நேரம் - 4
இடம் – 3021, விஞ்ஞானி அறை
அதிரனிடம் வெற்றிவேலை ஒப்படைத்துவிட்டு, அவ்வலுவலகத்தில் இருக்கும் தடைசெய்யப்பட்ட பகுதியை நோக்கி ஓடினான் அமரவன். அந்த இடத்தை நெருங்கியதும், நான்கடுக்கு பாதுகாப்புக் கொண்ட முதல் கதவு அவனின் கட்டை விரல் ரேகையையும், இரண்டாம் கதவு அவனின் கருவிழியின் ரேகையையும் பதிவு செய்துக் கொண்டது. இரண்டாம் கதவைத் தொடர்ந்து வேகநடையிட்டவனின் கவனத்தை அங்கு புதிதாக உருவாகியிருந்த கண்ணாடித் தடுப்புச்சுவர் ஈர்த்தது. அதனை நோக்கி செல்ல எத்தனித்தவனை, டிரோல் கேம் தடுத்து நிறுத்தியது, “அந்நியர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை” என்று.
அதனை தன் கண்களில் பார்த்து மூளையில் பதித்துக் கொண்டவன், மூன்றாம் கதவை நோக்கி சென்றான். அங்கு இருந்த சோதனை கருவி அவனை முழுவதுமாக ஸ்கேன் செய்த பின்னரே உள்ளே அனுப்பியது.
நான்காவது கதவை நெருங்குகையில் அவனின் உள்ளுணர்வு அவனுக்கு ஏதோ உணர்த்தியது. இதற்கு முன் வெற்றிவேல் வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன் இப்படி ஒரு படபடப்பு அவனிடத்தில். தனக்குள் ஏற்பட்ட புதிரான உணர்வை கண்டுபிடிக்க இயலாமல், மீண்டும் இப்படி தோன்றினால் மருத்துவரை பார்க்க வேண்டும் என்று தன் கையில் பொறுத்தப்பட்ட சிப்பில் குறித்துக் கொண்டான்.
நான்காவது கதவை நெருங்கியவுடன், அவனது அடையாள அட்டை, பெயர், தன் கழுத்தில் பொறுத்தப்பட்ட சிப் இவை அனைத்தையும், அங்கு இருக்கும் திரையில் பதிவிட்டான். இதனை பதிவிட்டப் பின்னர், ‘எத்தனை மணி நேரம் உள்ளே இருக்க போகிறீர்கள்?’ என்ற வினா அந்த திரையில் தோன்ற, வழக்கம்போல் பத்து நிமிடம் என்று போட இருந்தவன், சற்று நிதானித்து, “அரை மணி நேரம்” என்று பதிவிட்டான். அவன் செயல்பட ஆரம்பித்து இந்த 24 வருடங்களில் எந்த வித கட்டளையும் இல்லாமல் சுயமாக செய்த ஒரே விசயம் இதுவே. இதனை இவன் கவனிக்கத் தவறிவிட்டான், ஆனால், அந்த மைய இடத்தில் இந்த செய்தி கடத்தப்பட்டது.
உள்ளே நுழைந்தவனை வெற்றிடமே வரவேற்றது.
மணி மதியம் பன்னிரண்டு பதினைந்து (12.15 பி.ப)
அங்கு இருந்த அனைத்து கருவிகளும் சிவப்பு வண்ண ஆபத்து விளக்கை ஒளிர விட்டபடி இருந்தது.
அதனைக் கண்டவன் அதிர்ச்சியில் உறைந்தே போனான். “ஹோ, ஷிட்! என்ன நடக்குது இங்க?” என்று உச்சஸ்தானியில் கத்தியவனின் கழுத்தில் பொறுத்தப்பட்ட சிப் செயலிழந்து அணைந்து போனது. அமரவன் அங்கேயே மயங்கி விழுந்தான்.
இடம் 3021 – லைட் ரூம்
அதிரவன் வெற்றிவேலை பார்த்தவாறே நின்றுக் கொண்டிருந்தான். அவரும் அச்சத்துடன்தான் இருந்தார். வெற்றிவேலுக்கோ தன் இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற பயம், அதிரவனிற்கோ வெற்றிவேல் தன்னை ஏதும் செய்திடக் கூடாது என்கிற பயம். அவர் அவனைத் தாக்க சிறிது முயன்றாலும் கூட அதிரன் ஆயுதத்தைப் பயன்படுத்தி விடுவான்.
அப்போது, அந்த லைட் ரூமின் கதவு திறக்கப்பட்டது. இரண்டு வீரர்கள் சகிதம் முகக்கவசம் அணிந்தபடி உள்ளே நுழைந்தாள் சர்விகா எல்.எஸ்.டி 201.
“டர்ன் ஆன் தி லைட்ஸ்” என்று கட்டளையிட்டபடி வந்தவள், “வேர் இஸ் அமர்?” என்று அதிரனிடம் கேட்டாள்.
“எனக்குத் தெரியல.! உன்னை பார்க்கத்தான் வரேன்னு சொன்னான்.” என்றவனை ஆழ்ந்து நோக்கினாள் சர்விகா. சட்டென அவனின் கைகளை பின்னுக்கே கட்டிக்கொண்டவன், அவளை நேருக்கு நேர் காணாது தவிர்த்தான்.
“ஓகே, திஸ் இஸ் வெற்றிவேல் ரைட்?” என்றவளுக்கு ஆமாம் என்று தலையாட்டினர் இருவரும்.
சர்விகா தன் கழுத்துப் பகுதியில் இருந்த சிப்பை அழுத்தி தன் மொழியை 2021ல் பேசப்பட்ட தமிழ் மொழியில் மாற்றிக் கொண்டாள். அங்கு இருந்த காவலாளிகள் வெளிச்சத்தைப் பரவ விட்டவுடன், அங்கு முன்பிருந்த அனைத்தும் மறைந்து விட்டது. வெற்றிவேல் மட்டுமல்ல அதிரனும் அதிர்ந்து போனான்.
சர்விகா தன் முகக் கவசத்தைக் கழட்டிட, “தமிழு…” என்றுத் தன் இருக்கையை விட்டு எழுந்தார் வெற்றிவேல்.
“என்ன? தமிழா? நீங்க இப்போ அத பெயரா சொல்றீங்களா? இல்ல தமிழ் மொழியா சொல்றீங்களா?” என்று கேட்டாள் சர்விகா.
அப்போதுதான் தன்னிலை அடைந்தார் வெற்றிவேல். “இல்ல, நீங்க… உங்கள பார்த்தா அப்படியே என் பொண்ணு மாதிரியே இருக்கீங்க.” என்றார்.
“ஓ, உண்மையாவா? நிஜமாத்தான் சொல்றீங்களா?” என்று புன்னகைத்தாள் சர்விகா.
அவருக்கு பேச நா எழவில்லை. அங்கிருந்த அதிரன்தான் இன்னும் அதிர்ச்சியில் உறைந்து போனான். அவனைக் கவனித்து விட்ட சர்விகா, “அரெஸ்ட் ஹிம்” என்றுக் கட்டளையை பிறப்பித்தாள்.
“வாட்? நான் என்ன பன்னேன்?”
“யூ ஆல்சோ எ கல்பிரிட். அமர் கூட சேர்ந்து நீயும் கான்டினன்ட்டுக்கு எதிரா செயல்பட்டு இருக்க. கார்ட்ஸ், அதிரன செல் 50ல போடுங்க. அமர் சயின்ஸ் ரூம்ல இருக்க எல்லாத்தையும் மிஸ் யூஸ் பண்ணிட்டான்னு கேஸ் பைல் செய்யப்பட்டு இருக்கு. சோ, ரெண்டு பேரயும் ஒரே செல்ல போடுங்க. ஹைனஸ் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு.” என்றவளின் கட்டளைக்கு மறுபேச்சு இல்லாமல் அதிரனை அழைத்து சென்றனர். தற்போது அவன் எதுவும் பேசாமல் அவர்களுடன் சென்றுவிட்டான்.
ஆனால், வெற்றிவேல்தான் தனக்கு தொடர்ந்து நிகழும் இத்தனை விசயங்களில் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தார்.
“நீங்க, நான் கேட்குற கேள்விக்கு எல்லாம் பொய் சொல்லாம எதயும் மறைக்காம பதில் சொல்லுங்க. அப்போதான் அடுத்து என்ன செய்ய முடியும்னு நாங்க முடிவு எடுப்போம்.” என்றவளுக்கு பயத்துடனே தலையாட்டினார்.
அமர் மற்றும் அதிரவனிடம் கூறியவற்றைத்தான் இவளிடமும் அச்சு மாறாமல் சொன்னார்.
“ஓகே, நீங்க சொல்றது எல்லாம் இப்போ சாத்தியமான்னு எங்களால உறுதியா சொல்ல முடியல. நீங்க கால இயந்திரம் மூலமா வந்து இருக்குறதா எங்களுக்கு தகவல் வந்து இருக்கு. ஒருவேல, உண்மையாலுமே அப்படி இருந்தா அதுக்கான வழி என்னன்னு பார்க்குறோம். அதுக்கு முன்னாடி இது என்ன இடம், என்ன என்ன விதிகள் இருக்குன்னு சொல்லிடுறேன். நியாபகம் வச்சிக்கோங்க.” என்று சொல்லத் தொடங்கினாள்.
அப்போது அவளுக்கு ஹைனஸிடமிருந்து அழைப்பு வந்ததற்கான தகவல் வந்தது.
தன் முன் நெற்றியைத் தேய்த்தவள், “கொஞ்ச நேரம் இங்க வெய்ட் பண்ணுங்க வெற்றிவேல். ஹைனஸ் வந்துட்டாரு. கார்ட்ஸ், நீங்க இங்கயே இருங்க. நான் போய்ட்டு வரேன்.” என்றவள் அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டாள்.
வெற்றிவேலுக்கு தற்போது பயம் சென்று எரிச்சல்தான் வந்தது. ‘ச்சே, இது என்ன இடம்னே தெரியல. ஒன்னு என்னை இங்க இருந்து போக விடணும். இல்லயா, ஏதாவது தகவல் சொல்லணும். ஏதோ ஒன்னு சொல்ல வரப்போதான் கரெக்ட்டா வெளில போய்டுறாங்க. எம்புட்டு நேரம்தான் இங்கனயே அடஞ்சு கிடக்குறது. இவங்கள நம்புனா நமக்கு எந்த வழியும் கிடைக்காது. நாமளே தேடுனாத்தான் உண்டு’ என்று எண்ணியவர், ‘தடிமாடு மாதிரி இவனுங்க நிக்குறானுவ. இவனுங்கள என்னத்த செய்யலாம்?’ என்று சிந்திக்கலானார்.
“ஏம்ப்பா, இந்த இடத்த சுத்திப் பார்க்கலாமா?” என்று கேட்டார்.
அந்த இருவரில் முதலாமானவன், “கண்டிப்பா, இங்க இருக்க எல்லா இடத்தையும் நீங்க பார்க்கலாம். ஆனா, எந்த பொருளயும் நீங்க தொடக் கூடாது.” என்ற கட்டளையுடன் அனுமதித்தனர்.
இவரும், தற்போது வெளிச்சம் நிறைந்திருக்கும் இடத்தையே ஆராய்ந்துக் கொண்டிருந்தார். அவர்களைப் போல, இவரும் கட்டளையின்பேரில் தான் ஒவ்வொரு விசயத்தையும் செய்வார் என்று எண்ணிவிட்டார்கள் மடையர்கள்.
அந்த இடத்தில் பார்க்க ஒன்றுமே இல்லை. இருந்தாலும், அவர் அத்தனையும் ஆராய்ந்தார், ஏதேனும் யோசனை கிடைக்கிறதா என்று.!
உள்ளிருந்து பார்க்கையில், வெளியே பெரிய பெரிய கட்டிடங்கள் உருண்டை வடிவில் இருப்பதுபோல் காணப்பட்டது. நிச்சயம், இங்கிருந்து செல்ல வேண்டும் என்பதில் மட்டும் அவர் உறுதியாக இருந்தார்.
திடீரென்று நடந்த நிகழ்வினை, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அந்த இடத்தை விட்டு தப்பித்தார் வெற்றிவேல்.
.....................
லட்சுமி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் இருந்த அகரனை, குணாவின் கத்தல் சத்தம் தன்னிலைப் பெறச் செய்தது.
“தமிழு... வெரசா கிளம்பு, ஐயாவ காணல.” என்றான் குணா.
முதலில் இசைத்தமிழுக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன குணா? என்ன சொல்ற? அப்பாக்கு என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.
“உங்க அப்பா காலைல மனு கொடுக்க கலெக்டர் ஆஃபிஸ் போய் இருக்காராம். ஆனா, இன்னும் வீட்டுக்கு வரலன்னு ஆன்டி சொன்னாங்க.” என்றான் அகரன்.
“என்ன சொல்றீங்க, ரெண்டு பேரும்? எங்க அப்பா என்ன சின்ன புள்ளையா? கலெக்டர் ஆஃபீஸ்க்குதான போய் இருக்காரு. மணி என்ன பன்னெண்டு தான ஆகுது? வந்துடுவாரு.” என்றாள் நிதானமாய்.
குணா “அது இல்ல தமிழு... ஐயாவுக்கு...” என்று ஏதோ சொல்லத் தயங்கினான்.
“என்ன குணா?”
“அது... ஐயாக்கு...!”
“அப்பாக்கு என்ன?”
“ரெண்டு நாளா ஐயாக்கு பிரஷர் இருக்குது தமிழு...” என்றான்.
அது அவளுக்கு சற்றே அதிர்ச்சியான செய்திதான். ஆனால், அதுவும் தான் திருமணத்திற்கு சம்மதிக்காதது அவருக்கு இரத்த அழுத்தத்தைக் கூட்டியுள்ளது என்று யோசித்து விடைக் கண்டவளுக்கு கண்கள் இரண்டும் கண்ணீரைச் சிந்தின.
அவளின் கயல்விழிகளில் கண்ணீர் முத்துக்களை காணப் பொறுக்காத அகரத்தமிழன் “நீ பயப்படாத இசை.! உடனே போய் பார்க்கலாம் வா” என்று அழைத்தான்.
மறுபடியும் தன் அன்னையிடம் இருந்து அழைப்பு வர, “அம்மா, நானும் அகரன் அப்ரோம் குணா மூணு பேரும் இப்போ அப்பாவ பார்க்க தான் போய்ட்டு இருக்கோம். நீங்க பயப்படாதீங்க. கையோட கூட்டிட்டு வந்துடுறேன்.” என்றவளின் பதிலுக்கு,
“அதுக்கில்ல தமிழு, ரெண்டு நாளா அவுக சுணங்கிப் போய் இருந்தாவ. ஏதோ, மனசுக்கு தப்பா படுதுடி. வெரசா கூட்டியா தமிழு! உள்ளுக்குள்ள ஒரு மாதிரி இருக்குது.” என்று தன் பயத்தைக் கூறினார்.
“ஒன்னும் ஆகாது மா. அப்பாவ கூட்டிட்டு வரேன்” என்றவள், தன் இருசக்கர வாகனத்தை நெருங்கினாள்.
“இசை, நான் கார்ல வந்து இருக்கேன். மூணு பேரும் அதுலயே போய்டலாமா?” என்றவனின் கேள்விக்கு சம்மதமாய் தலையசைத்தவள் மகிழுந்தில் புறப்பட்டாள்.
சற்று நேரத்தில் எல்லாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வந்துவிட்டனர். அவசர அவசரமாக இன்று மனு கொடுக்கும் இடத்திற்கு செல்ல, அங்கு யாருமே இல்லை.
அவ்வழியாக சென்ற ஒருவரிடம் விசாரித்தான் அகரத்தமிழன். “சார், இன்னைக்கு பெட்டிசன் கொடுக்க எங்க போகணும்.?”
“இன்னைக்கு பெட்டிசனா? தம்பி, கலெக்டர் இன்னைக்கு லீவ். நாளைக்கு தான் வருவாரு. இப்போதான் எல்லார்கிட்டயும் சொல்லி அனுப்பினேன். நீங்களும் நாளைக்கு வாங்க” என்றார்.
“அது இல்லங்க சார், என்னோட மாமா இன்னைக்கு இங்க தான் வந்தாரு. ஆனா, அவர் இன்னும் வீட்டுக்கு வரல. அதான், எங்கன்னு பார்க்க...” என்று இழுத்தவன், வெற்றிவேலின் புகைப்படத்தைக் காட்டினான்.
“இந்த ஆளா தம்பீ? சரியான பைத்தியமா இருப்பாரு போல?” என்றிட,
“ஏய், யாரப் பாத்து பைத்தியம்னு சொல்ற? சீவிடுவேன். என்ற ஐயா உனக்கு பைத்தியம் கணக்காவா தெரியாரு. அவருக்கு கலெக்டரு நல்ல பழக்கம் தெரியுமா உனக்கு?” என்று எகிறினான் குணா.
அகரன் அவனை அடக்கி விட்டு, “கொஞ்ச நேரம் சும்மா இரு. சார், இவர் பைத்தியம்லாம் கிடையாது. மணவழகனூர் பெரிய வீடு வெற்றிவேல் ஐயான்னா எல்லாருக்கும் தெரியும். இப்போ இவர நீங்க பாத்தீங்களா இல்லையான்னு சொல்லுங்க” என்று கேட்டான்.
“அவர் யாருன்னுலாம் எனக்கு தெரியாது தம்பி. ஆனா, இன்னைக்கு ஒரு பதினொன்றை வாக்குல இங்க வந்துட்டு பெரிய ரகளை பண்ணிட்டாரு. ஆனா, இதுல இருக்குற மாதிரி இல்லாம கொஞ்சம் வித்தியாசமா இருந்தாரு. முழுசா வெள்ளை கவுன் போட்டுக்கிட்டு, ஒரு மாதிரி இருந்தாரு. போலீஸ் கிட்ட ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாரு. அப்ரோம் என்ன ஆச்சுன்னு தெரியல. எதுக்கும் கேட் கிட்ட இருக்குற கான்ஸ்டபிள் கிட்ட கேட்டு பாருங்க” என்று தனக்கு தெரிந்த தகவலைக் கூறினார்.
இசை “என்ன சொல்றாரு, இவரு? அப்பா ஏன் இப்டியெல்லாம் இருக்கணும். எனக்கு ஒன்னுமே புரியல. முதல்ல அப்பா எங்கன்னு பாக்கலாம். எனக்கு ரொம்ப பதட்டமா இருக்கு” என்றவளின் கைகளை ஆதரவாகப் பற்றியவன்,
“மாமா கிடைக்குறவர நான் கூடவே இருப்பேன், பயப்படாத இசை!” என்றான் அகரத்தமிழன்.
குணாதான் இதையனைத்தையும் கண்டுகொள்ளாது பரிதவிப்புடன் இருந்தான். சிறுவயதில் இருந்தே அவர் அணைப்பிலேயே வளர்ந்தவனாயிற்றே. ஊரே ஒன்று சேர்ந்து தனக்கும் தன் அன்னைக்கும் எதிராக திரும்பிய போது, ஆதரவு கரம் கொடுத்தவர் அவரே. உப்பிட்டவரை எள்ளளவும் நினை என்பார்கள். இவனோ, அவரை உயிர் இருக்கும்வரை நெஞ்சில் இருந்து நீக்காது இருப்பான்.
கவலையுடன் இருந்தவனை தைரியம் சொல்லி அலுவலகத்தின் முகப்பு நுழைவாயிலுக்கு அழைத்து வந்தாள் இசை.
அங்கும் அகரன் விசாரிக்க, அங்கிருந்த காவலர் ஒருவர் “ரொம்ப பேசுனாரு, அதுவும் புரியாத மாதிரி என்னன்னமோ பேசிக்கிட்டு இருந்தாரு. எஸ்.ஐ கடுப்பாகி கத்த, ‘இப்போ என்னோட கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லலன்னா ரொம்ப பெரிய சிக்கல் இந்த உலகத்துக்கே வந்துடும்’னு சொன்னாரு. ஆல்ரெடி டென்சன்ல இருந்த மனுசன், இவர ஸ்டேசன் கூட்டிட்டு போய்ட்டாரு. சீக்கிரம் போனா பாக்கலாம். எஸ்.ஐ இருக்குற கடுப்புல இவர அடிச்சு கிடுச்சு வச்சிடப் போறாரு” என்று போகிற போக்கில் இதையும் சொல்லிவிட்டு போனார்.
அங்கிருந்த அனைவருக்கும் பயமும் குழப்பமும் அதிகரித்தது.
விரைந்து காவல் நிலையம் செல்ல, அங்கு இருந்த வெற்றிவேலைக் கண்டு அதிர்ச்சியாகினர் மூவரும்.
“அப்பா...”
“சர்விகா...? யூ ஆல்சோ ஹியர்..?” என்று அதிர்ந்தார் அவர்.
புலரும்....