிட்டாலும் அன்னையின் பேச்சு கட்டளை தோணியில் இருக்கவே மறுப்பின்றி செய்தான்.
இதோ பத்தாம் நாள் அன்பழகி டிஸ்சார்ஜ் ஆகும் நாள் அது.
11 மணியைப் போல் மருத்துவர் வந்த இறுதியாக ஒரு முறை பரிசோதித்துவிட்டு வீட்டிற்கு அனுப்புவதாக இருந்தது.
அதி காலையில் எழுந்த அமுதா அன்பழகியையும் எழுப்பி குளிக்க சொல்லிவிட்டு கோவிலுக்கு சென்று வருவதாக சொல்லி சென்றார்.
அவர் சென்றவுடன் அன்பழகி குளித்து மகனுக்கு பால் தங்களுக்கு காப்பி மற்றும் காலை உணவை வாங்கி வைத்தாள்.
செவிலி வந்து சற்று நேரத்தில் மருத்துவர் வருவதாக சொல்லிச் சென்றார்.
சற்று நேரத்தில் எல்லாம் கண்ணனும் எழுந்து விட்டான்.
எழுந்த மகனுக்கு பல் துலக்கி குளிப்பாட்டி விட்டு வேறு ஆடை அணிவித்து பால் புகட்டினால் அன்பழகி.
பால் குடித்தபடி சுற்றும் நோட்டமிட்டு பார்த்தான் கண்ணன். அவனுக்கு என்ன புரிந்ததோ "அம்மா நாம மாமா வீட்டுக்கு தான் போகப் போறோமா, இல்ல ஊர்ல இருக்க பாட்டி வீட்டுக்கு போவோமா". தாயின் தாடையை பற்றி கேட்டான் மகன்.
மகனது கேள்வி அவளுக்கும் இருக்க செய்தது. ஆனால் இரண்டு இடங்களுக்கும் செல்ல விருப்பமில்லை அவளுக்கு. அதை தாயின் மனம் நோகாமல் எப்படி செல்ல என்று யோசிக்கையிலே,
"அம்மா கண்ணன் ஸ்கூல் போகணும், மிஸ்ஸ பாக்கணும், அப்புறம் என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் என்னை கேப்பாங்க. "சொல்ல சுருக்கென்றது அவளுக்கு.
மகனின் கல்வியும் இனி அவளது கையில் என்று புரிந்தது அதனுடைய அன்பழகிக்கு.
மேலும் கண்ணன் "மாமா வீட்டில அந்த அத்தை என்ன அடிச்சுட்டாங்க அப்புறம் கண்ணனுக்கு கிரிம் பிஸ்கட் தரமாட்டேன் சொல்லிட்டாங்க மா" குழந்தை உதடு பிதுக்கி அழ தயாராக, முற்றிலும் மனம் உடைந்து போனது அவளுக்கு.
இனி குழந்தையை எதற்கும் ஏங்க வைக்க கூடாது. நல்ல உணவு, உடை உறைவிடம், கல்வி இவையாவும் ஒரு தாயாக நான் அவனுக்கு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று மனம் உறுதிப் பூன்டது அன்பழகிக்கு.
ஆனால் எப்படி அதை சாத்தியமாக்க போகிறோம் என்று தவிப்பு அவளது கண்களில். முதலில் ஒரு வேலை தேடி கொள்ள வேண்டும்.
யார் தயவிலும் தான் வாழ கூடாது என்ற எண்ணம் மேலோங்கியது.
படித்திருந்தாலும் வெளியுலக அறிவு இல்லாது இருப்பின், ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாத கதை தான்.
இங்கு அன்பழகையும் அதே நிலையில் தான் இருந்தாள் என்று சொல்ல வேண்டும்.
அவளது சற்று தையிரியமான சுபாவமும் அடுத்தடுத்து விழுந்த தொடர் அடிகளால் சற்று மங்கி இருந்தாலும் முழுவதும் மறைந்துவிடவில்லை.
இருப்பினும் இனி மீண்டும் தன்னை தைரியமாக மாற்றிக்கொள்ள வேண்டும் இல்லையேல் இன்னும் வாழ்வில் அடிப்பட நேரிடும் என்ற எண்ணம் அவளது மனதில் வந்தபோது,
'ஏன் இந்த தைரியம் தற்கொலை செய்யும்போது இல்லை' மனம் இடித்துரைக்க, காதுகளை பொத்திக் கொண்டாள். இனி என் மகனுக்காக நான் வாழ்வேன் என்று உறுதி கொண்டது அவளது மனம்.
அதே நேரத்தில் செவிலியும் மருத்துவரும் வந்து அவளது உடல் நிலையை பரிசோதித்து விட்டு, அவளை டிஸ்டார்ஜ் செய்யும் விண்ணப்ப படிவங்களில் கையொப்பமிட்டனர்.
மருத்துவர் சென்றதும் செவிலி "உங்களுக்கு ஒரு சைக்கலாஜிக்கல் கவுன்சிலிங் அதாவது உளவியல் ஆலோசனை வகுப்பு இருக்கிறது. அதற்கு நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்" என்க,
தனக்கு மிகவும் அவசியம் என்று உணர்ந்த அன்பழகி "எப்போது வரணும்" என்று கேட்டாள்.
தன் மன வலிமையை இன்னும் அதிகரிக்கும் பொருட்டு கண்டிப்பாக இது தனக்கு தேவை என்று எண்ணினாள்.
"இது மாதிரி சூசைட் அட்டென்ட் பண்றவங்களுக்கு ஒரு தெரபி மாதிரி அவங்களுக்கு தருவோம் டிஸ்சார்ஜ் ஆகும்போது" என்றார்.
சரி என்று தலையசைத்து ஒத்துக் கொண்டவள், தன் அன்னையின் வருகைக்காக காத்திருந்தாள்.
மேலும் கால் மணி நேரம் சென்று விட்டு உள்ளே வந்தார் அமுதா. அவரது கைகளில் இரண்டு ட்ராவல் பேக்ம் ஒரு கைப்பையும் இருந்தது கேள்வியாக பார்த்தவளை அருகமர்த்தி
"உனக்கு ஊட்டியில் ஒரு மாண்டீசோரி ஸ்கூல்ல வேலைக்கு அப்ளை பண்ணி இருக்கேன்" என்றவர் அதன் விவரங்களையும் சேர்த்து கூறினார்.
மேலும் "உன்னோட படிப்பு சான்றிதழ் துணிமணி அப்புறம் சில புக்ஸ் எல்லாம் இந்த ட்ரோலி பேக்ல இருக்கும். இந்த தோள் பையில் கண்ணனோட துணி மாத்திரை மருந்து என அத்தியாவசிய தேவைக்கு இருக்கும். கைப்பையில் ஆதார் கார்டு போன் நம்பர் அட்ரஸ் அப்புறம் கொஞ்சம் பணம் ஒரு 50 ஆயிரம் பக்கம் வச்சிருக்கேன். பத்திரம், ஜாக்கிரதையா போயிட்டு எனக்கு போன் பண்ணு" என்றார்.
"நீங்களும் வரலாமே அம்மா" என்ற அழைப்பவளை பார்த்து அழுத்தமாக தலையசைத்து மறுத்தார்.
"உனக்கு 23 வயசு ஆனால் நீஆகுது இவ்வளவு பயந்தா ஆகாது. வெளியுலகம் போய் பாரு. உன்னை நம்பி உன் மகன் இருக்கான்னு நினைச்சுக்க அப்பதான் உனக்கு ஒரு உத்வேகம் வரும்" என்றவர் ஏதோ சொல்ல வந்து பாதியில் விழுங்கி
"கிராமத்துல குழந்தைகளை கிணத்துல தூக்கி போட்டுருவாங்க தன்னால பயம் போய் நீச்சல் பழகணும்னு. அது மாதிரி தான் உன்னையும் இப்ப அனுப்புறேன் நானு. நீ இந்த உலகத்துல வாழறதுக்கான தகுதிகளை வளர்த்துக்கோ, இல்லனா வாழவே முடியாது. " என்றவர்
"எனக்கு வரணும் தோணும் போது நானே வருவேன்." தாயின் பேச்சில் புது தெம்பு பிறக்க உறுதியுடனே தலையசைத்தாள அன்பழகி.
மேலும் அமுதாவிடம் அந்த சைக்காலஜிக்கல் தெரபி பற்றி கூற அமுதா "கட்டாயமா நீ போய் கலந்துக்கோ நான் கண்ணனை வச்சுட்டு இங்க உக்காந்து இருக்கேன்" என்று அவளை அனுப்பி வைத்தார்.
ஒரு மணி நேரத்தில் வகுப்பு முடிந்து வந்தவள் முகம் தெளிவாக இருந்தது.
அமுதாவுக்கும் இப்பொழுது தான் மனம் நிம்மதியானது. மகள் இனி வாழ்வில் ஜெயிப்பாள் என்ற நம்பிக்கை தந்தது.
"உனக்கான ட்ரெயின் டிக்கெட் கைப்பையில் வச்சிருக்கேன். மேட்டுப்பாளையம் வரைக்கும் இருக்கு" என்றவர் "வா சாப்பிட்டு உன்னை டிரெயின் ஏத்தி விடுறேன்" சொன்னார்.
கண்ணனுக்கு ஊட்டி விட்டது போக பெண்கள் இருவருமாய் உண்டு விட்டு ஆட்டோ பிடித்து ரயில்வே ஸ்டேஷன் வந்தனர்.
தனது பெட்டியை தேடிக் பார்த்து ஏறி கொண்டவள் உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொண்டாள்.
கண்ணனுக்கு எளிதாக சாப்பிடக்கூடிய சில உணவு வகைகளை வாங்கிக் கொண்டு தண்ணீர் பாட்டிலும் வாங்கினாள். சற்று நேரத்தில் ரயில் பயணம் தொடங்கியது.
தனது அன்னைக்கு கையசைத்து விடைபெற்றவள் மனம் ரயிலுக்கு வெளியே பின்னோக்கி செல்லும் காட்சி போலவே பின்னோக்கி சென்றது.